அத்தியாயம்: 11

தன் உயிர் மாமனிடமிருந்து இப்படியொரு வார்த்தைகளை கொஞ்சமும் எதிர்பார்த்திராதவள், அதிர்ச்சியில் விழிகள் கலங்க உறைந்து நின்றாள்.

அவள் செய்து கொண்டிருக்கும் மடத்தனத்தை ஒற்றைக் கேள்வியில் புரிய வைத்திருந்தவனும் கை இரண்டையும் மார்புக்குக் குறுக்காக கட்டிக்கொண்டு மருமகளின் விழிகளைத்தான் அழுத்தமாகப் பார்த்திருந்தான்.

அவள் விழிகள் தன்முன்னே கண்ணீரைச் சொறிய, துடைத்துவிடத் துடித்தக் கரங்களைக் கடினப்பட்டு அடக்கிக் கொண்டு நின்றிருந்தான்.

தகப்பன் என்‌ பெயரைக் கெடுத்துவிடாதே என்று சொன்னதற்கே இரண்டு நாட்கள் மாமன் மடியில் குலுங்கி அழுதவளா ஒரு தேசத் திருடனை டிஜிபியின்‌ மருமகனாக கொண்டு வருவாள்?

நீ நடித்தாய்! நானும் நம்பியதாக நடித்தேன்! என நின்றது அந்த கற்பாறை.

தன் முகம் கூட ஏறெடுத்துப் பாராமல் விறுவிறுவென மாடிப்படி இறங்கிச் சென்றவளை ஒருவித இயலாமையுடன் பார்த்திருந்தான் கார்த்தி. 

இதுவரை நினைவுதெரிந்து அவள் மனசு நோகும்படி அவன் பேசியதே இல்லை. அவன்முன் யாரையும் பேச அனுமதித்ததும் இல்லை. 

செழியனோ, திவ்யபாரதியோ கார்த்தியின்முன் மகளைக் கடிந்துகொள்ள யோசிப்பார்கள். அவளின் முழு உரிமையையும் கார்த்திக்கு விட்டுக்கொடுத்து தள்ளிதான் நின்றிருக்கின்றனர்.

அப்படி விட்டுக்கொடுத்தத் தகப்பன், என் பெண்ணை எப்படி வளர்த்திருக்கிறாய் பார்? என ஒரு கேள்வி கேட்டால் கார்த்திக்கும் முதல் உடைந்து போவது அவனின் செல்ல அம்முக்குட்டி அல்லவோ?

அவள் சொல்வது பொய் என அறிந்தாலும் அந்த பொய்யின் முழு வீரியத்தை அவளுக்கு உணர்த்திவிட எண்ணித்தான் மறந்துவிட்ட தன் வரலாற்றைப் பற்றிப் பேசியது.

அவன் நினைத்ததுப் போலவே அது குறிதவறாமல் தாக்கியிருக்க மருமகளின் கண்ணீரில் தானும் கரைந்து நின்றான். 

செழியனின் குடும்பம் மூன்று படுக்கையறைக் கொண்ட கீழ் தளத்தை ஆக்ரமித்திருக்க, மாடியில், இரண்டு படுக்கையறை, விசாலாமான‌ மொட்டை மாடி, ஒருபக்கம் கார்த்தி உடற்பயிற்சி செய்யவென முழுவதும் மூங்கிலால் வடிமைக்கப்பட்ட வட்ட வடிவ  கூடாரம். 

பார்த்து இரசிக்கவென மாடிவரையிலும் படரவிட்டப் பவளமல்லி, ஒருவர் படுத்துக் கொள்ளும் வகையில், கூடாரத்தின் வெளியில் அழகாய் தொங்கவிடப்பட்ட ஊஞ்சல் எனப் பார்த்து பார்த்துக் கட்டி இருந்தான் செழியன். 

எப்போதும் தன்னைவிட கார்த்திக்கு செய்துகொடுக்கும் வசதியில் மிகுந்த கவனம் இருக்கும் செழியனிடம்.

