Advertisement

அத்தியாயம் 14
அடுத்து வந்த நாட்கள் கல்யாண வேலைகளோடு சாதாரணமாகவே அனைவருக்கும் சென்றது மீராவை தவிர. அவளுக்கு சைதன்யன் தான் தனஞ்சயன் என்று தெரியும் என்பதை தெரியாதவர்கள் பண்ணும் அத்தனை விஷயத்துக்கும் அவள் கேட்க முன்பே காரணம் சொன்னார்கள். சில சமயம் சிரிப்பாகவும் சில சமயம் கடுப்பாகவும் இருந்தது. சில நேரம் வேண்டுமென்றே கேள்வி கேட்டாள். சில நேரம் அமைதியான எரிமலையானாள்.
கல்யாணம் லட்சுமி அம்மாவின் குலதெய்வ கோவிலில் காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் பின் மாலை  சென்னையில் பெரியதோர் மண்டபத்தில் ரிசப்ஷன்.
சரவணன் சாரின் பூர்விகம் ராஜஸ்தான் அவருடைய தாத்தா இங்கே குடிபெயர்ந்தவர். ராஜஸ்தானியான அவர் இங்கு வந்து திருமணம் செய்ததால் சரவணன் சாரின் குடும்ப திருமணங்களில் அவரின் குடும்ப வழக்கங்கள் பல இங்கு நடைபெரும் திருமண சடங்குகளுடன் கலந்து இருந்தது. எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்பது லட்சுமி அம்மாவின் ஆசை. அதற்கு ஒரு காரணமும் இருக்க குடும்ப இரகசியத்தை காப்பாற்ற தனது மாமனாருக்கு வாக்களித்திருந்தார்.
கல்யாணத்துக்கு முதல் நாளே மணப்பெண் லட்சுமி அம்மாவின் பூர்வீக வீட்டில் தங்கவைக்கப்பட்டு அடுத்த நாள் கல்யாணத்தை குலதெய்வ கோவிலில் செய்யலாம் என முடிவு செய்யப்பட சரவணன் சௌதகர் குடும்பம் இரண்டு நாட்களுக்கு முன்னாடியே சரவணன் சாரின் பூர்வீக வீட்டை வந்தடைந்தனர். கல்யாணத்துக்கான ஆயத்தங்கள் எல்லாம் லட்சுமி அம்மா நேசமணியின் பொறுப்பில் விட்டிருந்தார். ஊரிலுள்ள அனைவருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது.
கல்யாணம் மாப்பிள்ளையின் ஊரில் நடைபெறுவதால் மணப்பெண் சகிதம் குடும்பம் சொந்தபந்தம் என அனைவரும் ஊர் எல்லையை மதியம் வந்தடைய மாப்பிளை வீட்டாருடன் சொந்தபந்தங்கள் அனைவரும் ஒண்ணுகூடி வரவேற்று அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு செல்ல, அங்கே அவளுக்காக காத்திருந்தான் சைதன்யன். இரண்டு நாட்களாய் அவளை காணாதவன் அவளை கண்டதும் அவனின் கண்களில் தோன்றிய மின்னலும் சந்தோசமான புன்னகையும் அவனுடைய காதலின் அளவுகோளோ!
பூஜையில் இருவரையும் ஒன்றாக அமர்த்த தோள் உரச அமர்ந்தவர்களின் நிலைதான் சங்கடமானது. இருவரின் ஓரப்பார்வை அடிக்கடி இருவரையும் உரச அவர்களுக்குள் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நிகழ வில்லை. புன்னகையே மௌன மொழியாய் ஆயிரம் கதை பேசியது. பூஜையின் பின் மணமகன் வேறாகவும், மணமகள் வேறாகவும் அவரவர் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட கோவிலில் ஏற்றப்பட்ட விளக்கு மீராவின் கையில் கொடுக்கப்பட்டு நடந்தவரே லட்சுமி அம்மாவின் பூர்வீக வீட்டை வந்தடைந்தனர்.
மணமகளே மணமகளே!
எங்க ஐயா வீட்டு மருமகளே!
வலது கால வைத்து உள்ளே வந்து
குலம்விளங்க குத்து விளக்க ஏத்தி வச்சி
நீ குத்தம்மா குத்து கை அரிசி
நாட்ட ஆழ ராஜா குட்டி வீட்டுக்கொரு இளவரசி
பெத்துகொடுத்துடு தாயீ தாயீ……. { பாடல் தொடரும்….}
“மீரா என்னடி இது வாழ்த்துப்பாட்டா?   வரவேற்புப்பாட்டா” சௌமியா காதை கடிக்க மீராவுக்குமே என்னடா இது வந்து அரைமணிநேரம் ஆயிற்று பாட்டு நீண்டு கொண்டே போகுது. ஆலம் சுற்றுவது முடிந்த பாடில்லை. வயதான பாட்டியிலிருந்து குமரிவரை வரிசையாய் ஆலம் சுற்றிக்கொண்டே போக, கால் வேற கடுக்க ஆரம்பித்தது. கையில் ஒரு விளக்கு வேற அணையாது உள்ளே சென்று பூஜையறையில் வைக்கும் வரை வேறு யார் கையிலும் கொடுக்கவும் கூடாது கீழேயும் வைக்கக் கூடாதென்பது லட்சுமி அம்மாவின் உத்தரவு.
