அத்தியாயம் : 16

வெற்றிதான்‌ மறுபக்கம் அழைத்துக் கொண்டிருந்தான்.

‘அதுக்குள்ள எந்த புல்லுருவி போட்டுக்குடுத்துச்சின்னு தெரியலையே’ என்று எண்ணியபடி சுற்றிலும் மாணவர்களை  பார்வையால் வலம் வந்தவள் அலைபேசியை எடுக்கவில்லை.

எங்கே ஏடாகூடமாக பேசி, கோபித்துக்கொண்டு திருமணத்தை நிறுத்தி விடுவாளோ என்ற பயத்திலயே அவளை தவிர்த்து இருந்தவன், திருமணம் பேசிய பிறகு முதல்முறை அழைக்கிறான்.

அவள் எடுக்காததில், ‘எடுத்துத் தொலைடி’ என்று பல்லைக் கடித்து, மீண்டும் முயற்சித்தான்.

இதற்குமேல் எடுக்கவில்லை எனில் நேரிலேயே வருவான் என்று தோன்றவே அழைப்பை ஏற்றிருந்தாள்.

“அம்மு எழிலா ஸ்பீக்கிங்” என்றாள் யாரோபோல். அதிலிருந்த விலகல், நீ எனக்கு அந்நியம் என சொல்லாமல் சொல்லி அவனைக் கடுப்பேற்றியது.

‘ஓ! மேடம் தொழில்முறையா மட்டும்தான் பேசுவாங்களோ?’

“மிஸஸ் அம்மு வெற்றிச் செல்வன்” என்றான் வேண்டுமென்றே! தனக்கு அவள் யாரெனக் காட்டி.

“அங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?”

“ஓ அதுக்குள்ள தகவல் வந்துடுச்சா? கூலிப்படை கூவுதே!”  நீ அழைத்தவிதம் எனக்குப் பொருட்டே அல்ல. என்னைப் பொருத்தவரை நீ கூலிப்படைதான் என்று சொல்லாமல் சொன்னாள்.

“கூலிப்படைன்னே வச்சிக்கோ! அந்த சைதாப்பேட்டை ராபரி கேஸைத்தான் விசாரிக்கச் சொன்னதா ஞாபகம்” என்றான் கடுமையுடன்.

இந்த வழக்கிலிருந்து அம்முவை விலக்கி வைக்க அவனும் படாதபாடு படுகிறான். அவளும் விடாப்பிடியாக இங்கேயே வந்து முட்டி நின்றால் பாவம் என்ன செய்வான்.

“கோர்ட்ல ப்ரோடியூஸ் பண்ணியாச்சி” என்றாள் ஒட்டாத் தன்மையோடு.

“அதுக்குள்ள ஒத்துக்கிட்டானா?” குரலில் வியப்பைக் காட்டயவனிடம்,

“பாவம்! அவனைத் தப்பிக்க வைக்க எந்த வெற்றியும் கிடைக்கல” என்றாள் நக்கல் வழிந்தோட.

‘சர்தான்! என்கிட்ட இருந்த கடுப்பெல்லாம் அவன்கிட்ட காட்டிட்டா போலிருக்கு’ நினைத்ததும் மென் புன்னகைப் படர்ந்தது.

“அங்க தேவையான அளவுக்கு விசாரிச்சாச்சி! நீ கிளம்பி ஸ்டேஷனுக்கு போகலாம்!” என்றதும்,

“இல்ல நான் விசாரிச்சிட்டு…” என்றவளை இடை மறித்தான்.

“நான் சொன்னதை செஞ்சா மட்டும் போதும். டூ யூ காட் இட்?” என்றதும் சற்றேக் அவளுக்கு புசுபுசுவென்று பொங்கியது.

“விசாரிச்சிட்டுதான் வருவேன்! காலேஜ் ஆஃபீஸ் ரூம்ல, தேஜஸ்வினி கொலையான அன்னைக்கு டேட் சிசிடிவி ஃபுட் ஏஜ் கேட்டிருக்கேன், அது கிடைக்கிற வரை வர முடியாது” என்று அலைபேசியை வைத்து விட்டாள்.

மேலும் சில மாணவர்களை விசாரிக்க ஒன்றுமே நூல் கிடைக்காததில் அவளுக்கு தலை வலித்தது. கிடைத்த ஒரே தகவல் ஷ்யாம் சுந்தர் ஊரில் அவனது தாத்தா வீட்டில் இருக்கிறான் என்பது மட்டும்தான்.