கார்த்தி நினைத்தால் இதைவிட நவீன வசதியுடன் கூடிய வீடு வாங்கிக்கொள்ள முடியும். அவர்கள் மறுவாழ்வுக்கு உயிர்க்கொடுத்த அந்த மலைக்கிராமங்களில் கார்த்திக்கென தனி சாம்ராஜ்யமே இருக்கிறது. 

சின்னதாய் தான் வாங்கிப்போட்ட நிலத்தில் பயிரட ஆரம்பித்தவன் இன்று ஏலக்காய், கிராம்பு, மிளகு என சுற்றி இருக்கும் மலைக்கிராமங்களில் சில பல விளைச்சல் நிலங்களுக்கு சொந்தக்காரன். 

எல்லாவற்றையும் ஆள் வைத்து மேற்பார்வைப் பார்த்துக்கொண்டு நட்புக்காகவும் தன் மருமகளை பிரிந்திருக்க முடியாமலும் இங்கு வந்து இருக்கிறான். மாதத்தில் பதினைந்து நாட்கள் அங்கும் பதினைந்து நாட்கள் இங்கும் என சுற்றிக்கொண்டிருப்பவனின் உயிர்நாடி அம்மு. 

அப்படிப் பட்டவளைத்தான் காயப்படுவாள் எனத் தெரிந்தே இன்று வார்த்தையால் வதைத்து அனுப்பி இருக்கிறான்.

குழம்பியக் குட்டையில்தானே மீன் பிடிக்க முடியும். தானே தெளிந்து வருவாள். வரட்டும்! என முடிவெடுத்தவன் உள்ளேச் செல்ல அவன் மருமகளோ பித்துப் பிடித்தவள் போல் தனது அறையில் கலங்கி நின்றாள்.

என்று அம்மு போலீஸ் உடையைக் கையில் எடுத்தாளோ அன்றே அவள் தாய் திவ்யபாரதி பற்றியும், கார்த்தி அவள் தாய்மாமனான கதையைப்பற்றியும் செழியனால் அவளுக்குத் தெரிவிக்கப் பட்டிருந்தது.

கார்த்தி அவளது தாயுடன் பிறந்த அவளது சொந்த தாய்மாமனல்ல. அவளது தாயைக் கொலைப் பழியிலிருந்து காத்த தனஞ்செயன். 

திவ்யபாரதி ஜெயிலுக்குப் போகாமல் செழியனுடன் சேர்ந்து வாழ்வதற்காகவே, தான் கொண்ட பழிவெறியை அடக்கி, இந்த அமைதியான வாழ்விற்குள் வலுக்கட்டாயமாகத் தன்னைப் புகுத்திக் கொண்டவன்.

திவ்யா, பாரதி இருவரும் உடம்போடு ஒட்டிப் பிறந்த இரட்டைச் சகோதரிகள். 

இருவரையும் பிரிக்கும்போது நோஞ்சானாக இருந்த பாரதி பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் கூறி இருக்க, அந்த சின்னஞ் சிறு வயதில் அழகுப் பதுமையான திவ்யாவை தன் பாலியல் இச்சைக்கு இரையாக்கியது ஒரு மிருகம். 

தன்னுடலில் சரிபாதியான சகோதரி திவ்யாவுக்கு நடந்த கொடூரத்தைத் தன் நோஞ்சான் கைகளால் தடுக்கவும் முடியாமல் துடிக்க துடிக்கக் கண்ணாரக் கண்டவள்தான் அம்முவின் தாய் பாரதி. அவளின் நோஞ்சான் உடம்பு பாரதியை அந்த மிருகத்திடமிருந்து காப்பாற்றி இருந்தது. 

அந்நிகழ்வை மறக்க முடியாமல் சகோதரியின் பெயரையும் சேர்த்துக் கொண்டு திவ்யபாரதியாய், தன்னைத்தானே தீயாய்

செதுக்கிக் கொண்டு வளர்ந்தவள் நல்லதொருநாளில் சகோதரியை அந்நிலைக்கு ஆளாக்கியவனை கருவறுத்திருந்தாள்.

திவ்யபாரதி கொன்ற அதே கயவனாலும் அவன் கூட்டாளிகளாலும், சீரழிக்கப்பட்டு தன் அத்தைமகள் அம்முவை சிறுவயதிலேயே பறிகொடுத்திருந்தவன் தான் கார்த்தி.

