அத்தியாயம் : 18

“வாவ்… வாவ்..வாவ்! 

வாட் எ ப்ரோப்போஸல்” அடக்கமாட்டாமல் சிரித்தான் வெற்றி.

அவன் எதிரே கடுப்புடன் நின்றிருந்தாள் எழிலரசி.

“பாரேன்! இத்துனூண்டு வயசுல பத்திரம் காட்டினதுல இருந்து இங்க சுமந்துட்டு இருக்கேன். எனக்கு கூட இப்படி ப்ரோப்போஸ் பண்ண தோணலயே” என்றவனின் சிரிப்பு மட்டும் அடங்கிய பாடில்லை.

அவளிருந்த நிலையில் அவன் சொன்னதைச் சரியாக உணரவில்லை அவள். உணர்ந்திருந்தால் எப்போதிருந்து அவளை சுமந்து கொண்டிருக்கிறான் என்று புரிந்திருக்கும்.  மாறாக அவனது சிரிப்பில் பொறுமை பறந்திருந்தது.

எவ்வளவு பதற்றத்தோடு வந்து சொன்னால், அவளையே கேலி செய்து சிரித்துக் கொண்டிருக்கிறான்.

“அவனைப்பற்றி தெரிஞ்சா உங்ககிட்ட தகவல் தெரிவிக்கச் சொல்லி ஆர்டர். நான் கிளம்பறேன்” கடமை முடிந்ததாக அவள் கிளம்பப் போக,

“உன்கிட்டதான் அவனோட நிஜப் பெயரையே சொல்லிருக்கான். வாட் எ ட்ரூ லவ்! என்று மேலும் மேலும் சீண்டியவனை முறைத்தாள்.

“உங்க கிட்ட போய் சொன்னேன் பாருங்க! என் புத்திய…” பற்களுக்கிடையில் அவள் கடித்து முடிக்கும்முன்

“அப்படி ஒரு ஐட்டம் உன் மண்டைக்குள்ள இருக்குதா என்ன?” என்றான் கேலியாக.

“சர்தான்! இருந்திருந்தா சிலரை என் வாழ்க்கைல அனுமதிச்சிருக்கவே மாட்டேன்” என்றாள் அவளும் சூடாக.

“மே.பி… எனக்கு அவனைப்போல ரொமான்டிக் ப்ரோப்போஸல் வராதே! அதனால பாதிச்சிருக்க மாட்டேனா இருக்கும்” தோளைக் குலுக்கி கைகளை விரித்தான். படக்கென நிமிர்ந்தாள்.

காயப்படுத்தி விட்டேனோ? பதற்றத்துடன் அவன்‌முகம் காண, 

மாறாக, “அவன்தான் உனக்குப் பொருத்தமா பேர் வச்சிருக்கான். ஆங்ரி பேர்ட். நல்லாருக்கில்ல?” என்றவன் மீண்டும் சிரிக்க ஆரம்பிக்க கோபத்தில் பல்லைக் கடித்தாள்.

‘இவனாவது வருந்துறதாவது’ ஒரு நொடி இரக்கப்பட்டதற்காக தன்னைத் தானே கடிந்து கொண்டாள்.

விடவில்லை அவன். “ஜஸ்ட் இமேஜின் மூஞ்செலி. சுத்தியும் ரெட் ரோஸ் பெட்டல்ஸ் நடுவே மை ஆங்ரிபேர்ட்” என்றவன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க, அம்முவுக்கு அவன் மண்டையிலயே ஒன்று போட்டால் என்ன என்று தோன்றியது.

“நீங்க பொறுமையா சிரிச்சி முடிங்க. நான் அப்புறம் வர்றேன்” என்று கோபத்தோடு கிளம்பியவளின் கை அவனிடம் சிக்குண்டது.

“என் மேல நம்பிக்கையே வைக்கமாட்டியா மூஞ்செலி? என்றான், தன் ஆழ்ந்த குரலில் யாசிப்பாக.

 “என்னை மீறி அவன் உன்னை நெருங்க முடியும்னு நினைக்கிறியா?” என்றதும் மளுக்கென கண்ணீர் எட்டிப் பார்க்க, நனைந்த இமைகளுடன் அவனை ஏறிட்டாள். 

