Advertisement

அத்தியாயம் 8
சத்தம் எழுப்பி தொண்டையை சரி செய்தவன் “மீராகு ஏழு வயசுல அத்த கூட கடைக்கு போனபோது அத்த எக்சிடண்ட் ஆகி இறந்துட்டாங்க, அத்தைய இரத்த வெள்ளத்துல பார்த்த மீரா ‘அம்மா அம்மா’ என்ற வண்ணம் தான் இருந்தா. அவ அத்த கிட்ட பேசுறதும் சாப்பாடூட்ட வாம்மா என இல்லாத அத்தையின் புடவைய இழுக்கிற மாதிரி கெஞ்சுறதும், ஏதேதேதோ பண்ணிக்கிட்டு இருப்பா. நாங்களும் பெருசா கண்டுக்கல. இந்த மாதிரி தொடர்ந்து இருந்ததால வீட்டுல எல்லோரும் பயந்துட்டோம். சரியான நேரத்துல கண்டு பிடிச்சதால டாக்டரா பாத்து சரி பண்ணிட்டோம். அவளை அப்படி பாத்ததுக்கு அப்பொறம்  தான் நா இது சம்பந்தமா படிக்கணும்னு முடிவே பண்ணிட்டேன்” என்றவன் சட்டென்று அமைதியானான்.
புன்னகைத்த சரவணன் சார் “அதெல்லாம் ஒரு பிரச்சினை இல்லப்பா அதான் இப்போ சரியாகிருச்சே”
லட்சுமி அம்மாவுக்கும் மீராவின் முகம் நியாபகத்தில் வந்து கண்ணில் நீர்கோர்த்தது.
சைதன்யன் என்ன மாதிரி உணர்ந்தான் என்று அவனுக்கே புரியவில்லை. தேவின் கையை பிடித்தவன் “மீராகு எல்லாமா நா இருப்பேன்” என்றான் வலி நிறைந்த புன்னகையுடன்.
சைதன்யனின் செயலால் கவரப்பட்ட தேவ் அவனின் கைகளை இறுக்கிப் பிடித்தவன் ஒரு கசந்த புன்னகையை சிந்தியவாறே “அவளுக்கு இன்னும் பிரச்சினை இருக்கு” ஆழ  மூச்சை இழுத்து விட்டவன் ஆறு வருடங்களுக்கு முன் நடந்த விபத்தை பற்றி விவரிக்கலானான்.
இங்கே தீரமுகுந்தன் திரும்பவும் லிபிட்டினுள் சைதன்யன் மீராவை அனைத்திருந்த காணொளியை ஓடவிட்டவாறு ஆறு வருடங்களுக்கு முன் மீராவை சந்தித்த விதம் பற்றி எண்ணலானான்.
தீரமுகுந்தனும் விஷ்வதீரணும் இரட்டையர்கள். விஷ்வதீரன் I.P.S  ஒரு கேஸ் விஷயமாக தம்பி தீரனுடனும், ஸ்கூபி எனும் போலீஸ் நாயுடன் ஜீப்பில் வந்து கொண்டிருந்தான் சரியான பேய் மழை வேறு வண்டியை ஒட்டி வந்தது தீரமுகுந்தன்.
இரண்டு பசங்களும் போலீஸ் ஆகவேண்டும் என்பது அப்பாவின் ஆசையென்பதால் கணனியில் ஆர்வமாக இருந்த தீரமுகுந்தன் அதில் தேர்ச்சி பெற்று ‘ஸ்பெஷல் கிரைம்’ எனும் பிரிவில் தனது திறமையை சிறப்பாக செய்து வருகிறான்.
அன்றும் வண்டியை மழையென்றும் பாராம அதிவேகமாக வளைவுகளில் வந்தவன் ஒரு வளைவில் குறுக்கால வந்த பெண்ணின் மேல் மோதி விட்டான்.
