“ஏன்டா மகனே! உன்னை நம்பினதுக்கு எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கப் பார்த்தியா?” கண்ணை கசக்கி கசக்கி வெங்காயம் வெட்டிக் கொண்டிருந்தான் கார்த்தி.
“ஒழுங்கா என் தங்கச்சிக்கிட்ட சாப்டுட்டு இருந்தேன். தனியா சமைக்கிறேன்னு…” என்றதும் “தகப்பா…!” என்று இடுப்பில் கை வைத்து முறைத்த வெற்றி அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தான்.
திவ்யபாரதி நல்லநாள் பார்த்துச் சொன்னதுமே தனிக்குடித்தனத்தை வெற்றிகரமாக ஆரம்பித்திருந்தான் வெற்றி. என்ன அவனின் போதாத காலம் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டு வீட்டிலிருந்ததால் தற்சமயம் அவன்தான் சமைத்துக் கொண்டிருந்தான்.
அன்று செழியன் வரும்போது ஸ்டேஷனே புகை மூட்டமாய் இருக்க அனைவரும் இருமிக் கொண்டிருந்தனர். அதன்பிறகுதான் அவன் தப்பிச்சென்றதே தெரிய வர, அம்மு இதுக்கும் வெற்றிக்கும் சம்மந்தம் இருப்பதாக பழியை அழகாக வெற்றியின் மீது தூக்கிப் போட்டதில் செழியனே அதிர்ந்துதான் போனான்.
அதற்கு ஆதாரமாக சற்றுமுன் வெற்றி அவனை வெளியில் விடச்சொல்லி தன் அதிகாரத்தைக் காட்டியதையும், கடைசியாக சிறையை உடைத்துச் தூக்கிச் செல்வார்கள் என்று அவன் வாயாலேயே சொன்னதையும் அலைபேசியில் பதிந்து வைத்திருந்ததை செழியனிடம் போட்டுக் காட்டினாள்.
செழியனுக்கு இது மகளின் பழிவாங்கும் நடவடிக்கை என்று தெரிந்தாலும், முக்கியக் குற்றவாளி தப்பித்ததோடு, சிறையும் சேதத்திற்குள்ளாகி இருக்க, வேறு வழி இல்லாமல் பத்து நாட்கள் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டான்.
அன்று வெற்றி ஸ்டேஷன் திரும்பி வந்தபோது அவனது பணி நீக்க உத்தரவை அவன்முன் நீட்டினாள் அவனது மனையாள். ஒற்றைப் புருவம் மேல் நோக்கி வளைய, கன்னத்துக்குள் நாவைத் தள்ளி கேலியாகப் பார்த்தவளை, கேள்வியுடன் ஏறிட்டான்.
அவள் செய்கைகள் வித்யாசமாக இருக்க, கவரைப் பிரித்தவன் ஒன்றும் புரியாமல் திகைத்தான்.
“சஸ்பென்ஷன் ஆர்டர் சார்! ஃபார் எ சேஞ்ச் எனக்கில்ல உங்களுக்கு” என்று சிரித்தவள், அவன் பேசியதை அவனுக்கே போட்டுக் காட்டினாள். கடைசியாகச் சொன்ன, ‘சஸ்பென்ஷன் வாங்குவ’ என்ற வார்த்தையை மட்டும் திரும்ப போட்டுக்காட்டி, “ஐடியா குடுத்ததுக்கு தேங்க்ஸ்” என்றாள் கண் சிமிட்டி.
“தேஜஸ்வினி வழக்கை என்னைத் தொடவிடாமப் பண்ணீங்கல்ல? இந்த பத்தே நாளில் நீங்க ரீலீஸ் பண்ண ஷ்யாம் சுந்தரைத் திரும்பவும் தூக்கி உள்ள வைக்கல… நான் செழியனோட பொண்ணில்ல!” என்றதும் புன்முறுவல் தோன்ற, “இப்போ நீ செழியனோட பொண்ணில்லடி என்னோட பொண்டாட்டி!” என்று கையிலிருந்த கவராலயே அவள் மூக்கில் தட்டிவிட்டுப் போக, அவள்தான் மலைத்து நின்றாள்.