திரும்பவும் கல்லூரியின் அலுவலகம் வந்து காணோளி பதிப்பைக் கேட்க, “பத்து நிமிஷம் முன்னாடிதான் வெற்றி சார் வந்து வாங்கிட்டுப் போனார் மேடம்” என்றாள் அங்கு பணியில் அமர்ந்திருந்தப் பெண்.

அவளுக்கு அவள்மீதே ஆத்திரம் முட்டிக்கொண்டு வந்தது. இதை மறந்து விட்டு வைத்திருந்தான் போலும், ‘நீயே தேவையில்லாம வாயைவிட்டு அவனுக்கு காட்டிக்குடுத்திட்டியே?’ தன்னைத்தானே நொந்து கொண்டாள்.

‘எல்லாம் இந்த பக்கியால, எங்க போய்த் தொலைஞ்சா தெரியலையே? போன் பண்ணாலும் போகல’ கல்லூரி விடும் நேரம் ஆகி இருக்க, தங்கையையும் கையோடு வீட்டுக்கு அழைத்துச் சென்று விடலாம் என்று காத்திருந்ததில், கண்காணிப்பு பதிவு விரலியை வெற்றியிடம் (பென் ட்ரைவ்) கோட்டை விட்டிருந்தாள்.

ஏற்கனவே இருந்த தலைவலியோடு இதுவும் சேர ஒரு காஃபி குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றவே கல்லூரியின் சிற்றுண்டியகம் சென்றவளை ஒரு மேஜையில் அமர்ந்திருந்த வெற்றியும் மிருத்யூஸ்ரீயுமே வரவேற்றனர்.

‘ஊரெல்லாம் தேடினா இவன்கூட என்ன பண்றா?’ இருவரும் டீ அருந்திக் கொண்டிருக்க, அருகில் வந்தவள், எடுத்ததுமே, “போன் பண்ணா எடுக்க மாட்டியா? இங்க என்ன பண்ற?” என்றாள், தங்கையைக் கடிந்து.

தங்கையிடம் மட்டுமே பார்வை நிலைக்க,  வெற்றியை தவிர்த்தாள்.

அவனின் செயல்கள் ஒவ்வொன்றும் உள்ளே எரிமலைபோல் கணன்று கொண்டிருக்க அவன் முகம் பார்க்கவே விரும்பவில்லை அவள்.

“அவ போன்‌ ரிப்பேர் ஆகி பத்து நாள் ஆகுது. அதுகூடத் தெரியாம மேடம் கல்யாணக் கனவுல சுத்தறீங்க போல” வம்பிழுத்தபடியே தனக்கருகில் இருந்த நாற்காலியை அவள் அமர்வதற்கு வசமாக இழுத்துப் போட்டான்.

“இங்க என்ன பண்றன்னு கேட்டேன்?” என்று அழுத்திச் சொன்னவள், “போன் ரிப்பேர்னு ஏன் என்கிட்ட சொல்லல?” என்றாள் சற்றுக் கடுப்பாக.

“இல்லக்கா மாமாதான்…” என்றவள் அம்முவின் முறைப்பில் அவன் முன்னரே எப்படி மாற்றி அழைப்பது என்று தடுமாறினாள்.

“உனக்குப் புடிச்ச கலர் என்னென்னு அவகிட்ட கேட்கலாம்னு நான்தான் வழியில பார்த்துக் கூப்பிட்டு வந்தேன். மேடம்தான் நான் கேட்டா பதில் சொல்ல மாட்டீங்களே! அடுத்தவாரம் புடவை எடுக்கப் போகணுமில்ல? என்றவனை முடிந்த மட்டும் முறைத்தாள்.

‘புடவை ஒன்னுதான் கேடு’ என்று நினைத்தவளுக்கு தலைவலி கூடியது.

டீயோ காப்பியோ குடித்தால் தேவலாம் என்றிருக்க, அவன்

இழுத்துப்போட்ட நாற்காலியில் அமர மனமில்லாமல் சுற்றி முற்றித் தேடினாள்.

