Advertisement

வயது – 5

உறைந்து நின்றது ஒரு நிமிடம் தான் பின் தன்னை மீட்டு எடுத்துக்கொண்டு தன்னை சமநிலைக்கு கொண்டு வந்தான் செழியன்.அவனுக்கு ஏதோ ஒரு உணர்வு தன்னை பலமாக தாக்குவது போல் தோன்றியது.

அது அவளை பார்ததினால் உண்டான பதற்றமா?!இல்லை எப்படி அவளிடம் பேசி இதை சரி செய்ய போகிறோம் என்ற பதட்டமா?!எது என்று தெரியவில்லை.ஆனால் அவனை அவனாக இருக்க விடாமல் ஒரு உணர்வு அலை அவனுக்குள் பாய்ந்தது.அது என்ன என்று அவன் சுய அலசலில் செல்வதற்குள் தான் நீட்டிய கைக்கு பதில் எதுவும் கிடைக்காததால் அதே கைகளை அவன் முகத்திற்கு நேராக கொண்டு சென்று சொடக்கிட்டு ஆட்டினாள் ஆராதனா.

அதில் தன்னுணர்வு பெற்றவன் “ஆஹ்…சாரி செழியன்” என்று கூறி இப்போது அவன் கை நீட்ட முகத்தில் விரிந்த புன்னகையுடன் “அதான் தெரியுமே…” என்று பதில் கூறிக் கொண்டே அவன் நீட்டிய கரத்திற்கும் பதில் கரம் நீட்டி குலுக்கினாள்.

அவன் புருவ சுறுக்களுடன் பார்க்க “டேபிளுக்கு போயி பேசலாமா?எல்லாரும் நம்மளை பார்க்கிற மாதிரி இருக்கு…” என்று மெல்லிய குரலில் கூற அப்போதுதான் கவனித்தான்,தாங்கள் அந்த காபி ஷாப்பின் நடுவில் நின்றுகொண்டு அனைவருக்கும் காட்சி பொருளாக மாறி கொண்டிருக்கிறோம் என்று.

“ஓஹ்…வாங்க…அந்த டேபிளுக்கு போகலாம்” என்று தான் வந்ததிலிருந்து அமர்ந்து இருந்த டேபிளுக்கு கூட்டி செல்ல,அவன் அமர்ந்தவுடன் அவனுக்கு நேர் எதிரில் அமர்ந்தாள்.

அவள் அமர்ந்தவுடன் அதற்காகவே காத்துக்கொண்டிருந்தார் போல் அவள் கைபேசி சிணுங்கியது. அதில் தெரிந்த நம்பரை பார்த்தவள் அந்த அழைப்பை தவிர்க்க முடியாது என்பதை புரிந்து கொண்டு செழியனை சங்கடத்துடன் பார்த்தபடி “எஸ்கியூஸ் மீ…ஒரு பைவ் மினிட்ஸ்” என்று மொபைலை காட்டி கண்ணை சுருக்கி கேட்க அந்த நிமிடம் அவள் அவன் கண்ணிற்கு குழந்தையாக தெரிந்தாள்.அதே பெண் இந்த இடத்தை விட்டு போகும்போது தனக்கு மோகினியாக தெரிய போகிறாள் என்ற உண்மை தெரியாமல்.

“நோ ப்ராப்ளம்… சூர்” என்று அவன் சொல்ல,அவள் எழுந்து கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்று பேச தொடங்கினாள்.

கண்ணாடி தடுப்பின் வழியே பார்த்தவனின் பார்வையில் பட்டது இவை தான்…ஆராதனா அதிக உயரமும் கிடையாது,குள்ளமும் கிடையாது சரியான உயரம்.புசு புசு என்று குண்டு கன்னங்கள், சிரிக்கும் பொழுது அதில் விழும் குழி.அடர்த்தியான கூந்தல் அதை இருப்பக்கமும் சிறிதாக எடுத்து கிளிப் கொண்டு அடக்கி இருந்தாள்.ஆனாலும் அவள் பேச்சை கேட்காமல் அது காற்றில் பறந்து ஆடிக் கொண்டு தான் இருந்தது.பால் வெள்ளை நிற மேனி,பெரிய கண்கள்,உயரத்திற்கு ஏற்ற எடை என்று பார்க்க அனைவரும் சொன்னது போல் அழகாக தேவதையாக தான் தெரிந்தாள்.

