Advertisement

அத்தியாயம் 7  
அது ஒரு தனியார் மருத்துவமனை அதில் ஸ்பெஷல் அறையில் மயங்கிய நிலையில் சைதன்யன். பக்கத்தில் அவன் எழுந்ததும் குடிக்க சாத்துக்குடியை பிழிந்தவண்ணம் சந்துரு.
“என் மியா குட்டி ப்ரெக்னென்ட் ஆகி… இந்த மாதிரி வேல எல்லாம் பாக்க முன்னாடி இவனுக்கு பாக்க வேண்டி இருக்கே! என்னத்த குடிச்சி தொலச்சானோ மயங்கியே இருக்கான். மீரா சிஸ்டர் வேற போன் பண்ணிகிட்டே இருக்காங்க. அவங்களுக்கு பயந்தே என் மியா குட்டிய பாக்க போகல. அவ வேற போன் மேல போன் போட்டு எங்க இருக்கானு உயிர வாங்குறா. அவ கிட்ட காபி வேற கலெக்ட் பண்ண முடியல” என புலம்ப.
“டேய் கோட் வர்ட்கு பொறந்த தறுதல. தூங்க விடுடா கத்தாதே” கண்ணை மூடியவாறு சைதன்யன் திட்டி விட்டு தூங்க ஆரம்பித்தான்.
“எந்திரிச்சிட்டியா ராசா! மகாராசா! அப்படி என்ன சரக்குடா அடிச்ச? நாலு நாளா மயக்குத்துல இருக்க இதெல்லாம் என் கூட ஷேர் பண்ண மாட்டியே!” கடுப்பாய் மொழிந்தான் சந்துரு.
டாக்டர் வந்து பார்த்து விட்டு “நவ் யு ஆர் பேபெக்ட்டிலி ஓல் ரைட். உங்க உடம்புக்கு ஒத்து வராதுன்னு தெரிஞ்சும் எல்லா சரக்கையும் குடிச்சு இருக்கீங்களே. குடல் வெளிய வர்ற அளவுக்கு வாமிட் பண்ணி இருக்கீங்க. உங்க அப்பா சரியான டைம்கு அட்மிட் பண்ணதால ப்ரொபேர் ட்ரீட்மெண்ட் அளிக்க முடிஞ்சது. உடம்ப பாத்துக்கோங்க யங் மேன்”
சந்துருவின் வாயோ “அடப்பாவி” என்றது.
நான்கு நாட்களுக்கு முன்
சைதன்யன் வீடு வந்து சேராது இருக்கவே அவனுடைய அலைபேசிக்கு அழைத்து ஓய்ந்த லட்சுமி அம்மா கணவரை   அழைத்து அழுது கரையலானார்.
சைதன்யன் எங்கே இருந்தாலும் ஒரு நாளைக்கு இரண்டு தடவை வீட்டுக்கு தொடர்ப்பு கொள்வான். காலையில் சரவணன் சரிடமும் இரவில் லட்சுமி அம்மா விடமும் பேசாமல் இருக்க மாட்டான்.
“நா தான் லட்சு ஒரு வேலையா அனுப்பினேன் மொபைல்ல சார்ஜ் இருந்திருக்காது, அழாத நா பாக்குறேன்” என்றவருக்கும் பயம் வந்து விட்டது.
ஆபிசிலிருந்து வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தவருக்கு நண்பனொருவரிடமிருந்து அவர் இந்தியா வந்திருப்பதாக போன் வரவே வீட்டுக்கு சென்றாலும் லட்சுமி அம்மா கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட நண்பனை பார்க்கச் செல்வதே மேல் என எண்ணியவாறாக லட்சுமி அம்மாக்கு அழைத்து, எட்டு மணியளவில் வீடுவருவதாக சொன்னவர் நண்பருடன் ஐக்கியமாகிவிட்டார்.