“மீரா பேசாம மயக்கம் போட்டு விழுந்தது எப்பவாச்சும் வீட்டுக்குள்ள விடுவாங்களானு பார்ப்போம்” மீண்டும் சௌமியா பொறுமை இழந்தாள்.  
“அமைதியா இருமா” சரஸ்வதி அம்மா அதட்ட சௌமியா முகத்தை சுருக்கியவாறே அமைதியானாள்.
ஒருவாறு ஆலம் சுற்றுவது முடியவும் உள்ளே பூஜையறை வரை அழைத்து சென்று விளக்கை வைத்து, பூஜை நடைபெறும் நேரம் கண்ணை மூடி சைதன்யனுடன் வாழப் போகும் வாழ்க்கைக்காக வேண்டி நின்றாள். அதன் பின் மஞ்சள் நிற புடவை அணிய வைத்து நகைகள் எதுவுமே இல்லாமல் ரோஜாமலை மாத்திரம் அணிவித்து வாசலில் ஒரு சிறிய பெஞ்சில் அமர்த்தி சந்தனமும் மஞ்சளும் கலந்து முதலில் நெருங்கிய உறவுகளும் சொந்த பந்தமும் முகத்திலும் கை காலிலும் பூசி வாழ்த்த மெய் சிலிர்த்தாள் மீரா.
“மஞ்சள் நிலா மாதிரி இருக்க” சரஸ்வதி அம்மா ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.
“ஹப்பா…….என்ன கண்டு பிடிப்பு நீல் அமாஸ்ட்ரோங் தோத்தான் போங்க” சௌமியா அவரை கலாய்க்க அவளின் தோளில் தட்டியவர் கண்களை துடைத்தவாறே மீராவை அணைத்து நெற்றியில் முத்த மிட்டார்.
வினுக்குட்டி “நானும் நானும்” என அவள் மடியில் அமர்ந்து எப்படி முத்தமிடுவதென கண்ணை உருட்டி மஞ்சள் குளித்த மீராவின் கன்னம் பார்க்க வினுவின் கன்னத்தில் முத்தமிட்டாள் மீரா.
பூஜையறை வரை வாழ்த்துப்பாட்டு தொடர்ந்தது அதன் பின் மெல்லிய இசையோடு இள மங்கைகளின் ஆடல் அரங்கேறியது. மணப்பெண்ணை சுத்தியும் சொந்தங்களை ஆட வைத்தும் கலை கட்டியது ஆடல் சடங்கு.
வினு குட்டியும், சௌமியாவும் ப்ரியாவின் தங்கை அனிதாவும் மீராவை சுத்தி சுத்தி ஆட ப்ரியாவும், ப்ரியாவின் அம்மாவும், சரஸ்வதி அம்மாவும் பக்கத்தில் அமர்ந்திருந்தனர். ப்ரியாவை சௌமியா இழுக்க முடியாதென்றவளை சரஸ்வதி அம்மா வலுக்கட்டாயமாக அனுப்ப கொஞ்ச நேரம் ஆடியவள் மீண்டும் அவரிடம் வந்தமர்ந்தாள்.
பின் மல்லிகை பூ இட்ட வெதுவெதுப்பான நீர் தலையிலிருந்து பாதாம் வரை ஊற்றப்பட்டு குளிப்பாட்டப்பட்டு மீராவை புதுச்சேலை அணிந்து வர சொல்லி வயதான பெண்மணியின் கையால் முதல் வாய் சாப்பாடு ஊட்டப்பட்டது. அதுவும் ஒரு சடங்காக நன்றாக வாழ்ந்தோர் கையால் சத்து நிறைந்த உணவின் கலவை பிசைந்து ஊட்டப்படும்.
 “ஹப்பா…. இப்பயாச்சும் சோத்த கண்ணுல காட்டினாங்களே ஜூஸ் கொடுத்தே தூங்க சொல்லிடுவாங்களோ என பயந்துட்டேன்” என சௌமியா புலம்ப சிரித்தவாறே அமர்ந்திருந்தனர் ப்ரியாவும் சரஸ்வதி அம்மாவும்.
“டேஸ்ட்டா இருந்தா இன்னும் கேட்டு வாங்கி சாப்பிடுடி வெக்கப்படாத” சௌமியா சத்தமாக கூற அம்முதிய பெண்மணியோ நீயும் “வாய தொர” என அவளுக்கும் ஊட்ட “பாட்டி எனக்கும்” என வினுக்குட்டியம் வாங்கி சாப்பிட இன்னும் சில இள மங்கையினர் அருகில் வர “அந்த அண்டாவ தூக்கிட்டு வாங்கப்பா தட்டு பத்தல”
“கிழவிக்கு குசும்பப்பாரேன்”
“சௌமியா……..”சரஸ்வதி அம்மா மீண்டும் அதட்டினார். 
