அத்தியாயம் : 17

விலங்குகளுக்கான மருத்துவமனையில் துருவனை கையில் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் அம்மு. மருத்துவரை சந்திக்க நீண்டதொரு வரிசை அமர்ந்திருந்தது. அவளுடையது பத்தாவது டோக்கன்.

“உன்னைத் தனியா சந்திக்க எவ்வளவு பாடு படுறது?” வெகு அருகில் கேட்ட குரலில் திரும்பினாள். பக்கத்தில் மாஸ்க்குடன் அமர்ந்திருந்தவன் யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான்.

துருவன் வேறு அவன் பக்கமாகவே இழுக்க, துருவனை சமாளிக்க வேண்டி கயிற்றை இழுத்துப் பிடித்தாள். கொஞ்சம் விட்டாலும் இங்கு அமர்ந்திருப்பவரில் பாதிபேரின் காதுகள் அவன் வாயில் இருக்கும். அவனுக்கு மற்ற நாய்களைக் கண்டால் அலர்ஜி. அதில் விதிவிலக்கு ஷீலா மட்டுமே. 

துருவன், கார்த்தி வளர்த்த ஹென்றியின் வாரிசுக்கும் மாறனின் வாரிசுக்கும் பிறந்த செல்ல மகன். ஹென்றியின் தலைமைப் பண்பையும், மாறனின் காதை கடித்துத் துப்பும் பழக்கத்தையும் ஒருங்கேப் பெற்றவன். அந்த நான்கு வீரர்களின் எச்சமாக மீதமிருப்பது துருவன் மட்டுமே.

(ஹென்றி, பைரவ், ராக்கி, மாறன். இவர்கள் நால்வரும் ‘அக்கினி குஞ்சொன்று கண்டேன்’ கார்த்தியின் கதையில், அவன் வளர்த்த செல்லப் பிராணிகள். கதையில் ஹீரோவுக்கு நிகரான பங்களிப்பைத் தந்தவர்கள்)

“என்ன கல்யாணமாமே கேள்விப்பட்டேன்?” மீண்டும் அவள் காதருகில்.

அவனேதான். ஆனால் அலைபேசியில் வெகு தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தான்.

இருந்த கடுப்பிற்கு, யாருடா நீ என்றிருந்தது. ஆனால் இந்தக் குரல்…? மனதில் சின்னதாய் ஒரு உறுத்தல்.

துருவனைப் பிடித்து இழுத்து வைப்பதே பெரும் சிரமமாயிருக்க, அதற்குமேல் சிந்திக்க விடவில்லை துருவன்.

“உன் கல்யாணம் என்னோட மட்டும் தான்!” வேண்டுமென்றே அவள் காதில் வந்து பேசுவதுபோல் தோன்ற, அதிவேகமாகத் திரும்பினாள். 

ஆனால் இந்தமுறை அவன் அலைபேசியில் பேசவில்லை. கையைக் கட்டிக்கொண்டு அவளையே பார்த்திருந்தான். அவள் திரும்பிப் பார்க்கவும், தன் ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கிக் காட்டினான். அம்முவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. யார் இவன்? யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறான்?

பாதி முகத்தை மாஸ்க் மறைத்துக் கொண்டிருக்க, அடர்ந்த புருவமும், அகன்ற நெற்றியும் மட்டுமே காணக் கிடைத்தது. ‘பைத்தியம் போல’ சலித்தபடி திரும்பிக்கொண்டாள்.

அவள் எண்ணம் முழுக்க நாளை புடவைக் கடையில் வெற்றியை எதிர்கொள்ள வேண்டுமே என்பதிலேயே இருந்தது. என்ன முயன்றும் திவ்யபாரதியை சமாளிக்க முடியவில்லை.

“உன்னை விட பெரிய போஸ்டிங்ல இருக்க அந்த தம்பியே பர்மிஷன் போட்டுட்டு வரேங்குது. உனக்கென்னடி திமிர் காட்டுற? நாளைக்கு நீ வர்ற! அவ்ளோதான்” என்று முடித்துவிட்டாள் திவ்யபாரதி.

