சென்னைக்கு மிக மிக அருகில் என மனை விற்பனையாளர்கள் விளம்பரம் செய்ய ஏதுவாக அமையப்பெற்ற சென்னையை கடந்த புறநகர் பகுதியில், அலைபேசியில் அனுப்பப்பட்டிருந்த வரைபடத்தின் வழிகாட்டுதலின்படி கார் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தான் அமுதேவ்.
அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலைகாட்டத் தொடங்கியிருந்த கட்டிடங்களுக்கு மத்தியில் இருந்த ஒரு வீட்டின் முன் காரை நிறுத்தினான்.
தான் வந்து சேர வேண்டிய இடம் இது தானா என்று ஒருமுறை உறுதி செய்தவன், காரை ஓரமாக நிறுத்திவிட்டு வீட்டை நோக்கி அமுதேவ் நடக்க, விருப்பமற்ற மனநிலையுடன் வேண்டா வெறுப்பாக அவனைப் பின் தொடர்ந்தான் தனுஜ்.
வீட்டின் பெரும்பகுதியில் அழகும் மணமும் நிறைந்த மலர்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட தோட்டத்திற்கு மத்தியில் அளவான வீடு இருக்க.. வாசலைக் கடக்கும்போது நாசியை துளைத்துச் சென்ற மல்லிகை மனத்தையும் மரிக்கொழுந்து வாசத்தை நுகர்ந்து கொண்டே.. வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான் அமுதேவ்.
அவனின் வருகைக்காகவே காத்திருந்தது போல சற்றும் தாமதிக்காது கதவைத்திறந்து வெளியே வந்த கண்ணன். “ ஹலோ மை பாய் எப்படி இருக்க?, எப்போ இந்தியா வந்த?, நீ மட்டும் தனியாவா வந்த?, உன் மிஸஸ் விஷல்யாவையும் கூட கூட்டிட்டு வந்து இருக்கலாமே! “ என்று எதிரில் இருந்தவன் பதிலைக் கூட எதிர்பாராமல் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே சென்றார்.
தன்னிடம் வரிசையாக அடுக்கப்பட்ட கேள்விகளில் எதற்கு முதலில் பதில் தருவது என்ற யோசனையுடன் அமுதேவ் சில நொடி அமைதி கொள்ள… “ என்னப்பா நான் கேட்டுட்டே இருக்கேன் நீ எதுக்கும் பதில் சொல்லாம அமைதியா இருக்க, உடனே பார்க்கனும்னு வேற சொன்ன ஏதாவது பிரச்சனையா?” என்று அக்கறையுடன் வினவினார் கண்ணன்.
“ பிரச்சனை எல்லாம் ஒன்னுமில்ல சார்.. “ என்று அமுதேவ் மறுக்கத் துவங்க… “ இப்படி வரிசையா கேள்வி கேட்டுட்டே போனா எந்த கேள்விக்கு முதல்ல பதில் சொல்றதுன்னு குழப்பமா இருக்காதா!, அதான் என் நண்பன் அமைதியாகிட்டான், அப்படி தான நண்பா..” என்றான் தனுஜ்.
அமுதேவுடன் வந்த புதியவனை மேலும் கீழுமாய் ஆராய்ந்து முடித்தவர், “ யாருப்பா இந்த ஆர்வக்கோளாறு உன்கிட்ட கேள்வி கேட்டா… இவரு பதில் சொல்றாரு..” என்று தனது வழமையான கிண்டலுடன் வினவினார் கண்ணன்.
“ சாரி சார் இவன் தனுஜ், என்னோட பெஸ்ட் பிரண்ட், ரெண்டு பேரும் சேர்ந்து தான் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி நடத்திட்டு இருக்கோம். “ என்று தன்னுடன் வந்திருந்த நண்பனை அறிமுகம் செய்து வைத்தான் அமுதேவ்.
“ முதல் தடவை பார்க்கும்போதே! ஆர்வக்கோளாறுன்னு சொல்லிட்டோமேன்னு உள்ளுக்குள்ள கொஞ்சம் வருத்தமா இருந்தது, ஆனா இப்போ அந்த வருத்தம் இல்ல.. சரியா கண்டுபிடிச்சுட்டேன்னு சந்தோசமா இருக்கு” என்று மீண்டும் அவனின் காலை வாரினார் கண்ணன்.
“ பதிலே பேச விடாம வரிசையா கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு இவர் எண்ணிய ஆர்வக்கோளாறு சொல்றாரு.. நல்ல காமெடி..“ என்று அமுதேவ் காதில் மெதுவாய் தனுஜ் கிசுகிசுக்க.
தன்னைக் கிண்டல் செய்கிறான் என்று தெரிந்தும் அதை பெரிதுபடுத்தாமல்… “ நல்ல காமெடி தான்.. அப்படி ஓரமா உட்கார்ந்து சிரிச்சிட்டு வா தம்பி. அதுவரைக்கும் நாங்க பேசிட்டு இருக்கோம்.“ என்றார் கண்ணன்.
“ சாரி சார் இவன் எப்பவும் இப்படித் தான் அவசர குடுக்கைத் தனமா ஏதாவது பேசிடுவான். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க..” என்று தன் நண்பனுக்கு பதிலாக மன்னிப்பு வேண்டினான் அமுதேவ்.
“ சேச்சே நானும் உன் பிரென்ட் மாதிரி தான் முன்னப் பின்ன தெரியாதவங்க பேச்சை எல்லாம் பெருசா எடுத்துக்க மாட்டேன். ” என்று தனுஜ் பாணியிலேயே பதில் தந்து சிரித்தார் கண்ணன்.
“ என்னது அவசர குடுக்கையா? அவர் என்னடான்னா ஆர்வக்கோளாறுன்னு சொல்றாரு, நீ என்னடான்னா அவசர குடுக்கைன்னு சொல்லுற, என்னைப் பாத்தா எப்படி தெரியுது உங்களுக்கு? ” என்று கோபத்துடன் தனுஜ் அமுதேவை முறைக்க…
“ அவசரக் குடுக்கையும் ஆர்வக்கோளாறும் சேர்ந்த கலவை மாதிரி தெரியுது” என்றார் கண்ணன்.
