அத்தியாயம் : 12

அன்று மாலையே எடுத்த விடுமுறையை முழுதாக அனுபவிக்க முடியாமல் பணிக்குத் திரும்பி இருந்தாள் அம்முஎழிலரசி.

“ஃபாரன்சிக் சொல்லியாச்சா? பாடி எங்க இருக்கு?” இன்ஸ்பெக்டரிடம் கேள்வி கேட்டுக்கொண்டே அந்த பங்களாவின் உள்ளே நுழைய, ஒரு அறையை சுட்டிக் காட்டினார் இன்ஸ்பெக்டர்.

“யார் முதலில் பார்த்தது?” என்றபடி அவர் சுட்டிக்காட்டிய அறைக்குள் நுழைந்தவளுக்கு ஒரு நிமிடம் திக் என்றது. 

பணியில் சேர்ந்து அவள் பார்க்கும் முதல் மரணம். அதுவும் முழுதாக எரிந்த நிலையில் சிலிண்டரின் அருகே ஒருக்களித்து சாய்ந்து அமர்ந்தபடி மரணித்திருந்தாள் அந்தப் பெண்.

பேச்சற்று நின்றவள் தன்னை நிதானப் படுத்திக் கொள்ள சில நிமிடங்கள் தேவைப்பட்டது. “மேடம் நீங்க வெளில வாங்க! நான் பார்த்துக்கிறேன்.” அவளுக்கு இது புதிதென அவளது வெளுத்த முகமே காட்டிக் கொடுக்க இன்ஸ்பெக்டர் அப்புறப்படுத்த முயன்றார்.

சைகையாலயே தான் பார்த்துக் கொள்வதாக கூறியவள், தன்னை நிதானப்படுத்தி அந்த அறையை முழுவதுமாக ஆராய்ந்தாள்.

அந்த அறையைச் சுற்றி முடித்து வெளியில் வர, சமையலறையை ஒட்டி மாடிக்குச் செல்லும் படிக்கட்டில் இறந்துக் கிடந்த பெண்ணையே வெறித்தபடி அமர்ந்திருந்தான் ஒருவன்.

“இவன்‌ யாரு? இங்க ஏன் உட்கார வச்சிருக்கீங்க? க்ளியர் அவுட்” என்றதும் ஓடிவந்தார் இன்ஸ்பெக்டர்.

“மேடம்! மினிஸ்டர் முருகானந்தம் பையன். இவர்தான் பாடிய முதல்ல பார்த்தது.” என்றான் அவசரம் அவசரமாக..

“ஓ! பெரிய இடம் போல” இன்ஸ்பெக்டரின் பவ்யத்தில் கேலியாக அவரைக் கேட்டவள், “ஏய் என்ன நடந்துச்சி? என்ன பார்த்த?” என்றாள் அவனிடம்.

“…”

எதுவும் பேசவில்லை அவன். வெறித்தது வெறித்தபடி அமர்ந்திருந்தான்.

“மேடம் அவர் வந்ததிலிருந்து இப்படியேதான் உட்கார்ந்து இருக்கார். நமக்குத் தகவல் சொன்னதுகூட வேலைக்காரங்கதான்” என்ற இன்ஸ்பெக்டர், “கான்ஸ்டபிள் அவங்களை அழைச்சிட்டு வாங்க” என்று குரல் கொடுத்தார்.

அதுவரை ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்திருந்த கணவன் மனைவி இருவரையும் அழைத்து வந்து அவள் முன் நிறுத்தினர். 

அவர்களின் கண்கள் கலங்கி இருந்தது.

“நீங்கதான் முதல் பார்த்ததா?”

“இல்லைங்க, நாங்க வரும்போதே சின்ன அய்யா பித்துப் பிடிச்சவராட்டம் இங்கனதான் உட்கார்ந்து இருந்தாருங்க” அவர்கள் சொன்னதும் ஒருமுறை அவனைத் திரும்பிப் பார்த்தாள், அதே கோலத்தில்தான் அமர்ந்திருந்தான்.

