அத்தியாயம் : 28

“இரண்டும் ஒரே டிசைன்தான். அன்னைக்கே ஒன்னா வாங்கிட்டுதான் உன்கிட்ட விளையாட்டு காட்டினாரா மாப்பிள்ள”

மறுநாள் தாய் கேட்டபோதுதான் தன் கையில் இப்படி ஒரு வஸ்து இருப்பதையே உணர்ந்தாள் அம்மு எழிலரசி.

‘காலைலர்ந்து என்னவோ மிஸ் ஆகுறமாதிரியே ஃபீல் ஆச்சே அது இந்த வளையல் சத்தம்தானா…” யோசனையுடன் அதை பார்த்திருந்தவளுக்கு கூடவே இதை எப்போ மாட்டியிருப்பான்?’ என்ற சிந்தனையும் எழ முகம் சிவந்தது.

‘பெரிசா கிட்ட வரமாட்டேன்னு டைலாக் அடிப்பான்’ கருவிக்கொண்டே தான் அரைத்து வைத்த தேங்காய் சட்னியை கணவனுக்கும் மாமனுக்கும் வைத்துவிட்டு தாயிடம் தக்காளித் தொக்கை வாங்கிக்கொண்டு மாடி ஏறினாள்.

அவள் கிளம்பி இறங்கி வந்தபோதுதான் தந்தையும் மகனும் காலை ஓட்டத்தை (ஜாகிங்) முடித்துத் திரும்பி இருக்க வெற்றியின் பார்வை அவள் முகத்தைத் தழுவி மீண்டது. 

‘செய்றதையும் செஞ்சிட்டு மூஞ்சியப் பாரு!’ அவன் உள் நுழையும்போதே அவளும் கண்டுகொண்டாள். 

எதும் சொல்வாளா என்று அவன் திரும்ப திரும்பப் பார்த்திருக்க,

‘ஓஹோ…சார் இதுக்காகத்தான் முசப்புடிக்கிறாமாதிரி காலைலர்ந்து என் மூஞ்ச மூஞ்சவே பார்த்திட்டு இருந்தாரா…’ சட்டென்று யோசனைத் தோன்ற அவன் பார்க்காத நேரம் கையிலிருந்ததைக் கழற்றி காக்கி உடையின் பாக்கெட்டில் போட்டுக்கொண்டாள். 

‘முதல் ஃப்ரிபரன்ஸ் உன் கொழுந்தியாக்குதானே!’ முகத்தைச் சுழித்து, ஒன்னும் தெரியாததுபோல் இறங்கி வந்தாள்.

காலணி நிறுத்தியிலிருந்து காக்கி ஷூவை எடுத்து அவள் அணிந்து கொண்டிருக்க, ஏதோ எடுக்க வெளியில் வந்த  திவ்யபாரதி, “என்னடி அதுக்குள்ள பிரேஸ்லட்ட காணோம். இப்போதான் மாடி ஏறும்போது இருந்துச்சி. இப்போ காணோம்” என்று கேட்கவும், தாயை முறைக்கவும் முடியாமல் பார்த்திருந்தாள்.

சத்தமில்லாமல் சிரித்தான் வெற்றி.

‘சரியான நேரத்துக்கு வந்து போட்டுக் குடுத்தாச்சி! இன்னைவரைக்கும் அம்மாவா மாமியாரான்னு தெரியல!’ கடுப்பாக முறைத்து, “அது குளிக்கும்போது எங்கேயோ கழற்றி வச்சிட்டேன்” என்றாள் காலணியில் கவனமாக. 

என்னவோ அதுதான் முக்கியம் போல் இருந்த மகளின் நடவடிக்கையில், திவ்யபாரதிக்கு கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. 

நிஜமாகவே இவர்கள் இரண்டுபேரையும் வைத்துக்கொண்டு அவளால் சமாளிக்க முடியவில்லை. தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்து விடலாமா என்றிருந்தது.

மகளைக் கடியவும் முடியாது. ஒன்றுக்கு இரண்டுபேராய் அவள் பின்னால் நின்றுகொண்டிருக்க, வெற்றியுடன் வந்த கார்த்தியை பாவமாக ஏறிட்டாள்.

