அத்தியாயம் : 19

அம்முவும், திவ்யபாரதியும் கடைக்குச் சென்று அரைமணி நேரத்திற்கெல்லாம், வெற்றியும் செழியனும் அந்த பிரபல ஜவுளி கடைக்குள் நுழைந்தனர்.

புடவையை விரித்துப் பார்த்திருந்த திவ்யபாரதி வெற்றியைக் கண்டதும், “வாங்க தம்பி” என்றழைக்க, பதிலாக அவன் குரல் கேட்டும் திரும்பவில்லை அம்மு. மும்முரமாக சேலையை பிரிப்பதுபோல் திரும்பி இருந்தவள் வேண்டுமென்றே விற்பனைப் பெண்ணிடம் எதையோ கேட்டுக் கொண்டிருந்தாள்.

நீல நிற ஜீன் அணிந்து வெள்ளை நிறத்தில் ஷர்ட் அணிந்து முழு நீள முடியையும் குதிரைவால் போல் அடக்கி விட்டிருந்தவளை நொடிநேரம் இரசித்து, “மிருத்யூ வரலையாத்த?” என்று உரிமையாய் அழைத்தான். 

அதிலயே திவ்யபாரதியின் உள்ளம் நெகிழ்ந்து போனது. “இல்ல தம்பி. பரீட்சை இருக்காம்! நீங்க இரண்டு பேரும் பாருங்க. நாங்க மிருத்யூக்கு பார்க்கிறோம்” என்று கணவனுக்கும் கண்ஜாடை காட்ட, புரிந்துகொண்டு எழுந்தான் செழியன்.

“எடுத்துட்டு கூப்பிடுங்க!” என்ற இருவரும் நவீனரக உடைகள் இருக்கும் வேறு தளத்திற்குச் செல்ல, வெற்றி முற்றிலும் இதனை எதிர்பார்க்கவில்லை.

அழைத்ததற்காய் வந்தானேத் தவிர, புடவையைப் பற்றி அவனுக்கென்ன தெரியும். வேங்கையிடம் தனியே மாட்டிவிட்டுச் சென்றவர்களை ஏக்கமாகப் பார்த்தான். 

“சொல்லுங்க சார்! என்ன மாதிரி வேணும்?” விற்பனைப் பெண் கேட்டதும், அதுவரை அப்படி ஒருவன் இருக்கிறான் என திரும்பியும் பாராது அமர்ந்திருந்தவளை ஏறிட்டான்.

அவனைக் கண்டதுமே, காலையில் அவனோடனான வாழ்க்கையை நினைத்துப் பார்த்ததும் நினைவில் வர, தன்னைப் பிரித்துக் கூட்டிப்போக வந்த வில்லனாகத்தான் பார்த்தாள் அவள். திரும்பவும் இல்லை.

அவள் முகமே காட்டிக் கொடுக்க, ‘இது வேலைக்காகாது’ என்று தோன்றவும், “முகூர்த்தப் பட்டு காமிங்க” என்றான். என்னவோ எல்லாம் தெரிந்தது போல். 

“அதான் சார், “என்ன மாதிரியான பட்டு வேணும்? காஞ்சிபுரம், பனாரஸ், போச்சம்பள்ளி, பட்டோலா, வேங்கடகிரி, மதனப்பள்ளி, தர்மாவரம் அப்புறம் லேட்டஸ்ட் வாழைநார்ப்பட்டு! அந்தப்பெண் அடுக்கிக்கொண்டே போக அவனுக்கு மூச்சு வாங்கியது.

‘எப்பா எத்தனை? இதில் ஒன்றுகூட தெரியாதே?’ ஏதேனும் உதவுவாளா என்று மீண்டும் தனது எழிலரசியின் முகம் பார்க்க, அவளோ ஏதோ புடவையை மும்முரமாக ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

அதில், “அதாங்க முகூர்த்தப் பட்டு. இந்த முகூர்த்த டைம்ல கட்டுவாங்களே அது!” என்றான் திணறி.