அப்பெண் வண்டியில் மோதியது மட்டுமல்லாது தூக்கி வீசப்பட்டு பள்ளத்தில் விழுந்துவிட்டாள். வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தியும் அப்பெண் தூக்கி எறியப்பட்டதை கண்ட அண்ணன் தம்பி இருவரும் குதித்திறங்கினர். பள்ளத்தை நோக்கி வேகமாக நீர் ஓடிக்கொண்டிருக்க அண்ணன் தம்பி  இருவரும் கீழே பார்க்க பாறையில் தலை மோதியவளின் இரத்தம் சகதியுடன் கலந்தது.
விஷ்வதீரன் பள்ளத்தில் சறுக்கி இறங்கி பார்க்க, கண்கள் சொருகி மயக்க நிலைக்கு சென்றாள் மீரா. ஸ்கூபி வேறு ஊளையிட “சட் அப்  ஸ்கூபி” என்று அதை அடக்கியவன். ஜீப்பில் இருந்த கயிறை எடுத்து ஒரு முனையை ஜீப்பில் கட்டி மறுமுனையை பள்ளத்தை நோக்கி வீசினான் தீரமுகுந்தன்.
கயிறை தன் இடுப்பில் கட்டிக் கொண்ட விஷ்வதீரன் மீராவை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு, அவளது கைப்பையையும் இடுப்பில் சொருகியவன். கயிறை இழுத்து தம்பிக்கு சைகை செய்ய ஜீப்பை ரிவெர்ஸில் எடுத்தான் தீரமுகுந்தன்.
ஜீப் நகர நகர மீராவை தூக்கிக்கிக் கொண்டு வழுக்கும் அப்பாதையில் மடமடவென ஏறி மீராவை ஜீப்பின் பின் கிடத்தி “தீரா குயிக்” என்றான். ஜீப் வேகமெடுத்து மருத்துவமனை நோக்கி சீறிப்பாய்ந்தது. ஸ்கூபி “வெவ் வெவ்” வென கத்தியவாறிருந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மீராவின் நிலை மிக மோசமாக இருக்க அண்ணன் தம்பி இருவரும் இரத்தம் வழங்கினார். இருந்த இடத்திலிருந்தே விஷ்வதீரன் மீராவை பற்றிய தகவல்களை திரட்டியவன் தேவ்வை அழைத்து விஷயத்தை சுருக்கமாக சொன்னான்.
மழையில் மெதுவாக போவென தீரன் கூறியும் வேகமாக போனதால் தான் இப்பெண்ணின் நிலைக்கு தான் காரணமாகி விட்டேன் எனக்கூறி தேவ் வரும்வரை இருப்பதாக தீரமுகுந்தன் கூறவே விஷ்வதீரன் விடைபெற்றான்.
ரவிக்குமார் இராணுவத்தில் இருந்ததால் சரஸ்வதியிடம் வெளியூர் போவதாக சொல்லி தேவ் ஒருவாறு வந்து சேர அதிகாலை ஆனது. மூன்று நாட்களாக கண் திறக்காமல் மீரா இருக்கவே கோமாவிற்கு போய் விடுவாளோ என பயந்து போன தேவ் அவளை சென்னைக்கு அழைத்து செல்வதாக கூற இன்னும் ஒரு நாள் பொறுக்குமாறு டாக்டர் கூற, தீரமுகுந்தனின் நிலையோ வேதனையை தத்தெடுத்தது.
எவ்வளவோ கிரிமினல்களை சுட்டுக்கொண்டவனுக்கோ தன்னால் ஒரு குழந்தை போல் உள்ள பெண்ணுக்கு நேர்ந்ததை மன்னிக்க முடியவில்லை. மீரா சென்னை போகும் வரை எல்லா உதவிகளையும் தேவுக்கு முன்னின்று செய்து கொடுத்தான். அவள் கண்விழிக்கும் வரை எல்லாம் செய்தவன் கண்விழித்த உடன் நிம்மதியாய் அவ்விடம் விட்டு சென்று விட்டான்.