இதுங்க அலப்பறையில் கிட்டதட்ட அதே நிலையில்தான் அவனும் இருந்தான். அதில் “ நீ போ பாரதிம்மா. உனக்கு தலை வலிக்குதுல்ல எனக்கும் வலிக்குது. நான் நம்ம இரண்டுபேருக்கும் டீப்போட்டு கொண்டு வர்றேன்” என்று தங்கையானவளை உள்ளே அனுப்பப் பார்க்க,

“நான்கூட உங்கப்பாவ இந்த பாடு படுத்தலடி” என்ற  திவ்யபாரதி உள்ளே செல்ல,  “ஆமாடா பாரதி, நான்தான் பார்த்தனே, நீ கொஞ்சமாதான் அவனை படுத்தின…” என்று தங்கையைக் கேலி செய்த கார்த்தி, அப்போதுதான் வெளியில் வந்த செழியனிடம், “அப்படிதானேடா?” என்று சிரிப்புடன் கேட்க ஒன்னும் புரியாமல் முழித்தான் அவன்.

‘அப்படியா? நான் உங்களைப் படுத்தினேனா?’ என்ற திவ்யபாரதியின் பார்வை கணவனை முறைக்க, ‘நடுவில என்னை ஏன்டா கோர்த்து விடற?’ என்று நண்பனை பார்த்து வைத்தான் செழியன்.

“சரி சரி முறைக்காத ஓடி வா! நீ என்ன என்ன பண்ணினன்ன நைட்டு கேளு. உன் புருஷன் கதை கதையா சொல்லுவான்.” என்று சிரித்த கார்த்தி நண்பனையும் தங்கையையும் இழுத்துக்கொண்டு உள்ளே ஓடிவிட்டான்.

இவர்கள் பிரச்சனை, பெரியவர்களின் அலப்பறையாக மாற, வெற்றி இன்னமும் சிரித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவள் கடுப்புடன் கால் உறையை மாட்டிக் கொண்டிருந்தாள். 

“அய்யோ பல்லி” என்று வெற்றி அலறவும் அம்முவின் மீது எதுவோ வந்து விழுந்தது.

துள்ளத் துடிக்க அலறி எழுந்தவள் தன் உடையை உதற பாதி வெளியில் வந்தும் வராத நிலையில் அவளது பாக்கெட்டில் தொங்கிக் கொண்டிருந்தது கைச்செயின். கூடவே அவளது தோளில் வெற்றி தூக்கிப் போட்ட அவனது ஷூவின் கயிறும் தொங்கிக் கொண்டிருக்க, அடக்க மாட்டாமல் சிரித்தான் வெற்றி.

தோளில் கிடந்த ஷூவின் கயிறை கோபமாகத் தூக்கி அவன்மீது எறிந்தவள் வெளிவந்திருந்த கைச்செயினை கவனிக்கவில்லை.

“மயிலா” என்று விசிலடித்தான் வெற்றி. பறந்து வந்து அவன் தோளில் அமர்ந்தது மயிலா. 

துருவனுடன் கொஞ்சம் பழகி விட்டதால் மேடம் இப்போது சுதந்திரமாகத்தான் அந்த வீட்டில் சுற்றிக் கொண்டிருக்கிறார். அதுவும் பக்கத்து வீட்டின் சுற்றுச்சுவற்றில் அமர்ந்துகொண்டு “ஷீலூ…ஷீலூ” என்று கூப்பிடவும், ஷீலா அந்த பக்கமிருந்து கத்தவும் என துருவனைக் கைக்குள் போட்டு வைத்திருந்தாள். 

வெற்றி என்ன சொன்னானோ அதற்கு என்ன புரிந்ததோ, அவனிடமிருந்து பறந்து அம்முவின் தோளில் அமர்ந்தபடி பாக்கெட்டில் தொங்கிக்கொண்டிருந்த கைச்செயினை தன் அலகால் கொத்தி வெற்றியிடம் எடுத்து வந்துத் தந்தது மயிலா.