அதிர்வான், கத்துவான், சண்டையாவது போடுவான் என்று எதிர்பார்த்தாள். அவனோ ஏதோ அவார்ட் வாங்கியதைப் போல் புன்னகைத்துச் செல்ல, அவளுக்குதான் ஓ வென கத்தவேண்டும் போலிருந்தது.
அந்நேரம் பார்த்து திவ்யபாரதியும் நாள் நல்லாருக்கு தனியா சமைச்சுக்கோங்க என்று சொல்லவும் தகப்பனும் அவனுமாக கடைக்குச் சென்று தேவையான அனைத்தையும் வாங்கிக் குவிக்க, அம்முதான் சமையலா…நானா? என மலைத்துப் போனாள்.
முதல் நாளே அவள் போட்ட டீயில் “கஷாயம் சூப்பர்லடா மகனே!” என்ற கார்த்தியின் முகம் போன போக்கில் வெற்றி சிரித்துவிட, “ஷ்..ஷ்” என்ற கார்த்தி,
“சிரிச்சி காட்டிக் குடுத்துடாத மகனே” என்றவனின் பின்னால் பார்த்துவிட்டு வெற்றி வாய்ப்பொத்தி சிரித்தான். அவன் பின்னால் இருவரையும் இடுப்பில் கை வைத்தபடி முறைத்திருந்தாள் எழிலரசி.
மகனின் புன்னகையே சரி இல்லையே என்று திரும்பியவன் அம்முவைக் கண்டதும் அதிர, “கொரோனா கஷாயம்னு நினைச்சிட்டேன் அம்முக்குட்டி” என்று உள்ளே ஓடிவிட, அடக்கமாட்டாமல் சிரித்தான் வெற்றி.
கணவனை முறைத்தபடி, கையில் கரண்டியை திணித்து விட்டாள் அவனது மனையாள்.
“வெட்டியா வீட்லதானே இருக்கீங்க. சமைங்க! எனக்கு சிலரோட முகத்தை உரிக்க வேண்டி இருக்கு” என்று முகத்தை நீட்டி முழக்கி குளிக்கச் சென்றவளில் அவனுக்குப் புன்னகையே!
இவள் சமைத்தால் தகப்பன் வாடிப்போவான் என்று புரிய சந்தோஷமாகவே களத்தில் இறங்கிவிட்டான் அவனும். இத்தனை வருடங்கள் தனியாகவே இருந்ததில் அவனுக்கு சமையல் அத்துபடி.
இரண்டு நாட்களாக அவளுக்கு டிபன் செய்து, மதியம் உணவு கட்டிக் கொடுத்து என்று முழுநேர ஹவுஸ் ஹஸ்பண்ட்டாக இருக்கிறான்.
சமைத்து முடித்து கரண்டியும் கையுமாக சமையலறையில் நின்றிருந்தான் வெற்றி.குளித்து முடித்து அம்மு காக்கி உடையில் வெளியில் வந்தவள், வெற்றியை கேலியாகப் பார்த்தாள்.
“ஏன் மாமா! யாரோ சிங்கம், புலி, பருந்துன்னுட்டு விருந்து சமைச்சிட்டு இருக்காங்க பார்த்தீங்களா?” என்று கேலி செய்தபடி உணவு மேஜையில் கார்த்தியின் அருகே அமர,
“கேலி செய்த மனைவியின் சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொன்ற கணவன்” என்று கையிலிருந்த பேப்பரில் பார்வையைப் பதித்து சத்தமாகப் படித்தக் கார்த்தியை, “மாமா…” என்று முறைத்தாள்.
“பேப்பர்ல இருந்ததைச் சொன்னேன் அம்முகுட்டி” என்று கார்த்தி சிரிக்கவும் முகத்தைத் திருப்பினாள்.