இன்னும் ஒரு நொடி அவன் விழிகளைக் கண்டாலும், ஓடிப்போய் நெஞ்சத்தில் பதுங்கிக் கொள்வோமோ என்ற பயம் எழுந்தது.

விழிநீரை ஆட்காட்டி விரல் மடக்கி துடைத்துபடி, “நான் நம்புறா மாதிரி ஒருநாளும் நீங்க நடக்கலையே” என்றவள் அவனிடம் திரும்பி, சிக்குண்ட கையையும் உருவிக் கொண்டாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவளது கண்ணீர் புரியாமல் இருக்குமா? 

முதல்முறை அவனிடம் உரிமையாய் சண்டைப் பிடிக்கிறாள். அவனால் சந்தோஷப்பட முடியவில்லை.

இதுவரை அவன்தான் வம்பிழுத்துப் பேச வைத்திருக்கிறான். இன்று அவளின் ஆதங்கத்தில் அவன்மீதான அன்பு அவளையும் அறியாமல் வெளிப்பட்டதை இயலாமையுடன் கண்டிருந்தான். 

‘என்னை நிருபிக்கனும்னா நீதான்டி துடிச்சிப் போய்டுவ. அது என்னால் முடியுமா?’ வலித்தது.

“என் நிஜம் தெரிஞ்சா நீ உடைஞ்சிடுவ” என்றான் அவள் கண்களைப் பாராமல்.

“என்ன நிஜம்? நீங்க காசுக்கு சோரம் போனதா? இல்ல, அது தெரிஞ்சும் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேனே அதுவா?” என்றதும் கோபத்தில் அவன் முகம் செந்நிறம் கண்டது.

திரும்பி நின்று பிடறி முடிக் கோதி தன்னை நிலைப்படுத்தினான். புரிய வைக்கும் நிலையில் அவன் இல்லை. நீண்டதொரு மூச்சை இழுத்து விட்டான். 

“இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. இந்த சோரம் போனவனை நீ கல்யாணம் பண்ணிக்க வேணாம். இப்பவே கால் ஆஃப் பண்ணச் சொல்லி உங்க அப்பாட்ட சொல்லிடுறேன்” என்றவன் அலைபேசியை எடுக்க, ஓடி வந்து தடுத்து அவன் கையைப் பிடித்தாள்.

“ஓ! ஈஸியா அவனுக்கு என்னைத் தூக்கிக் குடுக்க முடிவு பண்ணிட்டீங்கள்ல?” என்றதும் கோபம் மறைந்து அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது.

அப்படியும் விடமாட்டேன், இப்படியும் விடமாட்டேன் என்று நிற்பவளை என்ன செய்வது?

மெல்லியப் புன்னகையுடன், அவள் பிடித்திருந்தத் தன் கையைப் பார்க்க, அவன் பார்வையை உணர்ந்ததும்தான் அவசரத்தில் செய்த மடத்தனம் புரிந்தது. 

பட்டெனக் கையை எடுத்தவள், அதற்குள் சிவந்துவிட்ட முகத்தை அவன் காணாது குனிந்து கொண்டாள்.

இருவருக்குள்ளும் இதுவரை காதல் என்ற ஒன்று பரஸ்பரம் சொல்லப்படவும் இல்லை. பகிரப்படவும் இல்லை. ஆனால் இலைமேல் பனித்துளியாய் ஒட்டியும் ஒட்டாமல் இருவரின் இதயத்திலும் அன்பின் சுவடுகள் பதிந்து போனதில் உரிமையுடன் முட்டி நின்றனர். 

“சரி! இப்போ நான் என்ன பண்ணனும்? அதையும் நீயே சொன்னா அடியேன் செய்யக் கடமைப் பட்டிருக்கிறேன்” என்றவனின் கேலியில் அவனது எழிலரசி மீண்டிருந்தாள்.

“அவனைப் பிடிக்கத் துப்பில்ல. சும்மா சுதந்திரமா சுத்த விட்டுட்டு. இதுல இராஜாளி, பெருச்சாளின்னு பேரு வேற” 

போலியான கோபத்தில் கடுகடுத்தவளில் சிரிப்பு வர, “ஏய் மூஞ்செலி நிறுத்துடி” என்றவன் அவள் சொன்னவிதத்தில் மீண்டும் சிரிக்க ஆரம்பித்திருந்தான்.

சற்று முன்னர்தான் இருவரும் சிலிர்த்துக் கொண்டு நின்றனர் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.