அதற்கு பிறகு மீரா என்ன ஆனாள் என்று யோசிக்க அவன் வேலை விடவில்லை. அவளை எஸ்.எஸ். குரூப் ஒப் கம்பெனியில்  கண்டவுடன் உரிமையாக பேசத்துவங்கினான் திரும்ப தேவ்வை சந்தித்த பிறகே மீராவுக்கு நடந்தது அறியவந்தது.
எல்லாவற்றையும் யோசித்தவன். லிபிட்டினுள் நடந்ததை க்ளியரா வெரி பை பண்ணி இருவரும் காதலிப்பதாக முடிவு செய்தவன். சைதன்யன் தனஞ்சயனாக இருப்பது ஏன் என புரியாமல் குழம்பினான்.
“இதே வேறு யாராவதாக இருந்தால் மீரா வேறு வண்டியில் அடி பட்டிருந்தால் பயந்து அங்கேயே விட்டுட்டு போய் இருப்பாங்க. பேய் மழை வேறு,  அடுத்தநாள் யாரவது பாத்திருந்தால் தான் உண்டு. அப்படியே பாத்திருந்தாலும் உயிரை காப்பாத்தி இருக்க முடியாது. உதவி செய்யணும்னு நினைச்சாலும் அந்த பள்ளத்துல இறங்கி இருக்க முடியாது. விஷ்வதீரன் சார் இருந்ததால மீரா உயிர் தப்பிச்சா இல்லனா இன்னைக்கு அவ………”
தேவ் சொல்ல சொல்ல அனைவரும் திகில் அடைந்த முகத்துடனையே காணப்பட்டனர். “மூனு நாளைக்கு பிறகு கண்ணு முழிச்சவ “வேத் அத்தான் என்ன கண்ணு கலங்குது” என்றவாறு எழ தலை வலிக்கவே “ஸ்ஸ்ஸ்ஸ் ……..’ என்று தலையை பிடித்தவாறு மீண்டும் தலையணையில் தலையை வைத்துக் கொண்டாள்.
“எந்திரிக்காத அம்மு எதுக்கு அங்க போன?” தலையணையை சரி செய்தவன் கைகை பிடித்துக் கொண்டு வினவினான்.
“எங்க? நா எக்ஸாம் எழுதிட்டு வீட்டுக்கு தானே வந்தேன் நாளைக்கு வேற லாஸ்ட் எக்ஸாம்” என்ன சொல்றா என குழம்பிய தேவ்
சில பல கேள்விகளுக்கு பிறகே அவள் சில நியாபங்களை இழந்து விட்டாள் என புரிந்தது. அவள் சைதன்யனை முற்றாக மறந்திருந்தாள். தான் எப்படி மருத்துவமனை வந்தேன்? என்றும் ஊட்டிக்கு ஏன் வந்தோம்? எனக்கு என்ன ஆச்சு ?மீராவின் கேள்விக் கணைகளை சமாளிக்க திண்டாடித்தான் போனான் தேவ்.
சைதன்யனுக்கோ தேவ் கூறியவற்றை இன்னும் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போ அவ என்ன மறந்துட்டா! அதான் அன்னைக்கு அப்படி பார்த்தா! எல்லாமே தப்ப இருக்கே சைதன்யா!
மனம் வருந்தினான் சைதன்யன். அப்போ என்ன மறந்தவளைத்தான் இழுத்து வச்சு கிஸ் பண்ணேனா! அப்பா சொன்னது போல தப்பா தான் நடந்துக்கிட்டேன். அவன் கண்கள் கலங்கி மனம் கனக்க தேவ்வை நோக்கினான்.
“இது எப்போ நடந்தது” சைதன்யன் கேட்க நினைத்ததை சரவணன் சார் கேட்க எங்க எப்போ என்று தேவ் சொல்ல முற்றிலும் உடைந்து போனான் சைதன்யன்.