ஆண்கள் வேறு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருக்க ஊர் பெண்கள் மொத்தமும் சடங்கு நடைபெரும் இடத்தில் இருந்தனர்.
பின் மருதாணி இடும் சடங்கு ஆரம்பமாக லட்சுமி அம்மா வந்து வலது கையில் கொஞ்சம் மருதாணியை பொட்டளவில் வைத்து ஆரம்பிக்க மருதாணி இட வந்த மங்கை கையில் முழங்கை வரையும் பாதத்திலும் அழகாகன கோலம் போல் இட்டாள். கையில் மணமகன் பெயர் மருதாணியினால் இடப்படும் அதை மணமகன் கண்டு பிடிக்க வேண்டும். இளவட்டங்கள் விளையாட்டாக இது உள்ளது. என்ன பெயர் எப்படி எங்கே எழுத வேண்டும் என மீராவிடம் கேட்டு அப்பெண் அதுபோலவே பெயரை எழுதினாள்.
சௌமியா எட்டி எட்டி பார்க்க அவளை தள்ளி விட்ட மீரா “அத்து இவள இழுத்துட்டு போய்டுங்க இல்லனா அவர் கிட்ட போன் போட்டே சொல்லிடுவா”
அவளை முறைத்தவாறே சௌமியா கழுத்தை நொடிக்க “பாத்துடி  ஒட்டகசிவிங்கி மாதிரி இருக்க கழுத்து சுழுக்கிக போகுது” மீரா அவளை வார”
“போடி” என அவளை அடிக்க கையை ஓங்கியவள் தோழியை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு காதினுள் ஏதோ சொல்ல முகம் சிவந்தாள் மணப்பெண்.
அனிதா, ப்ரியா, வினு, சௌமியா என எல்லோரும் மருதாணி இட்டுக்கொள்ள மங்கையரோ தேவலோக கன்னியரோ எனும் விதத்தில் ஆடை அலங்காரத்துடன் ஜொலித்தனர்.
இங்கே சரவணன் சாரின் வீட்டில் சைதன்யனுக்கான சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவனையும் பெஞ்சில் அமர வைக்கப்பட்டு ரோஜாமாலை அணிவித்து மஞ்சள் சந்தானம் பூசும் சடங்கு நடைபெற்றது. லட்சுமி அம்மாவே முதலில் பூசி ஆரம்பித்து வைத்தார். கண்கள் கலங்க மஞ்சள் சந்தனம் பூசும் அவரை “என்னமா ஆனந்தக் கண்ணீரா உன் மருமகள் கிட்ட சொல்லிவை என் கண்ணு கலங்காம பாத்துக்க சொல்லி” என சிரிக்க
“போடா படுவா அவ கண்ணுல தண்ணி வந்தா நீ காலி” என அவர் சைதன்யனை வார
“தேவையா உனக்கு……. உனக்கு நீயே ஆப்ப சொருகிட்டியே தனு” என்று சைதன்யன் குரலில் சந்துரு ஆள்காட்டி விரலை முகத்துக்கு முன் நீட்டி தாக்கு தானே சொல்லிக் கொள்ள
“எனக்கு வில்லன் வெளிய இல்லடா கூடவே வச்சு சுத்திகிட்டு இருக்கேன்” என பல்லை கடித்தான் சைதன்யன்.
பெண்கள் ஆண்கள் என்றில்லாது அனைவரும் வரிசையாய் வந்து மஞ்சள் சந்தனம் பூசி வாழ்த்தினர். மணமகளை போல் அதிக சடங்குகள் இருக்க வில்லை. மல்லிகைப்பூ குளியலும் இல்லை. அவனே குளித்து சாதாரண உடையில் வர
“லிட்டில் பாஸ் பேச்சுலர் பார்ட்டி எங்க?” என்று சந்துரு காதை கடிக்க அவனை முறைத்தவன்
“குடிச்சி மட்டையான மீரா கழுத்துல யார் தாலி கட்டுவான் போ போய் தூங்கு”
தலையில் அடித்துக் கொண்ட சந்துரு “டேய் குடிகாரா நீ ஏன் டா குடிக்கிற வாங்கிக்குடுடா நா குடிச்சிக்கிறேன்” கடுப்பாய் மொழிய
அப்பக்கமாக வந்த நேசமணியை அழைத்த சைதன்யன் “அங்கிள் என் நண்பன் சந்துரு பேச்சுலர் பார்ட்டி கேக்குறான் சரக்குதான் வேணுமாம் கொஞ்சம் என்னானு கவனிங்க” என கோர்த்து விட்டான்
அவரை கண்டும் அசாராதவன் “ஊருல அவனவன் ஆயிரம் பிரெண்ட்சுகளோடு  சந்தோ………..சமா இருக்கானுங்க. ஒரே ஒரு பிரெண்ட வச்சிக்கிட்டு நா படுற பாடிருக்கே!” என நடிகர்  சந்தானம் வாய்ஸில் சொல்லி அவ்விடத்தை காலி செய்தான்.