“ வீட்டுக்குள்ள கூப்பிடுற ஐடியா இருக்கா, இல்ல இப்படியே வாசல்ல நிக்க வச்சு இப்படி நோஸ் கட் பண்ற மாதிரி பேசியே அனுப்பிடுவீங்களா?” என்று குதர்க்கமாக வினவினான் தனுஜ்.
“ உங்க விருந்தோம்பல் பார்த்து மெய்சிலிர்த்துப் போயிட்டேன். “ என்று கண்ணன் வார்த்தை ஒவ்வொன்றையும் குத்திக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் பேசினான் தனுஜ்.
“ வீடு தேடி வந்தது எதிரியா இருந்தாலும் உள்ள வான்னு கூப்பிடுறது தான் நம்ம பண்பாடு, எதிரியையே வீட்டுக்குள்ள விடும்போது உன்னை விடமாட்டேன்னா! உள்ள வா தம்பி,” என்று வீட்டின் கதவை நன்றாக திறந்து வைத்து வந்தவர்களுக்கு வழிவிட்டு நின்றார் கண்ணன்.
“ என் பிரெண்ட்க்காக நான் சாரி கேட்டுகிறேன் சார். “ என்று அமுதேவ் குற்றவுணர்வுடன் மன்னிப்பு வேண்டிட… “ அடடா இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல, இதுக்கு எதுக்கு மன்னிப்பு கேட்டுட்டு. பார்க்கும்போதே தெரியுது உன் பிரண்டு ஏதோ ஒரு டிப்ரஷன் இருக்கான்னு, அதை யார் மேல காட்டுறதுன்னு தெரியாம, பாக்குறவங்க மேல எல்லாம் காட்டிட்டு இருக்கான். இந்த மாதிரி டென்ஷன் பார்ட்டிகளை என் லைஃப்ல எவ்வளவோ பார்த்துட்டேன், சோ ஃபீல் ஃபிரீ” என்று பெருந்தன்மையாக தனுஜ் செயலை மன்னித்தார் கண்ணன்.
தன் வீடு தேடி வந்தவர்களை அமர வைத்துவிட்டு, “ பஸ்ட் டைம் வீட்டுக்கு வந்து இருக்கீங்க என்ன சாப்பிடறீங்க டீ காபி ஜூஸ்… “ என்று தன் விருந்தோம்பலை துவங்கினார் கண்ணன்.
“ அதெல்லாம் ஒன்னும் வேணாம் சார். இப்பதான் ஃப்ரெண்டோட கெட் டு கெதர் பார்ட்டில இருந்து வந்தோம். “ என்று அமுதேவ் மறுத்து கொண்டிருக்க.. “ எனக்கு டிக்காஷன் கொஞ்சம் அதிகமா போட்டு ஒரு ஃகாபி. “ என்றான் தனுஜ்.
“ நல்ல வேளை ஃகாபி சொன்ன !, எனக்கு அதுதான் ஈசியா வரும்” என்று சிரித்த முகத்துடன் அங்கிருந்து அகன்றார் கண்ணன்.
சங்கடம் இல்லாமல் தன் விருப்பத்தை கூறிய நண்பனை அமுதேவ் முறைக்க… “ என்ன எதுக்குடா முறைக்கிற? அவர்தான… ஃபீல் ஃபிரீன்னு சொன்னாரு. அதான் ஃபிரீயா ஒரு ஃகாபி கேட்டேன். ” என்றான் தனுஜ்.
“ அதுக்காக பார்மாலிட்டிக்கு கூட வேணான்னு சொல்ல மாட்டியா?, நான் வந்ததிலிருந்து பாத்துட்டு இருக்கேன் உன் பேச்சும் நடவடிக்கையும் சரியில்ல ஏன் கண்ணன் சார் கிட்ட ஒரு மாதிரி ஃபிஹேவ் பண்ணுற?” என்று நண்பனின் நடவடிக்கைக்கான காரணத்தை வினவினான் அமுதேவ்.
“ நான் நார்மலா தான் பிகேவ் பண்ணுறேன் உனக்கு தான் வித்யாசமா தெரியுது..” என்று தனுஜ் அசட்டையாக பதில் தர.. “ இல்ல நீ வேணும்னு தான் ஃஇரீடேட் பண்ணுற மாதிரி நடந்துக்குற!, உனக்கு நான் இங்க வந்தது புடிக்கல அப்படித்தானே!” என்றான் அமுதேவ்.
“ ஆமா புடிக்கல.. அதுக்கு என்ன இப்போ?” என்று எரிச்சலுடன் வினவினான் தனுஜ்.
“ ஏன் பிடிக்கல?” என்று ஒற்றை வரியில் அமுதேவ் விசாரிக்க…” ஏன்னு உனக்கு தெரியாதா?, உன் அப்பா அம்மாவுக்கு எந்த அளவுக்கு சப்போர்ட்டா இருக்காருன்னு நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டியது இல்லை!, இந்த மாதிரி கவுன்சிலிங்குக்கு அவரு தான் சரியான ஆள். அப்படி இருக்கும்போது அவரை விட்டுட்டு இன்னொருத்தர் கிட்ட அட்வைஸ் கேட்டு வந்து உட்கார்ந்து இருக்கியே, உனக்கு அசிங்கமா இல்ல” என்றான் தனுஜ்.
“ நீ சொல்றது சரிதான் அப்பா அம்மாவுக்கு சப்போட்டா இருக்காரு தான், ஆனா அதுல ஒரு வித பயம் தெரியும். என்னால அவர மாதிரி வைஃப் கிட்ட பயந்து நடுங்க முடியாது“ என்று அமுதேவ் சொல்லிக்கொண்டிருக்க… வீட்டின் மாடி அறையில் இருந்து இறங்கிவந்த கண்ணனின் மனைவி கமலி… “ வாங்க தம்பி. எப்படி இருக்கீங்க?” என்று நலம் விசாரித்தார்.
“ யா…. பைன் மேம், “ என்று மரியாதையுடன் எழுந்து நின்று கூறினான் அமுதேவ்.