“நானும், எம் பொஞ்சாதியும், வேலை எல்லாம் பார்த்துபுட்டு பாப்பாவுக்கு துணையா இராவுக்கு இங்கனதாங்க தங்கறது!”

“இன்னைக்கும் வீட்லதானே இருந்திருப்பீங்க? என்ன நடந்துச்சி? வேற யாரும் வந்து போனாங்களா?”

“இல்லீங்க! இன்னைக்கு சின்ன அய்யா மதியமே போன் பண்ணி நீங்க கிளம்புங்க நான் கொஞ்சநேரத்துல வந்துருவேன், நான் பார்த்துக்கிறேன்னாருங்க” 

“ஓ…” என்று இதழ்வளைத்தாள். 

“உங்க சின்னய்யா வந்தா எப்பயும் இப்படித்தானா?” என்றாள், அவனை ஒரு பார்வைப் பார்த்து. அவர்கள் அவனைக் கைக்காட்டி பேசியதிலயே அந்த இளைஞன்தான் சின்னய்யா என்று தெரிந்தது.

“எப்பயும் இல்லீங்க! எப்பயாச்சும் அவரு கூட்டாளிங்க வருவாங்க. சின்னதுங்க எதுனா பேசி சிரிச்சிட்டு இருக்கும்ங்க. நாங்க சமைச்சி வச்சிட்டு, அப்படியே சொந்தக்காரங்கள யாரும் பார்க்கணும்னா பார்த்துட்டு  இராவுக்கு திரும்பிடுவோம்ங்க” என்றார் அந்த பெண்மணி.

“நீங்க தான் இங்க சமைக்கிறதா?

“ஆமாங்கம்மா! பெரிய அய்யாவோட வீட்டம்மா இறந்த அப்புறம், அய்யா இங்க வேலை பார்க்கச் சொல்லிட்டாருங்க, எங்க வீட்டாளு தோட்டம் தொரவ பார்த்துக்கும், நான் கடை கன்னிக்கு போய்ட்டு வந்து சமைச்சி வச்சிடுவேனுங்க!”

விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருக்க, ஒருபக்கம் ஃபாரன்சிக் ஆட்கள் தடயங்களை தேடிக்கொண்டிருந்தனர். ஆம்புலன்ஸ் வாகனமும் தயாராய் வந்து நின்றது.

அவர்களிடம் விசாரணையை முடித்தவள், “இந்த பொண்ணு யாரு என்னன்னு தெரிஞ்சிதா? சொந்தக்காரங்களுக்கு தகவல் சொல்லியாச்சா? என்றாள் இன்ஸ்பெக்டரிடம்.

“எஸ் மேடம்! மத்திய இணை அமைச்சர் முருகானந்தம் மனைவியோட தங்கச்சி பொண்ணு, பெயர் தேஜஸ்வினி! இது அவர் பங்களாதான். இவங்க ஊர்லருந்து வந்து இங்க தங்கி காலேஜ்ல படிச்சிட்டு இருக்காங்க” தான் சேகரித்தத் தகவல்களை அவர் சொல்லிக்கொண்டே வர, அவளின் பார்வை அந்த இளைஞனை எடை போட்டது.

கல்லூரி மாணவன் போல் தான் இருந்தான். வயது 21, 22 லிருந்து  25 க்குள் இருக்கலாம் என்று கணித்தாள். அவன் அமர்ந்திருந்த கோலம் அதிர்ச்சியா, விரக்தியா கோபமா இல்லை வெறுப்பா? என்று கணிக்க இயலாதவாறு இறுகிப் போய்க் கிடந்தது.

“இந்த பையன் முருகானந்தத்தோட பையன்னு சொன்ன…” 

“எஸ் மேம்! இறந்து கிடக்கிற பொண்ணு அவருக்கு அக்கா முறை வேணும்! அவரோட ஒரே மகன் ஷ்யாம் சுந்தர்! அவள் சொல்லி முடிக்கும் முன் அவரின் பதில் அவசரமாக வந்து விழுந்தது. 