அவனை என்ன செய்தால் தகும் என்று முறைத்தவாறே நேசமணி அகன்றார்.
சைதன்யனுக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை அவனை தூரத்திலிருந்து சந்துரு முறைத்தவாறே “குடிக்க தெரியாம குடிச்சி நாலு நாள் மட்டையானவன் தானே நீ” என வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்ப
 “உனக்கு சரக்கு வாங்கி வச்சிருந்தேன் இப்போ தர மூட் இல்ல” என பதில் அனுப்பி இன்னும் அவனை கடுப்பேற்றியவன் தனதறைக்கு சென்றான்.
இங்கு சந்துரு தேவ்வை தேடிச்சென்று பேச்சுலர் பார்ட்டி பற்றி பேசலானான்.
“டேய் நா ஒரு டாக்ட்டர் டா”
“ஏன் டாக்ட்டர்ஸ் எல்லாம் சரக்கடிக்க கூடாதா” கிண்டலாக கேட்டான்.
“என் பொண்டாட்டி கையாள அடிவாங்க வச்சிடுவா போலயே!”
ஈ என இளித்தவன் “ப்ரியா மேம் மீரா சிஸ்டர் கூட பிசி. நீங்க வாங்க சார்” என அவனை இழுத்துச் செல்ல இவனிடமிருந்து எப்படி தப்பிப்பது என யோசித்தவன்
“அதோ சௌமியா வரா” சந்துரு தலையை திருப்பி தேட தேவ் காணாமல் போய் இருந்தான். 
எல்லா சடங்கும் முடிந்து தூங்கலாம் என அறைக்கு வந்து மீரா மொபைலை பார்க்க சைதன்யனின் மெசேஜ் ‘சடங்குகள் முடிந்த உடன் கால் பண்ணவும்’ என்று  இருந்தது. சிரித்தவாறே அவனுக்கு கால் பண்ணியவள் அவன் ‘ஹலோ” சொல்லும் வரை காத்திருந்தாள்.
தனக்கு ஒரு வருடத்துக்கு மேல் நடந்தவைகள் மறந்து விட்டது என்று தெரிந்திருந்தவளுக்கு சைதன்யனை முதல் நாள் பார்த்தது நியாபகத்தில் வரவே அதை தொடர்ந்து சில நியாபகங்களை மீட்டெடுத்தவள் அவன் கம்பெனிக்காக வேறு பெயரில் இருப்பதாக முடிவு செய்தவள் எல்லாரும் அறிந்திருக்கும் விடயத்தை தனக்கு மாத்திரம் மறைப்பது ஏன் என புரியாமல் குழம்பினாள். 
ஏதோ ஒரு காரணத்துக்காக மறைக்கிறார்கள் அது தான் மறந்தவைகளில் உள்ளது என சரியாக புரிந்துக்கொண்டவள். என்ன செய்யலாம் என சௌமியாவுடன் ஆலோசித்த போது “உன் குடும்பமும் சரி அண்ணாவும் சரி உனக்கு எது நல்லதோ அதை மாத்திரம் தான் செய்வாங்க அண்ணாட லவ் மேல டவுட் இல்லையே!”
“இல்ல”
“பின்ன என்னடி எல்லாத்தயும் விட்டுத்தள்ளு கல்யாணத்த பண்ணி என்ஜோய் பண்ணு.
அவள் சொல்வது சரியென படவே எல்லாவற்றையும் புறம் தள்ளி சைதன்யனின் காதலை முன் நிறுத்தி கல்யாணத்துக்கு தயாரானாள். கல்யாண சடங்குகள் குறையின்றி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
முகூர்த்தம் காலை எட்டரை மணியிலிருந்து ஒன்பதரை மணிவரை என்பதால் காலை ஏழு மணிக்கே! மீராவை பாலர் பெண்கள் அலங்கரிக்க ஆரம்பித்திருந்தனர். சைதன்யன் வாங்கி இருந்த சிவப்பு நிற பட்டுப்புடவையில் பொருத்தமான நகைகளோடு தேவதையாய் இருந்தவளுக்கு கண் த்ரிஷ்டி பட்டு விடுமோ! என பயந்த சரஸ்வதி அம்மா கையை மடக்கி த்ரிஷ்டி கழித்து சைதன்யனின் உறவுமுறை பெண்மணி ஒருவர் சொல்லியபடி கண் த்ரிஷ்டிக்காக அவளின் கண் மையை எடுத்து கழுத்துக்கு கீழே வைத்து விட்டார். வீட்டில் இன்னும் சில சடங்குகளை முடித்துக்கொண்டு கோவிலுக்கு புறப்பட்டாள் மணப்பெண்.