அமுதேவ் எழுந்து கொள்ளவும் உடன் எழுந்து நின்ற தனுஜைப் பார்த்து நட்புடன் புன்னகை செய்தவர், “ டீ காபி… “ என்று விருந்தோம்பலின் உபசரிப்பை துவங்கிட..” இதோ ஃகாபி ரெடி” என்று மற்றவர்கள் இருக்கும் இடம் வந்து சேர்ந்தார் கண்ணன்.
“ உங்களை யார் இதையெல்லாம் செய்ய சொன்னது, மாமா. என்னை கூப்பிட்டு இருக்கலாம்ல.” என்று கமலி உரிமையுடன் கோபம் கொள்ள… “உன் வேலை எல்லாம் முடிஞ்சதா?, அதை முடிக்காம உன்னை யாரு கீழ இறங்கி வர சொன்னது?” என்று மனைவியைப் போலவே உரிமையுடன் அதட்டினார் கண்ணன்.
“ வேலை இருக்கு தான் அதுக்காக வீடு தேடி வந்தவங்கள உபசரிக்காம இருக்க முடியுமா?” என்றபடி கண்ணன் கையில் இருந்த காபி கோப்பையை எடுத்து விருந்தாளிகளுக்கு வழங்கிவிட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தார் கமலி.
“ ஹேய் என்ன சாவகாசமா உக்காந்துட்ட.. போ போய் கதை எழுது, இன்னைக்கு நைட்டுக்குள்ள நீ கிளைமாக்ஸ் எழுதி முடிச்சிருக்கணும், நான் வந்து செக் பண்ணுவேன், எண்டிங் எனக்கு திருப்தியா இல்லைன்னா மறுபடியும் எழுதச் சொல்லுவேன் பாத்துக்கோ… “ என்று அமைதியாய் அமர்ந்து இருந்த மனைவியின் கையைப் பற்றி எழுப்பிவிட முயன்றார் கண்ணன்.
“ அட இருங்க மாமா.. தம்பி வந்திருக்கு கொஞ்ச நேரம் பேசிட்டு போறேன் “ என்று கெஞ்சாத குறையாக கணவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார் கமலி.
“ அவங்க என்னை தான் பார்க்க வந்திருக்காங்க, உன்னை இல்ல… அதனால உனக்கு இங்க வேலை இல்ல கிளம்பு கிளம்பு… “ என்று வம்படியாக மனைவியை அங்கிருந்து அகற்ற முயன்றார் கண்ணன்.
விடாமல் நச்சரிக்கும் கணவனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு, “ சரிங்க தம்பி நீங்க பேசிட்டு இருங்க, எனக்கு மேல கொஞ்சம் வேலை இருக்கு அதை முடிச்சிட்டு வரேன். “ என்று வந்தவர்களிடம் அனுமதி பெற்று தான் பாதியில் விட்டு வந்த பணியை மேலும் தொடர்ந்திட அறைக்குச் சென்றார் கமலி.
“ சாரிப்பா தப்பா எடுத்துக்காதீங்க, கொஞ்ச நேரம் பேச உட்கார விட்டா, அவ்வளவு தான் கதை எழுதுறதையே மறந்துட்டு இங்கேயே அரட்டை அடிச்சிட்டு உட்கார்ந்திருப்பா. அப்புறம் சொன்ன நேரத்துக்குள்ள கதையை முடிக்க முடியலைன்னு என்கிட்ட தான் புலம்பித் தள்ளுவா.. அவ புலம்பலை கேட்க பயந்து தான் இப்படி விரட்டி அடிக்கிறது.“ என்றார் கண்ணன்.
என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் தனுஜ் பார்த்திருக்க… “ நீ முழிக்கிறத பார்த்தா, நாங்க யாரு என்ன விபரம்னு எதுவுமே சொல்லாம உன் பிரண்டு உன்னை இங்க இழுத்துட்டு வந்த மாதிரி இருக்கே. “ என்றார் கண்ணன்.
“ என் பெயர் கண்ணன் பேங்க்ல மேனேஜிங் பொசிஷன்ல இருந்தேன். இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் ரிட்டயர் ஆனேன். இப்போ வந்தாளே அவ என் வைஃப் கமலி நாவல் ரைட்டர். நானும் உன் பிரண்டும் அந்தமானுக்கு கப்பல்ல போகும்போதுதான் மீட் பண்ணினோம். ஆக்சுவலி எனக்கு உன் ஃப்ரெண்ட் பார்த்ததும் என்னையே பார்த்த மாதிரி இருந்தது. சோ நிறைய பேசணும்னு ஆசைப்பட்டேன். ஆனா அன்னைக்கு இருந்த சூழ்நிலைக்கு அதிகமா பேசிக்க முடியல, அதனால ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் ரெண்டு பேரும் ஒரு நாள் எங்க வீட்டுக்கு விருந்துக்கு வரணும்னு சொல்லி விசிட்டிங் கார்டு குடுத்துட்டு வந்தோம். ஆனா உன் ஃப்ரெண்ட் மட்டும் தனியா வந்திருக்கான். சாரி சாரி வைஃபை விட்டுட்டு உன்னை கூட கூட்டிட்டு வந்திருக்கான். “ என்று அமுதேவ்விற்கும் அவருக்கும் ஏற்பட்ட பழக்கத்தை விவரித்தார் கண்ணன்.
“ என்னது உங்களையே பார்த்தமாதிரி இருந்ததா!, அப்போ தேவ் உங்களோட ஜெராக்ஸ் ஃகாப்பினு சொல்லுங்க… சரி தான் சரியான இடத்துக்குத் தான் வந்திருக்க நண்பா… “ என்று புருவம் உயர்த்தி ஏளனமாய் கூறினான் தனுஜ்.