“போங்க மாமா! இப்போல்லாம் உங்க உதவாக்கரை புள்ளைக்குதான் சப்போர்ட்” என்றவள் அந்த உதவாக்கரையை கார்த்திக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்ல சத்தமாக சிரித்துவிட்டான் அவன்.
“அவன்மேல பயம் இருக்குல்ல. அப்புறம் ஏன் குட்டிம்மா அவன் வாயைப் புடுங்கிற” என்று சிரித்ததும், “எனக்கொன்னும் பயமில்ல” என்றாள் சிலுப்பிக் கொண்டு.
“இந்த உதவாக்கரை உதவி இல்லன்னா பூவாக்கு அம்மணி என்ன பண்ணுவாங்களாம்” என்று அவள் தட்டில் சூடான தோசையை வைத்தான் வெற்றி. எனக்கு எல்லாமே கேட்டது என்ற தொனியில்.
முகத்தைத் திருப்பி, “எனக்கொன்னும் சமைக்கத் தெரியாம இல்ல. உங்க பூவாவ நீங்களே கொட்டிக்கோங்க!” என்று எழுந்துகொள்ள முயன்றவளின் கையைப் பிடித்து அமர வைத்தான் கார்த்தி.
“எதுன்னாலும் சாப்பாட்டுல காட்டாத மூஞ்செலி!” என்ற வெற்றியும் முறைத்துவிட்டு நகர, அவள் தட்டிலிருந்த தோசையைத் தானே பிட்டு வெற்றி வைத்திருந்த காரச் சட்னியில் தோய்த்து ஊட்டினான் அவளது மாமன்.
மாமனிடம் மறுக்க முடியாமல் வாங்கிக் கொண்டவள், கணவன் சுட்டு சுட்டுப் போட மாமன் ஊட்ட என்று முழுதாக நான்கு தோசையை வழக்கத்திற்கு மாறாக சாப்பிட்டு முடித்திருக்க, ஆண்கள் இருவரும் திருப்தியாய் புன்னகைத்தனர்.
காலில் ஷூவை மாட்டிக்கொண்டே, “உங்கள நிரந்தர ஹவுஸ் ஹஸ்பண்டா மாத்துற நாள் வெகுதொலைவில் இல்ல மிஸ்டர் வெற்றி! என்றவளை குறுநகையுடன் கையைக் கட்டி பார்த்திருந்தான்.
“இப்பவே நல்லா சிரிச்சிக்கோங்க. தேஜஸ்வினி வழக்கு இப்போ என் கையில. சீக்கிரமே உங்க முகத்திரையை அப்பாக்கு முன்னாடி கிழிச்சி காட்டுறேன்” என்றவளை பதிலேதும் சொல்லாமல் பார்த்திருந்தவன், அதே புன்னகை மாறாமல், தன் முன் நெற்றி முடியை வாயால் காற்றை ஊதிக் காண்பித்தான்.
பற்றிக்கொண்டு வந்தது அவளுக்கு. உன்னால் ஒரு டேஷூம் புடுங்க முடியாது என சைகையால் உணர்த்தியவனை அலட்சியமாகப் பார்த்தவள், “புடுங்கிக் காமிக்கிறேன்” என்று வீராவேசமாகச் சென்றாள்.
ஆனால் அவள் நினைத்ததுபோல் அது அவ்வளவு எளிதாக இல்லை. எந்தப் பக்கம் திரும்பினாலும் வெற்றி வெற்றி என்றார்கள். தேஜஸ்வினி வழக்கு விசயமாக எந்த கோப்புகளைக் கேட்டாலும் அது வெற்றியின் தனிப்பட்ட பாதுகாப்பில் இருப்பதாகக் கைக்காட்ட தளர்ந்து போனாள்.
சின்ன தடயத்தைக் கூட விட்டு வைக்காமல் சம்மந்தப்பட்ட அனைத்தையும் மறைத்து வைத்திருந்தான். அதுவே அவன் கள்ளத்தனத்தைக் காட்ட, மெல்லிய வலி.