பின்னால் மணப்பெண்ணின் சொந்தங்கள் ஆண், பெண் என அனைவரும் வர, பூவால் நெய்யப்பட்ட வலைபோன்ற குடை பிடித்து தெருவெல்லாம் பூக்கள் தூவப்பட்டு, கோவில்வரை பல்லாக்கிலும், கோவில் உள்ளே நடந்தும் அழைத்து வரப்பட்டாள் மணப்பெண். மண்டபத்துக்கு குலதெய்வத்துக்கும் நடுவே! மணமகனுக்காக காத்திருந்தாள் மங்கை.
ஆணழகனுக்கே ஆணழகனாக ஷர்வானி அணிந்து தலையில் முண்டாசு, கட்டி நெத்தியில் திலகமிட்டு, படைவீரன் போல் வாளேந்தி குதிரையில் தனது மணப்பெண்ணை நோக்கி வந்தான் சைதன்யன். அவனின் படைவீரன் போன்ற போலிருந்த தோற்றத்தைக் கண்டு பூர்வ ஜென்மபந்தம் பொய்யில்லை. போன ஜென்மத்தில் இப்படித்தான் இருந்திருப்பானோ! என்ற எண்ணம் தோன்ற நடந்து முடிந்தவை கனவாய் வந்த போது போன ஜென்மத்தில் நடந்தது என நினைத்தது நியாபகத்தில் வர அழகான வெட்கப்புன்னகை வந்து நாணி தலைக் குனிந்தாள் மணப்பெண்.
கோவிலை அடைந்ததும் குதிரையிலிருந்து குதித்திறங்கிய கணமிருந்து தன்னவளின் முகபாவங்களை, தேவதைப் போன்ற அலங்காரத்தில் திகழ்ந்தவளைக் கண்டு சைதன்யனின் காதல் மனம் நூறு மடங்கு அதிகமாக துடிக்க ஆரம்பித்தது. அவளின் அழகில் மயங்கி ஒருகணம் சிலையாய் நின்றவன் பட்டாசு வெடித்து அடங்கியதும், ஒருவித இசைக்கருவி மீட்டப்படவும், சுதாரித்து, தன்னை சமாளித்து, கட்டுக்குள் வந்தவன் தன்னவளை நோக்கி வீரநடையிட்டான்.
மணமகளின் அருகில் வந்ததும் வாளை உருவி வான் நோக்கிப் பிடித்து “என் உயிர் உள்ள வரை உன் மானம் காப்பேன்” என பொறுமையாகவும் அழுத்தமாகவும், திருத்தமாகவும் உச்சரித்து வாக்களித்தவன், வாளை இருக்கைகளில் ஏந்தி இடது காலை மடித்து மீராவின் முன் மண்டியிட்டு தலை வணங்கி அவள் புறம் நீட்ட திருதிருவென முழிக்கலானாள் சைதன்யனின் ஸ்ரீ.
{இந்த வாளைத்தன்யா ஒருத்தன் ராஜஸ்தான்ல தேடிக்கிட்டு இருக்கான்}
“காலேஜ் ராகிங் மாதிரி கல்யாண ராகிங் போல” என சௌமியா மீராவின் காதைக் கடிக்க மீராவின் முகத்திலும் புன்னகை.
“என் பையன எவ்வளவு நேரம் தான் மண்டியிட்டு வைக்க போற சீக்கிரம் வாளை வாங்கு இல்லனா கல்யாணம் நடக்காது” லட்சுமி அம்மா பூரிப்போடு சொல்ல வாளை இரு கைகளையும் வாங்கிக் கொண்டாள் மீரா.
மீராவிடம் முன்னதாகவே! சொன்னால் கேள்வி மேல் கேள்வி கேட்பாள். தக்க தருணத்தில் சொன்னால் மறுக்காமல் செய்வாள் என சொல்லாமல் விட்டு விட்டார் லட்சுமி அம்மா. ஆனால் அவள் எந்த கேள்வியும் அவரிடம் கேளாது சைதன்யனை படுத்தப் போகிறாள் என யாரும் அறியவில்லை.  
சரவணனின் கொள்ளுத்தாத்தா ‘விஷ்வதீர சௌதாகர்’ பெண்ணின் மானம் காத்த வாள். அரசன் அவருக்கு இளவரசியை மணம் செய்து  கொடுத்து, திருமண பரிசாக வழங்கப்பட்ட வாள். அவர்களின் குடும்பச் சொத்து. பரம்பரையின் அடையாளம். கல்யாண சடங்காய் கையில் வாளேந்தி வரும் மணவாளன் வாளை வானை நோக்கி உயர்த்திப் பிடித்து வாளின் மீது தன் உயிருள்ளவரை மனைவியை காப்பதாக வாக்களிக்க, அதை முழுமையாக நம்பியதாகவும் அவனை கணவனாக ஏற்றுக்கொண்டதாகவும் மணப்பெண் வாளை இரு கைகளிலும் ஏந்தி இருவரும் ஒன்றாக சேர்ந்து குலதெய்வத்துக்கு அருகே சென்று குழந்தைவத்தின் முன் வாளை வைத்து பூஜை செய்து ஆசிர்வாதம் வாங்கிய பின்னே! மணமேடைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.  