அத்தோடும் விடாமல், “ஏம்ப்பா இவளுக்கு நாளைக்கு லீவு குடுக்க மாட்டீங்க?” பேச்சு வாக்கில் பணிக்குக் கிளம்பிக்கொண்டிருந்த செழியனையும் உள்ளே இழுக்க, மகளை ஒரு பார்வைப் பார்த்த செழியனும் இருவருக்கும் சேர்த்து பொத்தாம் பொதுவாய்த் தலையாட்டி வைத்தான். மகளிடமும் சரி, மனைவியிடமும் சரி வாங்கிக்கட்ட முடியாதே!

“ம்ம்… அப்பாவே சொல்லியாச்சி நீ வந்துதான் ஆகணும்” என்ற கண்டிப்போடு பேச்சுவார்த்தை முடிந்ததாக சென்றுவிட்டாள் திவ்யபாரதி. 

வெற்றியின் முகம் காணவே திணறும்போது அவனையும் வைத்துக்கொண்டு புடவை எங்கிருந்து எடுக்க? அதுவும் விரும்பாத திருமணத்திற்கு. அந்த யோசனையில் சுழன்றவளுக்கு சுற்றுப்புறம் உரைக்கவில்லை. அதில் அவனையும் அசட்டையாகக் கடந்தாள்.

“என்ன புரிஞ்சிதா? உன் கல்யாணம் என்னோட மட்டும்தான் நடக்கும்” என்றான் அவன் மீண்டும் அழுத்தி.

இந்தக்குரல்…இந்தக்குரல் நிச்சயம் எங்கேயோ கேட்டிருக்கேன்! சாதாரணமாக பேசுவதுபோல் இல்லாமல் வாய்க்குள் ட்ரான்சிஸ்டர் வைத்ததுபோல் கரகரத்தக் குரல். 

நினைவலைகளில் அவள் தேட, “அதுக்குள்ள என்னை மறந்துட்டிங்களா மேடம்? என்றான் குரலில் ஏமாற்றத்தைக் காட்டி

அன்னைக்கு ஏர்போர்ட்ல காதுக்குள் பேசியது இதே குரல்தானே? அதிர்ந்து அவன் முகம் கண்டாள். அன்றைய தினத்துக்கு மாறாக இன்று முற்றிலும் வேறுபோல் இருந்தான்.

குழம்பிய நிலையில் அவள் முட்டைக் கண்ணை விரிக்க, “குழப்பமே வேண்டாம். நான் அவனேதான்!” என்றான் மெல்லிய நகைப்புடன். இன்னமும் நம்பமுடியாத அதிர்ச்சியில் இருந்தாள் அவள்.

அன்று தாடி, மீசை என கரடுமுரடாய் இருந்தவன் இன்று பக்கா ஐடியில் வேலை செய்யும் இளைஞன் போல், ஃபார்மல் பேண்ட், செக்டு ஷர்ட் காலில் பூமாக்ஸ் ஷூ என்று பக்காவாக இருந்தால் அவளும்தான் என்ன செய்வாள். 

“ஏன் நேற்று மீட்டிங்ல உங்கப்பா சொல்லல பல வேஷத்தில் மாறி மாறி சுற்றுவேன்னு” அவள் மனதைப் படம்பிடித்ததுபோல் சொல்லிவிட்டு அட்டகாசமாய்ச் சிரித்தவனை விழிகள் அதிரப் பார்த்தாள். 

நேற்று இரவு பதினொரு மணிக்கு மேல்தான் அவசரக் கூட்டம் ஒன்றை செழியன் ஏற்பாடு செய்திருந்தான். 

அதுவும் நேற்று நடந்தது சில முக்கிய அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்ட ஒரு ரகசியக் கூட்டம். அதில் இவளே ஒப்புக்குச் சப்பாணியாகத்தான் அமர்ந்திருந்தாள். ஆனால் அதற்குள் இவனுக்கு எப்படித் தெரிந்தது?

அவளது மூளை போலீஸ்காரியாக மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்க, அவன் முதலில் சொன்னது எதுவும் அவளது கவனத்தில் பதியவே இல்லை.

அவனோ, “என்னைப் பிடிக்க உங்கப்பனும், உன் வருங்கால புருஷனும் புதுசா வலை விரிக்கிறாங்களாமே?” என்று அவளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியளித்தான்.