இதை எதிர்பாராது, அவனது மனையாள் திகைத்து விழிக்க, அவளது கரம்பற்றி மீண்டும் கைச்செயினைப் போட்டுவிட்டவன், வீட்டுக்குள் ஒரு பார்வைப் பார்த்து, “இன்னொரு தடவை இதை கழற்றனும்னு நினைச்ச, பல்லியோ, மயிலாவோ தேவைப்பட மாட்டாங்க. புரியும்னு நினைக்கிறேன்.” என்று கண்சிமிட்ட, அதிர்ந்து பார்த்தாள் அவள்.

கோபமாய் முறைத்தவளிடம், “அப்போ புரிஞ்சிருச்சி” என்று அடக்கமாட்டாமல் சிரித்தவனைக் கண்டிக்க முடியாமல் திரும்பி நடந்தவளின் இதழ்கள் அவளையும் மீறி புன்னகைத்தது.

ஒரு வாரம் கடந்திருந்தது. அம்முவால் அந்த வழக்கின் ஒரு நுலிழையைக் கூட கண்டறிய முடியவில்லை. 

அவனிடம் தோல்வியை ஒத்துக் கொள்ள முடியாது. வேறு வழி இல்லை. அவன் இவ்வளவு செய்யும்போது தானும் கொஞ்சம் செய்யலாம் தப்பில்லை என்று தோன்றியது. 

நேராக, “சார் சில ஃபைல்ஸ் வீட்டுக்கு எடுத்துட்டு வரச் சொன்னார்” என்று வெற்றி அலுவலக அறையின் உதவிக் காவலரிடம் போய் நின்றுவிட்டாள்.

அவள் வெற்றியின் மனைவி என்பதில் அவரும் திறந்து விட, உள்ளே நுழைந்தவளுக்கு மேஜையிலிருந்த மூன்று பெண்களின் தற்கொலை வழக்கின் கோப்புகள் மட்டுமே தட்டுப் பட்டது. அதுவுமே எதிர்பாராமல் பணிநீக்கம் வாங்கியதால் மறதியாக விட்டுச் சென்றிருக்க வேண்டும் என்று யூகித்தாள்.

நல்ல வேளையாக தேஜஸ்வினியின் பழைய அலைபேசியை அவன் விட்டுச் சென்றிருக்கவில்லை.

இந்த தற்கொலைகளுக்கும், தேஜஸ்வினி வழக்குக்கும் என்ன சம்மந்தம்? என்று கோப்பை மூடப்போனவள் கடைசியாகக் கண்ட கல்லூரியின் பெயரில் நின்று நிதானித்தாள்.

இது அவள் கடைசியாக, ஷ்யாம் சுந்தரைப் பற்றி விசாரிக்கச் சென்ற கல்லூரி. பொறிதட்ட அந்த வழக்குகளை முழுமையாகப் படித்து முடித்தவளின் கண்கள் தளும்பிற்று. அதில் அந்த பெண்களின் தொலைபேசி தரவுகளையும் வைத்திருந்தான் வெற்றி. கடைசியாக அந்த பெண்கள் அழைத்தது தேஜஸ்வினிக்குதான் என்று உறுதியாகத் தெரியவும், அவசரம் அவசரமாக அந்த கோப்புகளின் தேவையானப் பக்கங்களை தன் அலைபேசியில் படம் பிடித்துக் கொண்டவள், அவர்களது முகவரிகளையும் குறித்துக் கொண்டு வெளியில் வந்தாள்.

“சார் திடீர்னு போன் பண்ணி வேண்டாம்னு சொல்லிட்டார்” என்று தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள். கோப்பினை எடுத்து வந்தாலும் கண்டிப்பாக அவனுக்கு தகவல் செல்ல வாய்ப்பிருக்கிறது என்பதால் அவள் வந்ததே வீண் என்பதுபோல் காட்டிச் சென்றாள்.

பெண்களின் முகவரி திருவண்ணாமலையைச் சுற்றி இருக்க நிச்சயம் அங்கே சென்றால் வர இரவாகிவிடும். கணவனுக்கும் தகவல் செல்லும் என்பதால் நேரே வீட்டுக்கு வந்தாள்.

தாயிடம்,  “அம்மா ஒரு வேண்டுதல். நான் திருவண்ணாமலை கோவில் வரைக்கும் போறேன்” என்றவள் தாய்க்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கீழேயே நல்ல புடவையாக எடுத்துக் கட்டிக் கொண்டாள்.