அவன்மீது சந்தேகப் பட்டுவிடக்கூடாதென்ற வேகம் இன்ஸ்பெக்டரின் அவசரத்தில் இருந்தது.

“மிஸ்டர் முருகானந்தத்துக்கு தகவல் சொல்லியாச்சா?”

“எஸ் மேடம்! அவர் இப்போ டெல்லி போய் இருக்கார். வந்துடுறேன்னு சொல்லிட்டார் மேடம்! என்றவரின் குரல் அநியாயத்துக்கும் பவ்யத்தைக் காட்டியதை மனதிற்குள் குறித்துக் கொண்டாள்.

அவரிடம் விசாரணையை முடித்ததும், அந்த இளைஞன் உட்கார்ந்திருந்த அழுத்தத்தில் அவன் எப்படியும் வாயைத் திறக்கப்போவதில்லை எனத்தெரிந்து மீண்டும் வேலையாட்களிடமே வந்தாள்.

“வீட்டுக்கு யார் யார் வந்து போவாங்க? யாரையாச்சும் பார்த்திருக்கீங்களா?”

“பெரிய அய்யா எப்பயாச்சும் முக்கியமான கட்சி ஆளுங்கள கூட்டிட்டு வருவாருங்க. தோட்டத்துல கூட்டமா பேசிக்கிட்டு இருப்பாங்க. அந்த நேரத்துல பாப்பா அது ரூம்ல உட்கார்ந்து படிச்சிட்டு இருக்கும்ங்க.”

“உங்களுக்கு யார் மேலயும் சந்தேகம் இருக்கா? உங்க பெரிய அய்யா எப்படி..? அந்தப் பொண்ணுக்கு லவ்…” அவள் முடிக்கும் முன்,

“நான் தான் கொலை பண்ணேன்” என்ற இறுகிய குரலில் திரும்பினாள்.

இவனா பேசியது என்று சந்தேகம் வரும் வகையில் அதே இறுகியத் தோற்றம் மாறாமல் அமர்ந்திருந்தான் அவன்.

அதற்குமேல் அவள் எவ்வளவு கேட்டும் அவன் வாயே திறக்கவில்லை.

“இப்போ நீ வாயைத் திறக்கப் போறீயா இல்லையா..?” ஓங்கி ஒரு அறை அறைந்தாள். அப்போதும் அவனது உடல் இறுகியதேத் தவிர, மௌனத்தயே சாதித்தான்.  

அவளுக்கும் பொறுமை பறந்துவிட்டிருக்க, “ஸ்டேஷன்ல வச்சி கேட்கிற விதத்துல கேட்டா வாய் தானா திறக்கும்”அவனது சட்டையை கொத்தாகப் பற்றி இழுக்க, அவள் இழுத்த இழுப்புக்கு அமைதியாக வந்தான் அவன். அப்போதுதான் அவனது சட்டையின் நெஞ்சுப் பகுதியும் நெருப்பினால் தீப்பிடித்து கருகி இருந்ததைக் கவனித்தாள்.

வேலைக்காரர்கள் அதிர்ச்சியில் செய்வதறியாது வாய்மூடி கண்ணீர் வடித்தனர்.

“ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் முடிஞ்சிது மேடம்! நீங்க ஓகேன்னு சொன்னா பாடிய ஆம்புலன்ஸ்ல ஏத்திடலாம்!” என்று வந்து நின்ற இன்ஸ்பெக்டர் அவளின் செய்கைக் கண்டு, “மேடம் என்ன பண்றீங்க? அவரை விடுங்க!” பதறினார்.

“ராஸ்கல் கொலை பண்ணினதை ஒத்துக்கிட்டு வேற வாயையேத் திறக்க மாட்றான். நீங்க மத்த ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் முடிச்சிட்டு, சிசிடிவி ஃபுட்ஏஜ் கலெக்ட் பண்ணிட்டு வாங்க! நான் இவனை ஸ்டேஷனுக்கு கொண்டு போறேன்!” என்றவள் அவனைத் தள்ளிக்கொண்டு நடந்தாள்.