உண்மைதான். நேற்றையக் கூட்டத்தில், இவனது பல விதமான புகைப்படங்களை திரையில் காட்டிச் செழியன் விளக்கிக் கொண்டிருந்தான்.

“இந்த வேஷம்தான்னு இல்லாம எந்தத் தோற்றத்திலும் தன்னை ஈஸியா பொருத்திக் கொள்வான்… இப்போ நம்ம பிரச்சனையே, இவ்ளோநாளும் சின்ன லெவல்ல ஸ்மக்ளிங் பண்ணிட்டு இருந்தவன், இப்போ நம்ம நாட்டுக்கே அச்சுறுத்தலா இருக்கிற போதை மருந்து கடத்தல் கும்பல்கூட சேர்ந்திட்டதா உளவுத்துறை தகவல். அந்த குரூப் வெறும் போதை மருந்து மட்டுமில்ல பொண்ணுங்களையும் கடத்தறதா தகவல் இருக்கு.

அன்னைக்கு சாக்லெட்ல வைரத்தை வச்சி கடத்தின அப்புறமே இரண்டு கடத்தல் பண்ணியிருக்கான்.” என்றதும் தலைகுனிந்தாள் எழிலரசி. அவளை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு தொடர்ந்தான் செழியன்.

“கடத்தல பண்ணினதோட அவனே போன் பண்ணி முடிஞ்சா பிடிச்சிக்கங்கன்னு ஒவ்வொருமுறையும் நமக்குச் சவால் விடறான். அந்தத் திறமைதான் போதை மருந்துக் கும்பலையும் இவனைத் தேடி வர வச்சிருக்கு.

இவ்ளோ பண்ணியும் போலீஸ் கண்ணுல சிக்காம இவன் சுத்திட்டு இருக்கிறதுக்கு முக்கியக் காரணம் இவனோட எளிமை. மக்களோட மக்களா ஈஸியா கலந்திடுவான்.

அந்த கும்பல் தானே விரும்பி இவனை குரூப்ல சேர்த்து இருக்காங்க. இதுவரை தங்கம் வைரம் எலக்ட்ராணிக்ஸ் தவிர வேற எதும் இவன் கடத்தினதில்ல. ஆனா அவங்ககூட சேர்ந்து போதை மருந்துக் கடத்த ஆரம்பிச்சா நம்ம காவல்துறைக்கு பெரும் சவாலா இருப்பான்.

அந்த போதை மருந்து கும்பல்ல ஒரு சிலரை நாம கைது பண்ணி இருந்தாலும் அவங்க எல்லாம் சில்லறை விற்பனையாளர்கள்தான். இவங்க எங்கிருந்து செயல்படுறாங்க, முக்கியமா வடக்கே இருந்து வரும் டன்டன்னான போதை மருந்தை தமிழ்நாட்டுல இவங்க பதுக்கி வைக்கும் குடோன் எங்கிருக்கு? எதுவுமே கண்டுபிடிக்க முடியல.

இப்போ நமக்கு இருக்கிற ஒரே வழி இவன்தான். இவனைப் புடிச்சா நிச்சயம் அந்தக் கூட்டத்தை நம்மால நெருங்கிட முடியும்.

அதிர்ஷ்ட வசமா, இவன் கொஞ்சநாளா யாரையோ தேடி சென்னையைச் சுற்றியே நடமாடுறதா நமக்குத் தகவல் வந்திருக்கு. சோ திஸ் இஸ் த ரைட் டைம்.

இவனை இந்த முறை புடிச்சே ஆகணும். இதுக்காக தனி டீம் ஒன்னு, மிஸ்டர் வெற்றியின் தலைமையில் ஃபார்ம் பண்றேன். இந்த டீம் இராஜாளி போல இவனைத்தேடி சிட்டி முழுக்க அலசும். 

இந்த தேடுதல் வேட்டைக்கு ‘ஆப்பரேஷன் இராஜாளி’ ன்னு பெயர் வச்சிருக்கோம். மிஸ்டர் வெற்றி இராஜாளியா இருந்து இந்த டீமை வழி நடத்துவார். இவனைப் பற்றி எங்க சின்னதா தகவல் கிடைச்சாலும் மிஸ்டர் வெற்றிக்கு இம்மிடியட்டா தெரியப் படுத்துங்க” என்றதுடன் அந்த கூட்டம் நிறைவுப் பெற்றிருந்தது.