அவள் நேரத்திற்கு கல்லூரி விட்ட நேரமென்பதால் உணவகம் மாணவர்களால் நிரம்பி வழிய, அவன் அருகில் இருந்த நாற்காலி மட்டுமே காலியாக இருந்தது. அதுவும் அவனின் காவல் உடையைக் கண்டு மாணவர்கள் விட்டு வைத்திருந்தனர்.

அந்நேரம்தான் அவள் கண்களில் பட்டது மேஜையில் அவன் வைத்திருந்த விரலி (பென் ட்ரைவ்).

‘நான் கேட்ட சிசிடிவி ஃபுட் ஏஜ்ஜாக இருக்குமோ?’ மனம் துள்ளியது.

‘இதுவாகத்தான் இருக்கணும். இப்போதானே வாங்கிட்டுப் போனதா சொன்னாங்க!’ இந்த எண்ணம் தோன்றியதும்,  பட்டென அவனது அருகில் காலியான நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். மனது என்ன செய்யலாம் என விரைவாகக் கணக்கிட்டது.

“எனக்கும் ஒரு காஃபி வாங்கிட்டு வர்ரீங்களா ப்ளீஸ்! தலை ரொம்ப வலிக்குது” என்றவளை நம்பமுடியாத அதிர்ச்சியுடன் பார்த்திருந்தான் வெற்றி.

‘தன்னைத்தான் கேட்டாளா?’ நம்ப முடியாத பார்வைப் பார்த்தான். அவன் எண்ணம் சரியே என்பதுபோல், “ப்ளீஸ் வெற்றி!” என்றாள் கெஞ்சலாக.

வெற்றியின் இதயம் தாறுமாறாகத் துடித்தது. ‘என் ஏஞ்சல் என்னிடம் கெஞ்சுவதா?

அவளது களைத்த முகத்தில், ‘ரொம்பத்தான் படுத்திட்டோம் போல’ என்று தோன்ற, அவள் முட்டாளாக்கப் போவது தெரியாமல் எழுந்துச் சென்றான்.

அவன் சென்றதுமே தங்கையைக் கண்டாள். அவள் ஏதோ புத்தகத்தினுள் முகத்தைப் புதைத்துக் கொண்டிருக்க, சட்டென பென்ட்ரைவ்வை கைகளுக்குள் சுருட்டிக் கொண்டாள்.

“இருடி ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன்” என்று எழுந்து கொண்டவள், இரண்டு மாணவர்கள் மடிக்கணினியை வைத்து வேலை செய்தபடி அமர்ந்திருப்பதை ஏற்கனவே குறித்து வைத்திருந்ததை வைத்து நேரே அவர்களிடம் சென்றாள்.

“இதை சிஸ்டம்ல காப்பி பண்ணுங்க சீக்கிரம். நான் வந்து கேட்கும்போது தந்தா போதும்.” என்றதும் அவள் உடையைக்கண்டு “சரி” என்று அவர்கள் தலையாட்ட  கழிவறை நோக்கிச் சென்றாள்.

காஃபிக்கு காத்திருந்தபடியே அவளைப் பார்த்திருந்தவனும், அவள் வழக்குப் பற்றி விசாரிப்பதாக நினைத்துச் சலித்துக் கொண்டான்.

‘இவளை திருத்தவே முடியாது. தலைவலின்னு சொல்லிட்டு அங்க போய் விசாரிச்சுட்டு நிக்கிறா. அடங்காதவ!’ என‌ பல்லைக் கடித்தான்.

அவளைப் பார்த்து பார்த்து சமாளிப்பதற்கு வேறு அவனுக்கு தனித்தெம்பு தேவைப்பட்டது.

திரும்பி வந்திருந்தவள், இன்னும் நகலெடுத்து முடிக்கவில்லை என்று சொல்லவும் “சீக்கிரம். முடிஞ்சதும் சைகை காட்டுங்க” என்றவள் பதற்றத்துடன் வந்தமர்ந்தாள்.

வெற்றி சூடான காப்பியை அவள்முன் கொண்டு வைக்க, “காஃப்பின்னா காஃபி மட்டும்தான் வாங்கிட்டு வருவீங்களா? ஒரு சமோசா வேணும்” என்றாள் அவன் அமரும் முன்.

இதேதுடா அதிசயமா இருக்கு? மேடம் உரிமையெல்லாம் எடுக்கிறாங்க.‌ பேய் கீய் அடிச்சிருச்சோ? சந்தேகமாக அவள் முகம் பார்க்க, “பசிக்கிதுப்பா ப்ளீஸ்” என்றதும் நெஞ்சில் கை வைத்திருந்தான்.