“மேடம்! ப்ளீஸ்… எதுக்கும் முருகானந்தம் சார் கிட்ட ஒருவார்த்தை…” என்று குறுக்கில் வந்தவர் எழிலாவின் முறைப்பில் விலகி நின்றார்.

வெளியில் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. அந்த மழையிலும் எப்படியோ மோப்பம் பிடித்து ஒன்றிரண்டு ஊடகங்கள் ஷ்யாம் சுந்தரின் சட்டையைப் பிடித்து அம்மு இழுத்துச் செல்லும் காட்சியை விடாது படம் பிடித்தன.

ஒலி வாங்கியை (மைக்) நீட்டியவர்களை சட்டை செய்யாது அவனை இழுத்து ஜீப்பில் ஏற்றியவள், அங்கிருந்து புறப்பட, தேஜஸ்வினியின் உடல் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு கிளம்பியது.

அவளது வாகனம் மறைந்தநொடி, மின்னல் வேகத்தில் இன்ஸ்பெக்டரின் அலைபேசி முருகானந்தத்திற்கு அழைத்தது.

******

“அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்… அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே… பொன்னான கைப்பட்டு புண்ணான கன்னங்களே… ரா..ரா..ரா..ரா” 

மேஜையில் ஏறி அமர்ந்து அதில் தாளம் தட்டியபடி பாடிக்கொண்டிருந்தான் வெற்றி. 

ஸ்டேஷனுக்குள் நுழைந்ததும் இவனையா காண வேண்டும்? 

ஏற்கனவே இருந்த மண்டைக் குடைச்சலில் அவனின் காதல் பாட்டுவேறு எரிச்சலூட்டியது. 

“கொஞ்சமும் சீரியஸ்னெஸ் இல்லாம” முறைத்துவிட்டு அந்த இளைஞனை சிறைக்குள் தள்ளிப் பூட்டிவிட்டு வந்தாள்.  

இன்னமும் பாடிக்கொண்டிருந்தான் அவன். கொல்லும் ஆத்திரம் வர ‘இவன..’ பல்லைக் கடித்தாள்.

அவனை ஏன் வந்தாய் என்று கேட்கவா முடியும். அவனது கட்டுப்பாட்டில் வரும் ஸ்டேஷனுக்கு எப்போது வேண்டுமானாலும் வரும் அதிகாரம் உண்டே! 

“மனுஷங்க என்ன மனோநிலைல இருக்காங்கன்னே புரிஞ்சிக்க முடியாதா?” யாரும் அறியாமல் சீறினாள்.

“சிச்சுவேஷன் சாங் மா.  முதல் மர்டர் கேஸ். உனக்கு அது புது அனுபவமில்லையா? உன் பொன்னான கைப்பட்டு அந்தப் பையன் கன்னம் பழுத்துக் கிடக்கு. பாவம்! 

அப்புறம்..” என்று அவளருகே குனிந்து, “அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்கள் எனக்கு டி அம்முக்குட்டி” அவள் காதில் கிசுகிசுத்தவன் அவள் பாயும்முன் மேஜையிலிருந்து துள்ளிக் குதித்து இறங்கினான்.

சிறைக்கு அருகில் நெருங்கி, “சார் தான் இன்னைக்கு ஹீரோவா?” என்றபடி, செல்லுக்குள் இறுகி அமர்ந்திருந்த இளைஞனைக் கண்ட வெற்றியின் புருவம் சுருங்கி முடிச்சிட்டது. அம்மு அழைத்துவரும்போது சரியாகக் கவனித்திருக்கவில்லை.

‘இவன்..’ சற்றுநேரம் யோசனையுடன் கூர்ந்தான். வெற்றியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவன்.

ஸ்டேஷன் தொலைபேசி அலற, உதவிப் பெண்காவலர் எடுக்கும் முன் தாவி எடுத்துக் காதில் வைத்தாள் அம்மு. 