அக்கயவனின் கதைமுடிக்க இருவரும் ஒரேநாளில் அவனைத் தேடிவர, அதன்பின் பார்ட்னர் இன் க்ரைம் என அன்று முதல் ஆரம்பித்தது பாரதி, கார்த்தி இருவரின் நட்பு.

திவ்யபாரதியின்‌ மீது தீராக் காதல் கொண்ட செழியன்,  இருவரும் இணைந்து கருவறுத்தது நாட்டின் கள்ளிச்செடிகள் என்றறிந்து கொலைப்பழியிலிருந்து காப்பாற்றியதோடு, கார்த்தியையும் சேர்த்தே தன்னுடன் அரவணைத்து வைத்துக்கொண்டான்.

அதுவும் கைதாகிய திவ்யபாரதியைக் காப்பாற்ற ஜெயிலுக்குப் போகத் தயாராக இருந்த கார்த்தியிடம், “நீ சரணடைந்தால் திவ்யபாரதியையும் நியாயப்படி தண்டித்தே தீர வேண்டும்! பழிவாங்கும் எண்ணத்தை விட்டுவிட்டு என்னுடன் வந்தால் மட்டுமே திவ்யபாரதியுடன் இனிமையான வாழ்வு வாழ்வேன்” என்று செழியன் சத்தியம் வாங்கிக் கொள்ள,  திவ்யபாரதியின்‌ மீது செழியன் கொண்ட காதலுக்காக இன்றுவரை அந்த சத்தியத்தைக் காப்பாற்றி வருகிறான் கார்த்தி.

அவன் பழிவெறியை குறைக்கவெனவே பெற்ற மகளையும் கார்த்தியின் கையில் திணித்து பொறுப்பைக் கொடுத்து விட்டான்.

இன்றும் செய்தித்தாளில் எங்கேனும் சிறுகுழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட செய்தியறிந்தால் கார்த்தியால் தாங்க முடியாமல் போகும். 

கொதிக்கும் இரத்தம் அடங்கவேண்டுமென, அன்று முழுவதும் உண்ணாமல் தன் வயலைக் கொத்தி, வரப்பை உடைத்து என மாடாய் உழைத்துத் தன் மனதைத் திசைத்திருப்பிக் கொள்வான்‌.

(டியர்ஸ்! செழியன், திவ்யபாரதி, கார்த்தி இவங்களுக்கான இந்த ஃப்ளாஷ் பேக் தனிக்கதையா  “அக்கினி குஞ்சொன்று கண்டேன்” என்ற பெயரில் இருக்கிறது. நம்ம தளத்தில் ரீரன் பண்ணி இருக்கேன்.

அந்த கதையோட அடுத்த பாகம்தான் இந்த கோவக்காரக் கிளி. முன்கதை படிக்காதவங்களுக்காக செழியன் திவ்யபாரதி கதையை அப்படியே சுருக்கி இங்க தந்திருக்கேன்.  

இல்ல முழுசா படிக்க விரும்பறவங்க அதை படிச்சிட்டும்கூட இதைத் தொடரலாம். அது முழுசா ரீரன் பண்ணி முடிச்சி ரெடியா இருக்கு.

அந்தக்கதையைப் படிச்சிட்டு இதைப் படிச்சா, இந்த கதை மாந்தர்களோட தன்மையை உள்வாங்கி இன்னும் சுவாரஷ்யம் மிகுந்ததா மாற்றிக்கொள்ள முடியும். நன்றி!)  

எப்படிப்பட்ட வார்த்தையால் கொன்றுவிட்டான் மாமன். அம்முவின் கண்கள் கலங்கிக்கொண்டே இருந்தது. 

அவள் ஐபிஎஸ்ஸில் தேர்ச்சியுற்ற அன்று தந்தை உண்மையெல்லாம் சொன்னபோது தன் தாய்க்கும் தாயானவனுக்கும் கோவில் கட்டி கும்பிடத் தோன்றியது. 

அதற்கும்மேல் இருவரையும் காத்து இன்றுவரை அரவணைத்து வரும் தந்தைமேல் பெரும் மரியாதை தோன்றியிருந்தது.