“என்ன சார்? இத்தனை ஐட்டம் சொல்றேன் கடைசில அண்ணனுக்கு ஊத்தப்பம்னு அதுலயே வந்து நிக்குறீங்க!” என்று அந்தப் பெண் சொல்லவும் பக்கென அம்மு சிரித்துவிட்டிருந்தாள்.

“சிரிப்பெல்லாம் பலமாத்தான் இருக்கு. ஆனா மேடம் திரும்ப மட்டும் மாட்டீங்க” வம்பிழுத்தபடியே நாற்காலியை நன்றாக அவள் அருகில் இழுத்துப் போட, திரும்பி முறைத்தாள் அவள்.

‘இதுக்கொன்னும் குறைச்சலில்ல’ மனதோடு புலம்பி அந்தப் பெண்ணிடம் திரும்பினான். 

“இந்தாம்மா! இதோ கல்லு மாதிரி சிலையா இருக்காங்களே, இவங்க புடவை கட்டின அப்புறம் கொஞ்சம் முன்னாடி சிரிச்சாங்கல்ல அப்படி இருக்கணும்! அது எந்த புடவையா இருந்தாலும் பரவால்ல காமிங்க” என்றான் வேண்டுமென்றே.

“கொழுப்பா?” என்றாள் அவனிடம் திரும்பி.

“லைட்டா” என்றவன் புன்னகையுடன் திரும்பிக் கொள்ள, அந்தப்பெண் இருவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு இருந்த அத்தனைத் தரத்திலும் எடுத்து விரித்தாள்.

கிட்டத்தட்ட அரை மணிநேரம் கடந்திருந்தது. இருவரும் பேசினால் அல்லவோ ஒரு முடிவுக்கு வருவதற்கு. அவன் எடுத்துத் தரும் புடவைகளை எல்லாம் வாங்கி ஒரு பக்கமாக குமித்துக்கொண்டே வந்தாள்.

கடைசியாக, தங்கமும் மெரூனும் கலந்த நிறத்தில், உடலெங்கும் கொடியாகப் படர அகன்ற ஜரிகை கொண்ட புடவை ஒன்று அவனை மிகவும் கவர்ந்தது.

அதை கையிலெடுத்தவன், “ஏய் மூஞ்செலி! இது உனக்கு ரொம்ப அழகா இருக்கும். ப்ளீஸ்..” என்று அவள் கையில் திணிக்க அதையும் வாங்கி ஓரமாய் வைத்தாள்.

அதற்கும்மேல் அவனால் முடியவில்லை. அவனும்தான் அவளது பாராமுகத்தை எவ்வளவு நேரம் சமாளிப்பான்.

“உனக்கு இப்போ என்ன தான்டி பிரச்சனை? அன்னைக்கே சொன்னேன் கல்யாணம் வேண்டாம்னா வேணாம்னு சொல்லிட்டுப் போய்ட்டே இருன்னு. 

அதுக்கும் விடமாட்டேன்னு என்னை சாகடிக்கிறடி!” அவள் காதுக்குள் சீற, அங்கு வந்து சேர்ந்தனர் செழியனும், பாரதியும்.

சட்டென அவன் முகத்தை இயல்பாய் மாற்றிக்கொள்ள அவனின் திடிர் கோபத்தில் மிரண்டு அவனையே பார்த்திருந்தவள், அன்னை தந்தையைக் கண்டதும் சட்டென்று புன்னகை முகமாய் மாற்றிக் கொண்டவனை வியந்து பார்த்தாள். 

‘படுபாவி என்னமா நடிக்கிறான்’ அவளால்தான் அப்படி மாற்றிக்கொள்ள முடியாமல் தாயின் முறைப்பிற்கு ஆளானாள். 

‘பக்கி நம்மள மட்டும் மாட்டி விட்ருச்சே’ திவ்யபாரதியின் பார்வையில் அவ்ளோ நேரமில்லாது அப்போதுதான் வெகு தீவிரமாய் புடவையை ஆராய்ந்தாள்.