ஏனெனில் அன்று தான் மீராவை திட்டித்தீர்த்து விட்டு சென்ற நாள். அப்போ அதையே நெனச்சுக்கிட்டு போகப்போய் தான் அவளுக்கு இப்படி ஆச்சு. வரும் கண்ணீரை கண்களை அகல விரித்தும் சிமிட்டியும் உள்ளிழுத்தவன். “மீராகு நா… நா…. வேணா என்னாலதான் இப்டியாச்சு” என மனதில் அரற்ற ஆரம்பித்தான்.
“அதனாலென்னப்பா! கல்யாணம் பண்ண மெமரி லாஸ் ஒன்னும் பெரிய பிரச்சின இல்லையே! பழைய நியாபகங்கள் வருமா? வராதா? வந்தா இப்போதைய நியாபகங்கள் மறந்திடுமா?” சரவணன் தான் கேள்விகளை அடுக்கினார்.
இந்த கேள்விக்கு பதில் சொல்ல “சையு” பத்தி சொல்ல வேண்டி இருக்கே! என தேவ் மனதில் நினைக்க,  சொன்னா எப்படி எடுத்துப்பாங்களோனு பயம் வேற வந்துவிட்டது. சொல்லாமல் மறைக்கவும் முடியாது எல்லாரிடமும் சொல்வதா? சைதன்யனுக்கு மாத்திரம் சொல்வதா?
“இந்த கல்யாணம் நடக்காது” என்றவாறு சைதன்யன் எழ ஆடித்தான் போனார்கள் சைதன்யனின் பெற்றோர்கள்.
அவனை வலி நிறைந்த பார்வையோடு பார்த்த தேவ் எழுந்து நின்றான்.
“தனு அம்மா சொல்றத கேளுடா! மீரா ரொம்ப நல்ல பொண்ணு” இன்னும் என்ன சொல்ல வாய் திறந்தாரோ
“அம்மா இந்த கல்யாணம் வேணாம் எதுவும் பேசாதீங்க” குரல் கரகரத்தாலும் உறுதியாக கூறினான் மகன்.
சரவணன் சாருக்கு கோவம் வந்தாலும் அன்று போல் நிதானத்தை இழக்காது பொறுமையை கை விடாது “இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும் மீரா தான்  எங்க வீட்டு மருமக. நா சொன்னது நடந்தே தீரும்,  தீரனும் என்ற சிங்க பார்வையை   சைதன்யனிடம் வீச, அடிபட்டு போனான் சைதன்யன்.
எங்கே பெற்றோர்களின் முன் அழுது விடுவேனோ என அஞ்சியவன் ஒன்றும் பேசாது படியேறி தனதறைக்கு சென்று விட்டான்.
தேவ் விடைபெற்று மருத்துவமனை செல்ல சரவணன் ஆபீஸ் சென்றார். லட்சுமி அம்மா பூஜையறையில் தஞ்சம் புகுந்தார்.
இன்றும் சைதன்யனை ஆபீசில் காணாது கலங்கி நின்றாள் மீரா. சைதன்யனின் மொபைலுக்கு அழைக்க ஒலி எழுப்பிய வண்ணமே இருந்தது ஒழிய பதில் வரவில்லை. சோர்ந்து போனாள் அவள்.
ப்ரியா மருத்துவமனை செல்லாததால் வினுவையும் அழைத்துக் கொண்டு மீராவை அழைத்துச் செல்ல மீராவின் ஆபீசுக்கு வரும் போது தேவ்வை அழைத்து ‘பேசணும் வாங்க’ என ஒரு பார்க்கின் பேரை  சொல்லியவள் மீராவையும் அழைத்துக்கொண்டு அவ்விடம் சென்றடைந்தாள்.
தேவ் வந்து சேரும் வரை வினுவுடன் விளையாடியவர்கள் தேவ் வந்தவுடன் அவனையும் கூட்டு சேர்க்க காலையில் நடந்தவைகளை புறம் தள்ளியவன் ஐக்கியமானான்.
மெதுவாக பேச்சை ஆரம்பித்த ப்ரியா தேவிடம் தனஞ்சயன் பத்தி சொல்ல யோசனைக்குள்ளான தேவ்.