அப்படிப்பட்டத் தந்தைக்கு பொய்யாக என்றாலும் எத்தகையை பழிச்சொல்லைத் தேடித்தரத் திரிந்தாள். அதைச் சொல்லாமல் சொல்லிக் காட்டிய மாமனின் நெஞ்சில் ஓடிப்போய் சாய்ந்துகொள்ள வேண்டும் போலதொரு ஏக்கம் தோன்ற நொடி தாமதிக்கவில்லை அவள்.

எவ்வளவு வேகமாக கீழே இறங்கி வந்தாளோ அதை விட வேகமாகத் இரண்டிரண்டு படிகளாகத் தாவி ஏறினாள்.

“ஏண்டி இவளுக்கு என்ன பேயா புடிச்சிருக்கு? பேயறைஞ்சாமாதிரி மேல இருந்து வந்து கதவை மூடிக்கிட்டா. இப்போ என்னடான்னா வந்த வேகத்துல திருப்பி ஓடுறா!” கீரையை ஆய்ந்தபடியே பெரிய மகளின் நடவடிக்கைப் புரியாமல் சின்ன மகளிடம் கேட்க, புரிந்தும் புரியாமலும் தோளைக் குலுக்கினாள் சின்னவள்.

மிருத்யூஸ்ரீக்கு தாயின் சிறுவயது சோகமும் தாய்மாமனின் தியாகமும் சொல்லப்படவில்லை. திவ்யபாரதி அதை விரும்பவில்லை. 

அம்மு போன்று மிருத்யூஸ்ரீ தைரியமானவள் அல்ல. கொஞ்சம் மென்மையானவள். தாயிடம் அதிகப்பற்று. இது தெரிந்தால் எங்கே உடைந்து போவாளோ இல்லை தன்னை வெறுத்து விடுவாளோ என்று பயந்த திவ்யபாரதி கணவனிடம் கெஞ்சலாய், சொல்ல வேண்டாம் என மறுத்துவிட்டாள்.

படார் என கதவைத்திறந்து கொண்டு ஓடிய எழிலரசி, “மா…மா” என கார்த்தியை கட்டிக்கொண்டு கதற, போனவேகத்தில் வருவாள் என எதிர்பார்த்திருந்தவனும் மெல்லியப் புன்னகையுடன் அரவணைத்துக் கொண்டான்.

“சாரி…மாமா! சாரி…” என அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு புலம்பித் தீர்த்தவளின் கண்ணீர் அவன் தோள்வளைவில் வடிய, மெல்ல தலையைத் தடவிக் கொடுத்தவன் ஒன்றும் பேசவில்லை.

“அம்முகுட்டி! இன்னைக்கு லீவு போட்டிருக்குதானே! படத்துக்கு போலாமா?” கேட்டதும், “ம்ம்…ம்” என்று அவனிடமிருந்து நிமிராமலே தலையாட்டினாள்.

“தேய்ச்சிவிட்ட எண்ணெய் எல்லாத்தையும் என் வெள்ளை பனியன்லயே தேய்ச்சாச்சி. ஓடிப்போய் நல்லா குளிச்சிட்டு வா! மாமா டிக்கெட் போட்டு வைக்கிறேன்.” என்று பெண்ணவளை அனுப்பி வைத்தான்.

அரக்க பரக்கக் கிளம்பியவள், “ஏய் சாப்பிட்டுப் போடி” என்ற தாயின் பேச்சை சட்டை செய்யவில்லை. “நான் மாமாவோட சாப்பிட்டுக்கிறேன் மா” என்றவள் வழியில் நின்ற தாயை இடுப்போடு இடித்து ஓரங்கட்டியபடியே கைக்கடிகாரத்தைக் கட்ட, 

மகளின் தோற்றத்தை கண்ணுற்றவளும், வாய் பிளந்தாள். காக்கி உடையில்லாத அழகில் மகள் தேவதையாகத் தெரிந்தாள்

தாயின்‌ பார்வையில் அம்முவுக்கே வெட்கம் வந்துவிட, திவ்யபாரதி பரிமாறவென எடுத்துச் சென்ற வடையில் ஒன்றை எடுத்துப் பாதிக்கடித்துவிட்டு மீதியை தாயின் பிளந்திருந்த வாயில் சொருகிவிட்டுத் தாவி ஓடினாள்.