“என்ன இன்னும் ஒரு முடிவுக்கு வரலையா?” கேட்டுக்கொண்டே வந்த செழியன், வெற்றியின் அருகில் அமர, “அதை உங்கப் பொண்ணுகிட்ட கேளுங்க?” என்ற திவ்யபாரதி மகளை திட்டவும், அவளது முகம் சுருங்கியது.

‘அவன் முன்னாடிதான் திட்டணுமா?’முகம் சிறுத்துப்போனவளை காணமுடியாது வெற்றிதான் தவித்துப் போனான்.

“எங்க இரண்டு பேருக்கும் புடவைப் பத்தி என்ன தெரியும்? பெரியவங்க நீங்க பார்த்து வாங்குங்கத்த! அவளுக்குப் புடிச்சிருந்தா போதும்” என்ற மருமகனை, தாயும் தங்தையும் புளங்காகிதத்துடன் பார்த்துவைக்க அம்முவுக்கு பற்றிக் கொண்டு வந்தது.

‘போடுற ஒவ்வொரு பாலையும் கிரவுண்ட தாண்டி பறக்க விடுறான். நீ நல்லா வருவடா! எதையும் வாயைத் திறந்து சொல்ல முடியாமல் மனதுக்குள் புளுங்கினாள்.

திவ்யபாரதியும் விடாமல் மகள் காதில் வேப்பிலை அடிக்க, அது வெற்றிக்கு சங்கடத்தைத் தந்தது.

“எனக்கு போன் வந்துட்டே இருக்கு நீங்க பாருங்க! நான் கிளம்பறேன்” என்றதும் சொல்லி வைத்தாற்போல் அவனது அலைபேசியும் ஒலி எழுப்பியது. அவன் அங்கு இருக்க இருக்க எந்த முடிவுக்கும் வராமல் திணறுவாள் என்று கிளம்பி விட்டான். பெரியவர்கள் முகத்திற்காகத்தான் அவன் வந்தது.

திவ்யபாரதி அம்முவை முறைத்துவிட்டு கேள்வியாய் செழியனைப் பார்க்க, ‘விட்டுவிடு’ என விழிமூடித் திறந்தான்.

அலைபேசியை எடுத்துக் காதில் வைத்துக்கொண்டே, பொதுவாக கண்களால் விடைபெற்றவன் அம்முவை திரும்பியும் பார்க்கவில்லை. அதுவேறு அவன் பார்த்து வைத்து அவள் முறுக்கிக் கொண்டால் அதுக்கு வேறு தனியாகத் தாயிடம் திட்டு வாங்குவாள். 

பிடித்தவளுக்கு பிடித்த மாதிரி இருக்க முடியாத ஆதங்கத்தில் வெளியேறியவனின் மனம் உண்மையில் புண்பட்டுக் கிடந்தது.

‘அவளிடம் திருமணத்திற்கு கேட்டிருக்கக் கூடாது. கொஞ்சம் அவசரப் பட்டுட்டேன்’ என்று தன்னையே கடிந்துகொண்டாலும், அவள் இப்போது தன்னுடன் இருக்க வேண்டிய அவசியத்தையும் உணர்ந்தே இருந்தான்.

எல்லா ஏற்பாடும் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இனி திருமணத்தை நிறுத்துவதும் சாத்தியமற்றது. அப்படிச் செய்தால் அவனின் ஆஸ்தான நாயகன் செழியனுக்குத்தான் அவமானம். 

காதல் இல்லாதவளை ஒன்றும் கட்டாயப்படுத்த வில்லையே. திமிர் திமிர் புரிந்துகொள்ள மாட்டேன் என்ற திமிர் எதிலும் அவசர முடிவு. இதற்கு மேல் நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட வேண்டும் என எண்ணிக்கொண்டவன் அவசரமாக முடிக்க வேண்டிய வேலைகளில் தன்னை மூழ்கடித்துக் கொண்டான்.

அவ்வளவு நேரமும் அவனின்‌ முகம் காணாதவள் செல்லும் அவன் முதுகையே வெறித்திருந்தாள். கோபத்தோடுதான் செல்கிறான் என தெரிந்தது. அவளுக்கும் வலித்தது. 