நண்பனின் பார்வையில் இருந்த அர்த்தம் புரிந்ததும் கண்ணன் புறம் திரும்பிய அமுதேவ்.. குற்ற உணர்வுடன் தலை கவிழ்ந்தபடி, “ சாரி சார் நான் உங்களை மாதிரி இல்ல. நீங்க உங்க வைஃப் கதை எழுதுறதுக்கு சப்போட்டா இருக்கிற மாதிரி, நான் என்னோட வைஃப் பிசினஸ்க்கு சப்போட்டா இருந்தது இல்ல. எனக்கு என் வைஃப் ஹவுஸ் வைஃப்பா இருந்தா மட்டும் போதும்னு நினைக்கிறேன். பட் அவ என் பேச்சை கேட்கிறது இல்ல. பிசினஸ் பண்றதுல பிடிவாதமா இருக்கா. இப்போ கூட ஒரு பெரிய கம்பெனி கூட ப்ராஜக்ட் பண்ணப் போறா, எனக்கு அது சுத்தமா பிடிக்கல. எனக்குப் பிடிக்கலன்னு தெரிஞ்சும் அதை அவ செய்ய நினைக்கிறா. எனக்குப் பிடிக்காததை செய்றதால எங்க ஒருவேளை என்னையும் அறியாம அவளை காயப்படுத்திடுவேனோன்னு பயமாயிருக்கு. என்ன பண்றதுன்னு புரியாம குழம்பி இருக்கும் போதுதான் உங்க நியாபகம் வந்தது, அதான் உடனே உங்களைத் தேடி வந்தேன் “ என்றான்.
“ அப்போ உன்னோட வைஃப் பிஸினஸை தடுக்க ஐடியா கேட்டு தான் என்கிட்ட வந்திருக்க அப்படித்தானே!. என்னைப் பாத்தா உனக்கு எப்படி தெரியுது குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்கிற ஆள் மாதிரி தெரியுதா?” என்று வினவிய கண்ணனின் குரலில் எந்த வித உணர்வையும் கண்டுபிடிக்க முடியாமல் திணறிய அமுதேவ். “ அய்யோ சார்.. நான் அந்த அர்த்தத்துல கேட்கல… நீங்க உங்க வைஃப் ரைட்டிங் கெரியருக்கு ரொம்பவே சப்போர்ட்டிவ்வா இருக்கீங்க, உங்களுக்குள்ள இருக்கிற அண்டர்ஸ்டாண்டிங் வேற லெவல்… நீங்க எப்படி உங்க வைஃப்க்கு சப்போர்ட்டிவ்வா இருக்கீங்கங்கிற டிப்ஸ்ஸை எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுத்தீங்கன்னா, நானும் என் வைஃப் பிசினஸ் கெரியருக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு சப்போர்ட் பண்ணுவேன். பிகாஸ் என்னால அவளை இழக்க முடியாது, சோ அவளுக்காக என்னை கொஞ்சம் மாத்திக்க முயற்சி பண்ணுறேன், அந்த முயற்சிக்கு உங்களால உதவி செய்ய முடியுமான்னு கேக்கத்தான் வந்தேன். “ என்று தான் வந்ததற்கான நோக்கத்தை விரிவாக விளக்கினான் அமுதேவ்.
அமுதேவ் பேசியதை அமைதியுடன் கேட்டுக் கொண்டிருந்த கண்ணன்.. அவன் மனநிலையை புரிந்து கொண்டதுபோல் புரிதலான புன்னகை செய்து.. “ அட்வைஸ் கேட்குறதால, டிப்ஸ் கொடுக்குறதால மட்டும் எதுவும் மாறிடாது. நாம நம்மள மாத்திகணும்னு நினைச்சா அந்த மாற்றத்தை நமக்குள்ள உணர ஆரம்பிக்கணும், அப்போ தான் அது நிலைச்சு இருக்கும். அடுத்தவங்க வார்த்தையை கேட்டு வர மாற்றம்… எந்த நேரத்துல வேணாலும் காணாம போயிடலாம். சோ இப்போ நான் உனக்கு அட்வைஸ் பண்ண போறது இல்ல, என் அனுபவத்தை சொல்லுறேன், என் கதையை கேட்டதுக்கு அப்புறம் மே பீ நீ எதிர்பார்க்கிற மாற்றம் உனக்குள்ள உருவாகலாம், அதனால உன் லைஃப் சேஞ்ச் ஆகலாம். “ என்றார் கண்ணன்.
“ எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தர் அவரு வைஃப்க்காக சொந்த அம்மாவையே எதிர்த்து வீட்ட விட்டு வெளிய வந்து, செஞ்சுட்டு இருந்த வேலையை விட்டுட்டு வைஃப்க்கு சப்போட்டா பிஸினஸை பார்த்துக்கிட்டு, அவங்க கூடயே இப்ப வரைக்கும் ஒண்ணா சந்தோஷமா இருக்காரு. இந்த மாதிரி ஏதாவது எக்ஸ்ட்ராடினரி அனுபவம் ஏதாவது உங்களுக்கு இருக்கா?” என்று அமுதேவ் தந்தை கடந்து வந்த பாதையை விட வேறு எதுவும் கடினம் இல்லை என்னும் மனநிலையில் இருந்த தனுஜ் கிண்டலுடன் வினவினான்.
“ உனக்கு தெரிஞ்சவரோட அனுபவத்தை என்கிட்ட எதிர்பார்த்தா எப்படி தம்பி!, விதி இருக்கே அது ரொம்ப வித்தியாசமானது. இந்த வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறதுக்குள்ள ஏதாவது ஒரு அனுபவத்தை எல்லாருக்கும் கொடுக்கும், ஆனா அது ஒரே மாதிரி அனுபவமா இருக்காது. உனக்கு தெரிஞ்சவர் அவரோடு அனுபவத்துல என்ன பாடம் கத்துக்கிட்டாரோ எனக்கு தெரியாது. என் அனுபவத்துல நான் கத்துக்கிட்ட பாடம், மனைவியா வாழ்க்கைல இணையுறவ நம்ம வாழ்க்கையோட சரிபாதியே தவிர, கடவுள் நமக்காக அனுப்பி வச்ச வேலைக்காரி இல்லை. அவங்க உணர்வை மதிக்கணும் திறமைக்கு அங்கீகாரம் கொடுக்கலனாலும் பரவாயில்லை அவமதிக்காமயாவது இருக்கணும், அப்படி அவங்க உணர்வுகளையும் திறமையையும் நாம மதிக்க ஆரம்பிச்சா, அவங்க மட்டும் இல்ல.. அவங்க கூட சேர்ந்து நம்ம வாழ்க்கையும் நிம்மதியாவும் சந்தோஷமாவும் இருக்கும்.” என்றார் கண்ணன்.