“நான் முருகானந்தம்..” என்ற குரலைக் கேட்டதும், ஏளனமாக  வளைந்தன இதழ்கள். இதை எதிர்பார்த்ததால் தானே அவளே எடுத்தது. அடுத்து அவர் பேச வரும்முன் தோலைபேசியை வைத்து விட்டிருந்தாள்.

முதல் கொலை வழக்கு. யாராக இருந்தாலும் எந்த சமரசமும் செய்துக் கொள்ளத் தயாராக இல்லை அவள்.

மீண்டும் தொலைபேசி அலற, இந்தமுறை ஒலி வாங்கியை எடுத்துக் கீழே வைத்துவிட்டிருந்தாள்.

மேலிடத்து அழுத்தம் (பிரஷர்) என்று புரிந்து கொண்ட வெற்றியின் இதழ்கள், ஓசையின்றி ‘ஸ்மார்ட்’ என வளைய, பாராட்டுகிறானா இல்லை கேலி செய்கிறானா என்ற குழப்பம் வந்துது அவளுக்கு.

‘எமகாதகன், பார்வை ஒன்னு பேச்சு ஒன்னா இருக்கும்’ அவள் நினைத்து முடிக்கும் முன் வெற்றியின் அலைபேசி அலற, அலைபேசியை எடுத்தவன் அதில் ஒளிர்ந்த எண்ணைக் கண்டதும் புருவங்கள் முடிச்சிட அம்முவை ஏறிட்டான்.

சிலநொடிகள் தயங்கியவன் அலைபேசியை காதில் வைக்க, அந்த பக்கம் என்ன சொல்லப் பட்டதோ, பேசியபடியே அம்முவிடமிருந்து விலகி நடந்தான். பார்வை விலகிச் செல்லும் வெற்றியின் மீது இருந்தாலும் எல்லாவற்றையும் முடித்து உள்ளே வந்த இன்ஸ்பெக்டரிடம் கவனத்தை வைத்தாள் எழிலரசி.

“போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் எப்போ கிடைக்கும்னு கேட்டீங்களா?”

“நாளைக்கே கிடைச்சிடும் மேம்! ஆனா பாடி அல்மோஸ்ட் முழுசா எரிஞ்சி இருக்கிறதால சீமன் ட்ரேஸ் (semen trace) எதும் ஃபைண்ட் பண்ண முடியாது? சோ விக்டிம் ரேப் பண்ண பட்டிருக்கா இல்லையான்னு கண்டுபிடிக்கிறது கஷ்டம்”

“யா..ஐ க்னோ! சிசிடிவி ஃபுட் ஏஜ் கலெக்ட் பண்ணிட்டீங்களா?”

“இரண்டுநாள் முன்னாடியே கேமரா வேலை செய்யலன்னு கம்ப்ளைண்ட் பண்ணதால, டெக்னீசியன்ஸ் வந்து கழற்றி எடுத்துட்டுப் போய்  இருக்காங்க மேடம்!”

“சோ! இந்த இரண்டு நாளில் நடந்த எதுவும் பதிவாகி இருக்காது. ரைட்? ரிப்பேர் கம்ப்ளைண்ட் யார் குடுத்ததாம்?” 

“அது வந்து மேடம்…” என்றவர் தயங்க, “யார்னு கேட்டேன்” என்றாள் சற்றே மிரட்டலான தொனியில்.

“அது ஷ்யாம் தம்பிதான் கம்ப்ளைண்ட் பண்ணினதா..” தயங்கினார் அவர். 

“ஓ..” எதிர்பார்த்ததுபோல் அவள் இதழ்கள் வளைந்தன.

அதற்குள் பேசிமுடித்து அலைபேசியை பாக்கெட்டுக்குள் திணித்துக்கொண்டே வந்தவனின் பார்வை செல்லுக்குள் அமர்ந்திருந்தவனின் மேல் படிந்து மீண்டது.

அம்முவை ஒரு பார்வைப் பார்த்து இன்ஸ்பெக்டரை தனியே அழைத்தான்.