என்ன முயன்றும் மனதால் ஒன்ற முடியவில்லை. இந்த அரைமணி நேரத்தையே அவனுடன் ஒன்றாகச் சமாளிக்க முடியவில்லையே. எப்படி வாழ்நாள் முழுக்க மனதொன்றி வாழ்வது? கண்ணை கரித்துக் கொண்டு வந்தது.

மனம் பாரமாகினாலும் திவ்யபாரதிக்காக புடவைகளை பேருக்கேனும் திருப்பிக் கொண்டிருந்தாள்.

“எக்ஸ்க்யூஸ்மீ! சாமுத்ரிகா, விவாஹா, வஸ்த்ரகலா இந்த டைப் சேரிஸ் காமிங்க” என்ற கரகரத்த குரலில் சட்டென நிமிர்ந்தாள் எழிலரசி.

அவளுக்கு அருகில் இருந்த நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்தார் பெரியவர் ஒருவர். முகம் முழுக்க வெள்ளை நிற தாடியும் அடர்ந்த மீசையும். தலை அங்கங்கே பெப்பர் சால்ட் தூவினார் போல் விவேகம் அஜீத் ஸ்டைலில் வேஷ்டி சட்டை வேறு. ஆனால் இந்தக் குரல்?

“நல்ல லெமன் கலர்ல கரும்பச்சை பார்டர்ல, ஃப்ளோரல் டிசைன் வித் ஜர்தோஷி ஒர்க்ல காமிங்க…” அவன் கேட்ட விதத்தில் கடைப் பெண்ணே அயர்ந்து விழித்தாள்.

‘ச்ச..ச்ச! அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்னு நாமதான் அவனை நினைச்சி பயப்படுறோம். இப்ப குரல் வயசானது போலத்தானே இருக்கு’ அவளே அவளைத் தேற்றிக்கொண்டு வெற்றி எடுத்து வைத்த தங்கநிறப் புடவையைக் கையிலெடுத்தாள்.

“நான் தாலி கட்ட போறவ எனக்குப் புடிச்ச கலர்லதான் புடவைக் கட்டணும்” மிக அருகாமையில் காதுக்கருகில் கேட்ட குரலில் அவளது உடல் இறுகியது.

‘இது அவனேதான்! புது கெட் அப்பா?’ சட்டென அருகிலிருந்த உருவத்தின் முகத்தில் இடது முழங்கையால் இடிக்க, எதிர்பாராத அந்தத் தாக்குதலில் அந்த பெரியவர் நாற்காலியிலிருந்து சரிந்தார்.

சரிந்தவரின் மேல் ஏறி அமர்ந்தவள் அந்த தாடியைப் பிடித்திழுக்க, “அம்மா, அய்யோ…” என்று கத்தினார் முதியவர்.

‘அச்சச்சோ இது ஒரிஜினல் தாடி’ என அவள் அதிர்ந்து விழிக்க, அதற்குள் கூட்டம் மொத்தமும் கூடி இருந்தது.

பாரதியும், செழியனும்,  “அம்மு என்னதிது?” என்று பதறி அருகில் வர, “இல்லப்பா அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல சொன்னேன்ல அவன் குரல் போலவே…” என்று முடிக்கும்முன்‌ முறைத்தான் செழியன். 

அன்று நடந்ததை அன்றே தந்தையிடமும் சொல்லி இருந்தாள். 

“இது ஆப்பரேஷன் இராஜாளியைத் தடுக்க உன்னை வச்சு என்னையும், வெற்றியையும் திசைத்திருப்பும் முயற்சி. நீ கவலைப்படாத!” என்று சொல்லி வைத்திருந்தான் செழியன். ஆனாலும் அவன் காதலைச் சொன்ன விதத்தில் அவளுக்கு உள்ளுக்குள் பயம் அகலவில்லை.

அதில், “இவ்ளோ பேர் இருக்க பப்ளிக் ப்ளேஸ்ல வரதுக்கு அவனுக்குப் பைத்தியமா? நான்தான் அன்னைக்கே சொன்னேன்ல?” என்று கடிந்து கொண்ட செழியன் அந்தப் பெரியவரையும் எழுந்து உட்காரவைத்து வேறு யாரோ குற்றவாளி என நினைத்துச் செய்துவிட்டதாக விளக்கம் சொல்லி மன்னிப்பும் வேண்டினான்.