மீராவை அழைத்த ப்ரியா அவள் மொபைல் வாங்கி தனஞ்சயன் எனும் சைதன்யனின் போட்டோவை காட்ட கொதித்துப் போனான் தேவ். முகம் மாறாமல் காக்க சிரமப்பட்டவன் அவர்களை வீட்டுக்கு செல்லுமாறு பணித்து, தனக்கு வேறு வேலை உள்ளது என்று சரவணன் சார் வீட்டுக்கு கிளம்பினான்.
கோபமாக காரை விரட்டி வந்தவன் அதை நிறுத்திய விதத்தில் உள்ளிருந்து சத்தம் கேட்டு வெளியே வந்த லட்சுமி  அம்மாவை பொருட்படுத்தாது “தனஞ்சயன் தனஞ்சயன்” என கத்திக் கொண்டிருந்தான்.  
“என்னப்பா யாரு தனஞ்சயன்” என லட்சுமி அம்மா கேட்க மாடியிலிருந்து கீழ் இறங்கி வந்தான் சைதன்யன்.
அறைக்கு வந்த சைதன்யன் போய் நின்ற இடம் குளியலறையில் ஷவருக்கு அடியில். கனத்த மனதை அடக்க வழி தெரியாமல் தேம்பித்தேம்பி அழுது கரைந்தவன் அன்றைய நாளில் அவன் சொன்னவைகளை கேட்டு அதிர்ச்சியில் உதடு துடிக்க விம்மி விம்மி அழுத மீராவின் சிவந்த முகம் நியாபகத்தில் வந்து இம்சித்தது. என்ன மன்னிச்சுடு ஸ்ரீ… ஸ்ரீ… ஸ்ரீ.. இதை தவிர வேறு எந்த வார்த்தையும் அவன் வாயிலிருந்து வரவேயில்லை. நீண்ட நிமிடங்களின் பின் வெளியே வர தேவின் குரல் ஓங்கி ஒலித்தது.
“இதோ உங்க புள்ள தான் எதுக்கு தனஞ்சயன் என்று மீராவை ஏமாத்திகிட்டு இருக்க?” பல்லை  கடித்து கோவத்தை அடக்கியவனாக கேக்க அவள் தன்னை மறந்து விட்டாள் என அறியாமல் நடந்தவைகளால் நொந்து போனான் சைதன்யன்.
அன்று நா அப்படி சொன்னதே அவ என்ன மறந்துடனும் அவ சின்ன பொண்ணு,   படிக்கணும் அவ லைப் கெட்டுட கூடாது,   இந்த வயசுல லவ் வராது ஜஸ்ட் இன்பாச்சுவேஷன். புரிஞ்சிக்காம பேசுறாளே! என்று. அவ என்ன ஒதுக்கணும்னு தான் அப்படி பேசினேன்”
நீ அது மட்டுமா பேசின அதுக்கு மேலயுமல்ல பேசின” மனசாட்சி அவனுக்கு நியாபகப்படுத்த
மீராவிற்கு தான் கொடுத்த வலி போதும் மீண்டும் அவள் நியாபகங்கள் வந்து விட்டால், அன்று நடந்தவைகள் நியாபகத்தில் வந்துவிட்டால் அதை விட பெரும் வேதனை வேறில்லை.
என்னை மறந்து காதலை மறந்தது அவளுக்கு கடவுளாய் பார்த்து கொடுத்த வரம். என்னால் மீண்டும் வேறு எந்த குழப்பங்களும் வேண்டாம். தான் எடுத்த முடிவு சரியானதே! என்று இருந்தவனுக்கு தந்தையை எப்படி சமாளிப்பதென்பது புரியவில்லை.