இதுக்குதான் காலையில் அவ்வளவு திமிர் காட்டினானா? கொதித்துக் கொண்டு வந்தது. அடுத்து என்ன செய்வது? எங்கிருந்து ஆரம்பிப்பது? மீண்டும் முதலிலிருந்து ஆரம்பித்தால் அவன் திரும்பி வருவதற்குள் முடிக்க முடியுமா? யோசித்து யோசித்து தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்த போதுதான், வெற்றி அவளைக் காண வந்திருப்பதாக உதவிக்காவலர் வந்து சொல்லவும் நிமிர்ந்து அமர்ந்தாள். தான் தோற்றுப்போனதை அவனிடம் காமிக்க விரும்பவில்லை அவள்.
சாப்பாட்டுக் கூடையுடன் ஸ்டேஷன் வாசலில் நின்றிருந்த அவர்களது உயரதிகாரியைக் கண்டு அனைவருமே திகைத்து விழிக்க, “என் பொண்டாட்டிக்கு சாப்பாடு கொண்டு வந்தேன்” என்று அசால்ட்டாகச் சொல்லிச் சென்றான் வெற்றி.
“என்ன மேடம்! காலைலதான சொன்னேன். கோபத்தை சாப்பாட்டுல காமிக்காதன்னு” என்றவன் அவளின் வாடிய முகத்தைக் கண்டும் காணததுபோல் மேஜையின் மீது அனைத்தையும் தனித்தனியே எடுத்து வைத்தான்.
முகத்திலிருந்த சோர்வையும் மீறி திகைத்து விழித்தாள் அவள்.
நிச்சயம் இப்படி ஒரு சம்பவத்தை எதிர்பார்க்கவில்லை அவள். மாமனுக்காக காலை உணவை மறுக்காமல் வாங்கிக்கொண்டாலும், அவன் கேட்ட பூவாக்கு என்ன பண்ணுவீங்களாம்? என்ற கேள்வி உறுத்தியதில் வீம்பாக அவன் கட்டி வைத்த சாப்பாட்டை எடுக்காமலே வந்திருந்தாள்.
“என்ன பார்வை? போ போய் கையைக் கழுவிட்டு வா” என்றதும் சுற்றி முற்றிலும் பார்த்தாள். ஸ்டேஷனே அவர்களைத்தான் கண்டும் காணாமல் பார்த்திருந்தது. ‘எல்லாம் என்ன நினைப்பாங்க? எதுக்கு இந்த வேண்டாத வேலை?’ மெல்லிய கோபம் துளிர்த்தாலும் அவனின் கர்வமற்ற செயல் மனதை அசைத்துப் பார்த்தது.
அவளுக்கு உயரதிகாரி அவன். ஆனால் பணி நீக்கம் செய்யப்பட்ட தயக்கமோ சங்கோஜமோ கொஞ்சமும் இல்லாமல் அதே ஸ்டேஷனுக்குள் இயல்பாக நுழைந்திருக்கிறான். அதுவும் விரிந்த புன்னகையுடன்.
அதில் அவளுக்கு கொஞ்சம் பெருமிதமும் கூட. சற்றுமுன் இருந்த கோபம் அவனின் செயலில் பின்னுக்கு போயிருந்தது. ‘பெரிய காதல் மன்மதன்னு நினைப்பு’ என்று பொய்யாக முகத்தைச் சுழித்தபடி கையைக் கழுவிக்கொண்டு வர அவளை உட்காரவைத்துப் பரிமாறினான் அவன்.
அவளுக்குதான் கூச்சமாகிப் போனது. மனது கொஞ்சமே கொஞ்சம் இலக, “நீ…ங்க சாப்பிட்டீங்களா?” என்றாள் அவளுக்கே கேட்காத குரலில். குரல் தடுமாறி பிசிறுத் தட்டியது. இதழ் வளைத்துச் சிரித்தான் அவன்.
“கார்த்திப்பா வெயிட்டிங். நீ சாப்பிட்டு முடிச்சதும்தான் நாங்க இரண்டுபேரும் சாப்பிடணும்” என்றதும் அதற்குமேல் பேசாமல் விரைவாகச் சாப்பிட்டு முடித்து எழுந்து கொண்டாள்.