அவன் காக்கி உடையிலயே வந்திருந்தபடியால், அனைவரும் கலைந்து செல்ல, அம்முவும் அந்த பெரியவரிடம் மன்னிப்புக் கேட்டாள்.

அந்தப் பெரியவரோ புடவையும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் உயிர் பிழைத்தால் போதுமென அங்கிருந்து அகன்று விட, திரும்பவும் புடவை வேட்டை ஆரம்பமானது. 

மீண்டும் “ம்..ம்..க்கும்” என்று கணைக்கும் குரலில் அதிர்ந்து நிமிர்ந்தாள்.

அவனேதான். விருமாண்டி கமல் ஸ்டைலில் பெரிய மீசையுடன் பக்கத்து நாற்காலியில், அடக்கமாட்டாமல் வாயில் கைவைத்து சிரித்தபடி அமர்ந்திருந்தான்.

இப்போது அவளுக்கே சந்தேகம் வந்துவிட்டது. இவன் மீசையையும் பிடித்திழுத்து எதும் கலவரம் நடந்து விட்டால்…! ஏற்கனவே தன்னை வித்யாசமாகப் பார்ப்பவர்கள் பைத்தியம் என்றே முடிவு கட்டக்கூடும்.

மண்டையைப் பிய்த்துக்கொள்ளலாம் போலிருந்தது.

“லெமன் கலர்ல டார்க் க்ரீன் பார்டர்ல பட்டு சேரிக் கேட்டனே?” விருமாண்டிதான் அருகிலிருந்து பேசினான்.

அவனேதான். சந்தேகமேயில்லை. அவள் அவசரமாகத் திரும்ப, “ஏன்டி இவ்ளோ பேருக்கு நடுவுல, அதும் சூரப்புலி உங்கப்பா  முன்னாடி அவ்ளோ பாதுகாப்பில்லாமயா வருவேனா?” அவள் காதில் இரகசியமாய்ச் சொன்னவனில் அதிர்ந்து தந்தையைப் பார்த்தாள்.

அம்முவின் அருகில் திவ்யபாரதி அமர்ந்திருக்க அதைத்தாண்டிதான் செழியன் அமர்ந்திருந்தான். அதுவும் மும்மரமாக புடவைகளை ஆராய்ந்தபடி இருந்தனர் இருவரும்.

மறுபடியும் சொன்னால் தந்தை நம்புவாரா? இருந்தும் வழி இல்லையே. தானாக பைத்தியம்போல் முயற்சிப்பதைவிட தந்தை பார்த்துக்கொள்ளட்டும் என அழைக்க வாயெடுக்க, 

“உன் துருவன் உனக்கு உயிரோட வேண்டாமா?” என்றவனது குரலில் அதிர்ந்தவளின் வாய் தானாக மூடிக்கொண்டது. 

“அன்னைக்கே சொல்லி இருக்கேன்.‌ என் முன்னாடி ஸ்மார்ட்டா ப்ளே பண்ண ட்ரை பண்ணாதன்னு. உன் துருவன் உயிரோட வேணும்னா அமைதியா நான் சொல்றதை மட்டும் கேட்கணும்” என்றவனை  நம்பாத பார்வைப் பார்த்தாள். 

துருவனை அவ்வளவு லேசில் நெருங்கிவிட முடியாது. ஆனால் ஷீலா விசயத்தில் அவன் படுவீக். ஷீலாவை முன்னிறுத்தி அவனை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.