லட்சுமி அம்மா அழைத்து சைதன்யனை காணவில்லை என்றதும் ஏதோ சொல்லி சமாளித்தவருக்கும் பயம் பிடித்துக்கொள்ள நேசமணியை அழைத்து சைதன்யனின் மொபைல் கடைசியாக எந்த இடத்தில் ஸ்விட்ச் ஆப் ஆனது என்று பார்க்க சொன்னவர். அவரின் தகவலுக்காக காத்திருந்தார்.
பத்து நிமிடங்களை எடுத்துக் கொண்ட நேசமணி சைதன்யனின் போன் இருக்கும் ஏரியாவை சொல்ல தங்களுடைய ஆபீஸ் சம்பந்தமா வெளியே இருந்து வரும் கிளைண்ட்களை தங்க வைக்க கட்டப்பட்ட ஒரு வீடு இருக்கும் பகுதி என்பதால் அங்கே விரைந்தார்.
அங்கே சைதன்யன் ஹாலிலேயே மயங்கி இருக்க வீடு முழுவதும் பாட்டில்களும் அவன் வாந்தி எடுத்ததன் காரணமாக நாரிய வீடே வரவேற்றது. காவலுக்கு இருந்தவரும் சரக்கடிச்சு கவுந்து படுத்திருந்தார். அவரை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என நினைத்தவர். நேசமணியும் வந்துசேர, இருவருமாக சைதன்யனை மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.
காவலாளியிடமிருந்த நாட்டு சரக்கையும் அவன் வாங்கி சென்ற நாலைந்து பாட்டில்களையும் கலந்து குடித்திருந்தான். ஒவ்வாமையின் காரணமாக வாந்தி எடுத்தவன் மயக்கமடைந்தான்.
இடையிடையே விழித்தாலும் சோர்வின் காரணமாக தூங்கிக்கொண்டு இருந்தான். அவனுடைய அலைபேசி அந்த வீட்டிலேயே அவனை போலவே தூங்கிக்கிடந்தது.
அவனை வேலை விஷயமாக பெங்களுர் அனுப்பியதாக சரவணன் சார் கூறி லட்சுமி அம்மாவை சமாதானப்படுத்தினார்.
மூன்று நாட்கள் பொறுமையாக இருந்தவர் பொறுக்க முடியாமல் சரவணன் சாரை ஒரு பிடி பிடித்து விட அவரை அழைத்துக்கொண்டு சைதன்யனை பார்க்க கிளம்பிவிட்டார்.
டாக்டர் சென்றதும் “என் மொபைல் எங்கடா”
“யாருக்கு தெரியும் நாலு நாளா நா இங்க தான் இருக்கேன் அப்படி ஒன்ன கண்ணுல காணல” சந்துரு சொல்ல
“நாலு நாளாவா இருக்கேன்” சைதன்யன் அதிர்ச்சியில் எழுந்து அமர்ந்தே விட்டான்.
“நா ஸ்ரீய பாக்கணும் டா” என எழும்ப போனவனை
“மொதல்ல போன்ல பேசு அப்பொறம் போகலாம். நாலு நாளில் கஞ்சிக்கே வழி இல்லாதவன் போல ஆகிட்ட. உன்ன இப்படி பார்த்தா எந்த கோவில்ல பிச்சை எடுக்குறீங்கனு சிஸ்டர் கேப்பாங்க” அவனை முறைத்தவாறே போனை பிடுங்கிய சைதன்யன் மீராவை அழைத்தான்.
சந்துருக்கு அழைத்து அழைத்து பார்த்து பொறுமையை இழந்தவள் கால் போன போக்கில் நடந்து தீரமுகுந்தனின் மேல் மோதி நின்றாள். அவனுடன் பேச பிடிக்காது நகர்ந்தவள் கண்ணில் நீர்கோர்க்க அவளிருக்கையில் வந்தமர்ந்தாள்.