“இப்போதான, இரையைத் தூக்கி அவன் முன்னாடி போட்டிருக்கேன். சீக்கிரம் சிக்குவான்.” என்றான் சிரிப்பினூடே.

“அதுக்கு நானா கிடைச்சேன்” என்றாள் முறுக்கிக் கொண்டு.

“பின்ன உனக்காகத்தானே அந்த உலகம் சுற்றும் வாலிபன் இங்கயே சுத்துறானாம்” என்றதும் அவள் முறைக்க, “நீ தான சொன்ன!” என்றான் உதட்டில் மறைத்தப் புன்னகையுடன்.

“நீங்க மொத்தமா சிரிச்சி முடிச்சிட்டு சொல்லி அனுப்புங்க நான் வர்றேன்” மீண்டும் அவனை வைத்துக் கேலி செய்யவும் கோபத்தில் அங்கிருந்து செல்ல முயன்றாள்.

அவளது கரம் மீண்டும் அவனிடம் சிக்கிக்கொள்ள, விரைவாகச் சுண்டி இழுத்து அவன் நெஞ்சத்தில் விழ வைத்திருந்தான்.

“இதுக்காகத்தானடி என்னைத் தேடி ஓடி வந்த? என்கிட்ட என்ன தயக்கம்?” அணைத்தும் அணைக்காமல் நின்று அவள் காதோரம் கிசு கிசுத்தவனில் நொடிநேரம் மயங்கித்தான் போனாள் அவள்.

அவளும் அவனின் இந்த ஆறுதலைத் தேடித்தானே ஓடி வந்தது. விழிகள் கலங்கியது. 

அனைத்தையும் மறந்து அப்படியே நிற்கத் தோன்றிய மனதை அவனது முந்தையச் செயல்கள் வலுவிழக்கச் செய்ய விலக முயன்றாள்.

விடாது அணைத்துப் பிடித்தவன், “இந்த இராஜாளி என்னைக்குமே அதன் இரையை விட்டுக்கொடுக்காதுன்னு அந்த பருந்தை மீண்டும் பார்த்தாச் சொல்லிடு!” என்றான் அதே ஆழ்ந்த குரலில். 

தப்பவிடாமல்தானே மிரட்டித் திருமணத்தை நிச்சயித்திருக்கிறான். அதிலிருந்த உண்மை உறைக்க, இதயத்தில் பலமாய் அடி வாங்கினாள்.

எல்லாத்தையும் மறந்து எப்படி மயங்கினேன்? உடல் கூசியது.

மீண்டும் துளிர்த்துவிடப் பார்த்தக் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு நிமிர்ந்தவள், “அதான் தெரியுமே” என்று வேகமாய் அவனை உதறித் தள்ளிவிட்டு வெளியேற, நொடிக்கு நொடி மாறும் அவளது இயல்பை மெல்லியப் புன்னகையோடு பார்த்திருந்தான்.

நடு இரவில் மொட்டை மாடியில் நடைபயின்று கொண்டிருந்தாள் அம்மு எழிலரசி. அவளது மாமன் இருந்திருந்தால் குழப்பத்திற்கு எல்லாம் அவனிடம் ஆறுதல் தேடி இருப்பாள். 

அவனும் பிரச்சனை என்னவென்று தெரியாமலே அவளுக்கு தகுந்தாற்போல் பேசிப் பேசியே தூங்க வைத்திருப்பான். 

கார்த்தி ஊருக்குப் போயிருக்க, அவளது தூக்கத்தைப் பறித்திருந்தான் அவளது நாயகன். 

அவனது நினைவுகளில் உழன்றவளுக்கு அப்போதுதான் அவனிடமிருந்து காப்பி செய்த விரலியின்(பென்ட்ரைவ்) ஞாபகம் வந்தது. 

அன்று இரவு வீட்டுக்கு வந்ததுமே வீட்டில் அனைவரும் மாப்பிள்ளை மாப்பிள்ளை என்று அவனது புகழ் பாடியதில் சண்டையிட்டு கார்த்தியுடன் சென்றவள் அதை சுத்தமாக மறந்து விட்டிருந்தாள்.

அதற்கு அடுத்தடுத்த நாட்களிலும், வேறு வேறு வழக்குகளில் அவளை ஓடவிட்டு மூச்சு விடக்கூட நேரமில்லாமல் செய்திருந்தான் வெற்றி. அதில் அதன் நினைவே எழவில்லை.