“என்ன அன்னைக்கே மாதிரி டம்மி பாம் கட்டி இருப்பேன்னு நினைக்கிறியா? பாம்லாம் இல்ல உன்னை நெருங்கினாப் போல துருவனை நெருங்க முடியாதுன்னு எனக்கும் தெரியும். அதான் தூரத்திலிருந்து அவனைக் குறிபார்க்க என் ஆளு ஒருத்தனை கன்னோட (gun) அங்க நிறுத்தி வச்சிருக்கேன். இன்னும் அஞ்சி நிமிஷத்துல நான் இங்கிருந்து கிளம்பலைன்னா உன் துருவன் ஃபடாஃபட்” என்றவன் நாக்கை மரணிப்பதுபோல் துருத்திக் காமிக்க, அவளால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

அதற்குள், அவன் கேட்ட அதே நிறத்தில் ஒரு புடவையைக் கையிலெடுத்தவன், “இதைத்தான் நீ செலக்ட் பண்ற!” என்று அவள் கையில் வைக்கப்போக, அந்நேரம் இவள்பக்கம் திரும்பினாள் திவ்யபாரதி. 

“இந்த கலர் நல்லாருக்கேடி. தம்பி இது நீங்க எடுத்துருக்கீங்களா?” இதுபோல இன்னொன்னு இருக்கா? மகளிடம் சொல்லிவிட்டு விருமாண்டியிடம் கேட்டவள் அப்படியேத் திரும்பி விற்பனைப் பெண்ணிடமும் கேள்வி கேட்க, “இல்ல அது ஒன்னுதான் லாஸ்ட் பீஸ்” என்றாள் அந்தப் பெண்.  

“ஓ! இட்ஸ் ஓகே ஆண்டி, நீங்களே எடுத்துக்கோங்க. நான் வேற பார்க்கிறேன். மேடமுக்கு இது ரொம்ப அழகா இருக்கும்” என்றதும், “தேங்ஸ் தம்பி” என்ற திவ்யபாரதி இதை பில் போடுங்க என்று எடுத்துக் கொடுக்க, தவித்துப் போனாள் அம்மு எழிலரசி. வெற்றி தேர்ந்தெடுத்தப் புடவைப் பரிதாபமாய் அவளைக் கண்டுச் சிரித்தது.

விருமாண்டியோ அதற்குமேல் அவளைக் கேலி செய்வதுபோல் மௌனமாய் கொழுத்த மீசைக்குள் சிரிக்க நொந்துபோனாள் அவள்.

“ம்மா…இது வேண்டா..ம்!” அவள் வாய் திறக்கும்முன் அவனது அலைபேசியில்  துருவன் கத்தும் ஒலிகேட்டது. மிக மிக ஒலி குறைவாக அவளுக்கு மட்டும் கேட்கும் டெசிபலில் அலைபேசியை அவளுக்கும் அவனுக்கும் இடைப்பட்ட பகுதியில் பிடித்திருந்தான்.

யாரேனும் புதியவரைக் கண்டால் துருவன் இப்படித்தான் கத்துவான். அதில் அதிர்ந்தவள் வாயை மூடிக்கொண்டாள்.

“வரட்டா பேபி! இந்தப் புடவையில தயாரா இரு தூக்கிட்டுப்போக கண்டிப்பா வருவேன்!” என்றவன் எழுந்துகொண்டான்.

அவள் மூளை என்னமாவது செய் என்று பரபரக்க, அதைத் தெரிந்ததுபோல் எதையோ எடுப்பதைப்போல் மீண்டும் குனிந்தான்.

“சொல்ல மறந்துட்டனே! நான் வெளிலபோய் என் ஆளுக்கு கால் பண்ற வரை உன் துருவன் உனக்கில்ல மைண்ட் இட்! “சோ, பேசாம செல்லப்பிள்ளையாட்டம் இருப்பியாம்” என்றவன் மெல்லமாய் விசிலடித்தபடி அங்கிருந்து மறைந்தான்.

அவன் சென்று சில நிமிடங்கள் கழித்து விறுவிறுவென ஓடியமகளை செழியனும், பாரதியும் விநோதமாய் பார்த்திருக்க, பத்து நிமிடங்கள் கழித்து மூச்சிறைக்க வந்து சேர்ந்தாள்.