உணவு மேஜையில் சீருடையுடன் தயாராகி அமர்ந்திருந்த செழியன், ‘எங்கே போகிறாள்?’ என பரிமாற வந்த மனைவியிடம் விழியுயர்த்த, தோளைக் குலுக்கினாள் திவ்யபாரதி.

குரங்கு ஒன்றை ஒன்று பேன் பார்ப்பதுபோல், காலையில் படிக்கட்டில் அமர்ந்து மாமனும், மருமகளும் மாறி மாறித் தலையை ஆராய்ந்தபடி குசுகுசுவென பேசியதைக் கணவனும் மனைவியும் கவனித்துதான் இருந்தனர். 

அப்போதே தெரியும், இன்று இரண்டும் வீட்டைவிட்டு ஓடப்போகிறதென்று. இருந்தும் நப்பாசையில் கேட்டுவைத்தவனுக்கு விடைதான் கிடைக்கவில்லை.

கேள்வியுடன் சின்ன மகளைப் பார்க்க, நேற்று தமக்கை சொன்ன காதலனை நினைத்து விதிர்விதிர்த்துப் போனவள் எதுக்கு வம்பென கவனியாததுபோல் தலையைக் குனிந்து கொண்டாள்.

“கார்த்தி சாப்பிட்டானா?” 

முதல் வாய் எடுத்து வைக்கும்முன் செழியனிடமிருந்து வரும் வழக்கமான கேள்விக்கு தயாராகவே இருந்தது போல், “குடுத்துட்டேன் பா” என்றாள் திவ்யபாரதி.

அவன் சாப்பிடும்முன் கேட்பான் எனத் தெரிந்தே முதல் வேலையாக, மாடிக்கு கொண்டு கொடுத்துவிட்டு வந்துவிடுவாள். இல்லையெனில் சின்னமகளிடமோ, பெரியமகளிடமோ கொண்டு கொடுக்கச் சொல்வாள்.

என்னதான் ஒரே குடும்பமாக வசித்தாலும் ஒரு எல்லைக்குள் நின்றுவிடுவான் கார்த்தி. எவ்வளவோ வற்புறுத்தி பார்த்து அவன் போக்குக்கே விட்டுவிட்டனர். அதுவும் தனிச் சமையலென ஆரம்பித்தவனை, செழியன் தடுப்பதற்குள் தலையால் தண்ணி குடித்திருந்தான். மேலேயும் சமைப்பதற்கென எல்லா வசதியும் இருந்தாலும் ஒருநாளும் செழியன் அனுமதித்ததில்லை.

என்றாகிலும் மாமனும் மருமகளும் சமைக்கிறேன் பேர்வழி என்று அதகளப் படுத்துவார்கள். அன்று முழுவதும் சமையல் பொருட்களை மேலேயும் கீழேயுமாக அள்ளி சுமப்பது மிருத்யூவின் வேலை.

வெளியில் கார்த்தியின் கருப்புநிற ரேங்கிளர் ஜீப் ஒலி (wrangler black) எழுப்பியது. அதற்குள் சாப்பிட்டு முடித்திருந்த செழியனும் தலையில் தொப்பியைச் சரி செய்தபடி வெளியில் வர, மிருத்யூஸ்ரீயும் கையில் புக்குடன் தயாராகி வந்திருந்தாள்.

“ஓய் சின்னக்குட்டி வர்றியா படத்துக்குப் போகலாம்?” மிருத்யூவிடம் கேட்டாலும், செழியனை பார்வையால் வெறுப்பேற்றினான் கார்த்தி.

“என்னைய ஒன்னும் நீங்க முதல்லயே கேட்கலல்ல மாமு. உங்களுக்குப் பெரிய மருமகதானே இஷ்டம். போங்க போங்க ஒன்னும் வேணாம்!” என்று முறுக்கிக் கொண்டாள் அவள்.