“ஏன்டி வேண்டுதல்னா மாப்பிள்ளையையும் கூட்டிட்டுப் போகலாம்ல. மேல சும்மாதான இருக்கார்” என்றதும், ‘காரியமே கெட்டுது போ’ என்ற ரீதியில் தாயை பார்த்து வைத்தவள், “ம்மா! ப்ளீஸ் வேண்டுதல் இல்ல. இனிமேல்தான் வேண்டவே போறேன். நாங்க நல்லா இருக்கணும்னு, உன் மாப்பிள்ளைக்கு மொட்டை அடிக்கிறதா வேண்டிக்கப் போறேன்” என்றவளை திவ்யபாரதி திகைத்துப் பார்க்க,

“தெரிஞ்சா என்னையும் விடமாட்டார் மா” கன்னத்தை கிள்ளிவிட்டுச் சென்றாள்.

எப்படியும் திருவண்ணாமலை என்றால் அவன் யூகித்துக் கொள்வான்தான். இருந்தும் முதலிலேயே தெரிந்தால் தடுத்துவிடுவான்.

அதில் வாசலில் நின்று திரும்பி, “வர லேட் நைட்டாகும்! தேடாத. உன் மாப்பிள்ளை கேட்டா மட்டும் சொல்லு. நீயா போய் எதும் உளறி வைக்காத புரிஞ்சிதா?” என்று விட்டுக் கிளம்ப, “என்னவோ என் தலையில மிளகா அரைக்கிறன்னு மட்டும் தெரியுது” என்று சந்தேகித்த தாயிடம், “பத்திரிகைல வேலை செஞ்சில்ல அதான் புத்தி அப்படி யோசிக்குது” என்றுவிட்டு தந்தையின் காரை எடுத்துக் கொண்டுச் சென்றவள், கணவன் அழைத்துவிடக்கூடாது என்பதற்காகவே அதை அணைத்து வைத்தவளின் கையில் கார் வேகம் எடுத்தது.

அவ்வளவு தூரம் தனியாகக் காரை ஓட்டிவிட்டு அதே வேகத்தில் திரும்புவதெல்லாம் இலேசானக் காரியமில்லை. ஆனால் அவளுக்கு இருக்கும் நாட்கள் மிகக் குறைவு அதில் யோசிக்க விரும்பவில்லை அவள். துணைக்கு யாரை அழைத்தாலும் நிச்சயம் கணவனுக்கு தெரிந்துவிடும் என்பதில் யாரையும் அழைத்துக் கொள்ளவும் இல்லை.

ஏற்கனவெ வெற்றியும் வேறு விசாரித்துச் சென்றதில், முதல் இரண்டு வீட்டில் “அதான், தற்கொலைன்னு மூடிட்டிங்களே இப்போ என்ன?” என்று கோபமடைந்தார்கள். ஒருவர் மட்டுமே தன் பெண்ணிற்கு நியாயம் கிடைக்காதா என்ற ஆசையில் வெற்றிக்கு திறந்து விட்டது போலவே பெண்ணின் அறையை திறந்து விட்டார்.

அவள் எதிர்பார்த்ததுபோல் ஒன்றும் கிடைக்கவில்லை. அந்த பெண்ணின் அலமாரியில் தேடிக் கொண்டே வர, “அன்னைக்கு வந்த சாரும் ஒரு புக்க மட்டும் எடுத்துக்கிறேன்னுட்டு எடுத்துட்டு போனாரு” என்றதும், “என்ன புக்” என்றாள் கேள்வியாக.

“ஏதோ நீதிக் கதைகள்னு இருந்துச்சிம்மா” என்றதும் ‘எங்கயோ கேள்விப்பட்ட பெயராக இருக்கே’ என்று யோசித்தவளின் நினைவுகளில், ‘நீதிக் கதைகள் மாமா’ என்று தங்கை சொன்னது நினைவிலாடியது. 

அவள் நினைவுகள் எல்லாம் அதிலேயே சுற்றி வர, கூடவே வெற்றியின் மேஜையில் ஒற்றையாய் பேப்பர் வெயிட்டின் உதவியுடன் பறந்து கொண்டிருந்த தாளின் ஞாபகமும். 