“ஓரேடியா ஷாக் குடுக்காதடி” என்று சிரித்தபடியே அவன் நகரப்போக, அதற்குள் அந்தப் பையனும் கட்டை விரலைத் தூக்கிக் காண்பித்தான்.

“ரொம்பத்தான் சலிச்சுக்கிறீங்க. போங்க நீங்க சமோசா வாங்க கியூல நில்லுங்க. நான் அதுக்குள்ள பில் பண்ணிட்டு வர்றேன்” என்றவள் ஒரு வாய் காப்பியை உறிஞ்சிவிட்டு அவன் தடுக்கும்முன் எழுந்து சென்றிருந்தாள்.

‘உங்க அக்காக்கு என்னாச்சி?’ என்றவன் விழியால் மிருத்யூவை பார்க்க, அவளுக்கும் தமக்கையின் செயல் அதிசயமாகப் படவே உதட்டைப் பிதுக்கினாள்.

“மனுஷனுக்கு மண்டை சூடாகுது” என்றவன் அவள் குடித்து வைத்திருந்த காஃபியை கொதிக்க கொதிக்க ஓரே மூச்சில் வாய்க்குள் ஊற்றிக்கொண்டான்.

எப்போதும் பார்வையால் எரிப்பவள், திடீரென உரிமை கொண்டாடினால் அவனும்தான் என் செய்வான்?

மயக்கம் வரும் போலிருந்தது அவனுக்கு.

அதில், “இன்னும் இரண்டு காஃபிக்கும் சேர்த்தே பில் பண்ணு” என்று அம்முவிடம் குரல் கொடுத்தவன் அவள் சொன்னதுபோல் வரிசையில் நிற்க, அவனது உடையைக் கண்டு ஒதுங்க முயன்ற மாணவர்களை, “பரவால்ல நில்லுங்க” என அடக்கினான்.

இருவரும் சேர்ந்தே அனைத்தையும் வாங்கிக்கொண்டு வர, கோப்பைகளை மேஜையில் வைப்பதுபோல் விரலியை (pen drive) அதனிடத்தில் வைத்தப் பிறகுதான் அவளுக்கு மூச்சே வந்தது.

“எங்க இங்கிருந்த என்னோட காஃபி?” என்று தான் பாதிக்குடித்துவிட்டு  வைத்ததைத் தேட, ஏப்பம் ஒன்றை இழுத்து விட்டான்.

“நீ வர்ற வரை வச்சிட்டே இருப்பாங்களா? அது ஆறிப்போச்சி மூஞ்செலி. இதைக் குடி உனக்குதான்” என்று புதிதாக வாங்கியதை அவள்முன் நகர்த்தி வைத்தான்.

“அது நான் குடிச்சிட்டு வச்சது” என்று முறைத்தாள்.

“நீ பண்ணின வேலைக்கு காஃபியோட விட்டனேன்னு சந்தோஷப்படு!” என்று குனிந்து விஷமமாக அவன் கிசுகிசுக்க, பாதிக்கடித்த சமோசாவுடன் அதிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

அதைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாதவன், அவள் கையிலிருந்த மீதி சமோசாவைத் தன் வாயில் போட்டுக்கொள்ள, படபடத்த விழிகளுடன் தங்கையைப் பார்த்தாள்.

அவளோ இன்னமும் புத்தகத்தினுள் புதையல் தேட, தங்கையை விழிகளால் காட்டி கண்டனப் பார்வைப் பார்த்தாள்.

“அப்போ உன் தங்கச்சி இல்லன்னா ஓகேவா?” அதேப்போல் குனிந்து ஹஸ்க்கி வாய்ஸில் கேட்டவனில் விதிர்விதிர்த்துப் போனாள்.

கோப விழிகளால் அவனை முறைக்க, மென்புன்னகை புரிந்தவனின் விழிகளோ, சமோசா சாப்பிட்டதில் மினுமினுத்த அவளது இதழ்களில்  இரசனையுடன் படிந்திருந்தது.

இதுவரை பேச்சில் உரிமையைக் காட்டி இருந்தவன் ஒருநாளும் பார்வையால் உரிமையுடன் தீண்டியதில்லை.