அதுவரை கண்ணனின் செயல்கள் ஒவ்வொன்றையும் அவமதிப்பது போல் அசட்டையாக அமர்ந்திருந்த தனுஜ், அவரின் தெளிவான பேச்சில் தன் தவறு புரிந்து சங்கடத்துடன் நெளிந்தபடி எழுந்து நேராக அமர்ந்து கொள்ள…
தனுஜிடம் உண்டான மாற்றத்தை கவனித்து உள்ளக்குள் புன்னகைத்துக் கொண்டு அமுதேவ் புறம் திரும்பி பேசத் துவங்கினார் கண்ணன், “ உன்னை பார்க்கும் போது என்னையே பார்த்த மாதிரி இருந்ததுன்னு சொன்னேனே!, அது இப்போ இருக்கிற என்னை இல்ல!, பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இருந்த என்னை!, நானும் உன்னை மாதிரிதான் ஆம்பளங்கிற திமிருல என் வைஃப் உணர்வுகளுக்கு மதிப்பு தராம அடாவடியா நடந்துட்டு இருந்தேன். “ என்று நிறுத்த…
“ அதெப்படி முதல் தடவை பார்க்கும் போதே.. இவன் ஆணாதிக்கம் பிடிச்சவன்னு கண்டுபிடிச்சீங்க சார்…” என்று தனது சந்தேகத்தை தனுஜ் வினவ… “ அது இப்போ ரொம்ப முக்கியம்.. வாயை மூடிட்டு கதையை கேளுடா “ என்று முறைத்தான் அமுதேவ்.
நண்பர்களின் சண்டையை ரசித்தபடி.. “ அது ஒன்னும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லையே!, அந்தமான் ட்ரிப் போகும்போது ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் மெம்பர்ஸ் எல்லாரும் ஒரே நேரத்துல தான் சாப்பிட போவோம், அப்போ உன் ஃபிரண்டுக்கு என்னப் பிடிக்குமோ அதைத்தான் அந்தப் பொண்ணு தட்டுல அடுக்கி வைப்பான், அந்தப் பொண்ணு இதெல்லாம் பிடிக்காதுன்னு சொன்னா… ஒரு தடவை ட்ரை பண்ணிப் பாருன்னு கட்டாயப் படுத்துவான், அதே நேரம் அந்தப் பொண்ணு எதையாவது எடுத்து இவன் தட்டுல வைச்சா… எனக்குப் பிடிக்காததை செய்யாதன்னு அதட்டுவான். இந்த ஒரு விஷயத்துலயே தெரியுதே இவனுக்கு பிடிச்சதை மட்டும்தான் அந்த பொண்ணு செய்யனும்னு எதிர்பார்க்கிறான்னு. “ என்று அமுதேவ் குறித்து தான் அனுமானித்த விபரங்களை கூறினார் கண்ணன்.
“ வாரேவ்வா.. சரியா ஃகெஸ் பண்ணிருக்கீங்க சார்.” என்று தனுஜ் மெச்சிக்கொள்ள… “ நான் நீங்க நினைக்கிற அளவுக்கு ஆணாதிக்கமான ஆள் இல்ல.. இப்பகூட ஷாலுவுக்காக என்னை மாத்திக்க அட்வைஸ் கேட்டு தான் உங்ககிட்ட வந்திருக்கேன். “ என்று அவர் புரிதலில் இருந்த தவறை திருத்த முயன்றான் அமுதேவ்.
“ ஹுஹும்… உன்னோட முதல் ஆப்ஷன் அவளை மாத்த வழி இருக்கான்னு தேடுறது தான். அடுத்த ஆப்ஷன் தான் அவளுக்காக உன்னை மாத்திக்கிறது. என்ன செய்றதுன்னு தெரியலன்னு சொன்னாயே அது ரொம்ப கரெக்ட், உண்மைய சொல்லனும்னா நீ குழப்பத்துல இருக்க தேவ். உன் மனைவிக்காக உன்னை மாத்திக்க நினைச்சாலும், உனக்குள்ள ஏதோ ஒரு உறுத்தல் இருந்துகிட்டே இருக்கு. “ என்று அமுதேவ் எண்ணத்தை படித்தவர் போல தெளிவாய் கூறிட… “ சார்.. யூ ஆர் ரியலி கிரேட் சார்.. எப்படி சார் இப்படி பட்டு பட்டுனு உண்மையை போட்டு உடைக்கிறீங்க” என்று மெய் சிலிர்த்த படி கூறினான் தனுஜ்.
அவமானத்துடன் தலை கவிழ்ந்து அமுதேவ் அமர்ந்து விட… “ டேய் நண்பா… நீ சரியான இடத்துக்கு தான் வந்திருக்க… இந்த மாதிரி உன்கிட்ட உன் அப்பா கூட பேச முடியாது..” என்று நண்பனின் செயலை மெச்சிக் கொண்டான் தனுஜ்.
அமுதேவின் முகத்தை கண்டு இரக்கம் கொண்டவர்.. “ ஆணாதிக்கக் குணம் உனக்கு மட்டும் இல்ல நம்ம நாட்டுல பாதி பேருக்கு இந்த குணம் இருக்கத்தான் செய்யுது. ஆண்களுக்கு மட்டுமல்ல சில பெண்களும் ஆண்களுக்கு அடங்கி போறது தான் பெண்களோட பிறவிக்குணம்னு நினைக்கிறாங்க. ஒரு சிலர் இதை வெளிப்படையா காட்டிடுறாங்க, இன்னும் சிலர் யாருக்கும் தெரியாம உள்ளுக்குள்ளேயே மறைச்சுக்கிறாங்க. நானும் ஒரு காலத்துல உன்னை மாதிரிதான் வைஃப் வீட்டு வேலைய செஞ்சு, எனக்கு சமைச்சு போட்டு, எங்கப் பிள்ளைகளை பாத்துக்கிட்டா மட்டும் போதும்னு இருந்தேன். நீயாவது உன் மனைவிய காயப்படுத்திடுவியோன்னு பயந்து உன்னை மாத்திக்க முயற்சி எடுத்து இருக்க, ஆனா நான் சொல்றது செய்றது மட்டும் தான் சரின்னு நினைச்சு என் கமலிக்கு ரொம்பவே கஷ்டத்தை கொடுத்துட்டேன். “ என்று கண்ணன் தனது வாழ்வின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளத் துவங்கினார்.