வெற்றி தான் எடுத்துச் சென்ற புத்தகத்தை ஆய்வுக்கு அனுப்பியிருந்தான். அதன் தாள்களில் போதைப் பொருள் கலந்திருப்பதாக ஆய்வு முடிவு வந்திருக்க, அவன் இல்லாததால் அவனது மேஜையில் வைத்துச் சென்றிருந்தார் உதவியாளர்.

அவளுக்கு நிமிடத்தில் கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. பக்கத்தில் அந்த மனிதர் பேசியதெல்லாம் தொலைவில் கேட்பதுபோல் இருந்தது.

“பாப்பா காலேஜ் லைப்ரரிலதான் புக்கெல்லாம் எடுத்துட்டு வந்து படிக்கும்” என்ற அந்த மனிதர் இலேசாகக் கண்கலங்க, “பாவம் அந்த புக்கிலருந்த தூசில திறந்ததுமே சாருக்கு கண்ணை இருட்டிக்கிட்டு வந்துடுச்சி. தண்ணி குடிச்சிட்டு, கொஞ்ச நேரத்துக்கு அப்படியே உட்கார்ந்துட்டார்” என்று சொல்லிக்கொண்டே வந்தவர், கேட்க கேட்க, அம்முவின் இருளடைந்த முகத்தைக் கண்டதும், “என்னம்மா ஆச்சி” என்று பதறிக் கொண்டு வந்தார்.

“கொஞ்சம் தன்ணீர்” என்றவள் மூச்சுவிட மறந்து அப்படியே அமர்ந்துவிட்டாள். விழிகள் தாரை தாரையாகக் கண்ணீரைக் கோர்த்துக் கொண்டது. 

அந்த அப்பாவி தந்தைக்கு வேண்டுமானால் தெரியாமல் போகலாம். ஆனால் அவர் சொல்ல சொல்ல, ஐபிஎஸ் முடித்தவளுக்கு வெற்றி இங்கு வந்தது, நடந்தது, முகர்ந்தது எல்லாம் காட்சியாய் விரிந்தது.

“இல்ல. இருக்காது. என் மிருத்யூ அப்படி பண்ணமாட்டா!” தலையை உதறிக் கொண்டவள், அவர் திரும்பி வரும்முன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

“என்னமோ போங்கம்மா, இந்த வீட்டு இராசியோ என்னமோ, யார் வந்தாலும் முகம் மாறிப் போய்டுது” என்றவர் வெள்ளந்தியாய்ச் சிரிக்க, “நிச்சயம் உங்க பொண்ணுக்கு ஞாயாயம் கிடைக்கும்” என்றவள் தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டு வெளியேற, அவள் சென்று நின்ற இடம் TJ கல்லூரியின் நூலகம்.

அங்கு அவள் எதிர்பாரா விதமாக பராமரிப்புப் பணி நடப்பதால் நூலகம் இழுத்து மூடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்க, நூலகக் கட்டிடம் ஒரு பக்கம் இடிக்கப்பட்டு வேலை நடந்து கொண்டிருந்தது. 

தேஜஸ்வினியின் சொந்தக்கல்லூரி என்ற ஒரு விசயமே ஷ்யாம் சுந்தரின் மீது ஆணித்தரமான சந்தேகத்தை விதைக்க போதுமாயிருந்தது. இப்படி போதைக்கு அடிமையாக்கி பெண்களைச் சீரழிப்பவனுக்கா தன் கணவன் துணை நிற்கிறான்? என்ன தடுத்தும் வடிந்து விட்ட கண்ணீரை துடைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

கண்ணீர் பார்வையை மறைக்க காரை அதிவேகத்தில் விரட்டிக் கொண்டு வந்தாள் எழிலரசி. ஓருபக்கம் அலைபேசியில் தங்கையைத் தொடர்பு கொள்ள முயன்று கொண்டிருந்தாள்.

அது, அவுட் ஆஃப் கவரேஜ் நெட் ஒர்க் ஏரியா” என்பதையே திரும்ப திரும்பச் சொல்ல கோவத்தில் அருகினில் தூக்கி எறிந்தாள். அவள் வீடு வந்து சேர்ந்தபோது இரவு பதினொன்றை தொட்டிருந்தது. வாசலிலயே காத்துக் கொண்டிருந்தான் வெற்றி.