போன் ஒலி எழுப்பவே கண்ணில் நீருடனையே சந்துருவின் எண்ணை கண்டவள் சைதன்யனை பேசவிடாது “த்ரூ அண்ணா அவர்… அவருக்கு ஒண்ணுமில்லயே? நீங்க அவர் கூடத்தான் இருக்கீங்கல்ல? நல்லா இருகாரில்ல? ஏன் ஆபீஸ் வரல? உடம்புக்கு ஏதும் பிரச்சினையா?” என கேட்டுக் கொண்டே போக,
அவள் தன்மேல் வைத்திருக்கும் காதலை கண்டு “ஸ்ரீ…. ஸ்ரீமா” என்றவனது குரல் காதில் தேனாய் பாய “ஜெய்………நீங்களா! எங்க இருக்கீங்க! உடம்பு முடியாம இருக்கீங்களா?” அவளின் ஜெய் என்ற அழைப்போ அவனின் மூளைக்கு எட்டவில்லை.
அவள் பதட்டத்தை தாங்க முடியாதவனாக “எனக்கு ஒண்ணுமில்ல ஸ்ரீ! ஒரு வேல விஷயமா வெளியூர் வந்துட்டேன் போன் காணாம போச்சு, நா நாளைக்கு ஆபீஸ் வரேன், நீ பதட்டப்படாம இரு. சரியா?”
 “சரிங்க”
 “அப்போ வச்சிடவா” அவளிடம் பேச வேண்டும் என்று அழைத்தவனால் பேச கூட தெம்பில்லாமல் உடல் படுத்த அவள் குரல் கேட்ட நிம்மதியில் அலைபேசியை துண்டிக்க அவள் அனுமதி வேண்டி நின்றான்.
 “சரிங்க” அவன் பேசிய சந்தோசத்தில் மொபைல் காணாமல் போனாலும் தொடர்ப்புகொள்ள வேற வழியா இல்லை என்பதை மறந்து போனாள் மீராஸ்ரீ.
ஹாஸ்பிடலினுள் நுழைந்ததும் சரவணன் சாரின் கையை இறுக்கமாக பற்றிய லட்சுமி அம்மா “தனுக்கு என்ன” கண்ணில் பயத்தை காட்டியவராக உடல் நடுங்க கேட்டார்.
அவரை அணைத்தவாறே “ஒண்ணுமில்லமா புட் பாய்சன் இப்போ சரியாகிருச்சு” என்று கூறியவாறே அறையினுள் வந்து விட அவர் கூறியதை கேட்ட சந்துரு
“புட் பாய்சன்?……. லிக்விட் பாய்சன்” என்று மனதுக்குள் கவுண்டர் கொடுத்தான்.
சைதன்யனின் கையை பிடித்துக் கொண்டு அருகிலேயே அமர்ந்த லட்சுமி அம்மா நலம் விசாரிக்க ஆரம்பித்து சரவணன் சாருக்கு அர்ச்சனை பண்ணியே முடித்துக் கொண்டார்.
“இது உங்களுக்கு தேவைதான்” என்பது போல் சைதன்யன் சரவணன் சாரை முறைத்து பார்க்க.
“உன்ன அப்பொறமா கவனிக்கிறேன்” என்பது போல் மகனை பார்த்தார் சரவணன்
அன்று ஆபீசில் இருந்து வெளியேறியவன் பைக்கில் மனம் போன போக்கில் சுற்றிக் கொண்டிருந்தான். மனமோ நடந்ததை நினைத்து கொதித்துக் கொண்டு இருந்தது. சடாரென பிரேக் போட்டவனின் வண்டி நின்றது ஒரு டாஸ்க்மார்க்கின் முன் இப்போது அவன் இருக்கும் மனநிலையில் எல்லாவற்றையும் மறக்க வேண்டும் என்று தோன்றவே எல்லா விதமான மதுபானவகையிலும் ஒவ்வொரு பாட்டிலை வாங்கிச் சென்று அவன் வண்டியை நிறுத்திய ஏரியாவிலுள்ள அவர்களின் இன்னொரு வீட்டுக்கு.