“ எங்களோடது நார்மலான அரேன்ஜ் மேரேஜ்தான், கல்யாணத்துக்கு முன்னாடியே கமலிக்கு கதை கவிதை எழுதுற பழக்கம் இருந்துருக்கு. அது எனக்கு முன்னாடி தெரியாது, கல்யாணத்துக்கு அப்புறம் என்னை விட்டுப் பிரிஞ்சு ஊருக்கு போகும்போதெல்லாம் எனக்காக ஒரு லெட்டர் எழுதுவா.. அதுல அவ என்னை எந்த அளவுக்கு காதலிக்கிறா, எந்த அளவுக்கு மிஸ் பண்ணுவான்னு கவிதையா எழுதி வைச்சுட்டு போவா.. அவ லெட்டரையும் கவிதையும் படிக்கும் போது தான் கமலிக்கு ரைட்டிங்ல இன்ட்ரஸ்ட் இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அப்புறம் குழந்தை பிறந்தது, குழந்தைய கவனிச்சுகிறதுலேயே அவளோட பாதி நேரம் போச்சு, குழந்தை ஸ்கூலுக்கு போக ஆரம்பிக்கவும், பொழுது போகல எனக்கு ரைட்டிங்ல கொஞ்சம் இன்ட்ரஸ்ட் இருக்கு. நீங்க ஓகே சொன்னா போரடிக்கும் போது அப்பப்போ கதையும் கவிதையும் எழுதுவேன்னு என் கிட்ட பர்மிஷன் கேட்டா.. நானும் அப்போ அதை பெருசா எடுத்துக்கல ஓகே சொல்லிட்டேன். எழுதுற ஆசை அதிகமாகவும் புக் பப்ளிஷ் பண்ணனும் விருப்பப்பட்டா.. நான் அதுக்கும் எந்த தடையும் சொல்லல, உன்னால முடிஞ்சா ட்ரை பண்ணு, நல்ல பப்ளிஷர் கிடைச்சா அந்த ஃஆப்பர்சூனிட்டிய யூஸ் பண்ணிக்கோன்னு பர்மிஷன் கொடுத்துட்டேன். ஆரம்பத்துல எல்லாத்துக்கும் ஓகே சொல்லி அவளை அவ இஷ்டப்படியே விட்டுட்டேன். நாளாக நாளாக அவ கிட்ட நிறைய மாற்றம் தெரிய ஆரம்பிச்சது. கதை எழுதுறதுலயே ரொம்ப நேரத்தை செலவழிக்க ஆரம்பிச்சா.. பொழுது போகலன்னு சொல்லி எழுத ஆரம்பிச்சவ போகப்போக.. எழுதுறதுக்கு நேரம் பத்தலன்னு புலம்ப ஆரம்பிச்சா.. என் கூடயும் என் குழந்தை கூடயும் டைம் ஸ்பென்ட் பண்ண அவளுக்கு டைம் இல்லாம போச்சு. என்னால அவ கிட்ட அப்படி ஒரு மாற்றத்தை ஏத்துக்க முடியல. நான் என்னோட பழைய கமலிய மிஸ் பண்ண ஆரம்பிச்சேன். அதனால எழுதுறத நிறுத்த சொல்லி கட்டாயப்படுத்துனேன். அவ அதுக்கு ரெடியா இல்ல. இது என் வாழ்க்கை என் விருப்பப்படி வாழ எனக்கு உரிமை இல்லையான்னு ஆர்க்யூ பண்ண ஆரம்பிச்சா. ஒரு கட்டத்துக்கு மேல ரெண்டு பேருக்கும் நடுவுல சண்டை பெருசாக ஆரம்பிச்சுடுச்சு. எனக்காக உன்னோட கனவை விட்டுக்கொடுன்னு நான் அவளைக் கட்டாயப்படுத்துறதும், எனக்காக உங்கக் பிடிவாதத்தை விட்டுக்கொடுங்கன்னு அவ என்னை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்றதுமா.. நாள் ஓடிட்டு இருந்தது. ஒருநாள் எல்லாத்தையும் வெறுத்து யார்கிட்டயும் சொல்லாம வீட்டைவிட்டு வெளிய வந்துட்டேன். மூணு நாள் நான் எங்க இருக்கேன், என்ன பண்ணிட்டு இருக்கேன்னு யாருக்கும் சொல்லல. “ என்றார் கண்ணன்.
“ அச்சோ அப்புறம் என்னாச்சு?, மேடம் உங்களைத் தேடலையா?” என்று ஆர்வத்துடன் தனுஜ் வினவ, அமுதேவ் முகத்திலும் ஆர்வம் கூடியது.
“ தேடாம இருப்பாளா… கைக்குழந்தையோடு தெருத் தெருவா என்னைத் தேடி அலைஞ்சிருக்கா… அவளால கண்டுபிடிக்க முடியலன்னு.. ரெண்டு பேரோட வீட்டுக்கும் இன்ஃபார்ம் பண்ணி. அவங்கள வர வச்சு தேட ஆரம்பிச்சிருக்காங்க, அப்படியும் என்னைப் பத்தி எந்த விபரமும் தெரியலன்னு போலீஸ் ஸ்டேஷன்ல கம்பிளைன்ட் கொடுத்தாங்க” என்றவர் குரல் குற்ற உணர்வில் கலங்கி இருந்தது.