‘அவளை லீவு போட வச்சதுமில்லாம, இவளும் காலேஜிக்கு மட்டம் போடணுமா?’ வேண்டுமென்றே கோபம்போல் செழியன் காட்டிக்கொள்ள,

“டாக்டரம்மா மட்டம் போட்டா சிரிப்பு போலீசுக்கு கோவம் வந்திடும் சின்னக்குட்டி. நீ போ” என்றான் கார்த்தியும்.

கூடவே, “முறுக்கிட்டுத் திரியுற போலீஸ் ஆஃபீஸர்கூட வேணும்னா வரலாம்! வண்டி காலியாதான் இருக்கு.” என்றான் வேண்டுமென்றே!

“உன் மாமனைப்போல மூட்டை மூட்டையா, ஏலக்காயை ஏலம் விட்டு சம்பாதிக்கல, நினைச்ச நேரம் லீவு போடுறதுக்கு.” என்ற செழியனும் மிருத்யூவிடமே பதில் சொல்ல கடுப்பாகினாள் அவள்.

‘கேட்டது அவரு பதில் எனக்கா? இதுங்களோட…’ 

இன்னும் சின்னப்பிள்ளைகள் போல் சீண்டி விளையாடும் பெரியவர்களைக் கண்டு மானசீகமாய் தலையிலடித்துக் கொண்டாள்.

“இப்போ யாரு என்னை ட்ராப் பண்றது? முதல்ல அதை முடிவு பண்ணுங்க.” என்று பொய்க்கோபம் கொள்ள, “நீ வா மிருக்குட்டி, நான் உன்னை ட்ராப் பண்றேன்” என்றழைத்தான் செழியன்.

‘அச்சோ அப்பாவோடயா?’ மனதுக்குள் அலறினாள். என்னதான் சின்னமகள் செல்லம் என்றாலும் அப்பாவை போலீஸ் உடையில் கண்டால் அவன் கம்பீரத்தில் தானே நடுங்கிப்போவாள். 

பத்தாததுக்கு அக்காவும் போலீஸாகிவிட, எங்கே தன்னையும் காக்கி சாகரத்தில் மூழ்கடித்து விடுவார்களோ என்று பயந்தே முக்கி முக்கிப் படித்து மருத்துவத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்.

“இல்லப்பா! எனக்கு இன்னிக்கு ஸ்பெஷல் க்ளாஸ் இருக்கு வர லேட்டாகும். வண்டி இருந்தாதான் சரிப்பட்டு வரும்.” என்றவள் திரும்பியும் பாராது வண்டியைக் கிளப்பிக்கொண்டு ஓடினாள்.

“போலீசுக்கு எங்கமேல பொறாமை. அதான் தீஞ்ச வாசம் வருது” என்ற கார்த்தி, அம்மு இன்னும் மாடியிலிருந்து இறங்கி வராததால் நண்பனை வம்பிழுத்துக் கொண்டிருக்க,

“ச்சீ போடா எரும!” என்ற செழியன்‌ முறைத்துக்கொண்டே ஷூவை அணிந்து கொண்டிருந்தான்.

மாமனும் தானும் சாப்பிட்டத் தட்டை ஒதுங்க வைத்து, வீட்டைப் பூட்டிக்கொண்டு அம்மு படி இறங்கி வர, வெற்றியின் ஜீப் காம்பவுண்டுக்குள் நுழைந்தது.

ஜீப்பை நிறுத்திவிட்டு கையில் சில கோப்புகளுடன் கீழே இறங்கியவனின் இதயம் எதிரில் படி இறங்கியவளைக் கண்டதும் எக்குத் தப்பாய் எகிறியது.

‘எகிறிக்குதித்தே வானத்தை அடைந்தேன்’ என அவன் இதயம் காக்கிச் சட்டைக்குள் கபடி ஆடியதில், சில நிமிடங்கள் செழியனும், கார்த்தியும் அவனது புலனத்திலிருந்து மறைந்தே போனார்கள்.(அவுட் ஆஃப் ஃபோகஸ்)

அழகிய கருப்புநிற ஷார்ட் டாப்பும், வெளுத்த நீல வண்ணத்தில் த்ரீ ஃபோர்த் ஜீன்ஸ் ஒன்றையும் அணிந்திருந்தாள் அவனது எழிலரசி. இரண்டு பக்கமும் முடியெடுத்து அதை சின்னக் க்ளிப்பில் அடக்கியவள் மீதியைத் தளர விட்டிருக்க, சேலத்து மாம்பழத்தை சுற்றும் வண்டாய் அவன் கண்கள் அவளை மட்டுமே சுற்றி வந்தது.