அத்தனையும் இவனுக்கும் தெரிந்திருக்கிறது.இவ்வளவு விரைவாக இவனுக்குத் தகவல் சொல்வது யார்? அந்த கூட்டத்தில்தான் ஏதோ புல்லுருவி இருக்க வேண்டும். நினைத்த மாத்திரத்தில் தனது அலைபேசியை இயக்க முயல அது முற்றிலும் சிக்னலைத் தொலைத்திருந்தது. கடகடவென சிரித்தான் அவன்.

“ஸ்மார்ட்டா மூவ் பண்றதா நினைப்பா? அவ்வளவு தெளிவு இல்லாமையா உன்னைத் தேடி இந்த பப்ளிக் ப்ளேஸ்ல உன்னைச் சந்திக்க வந்திருப்பேன்? உங்கப்பனுக்கு இருக்கிற மூளைல உனக்கு கொஞ்சம் கம்மிதான்.” என்றதும், “யூ ப்ளடி ஸ்மக்ளர்” என்றவளின் இடதுகரம் அவனது தாடையை நோக்கிப் பாய,

“ஹ..ஹக் ஹான்! கொஞ்சம் இக்கடச் சூடு கண்மணி!” என்றான் அவன்.

அவனின் கையில் மறைவாக வைத்திருந்த துப்பாக்கியின் புல்லட் துருவனைக் குறிப்பார்க்க, அவளது கரம் தானே பின் வாங்கியது.

“உன் ஃபோன் மட்டுமில்ல, இங்க பக்கத்துல சுற்றி இருக்கிற யாரோட ஃபோனும் நான் இங்கிருந்து போற வரைக்கும் வேலை செய்யாது. மறுபடியும் எதாவது ஸ்மார்ட்டா ப்ளே பண்ணலாம்னு நினைச்சி கத்தி கித்தி ஊரைக் கூட்டின…” என்றவன் நிறுத்தி, அவன் பார்வையால் சுட்டிக்காட்ட மறுமுறை அதிர்ந்தாள் அவள்.

அவன் கையில் பிடித்திருந்த நாயின் வயிற்றின் பெல்ட்டோடு சேர்த்து சிறிய வகை பாம் ஒன்றை கட்டி இருந்தான். சுற்றி முற்றி அனைவரும் கையில் அலைபேசியோடு போராடிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவன் பொய் சொல்லவில்லை. 

நிலைக்குத்தியப் பார்வையோடு செயலற்று இருந்தவளின் கண்முன் சொடக்கிட்டான்.

“இங்கப் பார்! உன்னையைப் பார்த்த நாளிலிருந்து இந்த சென்னையைத்தான் சுத்தி சுத்தி வர்றேன். உன்னையக் கண்டுபிடிக்கவே எனக்கு இவ்ளோ நாள் ஆகி இருக்கு. அதுவும் இன்னைக்குதான் வசமா சிக்க வச்சிருக்கேன். அதுக்குள்ள பரிசம் போடுவானா அவன்?” என்றதும் திடுக்கிட்டாள்.

இவன் சென்னையை சுற்றி வருவதாகத் தந்தை சொன்னது இவளுக்காகவா? புரிந்தநொடி அதிர்ந்து அவன் முகம் காண, அவனிடம் அதே மெல்லியச் சிரிப்பு.

“அப்ப சொன்னதுதான் இப்பவும். உன் கல்யாணம் என்னோட மட்டும்தான். இதை உங்கப்பன் டிஜிபி நினைச்சாலும் தடுக்க முடியாது, உன் வருங்கால புருஷன் அந்த வெற்றி நினைச்சாலும் தடுக்க முடியாது.

சொல்லி வை அந்த இராஜாளிக்கிட்ட! அந்த இராஜாளி கைல இருந்து இந்த அங்கிரிபேர்டை தூக்கிட்டுப் போவேன்னு!” என்றவன் ஆட்காட்டி விரலால் அவளைச் சுட்டிக்காட்ட அப்போதுதான் அவன் வரவின் தீவிரம் புரிந்தது அவளுக்கு.