அதுவும் அவளது இதழ்களில் படிந்த அவனது விழிகள் ஆயிரம் கதை சொல்லியது. தான் சற்றும்முன் அவனிடம் எடுத்த உரிமையே இத்தனைக்கும் காரணம் என்று புரிய, மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டாள்.

முதல்முறை அவனது உரிமையான பார்வையைக் கண்டவள் உள்ளுக்குள் தடுமாற, காஃபியை உறிஞ்சிக்கொண்டே, “தேஜஸ்வினியைத் உனக்குத் தெரியுமா மிருத்யூ? உன்னோட சீனியர் தான?” பேச்சை மாற்றினாள்.

அதுவரை அக்காவுக்கும் மாமாவுக்கும் தனிமையைத் தரவேண்டி புத்தகத்தினுள் புதைந்திருந்தவள், திடிரென தமக்கை கேட்கவும் நிமிர்ந்தவளின் கையிலிருந்த புத்தகம் நழுவியது.

அதை இலாவமாகப் பிடித்திருந்த வெற்றி, “இங்கேயும் ஆரம்பிச்சிட்டியா? என்றான் அம்முவை முறைத்து.

அதுவரை இருந்த காதல் பார்வை காணாமல் போயிருக்க, ‘அதுக்கு இதுவே பரவால்ல’ நிம்மதியாய் மூச்சு விட்டாள் எழிலரசி.

“நீ சொல்லு மிருத்யூ?” அவன் பாரவையைத் தவிர்த்து மீண்டும் கேட்டாள்.

வெற்றியிடம் பார்வை மீண்டு வர, “ஹான் தெரியும் கா! எங்க சீனியர்தான்” என்று அவனிடமிருந்த புத்தகத்தை வாங்கிப் பைக்குள் திணித்தாள்.

“அந்தப்பொண்ணோட தம்பி, அவன் பெயர் என்ன?” என்றதும், “ஷ்யாம் சுந்தர் கா” என்றாள் மிருத்யூ.

ம்..ம்..ஷ்யாம் சுந்தர்! அவனை உனக்குத் தெரியுமா?” என்றாள் அடுத்தக் கேள்வியாக.

“ப்ளீஸ்! கொஞ்சமாச்சும் நிம்மதியா காஃபி குடிக்க விடுறீயா?” என்றான் முறைத்து.

“அவளைக் கேட்டா உங்களுக்கு ஏன் கோபம் வருது? நீ சொல்லு மிருத்யூ?” என்றதும்,

“இதுக்கு முதல் எப்படியோ? இப்போ அவ என் கொழுந்தியா. நான் கேட்பேன்!

“மண்டபத்திலிருந்து நீ எப்ப ஓடுவன்னு வேற தெரியாது. படக்குன்னு அவ கழுத்துல தாலியக் கட்டிடமாட்டேன். என்ன மிருத்யூ! உனக்கு ஓகேதான?” என்றதும் அம்மு குடித்துக்கொண்டிருந்த காப்பி புரைக்கேற, மெலிதாய்ப் புன்னகைத்தாள் மிருத்யூ.

‘இவர் கெட்ட கேட்டுக்கு இரண்டு வேற?’ முறைத்துவிட்டு எழுந்துகொண்டவள், “வா நான் உன்னை ட்ராப் பண்ணிட்டு ஸ்டேஷன் போறேன்” என்று தங்கையை அழைத்தாள்.

“ஹலோ மேடம்! நீங்க உங்க வேலையைப் பாருங்க. நான் என் கொழுந்தியாவுக்குப் புடிச்சதா புடவை எடுத்துக் கூட்டிக்கொண்டு விடறேன்” என்றவனில் அம்மு அதிர்ந்தாளோ இல்லையே மிருத்யூ விழிகளை விரிக்க, கண்மூடித் திறந்தான் அவன்.

‘இங்க என்ன நடக்குது?’ இருவரினது சமிக்ஞைகளைக் கண்ட அம்மு திகைத்தாள்.

“இல்ல, அவளை நான் கூட்டிக்கிட்டுப் போறேன். அப்பா திட்டு…”

“அதை நான் பார்த்துக்கிறேன் நீ கிளம்பு” என்றான் அவள் முடிக்கும்முன்.