அனைத்தையும் எடுத்து வைத்தவன், கைக்கழுவிக் கொண்டு வந்தவளின் அருகில் நெருங்க, சற்றே பதறி ‘என்ன’ வென விழியுயர்த்தினாள்.
சுற்று முற்றும் பார்வையை ஓட்டியபடியே அவள் காதருகில் நெருங்கி, “உனக்கு இருக்கிறதே குட்டி மூளை. அதையும் ரொம்ப கசக்காதடி! முகமே வாடிக்கிடக்கு” என்றவன் அவள் சுதாரிக்கும்முன் மறைந்திருந்தான்.
அன்று இரவு அருகில் தூங்கிக் கொண்டிருந்தவளின் மென்கரம் வெற்றியின் முகத்தில் மோத, குலுங்கிய வளையல்களின் சிணுங்கல்களில் மெல்ல எழுந்தமர்ந்தான் வெற்றி.
அவள் வளைகரம் பற்றி, சந்தன நிறத்திலிருந்த வளையல்களைச் இலேசாகச் சுண்டிவிட, அது ஒன்றுடன் ஒன்று மோதி மோன ராகத்தை இசைக்க மென் புன்னகையுடன் இரசித்திருந்தவன், பின் ஒசைப்படாமல் ஒவ்வொரு வளையல்களாக கவனமாக உடைத்தெடுத்தான்.
இரண்டுநாள் முன்னர்தான் அவளது காக்கி உடையின் கம்பீரத்திற்கு கண்ணாடி வளையல்கள் பொருந்தாதுபோல் தோன்ற, அதையே அவனது மனையாளும் தன் தாயிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“ம்மா.. இதை கழற்றிடட்டுமா? நைட்ல இதுமட்டும் தனியா டிங்க்டிங்னு பேய் மாதிரி சத்தம் போடுதும்மா!” என்றாள் முகத்தைச் சுருக்கி.
அது திருமணத்தன்று அணிந்த கண்ணாடி வளையல்கள். அது தானாகத்தான் உடையவேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. பொதுவாக இதுபோன்ற விசயங்களில் பாரதிக்கு பெரிதாய் நம்பிக்கை இல்லையென்றாலும், திருமணத்திற்கு வந்த மலைக்கிராம பெண்ணொருத்தி, “சீக்கிரமா எங்க மவராசன் பொறக்கட்டும்” என்று கேலியுடன் அணிவித்துவிட்டுச் சென்றிருந்தாள்.
அன்றுதான் அவன் ஆசை ஆசையாகக் கைச்செயின் வாங்கியதும். மனைவிக்கு மட்டும் தனியாக வாங்காமல் ஓரே டிசைனில் மிருத்யூக்கும் சேர்த்தே வாங்கி இருந்தான்.
அன்று இரவு கார்த்தியிடம் தந்து அவளிடம் தரவேண்டும் என்று காத்திருந்தவனுக்கு அதற்குள் என்னென்னவோ நடந்துவிட்டிருக்க, மறுநாள் மனைவியின் கண்முன்னே மிருத்யூவுக்கு கொடுத்து வெறுப்பேற்றியும் இருந்தான்.
நடந்த அடுத்த அடுத்த பிரச்சனையில் சுத்தமாக அதை மறந்துவிட்டவனைத்தான் அவளது வளையல்கள் சிணுங்கி இன்று ஞாபகமூட்டியது. ‘என் கைப்பட்டுதானே உடையனும்’ என்று மென்புன்னகையுடன் ஒவ்வோன்றாக உடைத்தெடுத்தவன் தலையணையின் அடியிலிருந்து சிறிய பெட்டியைத் திறந்து அதிலிருந்த கைச்செயினை மனையாளுக்கு மாட்டி விட்டக் கையோடு, அவளது கரத்தை தன் நெஞ்சில் போட்டுக்கொண்ட பிறகே நிம்மதியாக உறங்கினான்.