அதோடு அவள் அணிந்திருந்த கறுப்பு நிற அனார்கலியும்,அதற்கு தோதாக குந்தன் ஸ்டோன் வொர்க் செய்யப்பட்ட பெய்ஜ் கலர் நெட் துப்பட்டா அவளை இன்னும் அழகாக எடுத்துக் காட்டியது.

இவை அனைத்தையும் பார்த்தவனின் பார்வையில் காதலோ ஆர்வமோ துளியும் இல்லை…ஒரு வித ஆராய்ச்சியும் சிந்தனையும் தான் இருந்தது.

அப்போது அவன் பார்வையில் அவற்றோடு சேர்ந்து பட்டது அவளை வெறித்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு நான்கு பேர் கொண்ட ஆண்கள் பட்டாளம்…அவள் நின்றிருந்த இடத்திலிருந்து சிறிது தள்ளி காரில் சாய்ந்தபடி அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தனர்.

அதை பார்த்தவுடன் செழியனுக்கு கோபம் சுர்ரென்று எழுந்தது.ஏனென்று தெரியாமலே அவனுக்கு கோபமும் அவர்களையும் அடிக்கும் வெறியும் எழுந்தது. அதை கட்டுப்படுத்த முடியாமல் அவர்களை திட்ட எழுவதற்கும் ஆராதனா கைபேசியை அணைத்து உள்ளே வரவும் சரியாக இருந்தது.

தனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது என்று அவன் மனம் சரியாக யோசிக்க மூளையோ அனிஷாவும் இவளும் கிட்டதட்ட ஒரே வயதினர் தானே அனுஷாவிற்கு என்றால் போக மாட்டியா அது போல் தான் இதுவும் என்று அவனை யோசிக்கவிடாமல் திசை திருப்பியது.

அதற்குள் அவன் எதிரில் வந்து அமர்ந்த ஆராதனா “சாரி…ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டேனா ?” என கேட்க

“இல்ல இல்ல …ஜஸ்ட் 5 மினிட்ஸ் தான” என்று பெருந்தன்மையுடன் அவன் சொல்லி முடிப்பதற்குள்

“நான் இந்த 5 மினிட்ஸ சொல்லலை,35 மினிட்ஸா வெயிட் பண்ணிங்களே அதை சொன்னேன்”

கேட்டவனின் கண்கள் சுருங்கியது தான் இங்கு வந்த நிமிடம் முதற்கொண்டு சரியாக சொல்கிறாள் என்றால் அப்போ தன்னை வந்தபோதே பார்த்திருக்கிறாள்,பின் ஏன் முதலே வரவில்லை என்ற யோசனையுடன் தன்னை உளவு பார்க்கிறாளோ என்ற எரிச்சலும் சேர்ந்துகொள்ள அதை பார்வை மூலம் கடத்தி அவளை அவன் தாக்க

அவளோ சாதாரணமாக குரலில் “அதுக்குதான் சாரி கேட்டேன்…நீங்க வந்தவுடனே பார்த்தேன் ஆனா உங்களுக்கு நேரா இருந்தும் நீங்க என்னை நோட்டீஸ் பண்ணவே இல்ல…அப்பவே புரிஞ்சிட்டேன் நீங்க என்னை போட்டோல கூட பார்க்கலை, அப்புறம் எப்படி என்னை கண்டுபிடிக்கிரிங்க ஒரு ஆர்வத்தில் தான் வராம உங்களையே பார்த்துட்டு இருந்தேன்.அப்புறம் நீங்க வெளியே போகவும் தான் உங்களுக்கு கால் பண்ணேன்”

அவன் முறைப்புடன் பதில் கூறுவதற்கு அந்த கஃபேயின் பணியாளன் அவர்கள் முன் தோன்றி “சார்!!! ஆர்டர் ப்ளீஸ்” என்க

தானும் வந்ததிலிருந்து எதுவும் சொல்லாததால் அவன் ஆராதனை பார்க்க

“யுவர் சாய்ஸ்” எனக் கூறினாள்.

“இரண்டு கஃபே லைட்டே” என்று சொல்லி அவனை அனுப்பினான்.