அவன் இதழ்களில்  தவழ்ந்த புன்னகை வெறுப்பேற்ற, ‘என்னோட வா!’ என்ற முறைப்புடன் திரும்பித்  தங்கையைப் பார்த்தாள். அவளோ தமக்கையைக் காணாமல் தலைகுனிந்து கொண்டாள்.

அக்கா அக்கான்னு பின்னாடியே வாலைப்புடிச்சிட்டு திரிஞ்சவளுக்கு இன்னைக்கு மாமா பெருசாயிட்டானோ? ‘வீட்டுக்கு வாடி இருக்கு உனக்கு’ கருமியவள், “நீங்க கிளம்புங்க. எனக்கு வயிறு வலிக்குது. ரெஸ்ட் ரூம் போகணும்” என்று பின் தங்கிக் கொண்டாள்.

“அது வயிறுவலி இல்ல மூஞ்செலி! வயித்தெரிச்சல்” என்று சிரித்தவன் மிருத்யூவை அழைத்துக்கொண்டு கிளம்பி விட்டான்.

அவர்கள் இருவரும் கிளம்பியதும் அந்த மாணவர்களிடம் விரைந்தாள். தன்னுடைய விரலியில் (பென் ட்ரைவில்) கண்காணிப்பு கேமராப் பதிவுகளை நகலெடுத்துக் கொண்டு அம்மு கிளம்ப, தன்னவளின் வித்தியாசமான நடவடிக்கையிலேயே மயங்கி இருந்தவன் இதை அறியவில்லை.

அம்மு வீட்டுக்கு வந்து சேர்ந்துமே மிருத்யூ திரும்பியிருக்க வில்லை. அவள் குளித்து உடைமாற்றிக் கொண்டு சாப்பிட அமரவும் கையில் இரண்டு மூன்று பைகளுடன் வந்து சேர்ந்தாள் மிருத்யூ.

“வெற்றி தம்பி வரலையா?” உள்ளே நுழைந்த மகளின் பின்னால் வெற்றி வராததைக் கண்டு திவ்யபாரதி கேட்கவும், ‘தம்பியாம் தம்பி. பெரிய தும்பி!’ பல்லைக் கடித்தாள் அம்மு.

“மாமாக்கு வேலை இருக்காம். இறக்கி விட்டுட்டு கிளம்பிட்டாரும்மா” என்ற மகளிடம், “உள்ள கூப்பிடனும் மிரு! இது என்ன பழக்கம்” என்று கண்டித்த திவ்யபாரதி,

“நேரம் ஆச்சே சாப்பிட்டு போகச் சொல்லலாம்னு பார்த்தேன்” என்றதும் அம்முவால் தாயை முறைக்க மட்டுமே முடிந்தது. அதுவும் அவர் அறியாமல்.

“நீ சாப்பிட்டுப் போடி” என்று அறைக்குள் நுழையப்போன மிருத்யூவை திவ்யபாரதி அழைக்க, அதற்குள் அவள் கையிலிருந்த விவோ (vivo) அலைபேசி நிறுவனத்தின் பையைக் கண்ட அம்மு, “இது என்னடி புது போனா?” என்றாள்.

யாருக்குப் பதில் சொல்வதென தடுமாறியவள், “அங்க மாமாகூட சாப்பிட்டேன்மா எனக்குப் பசிஇல்ல” என்றவள் தமக்கையைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.

“புது போனான்னு கேட்டேன்? என்று வார்த்தையில் அழுத்தம் கொடுத்த தமக்கையிடம் தடுமாறி நின்றாள் மிருத்யூ.

இதுவரை தமக்கைதானே அவளுக்கெனப் பார்த்து பார்த்து அலைபேசி வாங்கித் தருவது.

தங்கையின் மௌனத்தில் கோபம் ஏற, “முதல்ல உன் போன் ரிப்பேர்னு என்கிட்ட ஏன் சொல்லல? அந்தளவுக்கு நான் வேண்டாதவளா ஆகிட்டனா?” என்றாள் கோபமும், ஆற்றாமையுமாக

அலைபேசியும் அவன்தான் வாங்கிக்கொடுத்திருக்க வேண்டும் என்று தோன்ற, எல்லாவற்றுக்கும் அக்கா அக்கா என பின்னாடி சுற்றியவள் தன்னைத் தேடவில்லையே என்ற கோபம் அம்முவிடம் தலைதூக்கியது.