இன்று நினைவில் வந்ததும், ‘ச்ச! இதை எப்படி மறந்தேன்’ என்றவள் கீழே ஓடிச்சென்று அதனை எடுத்து வந்தாள்.

காரத்தி அறையிலேயே இருந்த மடிக்கணிணியில் ஓட விட, மாணவர்கள் வருவதும் போவதும் பதிவாகி இருந்தது. 

சற்று நேரம் அதைப் பார்த்தவளுக்கு கண்ணைச் சுழற்றியது.

மணியைப் பார்த்தாள். நேரம் அதிகாலை மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. கொட்டாவியை வெளியேற்றி கணினியில் பார்வையைப் பதித்திருந்தாள். 

மாணவர்கள் நின்று அரட்டை அடிப்பதும், கட் அடித்து வெளியில் செல்வதுமாய் திரும்ப திரும்ப அதேக்காட்சிகள். மதியம் இரண்டு மணிபோல் ஷ்யாம் சுந்தர் அவனது காரில் கல்லூரியிலிருந்து வெளியேறியக் காட்சியைப் பார்த்ததும், இதற்கு மேல் என்ன இருக்கிறது? என்று தோன்றவே கணினியை அணைத்து வைத்தாள்.

அவள் எதிர்பார்த்ததுபோல் அதில் ஒன்றும் கிடைக்கவில்லை. ஏற்கனவே கல்லுரியில் விசாரித்ததில், தேஜஸ்வினி அன்று கல்லூரிக்கு விடுப்பு என்பதும், ஷ்யாம் சுந்தர் மதியமே கல்லூரியை விட்டுக் கிளம்பியதும் தெரிந்ததுதான். அதில் சலித்தபடி தூங்கி இருந்தாள்.

ஒருவேளை இன்னும் ஐந்து நிமிடங்கள் ஓட விட்டிருந்தால் ஏதேனும் கிடைத்திருக்குமோ என்னவோ?

மறுநாள் விடிந்தது. இன்று முகூர்த்தப் புடவை எடுக்கச் செல்ல வேண்டும். அதுவும் அவனுடன். அந்த எண்ணமே சலிப்பைத் தர, எழ மனமின்றி படுத்துக் கிடந்தவளின் முதுகில் ஒன்று வைத்தாள் திவ்ய பாரதி.

“எழுந்துருடி! இன்னைக்கு கடைக்குப் போகணும்னு சொன்னேன்ல?” 

“ம்மா…! ப்ளீஸ் இன்னைக்கு லீவு தான? தூங்கிக்கிறேனே…” எழுப்ப வந்த அன்னையை இழுத்துக் கட்டிலில் போட்டு, தாய் மடியில் தலைவைத்துக் கொண்டாள்.

அவள் இப்படி அன்னையைத் தேடுவது அரிதிலும் அரிது. அதில்  திவ்யபாரதியும் மெல்ல தலைகோதிவிட அவளுக்கு மீண்டும் சொக்கிக் கொண்டு வந்தது. தாயை இன்னும் இழுத்து இடுப்போடு சேர்த்து கையைக் கோர்த்துக் கொண்டாள்.

“இன்னும் ஒரு வருஷம் போனதும் உனக்கே பாப்பா வந்துடும். உனக்கு இன்னமும் அம்மா மடி கேட்குது?” என்றதும் படக்கென கண்விழித்தாள்.

‘ஆமா இதெப்படி மறந்தோம்? கல்யாணம்னா எல்லாம்தான?’ சிந்தனைச் சென்றதில் அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தாள்.

மகளின் வேகத்தில் பயந்து போன திவ்யபாரதி, “என்னடி பேயைக் கண்டா போல எந்திரிக்கிற” என்றவரும் எழுந்து கொள்ள,  

பார்வை எங்கோ நிலைக்க, “பேய்தாம்மா” என்று இதழசைத்த மகளை விநோதமாகப் பார்த்தாள் திவ்யபாரதி.

“கல்யாணம் பேசினதிலருந்தே உனக்குப் பித்துப் புடிச்சிப் போச்சிடி. போ போய் எலும்பிச்ச பழத்தைத் தேய்ச்சிக் குளி” என்று மண்டையில் மெல்ல கொட்டிவிட்டு வெளியேற, நிஜமாகவே பித்துப் பிடித்ததுபோல் அமர்ந்திருந்தாள் எழிலரசி.