இனிமேல் ஒளிவு மறைவின்றி விஷயத்தைப் போட்டு உடைப்பதே மேல் என்று தோன்ற “ஆமா… நான் உன்னோட போட்டோ பார்க்கலை… பாக்கணும் அவசியமும் இல்லை…ஏன்னா எனக்கு இதில் இஷ்டமில்லை” என்று முகத்திற்கு நேராக விஷயத்தை சொல்லி அவளை அவன் பார்க்க

அவள் முகத்தில் அதிர்ச்சியோ,சந்தோஷமோ,குழப்பமோ எதுவும் இல்லை,தெளிவாகத்தான் இருந்தாள் .அதே தெளிவோடு “இஷ்டம் இல்லைனா… எதுல? கல்யாணத்திலையா ??? இல்ல கல்யாண பொண்ணா நான் இருக்கிறத்தினாலையா???”என்று சரியாக யூகித்து கேட்டாள்.

அவனும் நேராகவே “நம்ம ஏஜ் டிஃபரன்ஸ்”

“ஓஹ்!!!” என்ற பதிலுடன் அவள் நிறுத்திக்கொள்ள

இப்போது அவனுக்கு அவள் மேல் இருந்த எரிச்சல் போகி கொஞ்சம் பாவமாக இருந்தது.அவள் பேசுவதை பார்த்தால் அவளுக்கு இந்த திருமணத்தில் சம்மதம் போல் தான் தெரிகிறது இருந்தாலும் அவளை தேவையில்லாமல் கூப்பிட்டு வைத்து நோகடிக்கிறோமோ,தான் முன்பே இதை தவிர்த்து இருந்திருக்க வேண்டுமோ என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே தான் ஆர்டர் செய்ததை பணியாளன் கொண்டு வந்து அவர்களின் முன் வைக்க தங்களின் ஆர்டரை முடித்துக் கொள்ளுமாறு சொல்லி அனுப்பினான்.

பிறகு கோப்பையை எடுத்து ஒர் மிடறு விழுங்கியவாறு “இந்த மாதிரி சுச்சுவேஷனா நான் முன்னாடியே அவாய்ட் பண்ணி இருக்கணும்…இப்படி உங்களை இன்வால் பண்ணி இருக்க கூடாது தான்.என்னோட நிலைமை அந்த மாதிரி,பெட்டர் நீங்களே என்ன பத்தி ஏதாவது நெகட்டிவா உங்க வீட்டில சொல்லி இதை எல்லாத்தையும் நிறுத்திடுங்க” என்று அவன் கூறி முடிப்பதற்குள்

“எஸ்கியுஸ் மீ!!! நீங்க உங்க விருப்பத்தை சொன்னீங்க,பைன்!!! ஆனா அதுவே என்னோட விருப்பமா இருக்கணும் அவசியம் இல்லை” என்று சொல்லியவாறு அவள் தன் கோப்பையை எடுத்து பருக,அவன் குடித்துக் கொண்டிருந்தது திடீரென்று புரை ஏறியது.

பின் தன்னை சரி செய்து கொண்டு “வாட் யூ மீன்?!” என்க

“எனக்கு இந்த மேரேஜ் பொறுத்தவரைக்கும் எந்த ப்ராப்ளமும் இல்லை சொல்லுறேன்…முக்கியமாக நீங்க சொன்ன காரணத்துல”

தனக்குள் எழுந்த கோபத்தை அடக்கி கொண்டு “புரிஞ்சுதான் பேசுறியா?! உனக்கும் எனக்கும் பதினேழு வருஷ வித்தியாசம்…இதெல்லாம் விளையாட்டு இல்லை…இன்னைக்கு உனக்கு இது பெருசா தெரியாமல் இருக்கலாம் ஆனா கண்டிப்பா பின்னாடி இது பெரிய ப்ராப்ளமா இருக்கும்…நமக்குள்ள பிரச்சனை தான் வரும்”

“ஹா… ஹா…நீங்க சொல்லுறத்தை கேட்டா சிரிப்பு தான் வருது…அப்போ ஒரே ஏஜ்ல இல்ல கம்மியான ஏஜ் வித்தியாசத்தில் மேரேஜ் பண்ணிக்கிட்டா அவங்களுக்கு பிரச்சனையே வராதா, பிராப்ளம்ஸ் வராதா,சண்டையே இருக்காதா என்ன?! போய் ஃபேமிலி கோர்ட்டை பாருங்க…நீங்க வராது அப்படினு சொல்கிற இந்த ஜோடிகள் தான் அங்க வரிசையில நிக்கிறாங்க…என்னை பொருத்தவரைக்கும் ஏஜ் ஒரு பெரிய மேட்டர் இல்லை…அது பெரிய விஷயமே இல்லை…அண்டர்ஸ்டாண்டிங் தான் வேணும்”