ஆனால் இங்கு இருப்பது சரவணனின் குலதெய்வமல்ல லட்சுவின் குலதெய்வம் என்பதை சரவணன் கூட அறிந்திருக்கவில்லை.
வாளின் பாரம் தாங்காமல் தடுமாறியவளின் இடது கையின் கீழ் தனது இடது கையையும் வைத்தவன் தனது வலது கையை அவளது இடுப்பை சுற்றிக் கொண்டு போய் அவளது வலது கையின் கீழ் வைத்து அவளையும் வாளையும் சேர்த்தே! தாங்கிப் பிடிக்க அழகான ஓவியம் போல் இருந்தது அக்காட்ச்சி.
அவளை அணைத்திருந்தவன் அவளின் காதருகே மெல்லக் குனிந்து “இந்த ட்ரெஸ்ஸுல சூப்பரா இருக்க ஸ்ரீ” என புன்னகைக்க,
அவன் உதடுகள் காதுமடல் உரச மேனி சிலிர்க்க அவன் புறம் திரும்பி அவனை நிமிர்ந்து பார்த்தவள் “நீங்களும்தான் சையு” என மெதுவாக கூறி புன்னகைத்தாள்.
அவளை அணைத்தவாறே குலதெய்வத்துக்கு அருகே சென்றவன் வாளை தெய்வத்தின் முன் வைக்க பூஜையும் ஆரம்பமானது. அதன்பின் மீராவின் கையை பற்றியவாறே மணமேடையை நோக்கி நடந்தான் சைதன்யன்.
அத்தனை பேரும் இவர்களின் காதல் நாடகத்தை பார்த்தும், பாராமல் கல்யாண வேளைகளில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருந்தனர்.    
மணமேடைவரை பூக்களாலையே பாதை அமைத்திருக்க, மணமேடையில் பூ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. முகூர்த்த நேரம் வந்ததும், கெட்டிமேளம் கொட்ட தமிழர்களின் தாலி அணிவித்து சைதன்யன் மீராவை தனது சரிபாதியாக்கிக் கொண்டான்.
மணமேடை சடங்குகள் அனைத்தும் லட்சுமி அம்மாவின் குடும்ப வழக்கப்படி இருக்க, மாங்கல்யத்திலும், பெண்ணின் நெற்றியிலும் குங்குமம் வைத்து, அம்மி மிதித்து, மெட்டி அணிவித்து, அருந்ததி பார்த்து என எல்லா சடங்குகளும் இனிதே நடைபெற்றது.
அதன்பின் உறவுகள் ஒவ்வொருவராக வந்து வாழ்த்த ஆருயிர் நண்பனான சந்த்ரு சைதன்யனை கட்டியணைத்து “மாப்புள நீ தாலி கட்டினது சிஸ்டருக்கில்ல டா… டைமே செட் பண்ணாத பாங்கு. எப்படி வெடிக்கும்னு ஒரு கணக்கு இருக்கு. எப்ப வெடிக்கும்னு தெரியல. அவங்க பழைய நியாபகங்கள் வந்திருச்சுனா நீ செத்த டா” என வில்லச் சிரிப்பை உதிர்க்க,
“இப்போதான்டா கல்யாணமாச்சு… கொஞ்ச நேரம் சந்தோசமா இருக்க விடுறியா?”
சந்துருவின் பின்னால் வந்த தேவ் “தம்பி மீராகு பழைய நியாபகங்கள் வந்த பிறகு வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்னு கேனத்தனமான யோசிக்காம சட்டு புட்டுன்னு புள்ளய பெத்துக்க அதான் உனக்கு சேஃப்ட்டி” என கொழுத்திப் போட
 “என்னடா இப்படி பண்ணுறீங்களே டா” என்ற ரேஞ்சுக்கு சைதன்யன் இருவரையும் முறைத்தவாறு “நான் எப்போ அப்படி யோசிச்சேன். அதுவும் அவள பக்கத்துலயே வச்சிக்கிட்டு சாமியார் மாதிரி என்னால இருக்க முடியாது” சைதன்யன் வாய் விட்டே புலம்ப, சத்ருவும், தேவும் ஹைப்பை கொடுத்து நக்கலாக சிரித்துக்கொள்ள “இவனுங்க ஏதோ பிளான் பண்ணி போட்டு வாங்கி இருக்கானுங்க” சைதன்யனின் மனம் கூவியது.