“என்னடி? காலைலர்ந்து பைத்தியம் புடிச்சாமாதிரி நடந்துட்டு இருக்க.” கடிந்து கொண்ட தாயை முறைத்தவள், “அவன்தான்பா நம்ம துருவனை வச்சி மிரட்டினான்” என்று தந்தையிடம் நடந்ததைச் சொல்ல வெற்றுப் பார்வையுடன் எடுத்தவற்றுக்குப் பணம் செலுத்தச் சென்றான் அவன்.

“ம்மா இந்தப் புடவையைக்கூட இதைத்தான் நீ கட்டிக்கணும்னு வற்புறுத்தினான்” என்று தாயிடமும் திரும்பி முறையிட, “அதை உங்கப்பாட்டயே சொல்லு! யார் எடுத்தா என்ன புடவை நல்லாதான் இருக்கு” என்ற தாயை முறைக்க மட்டுமே முடிந்தது அவளால். 

“இந்தா இதையும் சேர்த்து பில் போடும்மா!” என்று வெற்றி தேர்ந்தெடுத்த புடவையையும் சேர்த்து தாயின் கையில் தந்தாள். அதன் விலையைக் கண்டு, “இது எதுக்குடி? தண்டச் செலவு” என்ற தாயைக் கண்டு மானசீகமாக தலையிலடித்துக் கொண்டவள், “என்னை நம்பலைல நீ. அதுக்குதான் ஃபைன். போ! போய் குடு!” என்று விரட்டினாள்.

“அவன்கிட்ட பாய துப்பபில்ல. ஒரு கிழவனோட தாடிய பிச்சி எறிஞ்சிட்டு வாயைப் பாரு” என்று தாய் பழிப்புக்காட்ட, “அம்மா…!” என்று சத்தமின்றி சீறியவளின்  கோபம் தாயின் கேலியில் காணாமல் போனது.

“என்னப்பா நம்பலியா? என்று தந்தையின் பின்னாடியே சென்று நின்றாள்.

மகளை ஒரு பார்வைப் பார்த்த செழியன், “நம்பாம என்ன? என்கிட்ட ஒரு வார்த்தைக் கூட சொல்லாம் உன்கிட்ட மட்டும் தனியா பேசிட்டு போயிருக்கானே அதான் யோசனையா இருக்கு” என்றதும் “ஙே” என்று விழித்தாள்.

இப்போ நம்பறேங்குறாரா? இல்ல நம்பலைங்குறாரா? ‘கடவுளே’ என்றவள் கடையின் கண்காணிப்புக் கேமரா பகுதியை ஆய்வு செய்தாள்.

கீழ் தளத்தின் ஒரு பகுதியிலிருந்து அவன் வருவதும், திரும்பிச் செல்கையில் அதே கீழ்த்தளத்தில் மறைவதும் பதிவாகி இருந்தது. ஆனால் வெளிவாசல் கேமராவில் அவன் உள்ளே வந்ததற்கான பதிவும் இல்லை வெளியே சென்றதற்கான பதிவுகளும் இல்லை. அவள் அந்த முதியவருடன் கட்டி உருண்டபோது கூட்டத்தில் ஒருவனாக சிரித்துக் கொண்டு நின்றிருப்பது தெரிந்தது.

‘பாவி பின்னாடி இருந்து குரல் கொடுத்துருக்கான். இது தெரியாம…’ தன்னையே கடிந்து கொண்டாள்.

“எக்ஸக்ட்டா கீழ் ஃப்ளோர்ல அந்த இடத்துல கேமரா இல்லையா?” என்று வினவ, “அது ஸ்டாஃப்க்கான ரெஸ்ட்ரூம் ஏரியா மேடம். அங்க கேமரா இருக்காது. அதோட அங்கிருந்து ஸ்டாஃப் வெளிய போறதுக்கான தனி வழியும் இருக்கு. அங்கயும் கேமரா இல்ல” என்றான் கடையின் பணியாள்.

மகளுடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்த செழியன், “வெல் ப்ளான்ட்” என்றதோடு முடித்துக்கொண்டவன், வெற்றிக்கு அழைத்தபடி வெளியில் சென்றுவிட, ‘இனி அவனை வேற சமாளிக்கனுமே’ என்று அம்முவுக்குதான் அயர்ந்து வந்தது.