அவள் கல்லூரி காலத்துக்குப் பின், எப்போதும் காக்கி உடையில் ஹேர் பன்னுக்குள் அடக்கிய கொண்டையில்தான் பார்த்திருக்கிறான். வெகு வருடங்களுக்குப் பின்னான அவளது அழகு தரிசனம். 

இதைச் சற்றும் எதிர்பார்த்திராதவனின் இதயம் லப்டப்பை நிறுத்தி, அவள் படிக்கட்டில் இறங்கிவரும் ஒலிக்கேற்ப

‘தடக் தடக்’ கென இரயில் வண்டியாய் தடம் புரள, இடையில் “லொக் லொக்” என்ற சத்தம் அவன் செவியைத் தீண்டியது.

‘லொக் லொக் இல்ல. தடக் தடக்’ பார்வை இன்னமும் அவள் மீதே இருக்க, தடை செய்த சத்தத்திற்கு இணையாக மனதிற்குள் தாள லயம் பிடித்தவன், சத்தம் வந்தத் திசையைத் திரும்பியும் பார்க்கவில்லை.

இந்தமுறை “லொக் லொக்” என்ற இருமல் சத்தம் இரண்டு பக்கமிருந்தும் ஒலித்ததில், நினைவுலகம் வந்திருந்தவன், பக்கத்திற்கு ஒருவராக செழியனும், கார்த்தியும் தன்னையே முறைப்பதைக் கண்டு அரண்டான். 

‘அச்சோ அந்த லொக் லொக் இவங்களோடதா?

சிங்கமும், சிறுத்தையும் ஒன்னா இருக்குறதை மறந்துட்டனே!’ கையிலிருந்த கோப்புகள் தானாக  நழுவ, பதற்றத்தில் இரு கையாலும் இருவருக்கும் ஒருசேர சல்யூட் அடித்தான்.

அவன் செய்கையில் வந்த புன்னகையை இருவரும் சாமர்த்தியமாக அடக்கிக் கொள்ள, “என்ன வெற்றி இவ்ளோ தூரம்?” என்றான் செழியன்.

குனிந்து தவறவிட்ட கோப்புகளைக் கையிலெடுத்தவன், நீங்க டி எஸ் பி யா இருந்தபோது விசாரிச்ச சில கேஸ் டீட்டெய்ல் தேவைப்பட்டது சார்” என்றான் பணிவாக.

குனிந்திருந்தவனை யாரோ எனக் கடந்த அம்மு, வெற்றியின் குரலில் படக்கென திரும்பினாள்.

‘இவன் எங்க இங்க?’ பார்வையால் அவனைக் கடந்தவள் முறைத்தபடி ஜீப்பினுள் ஏறிக்கொள்ள,

“என்னோட ஆஃபீஸ் வந்திருக்கலாமே” என்றான் செழியன். 

அவன் கையிலிருந்த கோப்புகளில் புருவம் முடிச்சிடப் பார்வைப் பதிந்தது.

“வந்திருக்கலாம்…தான்” ‘ஆனா இந்த எக்ஸெஸ் அழகு எஸ்கேப்பாகி இருக்குமே!” பாதியை இழுத்தும் மீதியை மனசுக்குள் சொல்லிக்கொண்டவனின் பார்வை அம்முவிடமிருந்து மீளமுடியாமல் முட்டி நிற்க, ஜீப்பின் கதவை அடித்துச் சாத்தினாள் அவள்.

அவள் அறைந்து சாத்திய வேகத்தில், அவளது கோபம் தெரிய, தேகம் சிலிர்க்க காதை ஒருமுறை குடைந்து கொண்டவன் மெல்லிய புன்னகையுடன் திரும்பவும், புதிதாகக் கேட்டக் குரலில் குலைத்தபடி பாய்ந்து கொண்டு வந்தான் துருவன். 