“ஆமா…உண்மைதான் அண்டர்ஸ்டாண்டிங் தான் எல்லாமே,அதுதான் முக்கியம்.ஆனா அது கண்டிப்பா நம்ம கிட்ட இல்லை,நமக்குள்ள வரவும் வராது” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் அவள் ஏதோ கூற வர அதை கை நீட்டி தடுத்தவன்.

“நான் முடிச்சிடுறேன்…ஏன் வராது சொல்கிறேனா நம்மோடு மெச்சூரிட்டி தான் காரணம்…உனக்கு இருக்கிற மெச்சூரிட்டிக்கும் எனக்கு இருக்குற மெச்சூரிட்டிக்கும் நிறைய வித்தியாசம் அதெல்லாம் உனக்கு சுத்தமா புரியாது” என்று அழுத்தமுடனும் எரிச்சலுடனும் பேசினான்.

அவளோ இதழோர சிரிப்புடன் “கண்டிப்பா மெச்சூரிட்டி இருக்காது தான்…எப்படி இப்போ உங்க அக்கா சொல்லியும் புரிஞ்சுக்கிற மெச்சூரிட்டி இல்லாம இப்போ இங்க வந்து பேசுறீங்களே அந்த மாதிரியா?” என்று அவனை கேள்வியால் சீண்டியபடி அவன் கண்களின் சிவப்பை பார்த்தபடி கோப்பையில் உள்ள நவீன வகை காபியை பருகினாள்.

முன்னிருந்தே பிடிக்காத அவள் பேச்சுடன் அவனுக்கு திமிராகவும் ஆணவமாகவும் பட்ட இந்த பதில் பேச்சு சேர்ந்து அவனின் கோபத்தை கோபுர அளவுக்கு ஏற்றியது.

“லுக்…இனிமே உன்கிட்ட பேசி என்னுடைய எனர்ஜியையும் நேரத்தையும் வேஸ்ட் பண்ண விரும்பலை… என்ன பண்ணனும் எனக்கு தெரியும்…நான் பார்த்துக்கறேன்” என்று அவன் வார்த்தைகளை கடித்து துப்ப

“எனக்கு சுத்தமா புரியலை? எப்படி நீங்க பார்த்துகுவிங்க? பார்த்துக்க முடியாமல் தானா மிஸ்டர்.செழியன் பதினைஞ்சு கிலோமீட்டர் தாண்டி இங்கு வந்து,வேலை எல்லாம் விட்டு மீட்டிங் எல்லாம் கான்செல் பண்ணிட்டு,முப்பத்தஞ்சு நிமிஷமா எனக்காக வெயிட் பண்ணிட்டு,அப்புறம் ஒரு இருபது நிமிஷமா என்கூட பேசிட்டு இல்ல இல்ல ஆர்கு பண்ணிட்டு, இப்போ இதோ என்று பணியாளன் வைத்து விட்டுப் போன பில் வாலட்டை பார்த்து 650 ரூபாய் கொடுக்க போறீங்க…உங்க அக்கா கிட்ட சொல்லி அப்போவே பார்த்து இருந்தா இதெல்லாம் மிச்சம்… முடியாது தானே இப்போ இங்க வந்திருக்கீங்க” அவனை சீரியஸாக பார்த்து பேசியவளை கண்டு பல்லை மட்டும் தான் அவனால் கடிக்க முடிந்தது.

“சொல்றேன் தப்பா எடுத்துக்காதீங்க நீங்க எதை மெச்சூரிட்டினு சொல்றீங்களோ,அது மெச்சூரிட்டி இல்லை.அது உங்க வரட்டுப் பிடிவாதம் உங்க கண்ணுக்கு முன்னாடி திரையா நீங்க போட்டிருக்கிற பிடிவாதம் என்கிற அந்த கருப்பு கண்ணாடிய விலக்கி பாருங்க அப்போ தான் மனுஷங்களோட பல வண்ணத்தையும்,எண்ணத்தையும் புரிஞ்சுக்க முடியும்”

“வில் யூ ப்ளீஸ் சட்அப் !!!” என்று செழியன் குரல் உயர்த்தி சீற,தங்கள் பக்கத்து டேபிளிருந்தவர்கள் அனைவரும் அவர்களை திரும்பி பார்த்தனர்.