காவலாளியிடம் ஒரு பெரிய பாத்திரம் கொண்டு வருமாறு பணித்தவன் எல்லாவற்றையும் அப்பாத்திரத்தில ஊற்ற அதை பார்த்து நாவை எச்சில் படுத்திக்கொண்ட காவலாளி,
 “தம்பி எங்கிட்ட நாட்டு சரக்கு இருக்கு குடிச்ச சும்மா குப்புன்னு போதை ஏறும்” என்றார்.
“நிஜமாவா? கொண்டுவாங்க” அதையும் கலந்து ஒரு பெரிய கிளாசில் ஊற்றியவன் மடக்மடக்கென்று அருந்த ஆரம்பித்தான். பாதிக்கு மேல் காலியாக,
‘இவன் குடிக்கிற ஸ்பீட்ல எனக்கு இல்லாம போகுமோ’  என்று கவலைக்குள்ளான காவலாளி “தம்பி மெதுவாக குடிங்க” என்றவரை போதையேறிய விழிகளால் பார்த்தவன்
“சூ…….ப்பர்யா! செமயா இருக்கு நீயும் குடி” குளறியவாறு கூறியவன் வாய் மொழிக்காக காத்திருந்தவர் குடிக்க ஆரம்பித்தார். எல்லாவற்றையும் காலி பண்ணியவன், தட்டுத்தடுமாறி எழுந்து வாசலுக்கு வந்து சேர்ந்தான். சில  நிமிடங்களின் பின் நிற்காமல் வாந்தியெடுத்தவன் மயங்கி சரிந்தான். ஒருவாறு அவனை தேடி கண்டு பிடித்து மருத்துவமனையில் சேர்த்திருந்தார் சரவணன். 
வீடு வந்து சேர்ந்தான் சைதன்யன். லிபிட்டினுள் என்ன நடந்தது என்று விளக்கம் கேக்க விரும்பாதவராக தேவ்வை அழைத்து சந்திக்க வேண்டும் வீட்டுக்கு வரமுடியுமா என சரவணன் சார் கேட்டுக்கொள்ள நாளை காலை வருவதாக கூறினான்.
ஆபிசிலிருந்து வெளியேறி காருக்குள் ஏறிய மீராவிடம் “ஐஸ் கிரீம் சாப்பிடலாமா?” என ப்ரியா கேட்க,
“எங்க வேத் அத்தான் வரலையா அத்து” கதவை சாத்திய மீரா கேட்டாள்.
“ஏன் உங்க நொத்தான் வந்தா தான் காருல வருவீங்களோ?” ப்ரியா நொடித்துக்கொள்ள.
“ஐயோ செல்ல அத்து வினு மாதிரியே பண்ணுறியே!” ப்ரியாவின் கன்னம் கிள்ளினாள் மீரா.
“நா வினு மாதிரி பண்ணுறேனா? அவ தான் என்ன மாதிரி பண்ணுறா” நொடித்தவள் சிரித்து பேசியவாறே ஒரு காபி ஷாப்பில் வண்டியை நிறுத்தி இருந்தாள். கேள்வியாக தன்னை ஏறிட்ட மீராவை ப்ரியா “வா உன்கூட கொஞ்சம் பேசணும்” என்று உள்ளே அழைத்து சென்றாள்.
“காருல வரும் போது பேசிக்கொண்டு தானே வந்தோம்” என்றவளை இழுத்து அமர்த்திய ப்ரியா தானும் அமர்ந்து காபிக்கும் ஆடர் கொடுத்து விட்டே
“சொல்லு மீரா என்ன பிரச்சினை உனக்கு? ஒன்னும் இல்லனு மட்டும் சொல்லாத. இந்த கொஞ்ச நாளா நீ சரியில்ல” நேரடியாகவே கேட்டு விட்டாள்.
“பிரச்சினையா? எனக்கா? என்ன கேக்குற அத்து புரியல!” புரியாத பார்வை பார்த்தவளை
“ஒரு வாரமா ஒரு மாதிரி இருக்க என்ன விஷயம்” மீராவுக்கு புரியும் படி மீண்டும் கேட்டாள் ப்ரியா.