அவன் பாய்ச்சலில் வெற்றியின் ஈரக்கொலை நடுங்கியது. ‘முதல்ல இவனை காக்காப் பிடிக்கணும்’ அவன் நினைத்து முடிக்கும்முன் வெகு அருகில் நெருங்கி இருந்தான் துருவன்.

சாத்தியவேகத்திலேயே ஜீப்பின் கதவைத் திறந்து, “துருவா” என்று அம்மு அதட்டவும் கால்கள் தரையில் தேய அப்படியே பின்வாங்கினான் துருவன்.

செழியனும் கார்த்தியும் பார்வையைப் பரிமாறிக்கொண்டனர்.

அவர்கள் குரல் கொடுத்திருந்தாலும் துருவன் அமைதியாகி இருப்பான்தான். ஆனால் அவள் முகத்தில் தெரிந்த பதற்றமும் அவளின் வேகமும் தந்தைகள் இருவருக்கும் உதட்டோரப் புன்னகையைப் பரிசளித்திருந்தது. 

வெற்றியுடன் பேசி மருமகளை மேலும் கடுப்பாக்க விரும்பாத கார்த்தி வெற்றுப் பார்வை ஒன்றை சிஷ்யனின் புறம் வீசி, ஜீப்பைக் கிளப்ப, அதுவே குரு சிஷ்யன், இருவருக்குள்ளும் புரிந்துகொள்ள போதுமானதாயிருந்தது.

மாலை வரை, மால், ஹோட்டல், சினிமா என‌‌ மாமனும், மருமகளும் சுற்றி வந்தவர்கள், இருவருக்குப் பிடித்ததையும் மாறி மாறி வாங்கிக் குவித்தனர்.

மாமன் வண்டியை ஓட்ட, அவன் கை வளைவுக்குள் கைகளைக் கோர்த்துக் கொண்டு, அவன் தோள் வளைவில் சாய்ந்து கதைபேசியபடி இருவரும் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

“ஏய் அம்முக்குட்டி! அங்கபார் அது நம்ம சின்னக்குட்டிதான?” 

“ஸ்பெஷல் கிளாஸ்னு பொய் சொல்லிட்டு இங்க சுத்துதுப் பார்த்தியா கழுத!” எதிர்ச்சாலையில் அதிவேகத்தில் தனது ஸ்கூட்டியை விரட்டிக் கொண்டிருந்த சின்னவளைக் கைக்காட்டினான் கார்த்தி.

தானும் திரும்பிப் பார்த்தவள் “அவதான் மாமா! யாரோ அவ சீனியர் வீடு இந்தப் பக்கம் இருக்கிறதா சொல்லுவா. என்னா வேகம்! வரட்டும் அப்பாக்கிட்ட சொல்லுறேன்!” என்றவள் கடிந்து கொள்ள, “போகட்டும் விடு! நீ ஓட்டாத வேகமா?” என்று மெலிதாய் மண்டையில் கொட்ட, சிரித்தபடி வீடு திரும்பினர்.

இருவருக்குள்ளும் மனஸ்தாபத்தில் ஆரம்பித்த அன்றைய நாள், சந்தோஷமாகக் கழிய, இறுதிவரை கார்த்தியும் எந்த சமாதனமும் சொல்லவில்லை, அவளும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

ஆனால் அதன்பிறகான நாட்களில் அம்முவின் கல்யாணப் பேச்சை யாரும் எடுக்கவில்லை. இது மாமனின் வேலை என அவளும் புரிந்துகொண்டாள். 

அவள் விரும்பாத எதையும், அது அமிர்தமாகவே இருப்பினும் வேண்டாம் என முடிவெடுத்திருந்த கார்த்தி, செழியனையும், திவ்யபாரதியையும் தடுத்திருந்தான்.

ஆனால் வெகு சில நாட்களில், முகம் இறுக “எனக்கு வெற்றியைக் கட்டிக்கச் சம்மதம்” என்று தானாக வந்து நின்றவளை ஒருவரும் எதிர்பார்த்திருக்கவில்லை.