மணமக்கள் இருவரும் குதிரை வண்டியில் வீடு நோக்கி அழைத்து வரப்பட்டு ஆலம் சுற்றி வீட்டினுள் உள்ள பூஜை அறையில் விளக்கேற்றி பால், பழம் வழங்கப்பட்டது. 
மணமக்களுக்கான விளையாட்டென குடத்தில் மோதிரம் போட்டு தேடுதல் நடைபெற சைதன்யன் தான் கண்டெடுத்த மோதிரத்தை மீராவின் கையில் யாரும் கவனிக்காத விதத்தில் கொடுத்திருந்தான். விழிவிரிய பார்த்தவளை கண்சிமிட்டி குறும்பாக புன்னகைக்க தன் மனதில் அவனை படம் பிடித்துக்கொண்டாள்.
மணமகன் மணமகளின் கையிலிட்ட மருதாணியில் தன் பெயரை தேட வேண்டும் என இளவட்டங்கள் கோரஸாக கூச்சலிட “உன் பேர் தனஞ்சயன் என்றுதான் மாப்புள இருக்கும்” சந்துரு காதை கடிக்க, அவனை முறைத்த சைதன்யன் அதிக நேரம் எடுக்காது மீராவின் இடதுகை  மோதிர விரலில் மருதாணியால் எழுதியிருந்த ‘சையு’  என்ற அவன் பெயரை கண்டு பிடித்தான்.
இன்னும் சில விளையாட்டுக்களும் சிறப்பாக நடைபெற காலை சாப்பாடு வீட்டில் பெரிய விருந்தாக விதவிதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, மதியம் மணமக்கள் இரவில் நடைபெறும் ரிஷப்சனுக்குகாக சென்னையை நோக்கி பயணப்பட்டனர்.
கல்யாணத்தில் உறவினர்கள் மாத்திரம் கலந்துகொள்ள எல்லாவற்றையும் புகைப்படக்கருவி அழகாக உள்வாங்கியது. 
நேற்றிரவு சரியாக தூங்காத மீரா சைதன்யனின் மடியில் கார் பயணம் முழுவதும் தூங்கி இருந்தாள். அவளை அணைவாக பிடித்ததவனும் சிறிது நேரத்தில் கண்ணயர்த்திருந்தான்.
நான்கு மணித்தியால தரைவழிப் பயணத்தை முடித்துக்கொண்ட பிறகு ரிஷப்ஷன் நடைபெறும் மண்டபத்துக்கு வந்திறங்கினர் மணமக்கள்.
இவர்கள் வருவதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்பாக மீராவின் குடும்பமும், சந்துரு மாறும் நேசமணி குடும்பம் மண்டபத்துக்கு வந்து மணமக்களை வரவேற்க காத்திருந்தனர்.
சரவணன் மற்றும் லட்சுமி அவர்களின் சொந்தப்பங்கள் மணமக்களோடு வந்துசேர மணமக்களை சற்று ஓய்வெடுக்குமாறு பணித்தார் லட்சுமி.
“வரும் போதே நல்லா தூங்கிட்டேன்” என சைதன்யன் மறுத்துவிட
அவனை இரண்டு புருவங்களை உயர்த்தி “மாப்புள நீ பொழச்சிக்குவடா பெஸ்ட் நைட்டுல தூங்காம இருக்க, வரும் போதே! தூங்கிட்டியா?” என்று சந்துரு வார அவன் கூறி முடிக்கும் முன் அவன் தலையில் யாரோ கொட்ட “அம்மா” என்று கத்தியவாறே திரும்பிப் பார்த்தான்.
“அம்மாதான்டா உன் அம்மாவேதான்” என சந்துருவின் அம்மா அவன் காதை திருகி இருந்தாள்.
“புள்ளய பெக்கா சொன்னா தொல்லையா பெத்து வச்சிருக்க, என்ன பேச்சு பேசுறான். சின்ன பொண்ணுங்க இருக்காங்களேன்னு பாக்குரானா?” சந்துருவின் தங்கை இன்னும் ஏற்றி விட
“உனக்கு இது பத்தாதே!” என சௌமியா முறைத்தாள்.
“ஹப்பா மீ எஸ்கேப்” என சைதன்யன் மானசீகமாக நெஞ்சை தடவ இவர்களின் பேச்சு மீராவுக்குத்தான் வெக்கத்தில் முகம் சிவக்க வைத்துக் கொண்டிருந்தது. மனைவியின் முகச்சிவப்பை ரசித்தவாறு அவளை அணைத்தபடி இடத்தை காலி செய்தான் சைதன்யன்.
“இதெல்லாம் ப்ரெண்ட்ஸ்குள்ள சாதாரணம் மா.. இதெல்லாம் பெருசு படுத்திகிட்டு விடுமா. இல்லையாடா சைதன்யா” அன்னையை சமாதானப்படுத்த
“அவரு எப்பயோ போய்ட்டாரு” சௌமியா நக்கலாக சிரித்தவாறு நடந்தாள்.