அவனால் அதற்கு மேல் அங்கே இருக்க முடியுமென்று தோணவில்லை.ஒன்று தான் வெடித்து ஏதாவது ரசவாதம் ஆகிவிடுமோ என்ற எண்ணம் இன்னொன்று அவன் மனதில் நடந்த போராட்டம் அவள் சொன்ன உண்மை அவனை பலமாகத் தாக்கி சுட்டது.அவள் சொன்ன அனைத்தும் உண்மைதான் என்று அவன் மனசாட்சி அவனை சாடியது.

பொறுக்க முடியாமல் பில் வாலட்டில் பணத்தை வைத்து விட்டு,அவன் இருக்கையை விட்டு வேகமாக எழுந்து எதுவும் சொல்லாமல் அவளை கடக்கும் பொழுது அவன் மனசாட்சி ‘டேய் அந்த பொண்ண அப்படியே விட்டுட்டு போற, பாவம் டா…உன்ன பார்க்க தான வந்தா அட்லீஸ்ட் அவள ட்ராப் பண்ணட்டுமா கேளு…என்ன மனுஷன் டா நீ?’ என்று காறி துப்ப

அவனும் மனம் இறங்கி அவளிடம் கேட்கலாம் என்று எண்ணியபோதே அவனுடைய எண்ணத்தின் நாயகியே அவனை அழைத்தாள். ஒரு பக்கமாக தலை சரித்து அவனை பார்த்து “ஒரு நிமிஷம்” என்க அவனும் தலையைத் திருப்பி பார்க்க ” உங்க டைம் வேஸ்ட் பண்றேன்னு சொன்னீங்க இல்ல…உங்க லைஃப்ல ஆல்ரெடி நீங்க பாதி நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டீங்க .இனிமே அதே தப்பை பண்ண மாட்டீங்க நினைக்கிறேன் சொல்லணும்னு தோணுச்சு சொன்னேன்”

அதற்கு மேல் அவன் அங்கே இருப்பானா இருப்பதற்க்கு அவன் ஒன்றும் வடிகட்டிய முட்டாள் இல்லை.பொறுமிய நெஞ்சத்தோடும்,கைகொட்டி சிரித்த மனசாட்சியுடனும் பார்க்கிங்கில் நிறுத்திய காரை கிளப்பிக் கொண்டு கிளம்பிவிட்டான்.

கிளம்பி போனவனின் எண்ணம் அனைத்தையும் ஆக்கிரமித்து இருந்தது ஆராதனாவும்,அவள் நெற்றி அடியாய் அடித்த அவளின் வார்த்தைகளும் தான்.அதுவே அவன் மனதில் ஓடிக்கொண்டே இருக்க,அங்கோ அவன் வேகமாக வெளியே சென்று காரை எடுத்துக் கொண்டு கிளம்பியவனை கண்ணாடி தடுப்பின் வழியாக பார்த்துக் கொண்டிருந்தவள்,அவன் சென்ற பின் திரும்பியவளின் பார்வையில் பட்டது அவன் பாதி அருந்தி வைத்துவிட்டு போன கோப்பை. அதை ஒரு வருத்த முறுவலுடன் பார்த்துவிட்டு அதனை எடுத்து ஒரு மிடறு விழுங்கி அதன் இடத்திலேயே வைத்து விட்டு கிளம்பினாள் செழியனின் வருங்கால துணைவி.

விதியின் ஆட்டத்தில் முன்னிலையில் ஆராதனா!!!

” வருஷங்கள் மாறிய போதிலும்
புது வசந்தங்கள் வருவதுண்டு
வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள்
புது வடிவத்தில் மலர்வதுண்டு

பூவினை திறந்து கொண்டு போய் ஒழிந்த வாசமே
பூவுடன் மறுபடியும் உனக்கென்ன ஸ்நேகமே

விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்
நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம் “

Advertisement