“ அப்போ போலீஸ் வந்து தான் உங்கள கண்டுபிடிச்சாங்களா?” என்று தனுஜ் இடையில் கேள்வி கேட்டிட… இல்லை என்பது போல மறுத்து தலையசைத்தவர், “ மூணுநாள் கழிச்சு நானே திரும்பி வந்தேன்.. என்னை விட எழுதுறது தான் முக்கியம்னு சண்டை போட்டுட்டு இருந்தவ.. உங்களைத் தவிர வேறு எதுவும் எனக்கு முக்கியம் இல்லன்னு கதறி அழுதா… அந்தநேரம் எதுக்காக இதையெல்லாம் செஞ்சோமோ அதையெல்லாம் சாதிச்சுட்டோம்னு கர்வமா இருந்துச்சு. “ என்றார் கண்ணன்.
கதை கேட்கும் ஆர்வத்தில் இருந்த தனுஜ்.. “ உங்க வைஃப் எழுத மாட்டேன்னு சொல்லிட்டாங்க, அப்புறம் எப்படி திரும்ப எழுத ஆரம்பிச்சாங்க, நீங்க எப்படி எழுத அனுமதிச்சிங்க… உங்களுக்குள்ள அப்படி ஒரு சேன்ஜ் எப்போ வந்தது?” என்றான்.
“ நான் ஏற்கனவே சொன்ன மாதிரி தான், மாற்றம் நமக்குள்ள இருந்து தான் உருவாகணும். நான் பார்த்த இன்னொரு ஜோடியோட வாழ்க்கை அனுபவம் தான் எனக்குள்ள மாற்றத்தை உருவாக்குச்சு. என்னோட உணர்வுகளுக்கு மட்டும் மதிப்பு தந்துட்டு இருந்த நான், என் மனைவியோட உணர்வுகளையும் புரிஞ்சிக்க ஆரம்பிச்சேன்.. “ என்று கண்ணன் துவங்க…
“ இன்னொரு ஜோடியா!,” என்று புரியாமல் இழுத்தான் தனுஜ்.
“ ஆமா இன்னொரு ஜோடி, அது யாருன்னு சொன்னா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க!, “ என்று ஒரு நொடி நிறுத்தியவர்… “ எங்க வீட்டில் வளர்ந்த ஜோடி கிளி மீனு சோனு தான் நான் சொன்ன ஜோடி” என்றார் கண்ணன்.
“ என்ன கிளியா?” என்று தனுஜ் அதிர்ச்சி காட்டிட… “ நம்ம சுத்தி நடக்குற ஒவ்வொரு விஷயமும் நமக்கு ஏதோ ஒரு பாடத்தைக் கத்துக்குடுக்கும்னு என் பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க, அதுதான் உங்க வாழ்க்கைலயும் நடந்திருக்கு போல.. “ என்று வியப்புடன் கூறினான் அமுதேவ்.
ஆமாம் என்பது போல் பொறுமையாக தலையசைத்து மேலும் தனது கதையைத் தொடர்ந்தார், “ கமலி நான் விருப்பப்பட்ட மாதிரி எழுதறத விட்டுட்டு எங்களுக்கு இம்பார்ட்டன்ஸ் கொடுக்க ஆரம்பிச்சா, ஆனா.. முன்னாடி எல்லாம் நான் என்ன சொன்னாலும் சரி மாமா.. சரி மாமான்னு சொல்லிட்டு இருந்தவ.. என்னை ஆசையா கூப்பிடுற மாமாங்கிற வார்த்தையையே மறந்துட்டு மூணாவது மனுஷன் கிட்ட பேசுற மாதிரி வாங்க போங்கன்னு பேச ஆரம்பிச்சா. வீட்டுக்குள்ள வரும்போதே அன்னைக்கு நாள் முழுக்க நடந்ததை கதையா சொல்லுறவ.. என்கிட்ட முகம் கொடுத்து பேசுறதையே குறைச்சுட்டா.. சிரிக்கவே மறந்துபோன மாதிரி எப்பயும் எதையோ பறிகொடுத்த மாதிரி அமைதியா இருந்தா. அவளுக்கு ரொம்ப பிடிச்ச விஷயத்தை செய்ய வேணாம்னு சொன்ன கோபத்துல இருக்கா நாளாக நாளாக எல்லாம் சரியாப் போகும்னு நினைச்சேன். பட் நான் நினைச்ச மாதிரி எதுவும் மாறல. அவளோட அமைதி கலையவே இல்லை. அந்த சமயத்துல நாங்க ஜோடியா வளர்த்த கிளில ஒன்னு இறந்து போச்சு. கமலியைப் பொறுத்த வரைக்கும் அதுங்களும் அவளுக்கு பிள்ளைங்க மாதிரிதான். அப்படித்தான் அவளும் வளர்த்தா. இறந்துபோன ஆண்கிளிய தேடி பெண்கிளி சாப்பிடாம தூங்காம கத்திட்டே இருந்தது, இறந்துபோன சோனு கிளி வழக்கமா வீட்டுக்குள்ள எங்கெல்லாம் போகுமோ அங்கெல்லாம் போய் தேட ஆரம்பிச்சது.” என்று கண்ணன் நிறுத்த…
“ ஒரு கிளி இல்லைனா, இன்னொன்னு வாங்கி விட வேண்டியது தானே!” என்று தனுஜ் வெகு இயல்பாய் வினவிட…
“ நானும் அப்படி நினைச்சு தான் இன்னொரு கிளி வாங்கினேன், ஆனா மீனு கிளி புது கிளியை ஏத்துக்கவே இல்ல, எங்கப் பார்வைக்கு அது வெறும் ஜோடியா மட்டும் தான் தெரிஞ்சுது, ஆனா ஆண் கிளி பெண் கிளிக்கு எல்லாமுமா இருந்திருக்கு. அதோட இடத்துல வேற ஒன்னை ஏத்துக்க மாட்டேன்னு, இருக்கிற வரைக்கும் எங்கக்கூடவே தனியாவே இருந்தது. அதோட தவிப்பும் தனிமையும் எனக்குள்ள என்னமோ பண்ணுச்சு. மனுஷங்களை விட அறிவுல குறைஞ்ச ஜீவன் அதுவே தன்னோடு ஜோடிய இழந்துட்டு இப்படி பரிதவிக்கும் போது, நான் இல்லாத அந்த மூணு நாள் கமலி என்ன பாடு பட்டிருப்பான்னு யோசிச்சு பாக்க ஆரம்பிச்சேன். முதல் தடவையா அதப்பத்தி அவகிட்ட கேட்கவும் செஞ்சேன். முதல்ல மனசு விட்டு பேச தயங்கினா.. அப்புறம் நான் வற்புறுத்தி கேட்கவும், ஒன்னொன்னா சொல்ல ஆரம்பிச்சா, “ என்றார் கண்ணன்.