கணவனை ஏறெடுத்தும் பார்க்காமல் தாய் வீட்டினுள் நுழைந்து கொண்டாள். அவள் வாடிக்கிடந்த முகத்தைக் கண்டவன் அவள் திரும்பி வந்ததே போதும் என்ற ஆசுவாசத்துடன் மாடி ஏறிவிட்டான்.

நேரே தங்கையின் அறையினுள் நுழைந்தவள், அவள் அங்கு இல்லாததைக் கண்டு, இவள் வருவதற்காகவே காத்துக் கிடந்த தாயிடம் “மிருத்து எங்கம்மா?” என்றாள்.

மகளை விநோதமாகப் பார்த்து, “என்னடி தெரியாத மாதிரிக் கேட்கிற? அவதான் செமினார் முடிச்சி அப்படியே ப்ரண்ட்ஸ் கூட டூர் போயிருக்காளே!” என்றதும் பேயறைந்தது போலானது எழிலரசியின் முகம். 

உண்மைதான் இந்த ஒரு வாரமாக, வீட்டில் என்ன நடக்கிறது என்பதே அவள் கவனத்தில் பதியாமல்தான் போனது. தங்கை இரண்டுநாள் என்ற செமினார் நாள் தள்ளிப் போனதுவரை தெரியும். இன்று காலையே அவள் வந்திருக்க வேண்டும். வராததை அவள் கேட்டிருக்கவில்லை. அந்தளவுக்கு இந்த வழக்கில் பேயாக அலைந்து கொண்டிருந்தாள்.

மகளின் வாடிய முகத்தைக் கண்டு, தங்கை சொல்லாமல் சென்றதற்குதான் வருந்துகிறாள் என்று நினைத்தார் திவ்யபாரதி.

அதில், “மிருத்து, எனக்குப் போக விருப்பமில்ல வந்திடுறேன்னுதான் சொன்னா. வெற்றி தம்பிதான், நீ தனியால்லாம் வர வேண்டாம். செமஸ்டர் லீவுதான சும்மா எல்லார் கூடவும் போய்ட்டு வான்னு அனுப்பி வச்சிது” என்றதும் எழிலரசியின் முகம் மாறியது.

“அவளுக்கு போனும் போகலம்மா” என்றாள் யோசனையாக.

“ஹில் ஸ்டேசன்.சிக்னல் கிடைச்சிருக்காதுடி” என்ற திவ்யபாரதி சாப்பிட அழைக்க, “எனக்கு எதும் வேண்டாம்மா” என்றவள் மீண்டும் மிருத்யூவின் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

அங்கு தேடவே அவசியமின்றி அந்த புத்தகம் அவள் கண்களுக்கு கிடைத்தது. அதை எடுத்து நுகர்ந்து பார்த்தாள். வித்யாசமாக எதும் படவில்லை.

நிம்மதி பெருமூச்சினை விட்டவள். சிறிதுநேரம் அங்கேயே அமர்ந்து கொண்டாள். அவளுக்கு சிறிது யோசிக்க நேரம் தேவைப்பட்டது.

இதுதான் அவளது அறையாகவும் இருந்தது. ஐபிஎஸ் முடித்து வந்த நாள் முதலாய் இதே அறையில் இருவரும் ஒன்றாகத்தான் படுப்பதும். ஒருநாளும் தங்கையிடம் எந்த வித்யாசத்தையும் அவள் கண்டதில்லை. 

சிந்தனைத் தெளிந்திருந்தது. ‘அதான் சொன்னாலே என் ஃப்ரண்ட் தந்ததுன்னு’ மனம் நிம்மதியடைய தாய் தந்த பாலை அருந்திவிட்டு மாடி ஏறினாள்.

வெற்றி முழித்துதான் படுத்திருந்தான். எதிர்பார்த்ததுதான். அவள் வரும் வரையில் அவன் தூங்கமாட்டான் என்று எதிர்பார்த்தே வந்தவள், முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு அவன் அருகில் படுத்து விட்டாள்.

அவன் எதும் கேட்பான் என்று எதிர்பார்த்தாள் போலும், அவன் கேள்விகளின்றி கண்களை மூடிக்கொள்ள, “வெற்றி” என்றாள்.