“போய்ட்டானா” அன்னையும் தங்கையும் முறைத்த முறைப்பில் நேசமணி வருவதைக் கண்டு அடுத்த கச்சேரி ஆரம்பமாவதற்குள் நழுவினான் சந்துரு.
மீராவுக்கு அந்த மண்டப அலங்காரம் பணத்தை வீசி செலவு செய்து செய்திருப்பார்கள் என்றே தோன்றியது. அவளின் கேள்விக் கணைகளை எதிர்பார்த்து ஒவ்வொருவரும் காத்திருக்க, எந்த கேள்வியையும் கேளாது மீரா சைதன்யனுடன் கைகோர்த்து நடந்து வந்து மேடையில் போடப்பட்டிருந்த கதிரையில் அமர ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து ஏமாற்றத்தை வெளிப்படையாகக் காட்டலாயினர்.
சைதன்யன் வாங்கியிருந்த நீலநிற டிசைனர் புடவையில் தங்கநிற ஜரிகையிட்டு இருக்க, புடவையின் விலையை அதன் நேர்த்தியே சொல்லியது. அவள் அதை பற்றி எந்த கேள்வியும் யாரிடமும் கேட்கவில்லை.
சைதன்யன் அணிந்திருந்த கோட்சூட் கூட நீல நிறத்தில் இருக்க மண்டபம் முழுவதும் நீலம் மற்றும் வெள்ளை மலர்களும் அதற்கேற்றவாறு வெள்ளை மற்றும் பச்சை நிற சேர்கையாக நேர்த்தியான அலங்காரம் செய்யப்பட்டிருக்க இரவு விளக்கொளியில் மண்டபமே அழகாக ஜொலித்தது.
மெல்லிய இசை அரங்கத்தில் காற்றில் தவழ்ந்து வருவது போல் இனிமையாக இசைக்க, உணவும் பூப்பே முறையில் வழங்கப்பட்டது.
தொழில் சாம்ராஜ்ஜியத்தில் முக்கிய புள்ளியாக விளங்கும் சரவண சௌதாகரின் வீட்டுத் திருமணம். பணக்காரர்கள், அரசியல்வாதிகள், சில நடிகர்கள் என அந்நகரத்தில் உள்ள முக்கியமான வி,ஐ.பிக்கள் அனைவரும் வருகை தந்திருக்க, மணமக்களை அறிமுகப்படுத்தும் படலமும் நடைப்பெற்றது.
சைதன்யனுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் பயம் இருந்தாலும் அந்த கஷ்டத்தையும் மீரா அவனுக்கு கொடுக்காது சௌமியாவை அருகிலையே நிறுத்தி வைத்துக்கொண்டு ஒவ்வொருவராக வந்து வாழ்த்தி விட்டு செல்ல யாராவது அவனின் பெயரை கூறி அழைத்தால் அது காதில் விழவில்லை என்பது போல் சௌமியாவுடன் பேசிக் கொண்டிருப்பது போல் பாசாங்கு செய்வாள்.
சைதன்யனுக்கு “திக் திக்” என்று நெஞ்சம் அடித்துக் கொள்ளும். மீரா சௌமியாவுடன் பேசுவதை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொள்வான்.
அவள் அவனை ஓரப்பார்வை பார்த்து “அதை மறைக்குறீங்க? ஏன் மறைக்கீறீங்க? சையு ” என தனக்குள்ளே! கேள்வி கேட்டுக்கொள்வாள். 
ரிசப்ஷனுக்கு ஆபீஸ் ஸ்டாப் யாரையும் சரவண அழைத்திருக்கவில்லை. தொலைக்காட்ச்சிக்கோ, பத்திரிக்கைக்கோ எந்த ஒரு புகைப்படமும் வழங்கப்படவுமில்லை. இதனால் மீண்டும் சௌமியா மீரா கூட்டணி டவுட் நம்பர் வான் ஆபீஸ்ல ஏதும் தில்லுமுல்லு நடக்கிறதா சைதன்யன் கண்டு பிடிக்கத்தான் தனஞ்சயனா இருக்கான் என்ற முடிவுக்கு வந்தனர்.
சைதன்யன் வாளேந்தி மீராவுக்கு வாக்கு கொடுக்கும் புகைப்படத்தை சந்த்ரு தனது பேஸ்புக்கில் போட்டுவிட அதை பார்த்துவிட்டு வாளை தேடி ராஜஸ்தானிலிருக்கும் “அவன்” வரப்போகிறான் என அறியாதவர்கள் இங்கே சந்தோசமாக நடனமாடிக் கொண்டிருந்தனர்.
ரிஷப்ஷன் முடிய நடு இரவை நெருங்க மணமக்கள் மீராவின் வீட்டுக்கே அழைத்துச் செல்லப்பட்டனர்.
நாளைக்கு என்ன கலாட்டா பண்ண போறாங்களோ! என்ற எண்ணம்தான் மீராவின் சிந்தனையில்.

Advertisement