“இதுக்கு ஏன்டி இவ்ளோ டென்ஷன் ஆகுற? உடம்பு சரி இல்லாம போனதிலிருந்தே பிள்ளை முகமே சரி இல்ல. இதுல வந்துட்டா. உனக்கு உன்னைத்தவிர யார்கிட்டயும் பாசமா இருந்துடக் கூடாதே!

“வெற்றி தம்பி அப்பாக்கிட்ட சொல்லிட்டுதான் வாங்கிக்குடுத்திச்சி” என்றதும் கண்டும் காணாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்த தந்தையை முறைத்தாள்.

அதில் ‘அப்பா நீங்களுமா?’ என்ற கேள்வி இருக்க, மகளைப் பற்றி அறிந்தவனாக, செழியன் அவளைப் பாராததுபோல் தட்டிலிருந்ததை சுவாரஷ்யமாகச் சாப்பிடுவதுபோல் நாடகமாட, அவளுக்கு புசு புசுவென கோபம் வந்தது.

“எல்லாம் ஒட்டுமொத்தமா மாப்பிள்ளை மாப்பிள்ளைன்னு ஜால்ரா அடிக்கிறீங்கள்ல. போங்க உங்க எல்லாரையும் நான் டைவர்ஸ் பண்றேன். இந்த குடும்பமே எனக்கு வேண்டாம். நான் மாமாட்ட போறேன்” விறுவிறுவென வீட்டுக்கு வெளியில் வந்தவள் மாடிப்படிக்கட்டில் ஏற, செழியனும், பாரதியும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்தனர்.

“ஏங்க இவ திருந்தவே மாட்டாளா?” என்று திவ்யபாரதியும் செழியனுடன் அமர்ந்துகொள்ள, அவளுக்கு தட்டில் இட்லியை எடுத்து வைத்தச் செழியன், “எல்லாம் மேல இருக்கவன் குடுக்கறச் செல்லம்” என்று சாம்பாரை ஊற்றினான்.

“சாப்பிடாம வேற போறா.” என்ற திவ்யபாரதிக்கும் சாப்பிட மனமில்லாமல் போக, அவள் மனதைக் கணித்தது போல், “இன்னும் அஞ்சி நிமிஷத்துல அதுங்க இரண்டும் கிளம்பி பெரிய ஹோட்டலா பார்த்து வெட்டிட்டு வரும். நீ ஒழுங்காச் சாப்பிடு!” என்றான் அதட்டி.

அவன் சொல்லி முடிக்கவில்லை கார்த்தியும், அம்முவும் படி இறங்க, வீட்டுக்குள் பார்த்து முகத்தை வெட்டிய அம்மு கார்த்தியை பின் தொடர்ந்து சென்றாள்.

‘பார்த்தியா?’ செழியன் விழிகளால் கேட்க, “கல்யாணத்தைப் பண்ணி என்ன பண்ண போறாளோன்னு நினைச்சாலே பதறுதுங்க. பாவம் அந்த தம்பி! என்று கவலைப்பட செழியனுக்குப் புன்னகை வந்தது.

“அவனும் நீ நினைக்கிறா போல லேசு பட்டவனில்ல” என்றதும் திவ்யபாரதி தாயாய் பதற, “கவலைப் படாத உன் பொண்ணுமேல உயிரையே வச்சிருக்கான். நல்லா பார்த்துப்பான். உன் பொண்ணும் அவனைத் தவிர யாரையும் கட்டுவான்னு தோணல” என்றதும் திவ்யபாரதியின் விழிகள் விரிந்து கொண்டது. அவளுக்கு இது புதுச் செய்தியாயிற்றே!

மகள் காதலித்ததைச் சொல்லாமல் வெற்றியைப் பற்றி மட்டுமே சொல்லி மனைவியிடம் சம்மதம் வாங்கி இருந்தான்.

அதில், “என்னங்க சொல்றீங்க? உண்மையாவா? என்றதும் விழிகள் மூடித் திறக்க, அவளால்தான் நம்ப முடியவில்லை.

“இல்லன்னா ஒரு டிஜிபியோட பொண்ணு பின்னால ஒருத்தன் இத்தனை வருஷமா சுத்தினதை சொல்லாம மறைப்பாளா?” என்றவன் தனக்குத் தெரிந்தவரை அனைத்தையும் சொல்லி முடித்திருந்தான்.