“நான் திரும்பி வர வரைக்கும் அந்த பையன் மேல எஃப் ஐ ஆர் போடக்கூடாது” என்றவன் விழிகளால் அம்முவைக் காட்டி, “சமாளிங்க” என்று தோள்தட்டினான்.

அவன் சொல்லவில்லை என்றாலும் முருகானந்தம் வரும்வரை எஃப் ஐ ஆர் போடாமல் இழுத்தடிக்கவே யோசித்திருந்தார் அவர். முருகானந்தத்தின் விசுவாசி. பெரிய இடம் லம்பா கிடைக்குமே!. SP யே அதைச் சொல்லவும் கொஞ்சம் தைரியம் வந்திருந்தது. 

‘சாருக்குமே இந்த அம்மாவப் பத்தி நல்லா தெரிஞ்சிருக்கு. ஜெகஜால கில்லாடிதான்’ என்று அவர் வெற்றியைப் பற்றி நினைக்க,

அம்மு எனும் அரிச்சுவடியை தலைகீழாகக் கரைத்துக் குடித்தவன் அவன் என அறியவில்லை அவர். 

இல்லையெனில் அம்முவைச் சமாளிப்பது லேசுபட்ட காரியமில்லை என்பதை அவளுடன் பணிபுரிந்த இந்த கொஞ்ச நாளிலேயே புரிந்து கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர். 

அவர் நினைவுகளுக்கு உரியவனோ, மீண்டும் பார்வையால் எச்சரித்து தனது தனிப்பட்ட தேவைக்கென பயன்படுத்தும் புல்லட்டை எடுத்துக்கொண்டு பறந்தான்.

அம்முவுமே வேறோறு குற்ற வழக்கில் மும்முரமாயிருந்தாள். அது இன்ஸ்பெக்டருக்கு இன்னமுமே வசதியாகிவிட, ஷ்யாம் சுந்தர் சம்மந்தப்பட்ட வேலையை அப்படியேக் கிடப்பில் போட்டார்.

தனக்கென அளிக்கப்பட்ட அரசாங்க வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் அம்மு எழிலரசி. பகலவன் மறைந்து இருள் கவ்வியிருந்தது.

அந்த இருளிலும் அம்முவின் முகம் கோவத்தில் அக்னி ஜூவாலையாக ஜோலித்துக் கொண்டிருந்தது. அவளின் முதல் கொலை வழக்கு. அதில் அசிங்கமாய்த் தோற்றுப் போய் நிற்கிறாள். 

அதுவும் குற்றவாளியே குற்றத்தை ஒப்புக்கொண்டப் பிறகும் ஒன்னும் செய்ய முடியாத தன் கையாலாகத் தனத்தை நினைத்து எரிச்சல் வந்தது.

‘ச்ச! இதுக்கு எதுக்கு இந்த காக்கி உடை!’ எரிச்சல் மண்டியதில் தலையில் அணிந்திருந்த தொப்பியை இருக்கைக்கு அருகில் கழற்றி வீசினாள். 

“அவன் மேல எஃப் ஐ ஆர் போடக்கூடாது. இட்ஸ் மை ஆர்டர்! காட் இட்!” காட் இட்! திரும்ப திரும்ப வெற்றியின் கோபக் குரல் காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது. நொடியில் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.

ஓட்டுனர் அவள் கோபம் அறிந்து ஒரே சீராக வண்டியை ஓட்ட, கலங்கிய கண்களை அவர் அறியாமல் இருக்க ஜன்னல்புறம் திரும்பினாள்.

என்ன ஒரு ஆக்ரோஷம் அவன் குரலில்! மேஜையில் ஓங்கித் தட்டி அவன் எச்சரித்த விதத்தில், அந்த ஸ்டேஷன் மொத்தமும் அவளைத்தான் பார்த்திருந்தது. மிகவும் அவமானமாக உணர்ந்தாள்.

வெற்றியின் கோபத்தை முதல்முறை பார்க்கிறாள். அதுவும் அவளிடம்! உள்ளுக்குள் ஏதோ ஒரு மூலையில் முனுக்கென வலித்தது.