இதுவரை கல்யாணத்துக்குப் பின்னான நிகழ்வுகளை அவள் நினைத்தும் கூடப் பார்த்ததில்லை. 

அவள் மறந்தாளா இல்லை அவள் நினைத்துவிடக் கூடாதென்றே அவளை வேலை வேலை என்று ஓடவிட்டானா என்பது அவனுக்கே தெரிந்த நிஜம்.

தாய் கேட்டதும்தான் அப்படி ஒரு சம்பவமே கருத்தில் பதிந்தது.

அவனுடன் ஒன்றாகவா? ஒரே வீட்டிலா? தாய், தந்தை, தங்கை, துருவன்… 

எல்லாவற்றிற்கும் மேலாக அவளது மாமன்! எல்லாரையும் பிரிந்து அவனுடன் செல்ல வேண்டுமா? ஒவ்வொரு கேள்விகளாக முளைக்க முளைக்கக் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது.

காதலித்தவன்தான். எவ்வளவோ கனவுகளும் அவளுக்கும் உண்டுதான். இரும்பல்லவே! ஆனால் அதெல்லாம் மனம் ஒருமித்து வாழும்போது.

இப்படி மிரட்டி கல்யாணம் பண்ணுபவனுடன் இணைந்து வாழ்வது சாத்தியமா? 

ஏதோ வேகத்தில் சம்மதித்து விட்டோமோ என்று மறுக, மெல்ல அறையை விட்டு வெளியில் வந்தாள். 

முற்றும் முழுதாக அந்த வீட்டினைப் பார்வையால் வலம் வந்தாள். இதோ இந்த மொட்டை மாடி, மாமன் மடி, அவன் தலைக்கோதும் நேசம். அவளறியாமல் கண்ணீர் எட்டிப் பார்த்தது. 

முடியுமா என்னால்? அந்த எண்ணம் வந்ததும் அதுக்கு காரணமானவன்மேல் சுறுசுறுவென கோபமும் வந்தது. அது இயலாமையால் வரும் கோபம். 

வீட்டைப் பிரியப் போகும் எல்லாப் பெண்களுக்கும் மனம் சொல்ல முடியா உணர்வில் தவிப்பதைத் தவிர்க்க முடியாததுதான். 

அதற்காகத்தானே இப்படி நகை புடவை சொந்தபந்தங்களின் கலகலப்பு என அவர்கள் மனநிலையை மாற்றி விடுவதும். 

ஆனால் காவல் பணியில் இருப்பவளுக்கு அந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதைவிட அவளுக்கும் அதிலெல்லாம் விருப்பமும் இல்லை.

செழியனுக்கும் அதிலெல்லாம் உடன்பாடில்லை. முக்கியமாக திவ்யபாரதிக்காகவே சொந்த பந்தங்களைக்கூட குறைத்துக் கொண்டவன் அவன். 

வெற்றிக்கும் இதை எல்லாம் எடுத்துச் செய்ய அன்னை தந்தை இல்லாததில் அவன் வருந்திவிடக் கூடாதென்று நேரடியாக திருமணத்தை வைத்திருந்தான். முதல்நாள் இரவு நிச்சயத்துடன் வரவேற்பும் மறுநாள் தாலிகட்டுடன் விருந்து அவ்வளவுதான் அவனுடைய ஏற்பாடு.

அம்முவின் சம்மதம் கிடைத்ததிலிருந்து கார்த்தி ஒரு பக்கம் தீயாய் வேலைப் பார்த்திருக்க, இந்தப் பக்கம் பத்திரிக்கை அடித்து முக்கால்வாசி நெருங்கிய நட்பு, சொந்தம், பணி இடம் என கொடுத்து முடித்திருந்தனர் தம்பதியர். 

மலைக்கிராமத்தில் உயிராய் பழகிய நட்புக்களை அழைக்கத்தான் கார்த்தி சென்றிருந்தான்.

குளித்து, உடைமாற்றி கிளம்பி அமர்ந்தும் வெறுமனே தொலைக்காட்சியில் பார்வையை நிலைக்க விட்டிருந்தாள் எழிலரசி.