துருவனின் உயிர் அவன் விரல்நுனியில். செயலற்று அதிர்ச்சியில் இருந்தாள். துருவனின் உயிர் மட்டுமா? பாம் வெடித்தால் எத்தனை உயிர் பலியாகுமோ? அவன் முன்னேற்பாடுகள் ஒவ்வொன்றும் அவனின் தீவிரத்தைக் கண்முன்னே காட்டிக் கொண்டிருந்தது.

“அண்ட் சொல்ல மறந்துட்டனே! என் உண்மையான பெயரும் விக்டர் தான். சோ உன் டாட்டூக்கு எந்த பங்கமும் வந்திடாது” என்றவனோ அவள் கையின் டாட்டூவில் பார்வையைப் பதிக்க, அவன் கவனம் சிதறிய அந்த நொடியை பயன்படுத்திக் கொள்ள துணிந்தாள்.

கடைசி முயற்சியாக, துருவனின் கழுத்தில் விரல்களால் வருடி சமீக்ஞை செய்தவள், “துருவா அட்டாக்” என்று மெலிதாய் கத்த, அவனோ வாலாட்டிக் கொண்டு அவன் காலடியில் அப்படியே சரிந்து விட்டான். 

மீண்டும் அட்டகாசமாய்ச் சிரித்தான்.

அப்போதுதான் அவன் கையில் பிடித்திருந்த நாயை கவனித்தாள். அது எப்போதும் மாடியிலிருந்து துருவன் சைட் அடிக்கும் ஷீலா. வாலாட்டியபடி ஷீலாவை நாவால் வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தான். 

இதற்காகத்தான் அப்போலர்ந்த்தே அவனை நோக்கி இழுத்தானா?

ஷீலா துருவனின் ஓரேயொரு பலவீனம்.

பலநாட்கள் நடைபயணம்கூட இருவரும் ஒன்றாகத்தான் போவார்கள். ஷீலா வாக்கிங் செல்வதை மாடியிலிருந்து கவனிக்கும் துருவன் தன்னையும் அழைத்துச் செல்லச் சொல்லி உயிரை எடுத்து விடுவான். ஷீலா என்றால் துருவனின் சர்வமும் அடங்கிவிடும்.

காலையில் செழியன், “துருவனுக்கு உடம்பு சரி இல்லாத மாதிரி இருக்கு அம்மு. கூட்டிட்டுப் போய் டாக்டர்கிட்ட காமிச்சிட்டு அப்படியே அவனுக்கு இந்த வருஷம் போட வேண்டிய தடுப்பூசியும் போட்டுட்டு வந்திடு” என்று சொன்னபோது, “அவன் நல்லாதானேப்பா இருக்கான்” என்றிருந்தாள். அவளுக்கு துருவனிடம் எந்த மாறுபாடும் தெரியவில்லை.

“இல்லடி துருவன் இரண்டு நாளா சரியா சாப்பிடலை” என்று திவ்யபாரதியும் சொல்லவும், “அப்படியாடா துருவா?” என்று கேள்வியுடன் துருவன் தலையை வருடிக் கொடுக்க,

அந்நேரம்தான், “மோளே! இரண்டு நாளாயிட்டு ஷீலாவை காணல்லே” என்றபடி வெளி கேட்டைத் திறந்துகொண்டு வந்தார் பக்கத்து வீட்டு ஆண்டி மரியா. கேரளத்தைச் சேர்ந்தவர்.

“ஓஹோ! அதான் துரை இரண்டு நாளா சாப்பிடாம திரியுறாரா!” என்ற அம்மு துருவனைப் பார்த்து தந்தையையும், ‘பார்த்தீங்களா?’ என்பதுபோல் பார்க்க, 

“நீ போய்ட்டு தடுப்பூசி போட்டுட்டு வந்துடு” என்று கண்டிப்புடன் தந்தை சொல்லவும், பக்கத்து வீட்டி ஆண்டியிடம் ஷீலாவைப் பற்றி விசாரித்து விட்டு, துருவனை அழைத்துக்கொண்டு கிளம்பி இருந்தாள்.

“நான் இவ்ளோ சொல்லியும், துருவனைத் தூண்டி விடுற நீ” என்று இரசனையாய் அவளைப் பார்த்தான். 