திவ்யபாரதிக்கு ஒரு தாயாய் அப்போதுதான் நிம்மதி பிறந்தது. கல்யாணக் கலையே இல்லாமல் எதிலும் அக்கறை இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த மகளைக் கண்டு பயந்து போயிருந்தாள் அவள்.

காலையில்கூட, “எப்போ லீவு போட முடியும் சொல்லுடி, அந்த தம்பியையும் கூப்பிட்டுட்டு புடவை எடுக்கப் போகணும்” என்றவளிடம், “அந்தத் தும்பியையே வச்சி புடவை எடுத்துக்கோங்க, எனக்கு லீவு எடுக்க முடியாது.” என்று சென்றிருந்தாள்.

“அப்புறமும் ஏங்க இப்படி முறுக்கிட்டுத் திரியுறா?” என்றதும் தோளைக் குலுக்கியவன், “கேட்டதுக்கு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் நான் பார்த்துக்கிறேன்னுட்டான்” என்றான் செழியன்.

“ஷ்ஷப்பா! இவளோட முடியலைங்க” என்றதும் மெலிதாய்ப் புன்னகைத்தவன், “இதுக்கேவா? இன்னும் கல்யாணத்துக்கு அப்புறம் பஞ்சாயத்துப் பண்ணவே நமக்கு தனித் தெம்பு தேவைப்படும். இன்னும் நல்லா சாப்பிடு!” என்று இன்னும் ஒரு இட்லியை அவள் தட்டில் எடுத்து வைக்க முறைத்தாள் அவள்.

“இதுதான் சாக்குன்னு என்னை குண்டாக்கிடாதீங்க!” முறைத்தவளின் காதில், “இதுக்கும் மேல உண்டாக்க முடியாதுடி குண்டாக்கத்தான் முடியும்” என்றவன் கிசுகிசுக்க, “அய்ய.. ஆரம்பிச்சுட்டீங்களா! மருமகனே வரப்போறான்” என்றாள் வெட்கித்து.

“அதேதான் மருமகனே வந்தாலும் நீ இன்னும் கதைக் கேட்கும் பழக்கத்தை நிறுத்தலைல்ல” என்றதும் அவன் தோளிலையே இடித்தவள், “பழக்கப்படுத்தினது யாராம்?” என்று சிணுங்கினாள்.

“என் பேரனுக்கும், பொண்டாட்டிக்கும் சேர்த்தே கதை சொல்லச் சொன்னாலும் நான் சொல்லுவேன்டி” என்றவன் மனைவியைத் தோளோடு அணைத்துக் கொண்டான்.

அதேநேரம், தனதறைக்குச் சென்று கதவை மூடிக்கொண்ட மிருத்யூஸ்ரீ, புது அலைபேசி கேட்ட தகவல்கள் அனைத்தையும் கொடுத்து முடித்தவள் அது உயிர் பெற்றதும் அவசரம் அவசரமாக குறிப்பிட்ட எண்ணுக்கு அழைத்தாள்.

வழக்கம்போல் ‘வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்’ என்ற கணினியின் குரலில் விழியோரம் கண்ணீர் கசிந்தது.

சோர்வுடன் அலைபேசியை மெத்தையில் தூக்கி எறிய, அது விழுந்த வேகத்தில் அழைப்பு ஒலியை எழுப்பியது.

யாரென்று காணாமலே, ஒரே ரிங்கில் அடித்துப் பிடித்துக் காதுக்குள் வைத்தவள் எதிர்முனை குரல் கேட்டதும் அதிர்ந்தாள்.

“உன்னை போன் பண்ணக்கூடாதுன்னு சொல்லிருக்கனா இல்லையா? அதட்டி ஒலித்த குரலில் அரண்டவள், “என்கால்ஸ் ட்ரேஸ் பண்றீங்களா? என்றாள். நம்ப முடியாது மெலிந்து ஒலித்த குரலில்.

“இந்த வழக்கு எனக்குச் சாதகமா முடியுற வரைக்கும் நீ என் கண்ட்ரோல்லதான் இருக்கணும். புரிஞ்சிதா?” மிரட்டி விட்டு வைத்தது அந்தக் குரல்.

அதே மெத்தையில் வயிற்றோடு காலை மடக்கி சுருண்டு கொண்டவளில், விம்மல்கள் வெடித்தது.