“ஏய் என்னடி? நானும் கிளம்புவ கிளம்புவன்னு பார்த்தா அங்க இங்கன்னு தடவிக்கிட்டே நின்னுட்டிருந்த இப்போ என்னடான்னு டிவியைப் போட்டுட்டு உட்கார்ந்துட்ட?” பார்த்து பார்த்துப் பொறுமை காத்த திவ்யபாரதி அவளது ஆமை வேகத்தில் பொங்கிவிட்டாள்.

“ம்மா! என் செல்லம்ல நீயே போய் எடுத்துட்டு வந்துடேன். நீ எதைச் சொன்னாலும் அதையே கட்டிக்கிறேன்” கெஞ்சிய மகளை புரியாதப் பார்வைப் பார்த்தாள் அவள் அன்னை.

“உனக்கு அந்த தம்பியோட என்னடி பிரச்சனை?” என்றதும் தாயை அதிர்ந்து பார்த்தாள்.

பெற்றவள் அல்லவா. எதிலும் ஆர்வம் காட்டாத மகளை விளங்கிக் கொண்டு கேள்வி கேட்க, “அப்படில்லாம் ஒன்னு..ஒன்னுமே இல்லமா” என்றவள் தாயின் முகம் பார்க்கவில்லை.

“காதலிச்ச தான?”அடுத்த கேள்வி இடியாய் வர, விழிகள் தெறித்து விடும்போல் அன்னையைப் பார்த்தாள்.

யார் சொல்லி இருப்பார் என்ற கேள்வியே இல்லாமல் புரிந்தது. 

‘பக்கி! ரொம்ப நல்லவன் மாதிரி அப்பாட்ட ஏதோ உளறி வச்சிருக்கான்’ 

உரியவனிடம் ஆயிரம்முறை இல்லை என்று மறுத்தாலும் தாயிடம் மறுக்கும் தைரியம் அவளிடம் இல்லை.

“ம்மா! இப்போ என்ன கடைக்குப் போகணும் அவ்ளோதான? வா போகலாம்!” சாமர்த்தியமாய் அன்னையின் கேள்வியைத் தவிர்த்தவள் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு எழுந்து கொண்டாள்.

“உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு தெரியாதுடி. ஆனா காதலிச்சா நம்பணும்.

நான் கொலையே செஞ்சாலும் உங்க அப்பா என் மேல தப்பிருக்காதுன்னு நம்பினாங்க. அந்த நம்பிக்கை இருக்கணும்!

தன் வேலையே போனாலும் பரவால்லன்னு உயிரைப் பணயம் வச்சி என்னைக் காப்பாத்தினாங்க பார்த்தியா. காதலிச்சா அந்த தைரியம் வேணும்!

சும்மா பிரச்சனைக்குப் பின்னால ஓடி ஒளியக்கூடாது. அதுக்குப் பின்னாடி என்ன காரணம் இருக்குன்னு தேடிக் கண்டுபிடி! என்ற திவ்யபாரதி,

“இல்லையா அவனை விட்டுடு! வேற மாப்பி…” என்றதும், “ம்மா..” என்று அதட்டல் போட்டாள் மகள்.

“என் அப்பாவோட யாரையும் கம்பேர் பண்ணாதம்மா! எனக்குப் பிடிக்காது.

எனக்கு உன்னையும் மாமாவையும் பத்தினக் கவலைதான். போதும்மா!” என்றவளின் குரல் உடையப் பார்க்க,

 எட்டிப் பார்த்த விழிநீரை உள்ளிழுத்துக் கொண்டவள், விறுவிறுவென செருப்பை மாட்டிக்கொண்டு வெளியேறினாள்.

மற்றவர்களைப் போல் தாயிடம் எதையும் மறைக்க அவளால் முடியாது. சிறிது நேரம் நின்றாலும் அனைத்தையும் சொல்லி கதறிவிடுவோமெனத் தோன்றியது. அப்படித் தன்னவனைக் கீழிறக்கி காட்டவும் அவளால் முடியாது. 

காதலித்த மனம் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. 

‘அவனுக்கு நான்தானே வேண்டும். என் தாய் தந்தைக்கு நல்லவனாகவே இருந்துவிட்டுப் போகட்டும்’ என்று உறுதியாக நினைத்தவளால் ஏனோ திவ்யபாரதி சொன்ன நம்பிக்கையை மட்டும் அவன்மேல் கொண்டுவர முடியவில்லை.