ஒரு கணம் முழித்தவள் புன்னகைத்து ப்ரியாவின் கையை பிடித்துக் கொண்டு “அத்து டென்ஷன் ஆகாத எனக்கு ஒருத்தர பிடிச்சிருக்கு அவரும் என்ன லவ் பண்ணுறார்” முகம் மாறினாள் ப்ரியா. அது யார்? எவரென? எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்தும் கொண்டாள்.
ப்ரியாவுக்கு நிறைய யோசிக்க வேண்டி இருந்தது. தேவிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்தவளாக “சரி உன் வேத் அத்தான் இருக்கும் போதே பேசலாம் வா இப்போ வீட்டுக்கு போலாம்.
சரியென தலை ஆட்டிய மீரா பிரியாவுடன் வீட்டுக்கு கிளம்பிச்சென்றாள்.
தேவிடம் இரவில் பேசலாம் என்றிருந்த ப்ரியாவிற்கு எமெர்ஜென்சி என ஹாஸ்பிடலிலிருந்து அழைப்பு வரவும் சென்றவளுக்கு விடியும்வரை அப்பிரசவ அறையிலிருந்து வெளியே வர முடியவில்லை.
சரவணன் சௌதாகரின் வீட்டு போட்டிக்கோவில் காரை நிறுத்தினான் தேவ். வீடு என்று சொல்வதை விட மினி அரண்மனை என்றே சொல்லலாம் இரண்டு மாடி கொண்ட வீடானாலும் நீச்சல் குளம், பெரிய தோட்டம், பின்னாடி பாஸ்கெட் பால் விளையாட, 5, 6 கார்கள் நிறுத்த கூடியவிதமாக இன்னும் என்னவெல்லாம் என்று தேவ் பார்வையே சுழற்றும் போதே
வெளியே வந்த சரவணன் “உள்ள வாங்க தேவ்” என்றழைத்து கைகுலுக்கியவாறு வரவேற்று கூடவே அமர்ந்துக்கொண்டார்.
“என்ன சாப்பிடுறீங்க தேவ்”
“நோ தேங்க்ஸ் சார் வீட்டுக்கு வரச்சொல்லி இருக்கீங்கன்னா ஏதாச்சும் முக்கியமான விஷயம் பேசவா? அனாதையாக்கப்பட்ட பெற்றோர்களுக்கு ‘அன்பு’ இல்லம். அனாதையான குழந்தைகளுக்கு ‘வெற்றி’ இல்லம். படிப்புக்காக ‘கல்வி’ டிரஸ்ட் இப்படி எல்லாம் செயிரீங்க என்ன கூப்டு இருக்கீங்கன்னா! மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது செய்யா ஆசபடுறீங்களா?” 
தேவ் ஒரு சைக்காட்ரிக்ஸ் அவனை இவர் அழைத்து பேச வேண்டுமானால் இவ்வாறான விஷயமாக இருக்கும் என்று அவனே ஊகித்து கேட்டான். 
சத்தமாக சிரித்த சரவணன் “இது நல்ல ஐடியாவாக இருக்கே பண்ணிடலாம் தேவ் டோன்ட் ஒர்ரி”
சமூகத்துக்காகமும், மக்களுக்காகவும் தான் செய்யும் நல்ல காரியங்களை ஒருவன் பட்டியலிடுகிறான் என்ற மமதையில் சரவணன் சிரிக்கவில்லை. தான் அழைத்து பேசுவதென்றால் இது மட்டுமா என்றே சிரித்தார். கூடவே தேவ்வின் எண்ணத்தை நிறைவேற்றிவிடலாம் என்றும் ஒரே வார்த்தையில் வழிமொழிந்தார். 
அவர் சிரிப்பை புரியாது பார்த்த தேவ் லட்சுமி அம்மா வரவே எழுந்து வணக்கம் வைத்தான். குசலம் விசாரித்த லட்சுமி குடிக்க ஏதாவது கொண்டு வருமாறு பொன்னம்மாவை பணித்தார்.