“போலீஸ் வாசனையே இல்லாம உன்னை வரவைக்க சின்னதா ஸ்கெட்ச் போட்டேன். நீயும் வந்துட்ட!”

இவ்ளோ நாளும் நான் என்ன பண்ணிட்டு இருந்தேன்னு நினைச்ச? 

உன் துருவனுக்குப் பிடிச்ச ஷீலாவைத் தூக்கத் தெரிஞ்ச எனக்கு உன்னைத் தூக்கறதா சிரமம்” என்றான் உதட்டில் மறைத்த புன்னகையுடன்.

“உன்னைச் சுத்தி நடக்கிற ஒன்னொன்னும் எனக்கு அத்துப் படி” என்றவனோ “எனக்காக மாலையோட மண்டபத்தில காத்திரு கண்மணி” ‘உன்னைப் பருந்தாய் தூக்கிச் செல்ல வருவேன்’ என்று மீதி வார்த்தைகளை கையைப் பறப்பதுபோல் செய்கை செய்தவன், ஷீலாவையும் சேர்த்து அவள் கைகளில் திணித்துவிட்டு மெல்லிய விசிலுடன் அந்த இடத்தை விட்டு மறைந்தான்.

அவன் மறைந்ததும் அவசரமாக ஷீலாவின் வயிற்றுப் பட்டியைக் கழற்ற, அது மெல்லியச் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

சுற்றியிருந்தவர்கள் மெலிதாய்க் கைத்தட்டியபிறகே சுற்றுப்புறம் உணர்ந்தாள் அம்மு எழிலரசி. 

தலைமுதல் அவளைச்சுற்றி இருந்த முழு இடமும் சிவப்பு வண்ண ரோஜா இதழ்கள் உதிர்ந்து கிடக்க, ஷீலாவின் கழுத்துப்பட்டியிலிருந்து “ஐ லவ் யூ மை ஆங்ரி பேர்ட்” என்றது பதிவு செய்யப்பட்ட குரல்.

“வாவ்! செம்ம ப்ரோபோஸல் மேடம்” அவள் நிலமைப் புரியாத இளம் பெண்ணொருத்தி வாழ்த்திவிட்டுப் போனாள்.

அம்மு எழிலரசி தன்னைச்சுற்றி நடப்பது ஒன்றும் புரியாது அமர்ந்திருந்தாள். அவனைத் தொடர்ந்து பின் சொல்ல முடியாதபடிக்கு, துருவனோடு சேர்த்து ஷீலாவையும் சாமர்த்தியமாக அவள் கைகளில் திணித்துச் சென்றவனை என்ன செய்வது. 

இப்போதும் அவள் கண்முன்னாடியே தப்பித்துச் சென்றிருக்கிறான். இவன் பற்றிய தகவல் கிடைத்தால் அதைவேறு அவனிடமல்லவா சொல்ல வேண்டும். வெற்றியை நினைத்ததும் பயப்பந்து உருண்டது.

அதுவும் என்னவென்று சொல்வது? நீ காதலித்தப் பெண்ணிற்கு இன்னொருவன் காதலைச் சொன்னான் என்றா? அதுவும் அவன் சொன்ன விதம் அவளையே சின்னா பின்னாமாக்கி இருக்க அவன் என்ன சொல்வானோ? சும்மாவே ஓட்டித் தள்ளுவான். இதுவும் தெரிந்தால்…! 

தான் விரும்பிக் காதலித்தவன் கத்திமுனையில் கல்யாணத்துக்கு கேட்க, துப்பாக்கி முனையில் காதலைச் சொன்னவனோ அவள் விரும்பாமலே தூக்கிச் செல்வேன் என்கிறான்.

முதலானால் நம்பாமல் அலட்சியப் படுத்தி இருப்பாள்.

ஆனால் இந்த ஒரு சம்பவத்துக்காக ஷீலாவைக் கடத்தி, துப்பாக்கி முனையில் துருவனை நிறுத்தி, தன்னையும் செயல்படாமல் நிறுத்தி வைத்திருந்தவனில் இப்போது நிஜமாகவே பயம் வந்திருந்தது. அவள் விளையாட்டாய்ச் சொன்னபோது புரியாத விபரீதம் இப்போது புரிந்தது.