பதில் ஏதும் சொல்லாமல் இருப்பவனை கொன்றுவிடும் கோவத்தில் இருந்த தேவ் சைதன்யனின் சட்டையை பிடிக்க
“தேவ் அமைதியா இருப்பா” என வந்து சேர்ந்தார் சரவணன். அவரை கண்டு சற்று அமைதியானவன்
“தனஞ்சயனா நடித்து மீராவை ஏமாத்தி கிட்டு இருக்கான் சார் உங்கள முழுசா நம்பினதாலேயே மீராவை உங்க கம்பெனிக்கு அனுப்பிவச்சேன்” கோபத்தை பெரும்பாடுபட்டு அடக்கிக் கொண்டிருந்தான் தேவ்.
“முதல்ல உக்காரு, தனு நீயும் உக்காரு. லட்சுமி போய் தண்ணி கொண்டுவாமா” சரவணன் வரவும் அவர் அருகில் ஓடாத குறையாய் வந்த லட்சுமி அம்மா அவர் தணண்ணீர் கொண்டுவர சொல்லவும் விரைந்து சென்று கொண்டு வந்தவர்.
“என்ன நடக்குது இங்க! தேவ் தம்பி என்னென்னமோ சொல்லுறாரே! உங்களுக்கும் தெரிஞ்சிருக்கு என் கிட்ட ஏதாச்சும் மறைக்கிறீங்களா?”
தந்தையும் மகனும் அடிக்கும் கூத்து அவர் அறியாததா. இப்பொழுது என்ன வில்லங்கத்தை இழுத்து வைத்திருக்கிறார்களோ! என்றே லட்சுமி அம்மா ஆதங்கமாய் கேட்டார்.
  
சைதன்யன் பாரினிலிருந்து வந்ததும் லட்சுமி அம்மா மற்றும் சரவணன் முடிவையும் சைதன்யனுடன் போட்ட பந்தயத்தையும் சுருக்கமாக தேவிடம் சொல்லியவர் சைதன்யனுக்கு எப்படி தனஞ்சயன் என்று பெயர் வந்தது என்றும் சொல்லி முடித்தார்.
“தனு உனக்கும் மீராவை பிடிச்சிருக்கு அது எனக்கு நல்லாவே தெரியும் பிடிவாதம் பிடிக்காதே” சரவணன் சொல்ல
“இல்லப்பா நா மீரா கூட இருந்து அவ பழைய நியாபகங்கள் வந்துட்டா அவ நிம்மதியும் சந்தோஷமும் காணாமல் போய்டும்.” உணர்ச்சித் துடைத்த குரலில் சொல்லி தலையை அழுத்திப் பிடித்தவன் முழங்கையை மடியில் ஊன்றினான். 
“நீ புதிர் போடுறனு தோணுது சொல்றத தெளிவா சொல்லு” கொஞ்சம் கடுமையாகவே வந்தது சரவணனின் குரல்.
காலேஜில் அவளை சந்தித்தது முதல் அவளுக்கு எக்சிடெண்ட் நடந்த அன்று நடந்தது வரை எல்லாம் சொன்னவனை அடித்திருந்தார் லட்சுமி அம்மா.
“இப்போ சொல்லுங்க இந்த கல்யாணம் நடக்கணுமா? என் ஸ்ரீக்கு என்னால எந்த கஷ்டமும் வேணாம் மா! பழைய நியாபகங்கள் வந்தா அவ வேதனை தான் படுவா. என்ன பாக்கவும் வேணா. கஷ்டப்படவும் வேணா. வேற யாரையாச்சும் கல்யாணம் பண்ணி சந்தோசமா இருக்கட்டும்” என்றவாறு அழத்தொடங்கினான்.
லட்சுமி அம்மாவும் அவனை கட்டிக்கொண்டு அழ என்ன செய்வதென்று புரியாமல் சரவணன் இருக்க
“வேற யாரையாச்சும் கல்யாணம் பண்ணி பழைய நியாபகங்கள் வந்தா மட்டும் சந்தோசமா இருப்பாளா?”  தேவ் கேக்க அதிர்ச்சியாய் அவனை பார்த்தான் சைதன்யன்.

Advertisement