தேவ் சொன்னதை லட்சுமி அம்மாவிடம் பகிர்ந்த சரவணன். கல்யாணப் பேச்சை எப்படி ஆரம்பிப்பது என லட்சுமி அம்மாவின் முகம் பார்த்தார். தேவ்வை வீட்டுக்கு வர சொன்னவருக்கு கல்யாண பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.
“மீரா எப்படி இருக்கா? வரன் எதுவும் பார்க்கலயா?”
“இதுக்கு தான் பெண்கள் வேணுங்குறது சட்டென்று கேட்டு விட்டாளே!” மனைவியை மெச்சிக்கொண்டார் சரவணன்.
“இனிமேல் தான்மா பாக்கணும்” என்றான் தேவ் யோசனையாக
“எந்த மாதிரி இடம் பாக்குறீங்கா?” லட்சு விடாது அடுத்த கேள்வியை கேட்க
“பெருசா ஒண்ணுமில்லமா மீராவ நல்லா பாத்துக்கிட்டா போதும்” “இந்தம்மா எதுக்கு மீராவை பத்தியே! கேக்குறாங்க” என்ற சிந்தனை மனதில் ஓடினாலும் பதிலளித்தான்
“மீராவ எங்களுக்கு குடுக்குறீங்களா?”  ஒரு கணம் அவரை புரியாது பார்த்தவன் யோசனைக்குள்ளானான்.
சைதன்யனின் அருமை பெருமைகளை அள்ளி விட்டவர். சரவணன் சாரின் குடும்ப பாரம்பரியத்தையும் சுருக்கமாக சொல்லி தேவை ஏறிட
அவனோ சரவணன் சாரை ஏறிட்டான். இவ்வளவு நேரமாய் அமைதியாக இருந்தவர் “எங்களுக்கு முழு சம்மதம்பா. தனுக்கு கூட சம்மதம். உனக்கு விருப்பமென்றால் உங்க வீட்டுல பேசிட்டு சொல்லு.
சரவணன் சாரை தொழில் ரீதியாகவும் லட்சுமி அம்மாவை போட்டிக் வரும் போதும் பார்த்ததுண்டு இந்த குடும்பத்தில் மீரா இருந்தால் பாதுகாப்பாகவும் சந்தோசமாகவும் இருப்பாள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
தேவின் குழப்பமான முகத்தை கண்டு “என்ன தேவ் ஏதும் பிரச்சினையா” அவனை கூர்ந்து நோக்கினார் சரவணன்.
ஆபீஸ் செல்ல தாயாராகி வந்த சைதன்யன் தேவ்வை கண்டு பாதியிலேயே நின்று விட்டான். தேவையும் மீராவையும் கணவன் மனைவின்னு தப்பாய் நினைத்ததை நினைத்து தலை கோதியவன் புன்னகைத்தான். லட்சுமி அம்மா கல்யாண விசயம் பேசவும் உச்சிகுளிர்ந்து போனவன் அவர்கள் பேசுவதை கவனிக்கலானான்.
தேவின் குழப்ப முகம் கண்டு அங்கே விரைந்தவன் தன்னை அறிமுகப்படுத்தி பொதுவான விஷயங்கள் பேசி விட்டு “அம்மா பேசியட கேட்டேன் தேவ் எனக்கு முழு சம்மதம்” என்று சிரித்தவாறே கூறியவனை தேவ்வுக்கும் பிடித்துப்போனது.
மீராவின் நிலையை இவர்களிடம் சொல்லிவிடலாம் என முடிவு செய்தவன் “மீராவை பத்தி சில விஷயங்கள் சொல்லனும் அத நீங்க எப்படி எடுத்துப்பீங்கனு தெரியாது” என்று மூவரினதும் முகத்தை மாறி மாறி பார்த்தான்.
“எதுனாலும் தயங்காம சொல்லுபா” பிரச்சினை எதுவானாலும் மீராதான் இந்த வீட்டு மருமகள் என்பது போல் அவனை பார்த்தார் லட்சுமி அம்மா. 

Advertisement