அவளது உண்மைக்காதல் எங்கோ ஒரு மூலையிலிருந்து தவிக்க ஆரம்பிக்க, அவனது கடத்தல் திறமையைப் பற்றி தந்தை விளக்கியது எல்லாம் சம்மந்தமே இல்லாமல் நினைவில் வந்து நடுங்க வைத்துது.

இதோ இரண்டாவது முறையாக அவளே நேரில் அனுபவிக்கிறாளே! 

அவன்முன்னால், ட்ரைனிங்கில் எடுத்துக் கொண்ட மொத்தப் பலமும் வலுவிழக்க, சாதாரண ஒரு பெண்ணாய் ஒருவனின் ஒருமித்த காதலியாய் மனம் பதறினாள்.

உண்மையிலயே அப்படி ஒன்று நடந்தால்? என் வெற்றியை இழந்துவிடுவேனோ?

பயம் நெட்டித் தள்ள, இதயத்துடிப்பு அதிகமாகி, மனம் வெற்றி வெற்றி என்று மட்டுமே துடிக்க, ஓடிப்போய் அவன் நெஞ்சத்தில் பதுங்கிக் கொள்ள வேண்டும்போல் இருந்தது.

தானாக அவளது விரல்கள் வெற்றியின் எண்ணைத் தேடி எடுத்து அழைக்க, அதற்குள் அவள் எண்ணத்தின் நாயகனே அழைத்து விட்டிருந்தான்.

லேசாக நடுங்கிய விரல்களைக் கட்டுக்குள் கொண்டுவந்தவள், அலைபேசியைக் காதுக்குள் கொடுத்ததுதான் தாமதம்,

“எவ்ளோ நேரமா ட்ரை பண்றேன் எங்கடி போன?” என்றான் எடுத்ததும். 

புடவை எடுக்க வருகிறாளா என்று கேட்கத்தான் காலையிலயே அழைத்திருந்தான். 

அவளது அலைபேசிதான் செயலிழந்து இருந்ததே!

ஏனோ அந்நேரம் அந்த உரிமையானப் பேச்சும் அவனுடைய அழைப்பும் தேவையாயிருக்க, “வெ..ற்றி” என்றாள் நடுங்கும் இதழ்களில்.

ஒருமுறை அலைபேசியை காதிலிருந்து எடுத்துப் பார்த்தவன், அடுத்தநொடி “ஹேய்… என்னாச்சும்மா? எங்கிருக்க?” என்றான்.

சாதாரணமாக அவன் பெயர் சொல்லி அழைப்பவள் இல்லையே. ஏன் இதுவரை இப்படி நடுங்கி அழைத்தவளே இல்லை. அதில் அவன் பதறிக் கேட்க, “உங்களைப் பார்க்கணும்” என்றாள் மெலிந்த குரலில்.

ஏதோ தவறாகப் பட, “உன்னை என்னாச்சின்னு கேட்டேன்” என்றான் அழுத்தமாக. இது அவனறிந்த அவனது எழிலரசி இல்லையே. 

“…” மைளனத்தைக் காட்டியவளின் விழிகள் துளிர்த்தது.

அவளது மௌனம் அவனது பதற்றத்தைக் கூட்ட, “பதில் சொல்லித் தொலைடி. இல்ல எங்க இருக்க சொல்லு நான் வர்றேன்” என்றான் அவனும். 

அவனது கோபம் சற்றே அவளை இலகுவாக்கியது. தெளிந்திருந்தாள். “இல்ல நானே ஆஃபீஸ்ல வந்து பார்க்கிறேன். நீங்க சீக்கிரம் வாங்க!” என்று திடமானக் குரலில் சொன்னவள் அலைபேசியைத் துண்டித்துவிட, அந்தப் பக்கம் இருந்தவனுக்கும் நிம்மதி திரும்பியது.

அவள் தெளிந்திருந்த குரலில், புன்னகைப் படர, “தட்ஸ் மை கேர்ள்” என்றவன் தோளில் அம்ர்ந்திருந்த மயிலாவின் அலகில் தீண்டி முத்தமிட, “ஏய்” என்றது மயிலா.