“ ஆமால அந்த டைம் மேம் ரொம்பவே கஷ்டப்பட்டு இருப்பாங்க, “ என்று தனுஜ் கதையில் ஆர்வம் காட்டிட…
“ ரொம்பவே கஷ்டப்பட்டுட்டா, வழக்கமா அவ எந்திரிக்கிறதுக்கு முன்னாடியே அலாரத்தை ஆஃப் பண்ணிட்டு, என் கழுத்துல இருந்த செயின், கையில இருந்த மோதிரம் எல்லாத்தையும் வீட்டிலேயே கழட்டி வச்சிட்டு சத்தமே இல்லாம வீட்டைவிட்டு கிளம்பிட்டேன். காலைல எந்திரிச்சதும் முதல்ல நான் இல்லாததா பெரிய விஷயமா எடுத்துக்கல, நேரம் ஆக ஆக என்னைத் தேட ஆரம்பிச்சிருக்கா… தூங்கிட்டு இருந்த எங்க ரெண்டு வயசுப் பொண்ணைத் தூக்கி தோளுல போட்டுட்டு, வீட்டை விட்டு வெளியே வந்து, வீட்டு ஓனர் கிட்ட விசாரிச்சு பார்த்தாளாம். காலைல ரொம்ப சீக்கிரமாவே வண்டி எடுத்துட்டு வெளியே கிளம்பிட்டேன்னு அவங்க சொன்னதும், என்னைத் தேடி நான் ஒர்க் பண்ற பேங்குக்கு போய் பார்க்கலாம்னு கிளம்பிட்டா. அப்போ அவகிட்ட கொஞ்சம் கூட பணம் இல்லை, பணம் எப்படி இருக்கும் நான் கொடுத்தா தானே அவகிட்ட இருக்கும், ஒவ்வொரு செலவுக்கும் எங்கிட்ட கேட்டு தான் பணம் வாங்குவா செலவுபோக மிச்சத்த என்கிட்டயே திருப்பிக் கொடுத்திடுவா, அன்னைக்கு நான் பணமும் வச்சுட்டு போகல, ஆட்டோக்கு கூட காசில்லாம கைக்குழந்தையை தூக்கிட்டு ரெண்டு கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற என் பேங்குக்கு என்னைத் தேடி வந்திருக்கா.. வாசல்ல என் வண்டிய பார்க்கவும் அவ்ளோ நிம்மதியா இருந்ததாம், அந்த நிம்மதி அடுத்த நிமிஷமே உடைஞ்சு போற மாதிரி, பேங்க் செக்யூரிட்டி சார் வண்டிய நிறுத்திட்டு எதுவும் சொல்லாம கிளம்பிட்டாருனு சொன்னதும், அடுத்த என்ன செய்றது என்னை எங்க போய் தேடுறதுன்னு புரியாம உடைஞ்சு போயிட்டா. திரும்ப வீட்டுக்கு வந்து வீட்டு ஓனர் கிட்ட கடனா கொஞ்சம் பணம் வாங்கிட்டு, நான் அடிக்கடி போற பார்க் கடைகளுக்கு போய் தேட ஆரம்பிச்சிருக்கா.. அங்கேயும் இல்லைன்னு தெரியவும், என்ன பண்றதுன்னு தெரியாம வீட்டுக்கு வந்து எனக்காக காத்திருக்க ஆரம்பிச்சிருக்கா… பாப்பா பசிக்கு அழுகும் போது வீட்ல இருந்த எதையோ வச்சு சமாளிச்சு பாப்பாவுக்கு குடுத்துட்டு அவ பட்டினியாவே இருந்திருக்கா.. நைட்டு வரைக்கும் நான் வருவேன்னு எதிர் பார்த்திட்டு இருந்தவ, நான் வரலைன்னு தெரியவும் ரெண்டு பேரோட வீட்டுக்கும் போன் பண்ணி விஷயத்தை சொல்லிட்டா. அவங்க கிளம்பி வர அடுத்த நாள் காலையில ஆகிடுச்சு. நைட்டு புல்லா கைக்குழந்தையோடு தூங்காம என் சட்டையை கட்டிப்பிடிச்சுட்டு என்னை நினைச்சு அழுதுட்டே இருந்திருக்கா. அடுத்தநாள் இரண்டு வீட்டுல இருந்தும் ஆட்கள் வந்திருக்காங்க, வந்தவங்க அவளுக்கு ஆறுதலா இருக்கிறத விட்டுட்டு அவளையே காயப்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க. உன்னால தான் இதெல்லாம் நடந்திருக்கு, வீட்டை மட்டும் பார்த்துட்டு, பொம்பளையா அடக்க ஒடுக்கமா இருந்திருந்தா இந்தப் பிரச்சனையே வந்திருக்காது, கதை எழுதுறேன் கவிதை எழுதுறேன்னு கண்டதையும் கிறுக்கிட்டு குடும்பத்தை கோட்டை விட்டுடன்னு குடைஞ்சு எடுத்திருக்காங்க. அன்னைக்கு நைட் கடந்தும் நான் திரும்பி வரலன்னு, அடுத்த நாள் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திடலாம்னு போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிருக்காங்க. லைஃப்ல முதல் தடவையா அப்பதான் கமலி போலீஸ் ஸ்டேஷன் போயிருக்கா, அவளை நான் தான் போக வைச்சிருக்கேன், போலீசும் அவ நடத்தையையும் என் நடத்தையையும் சந்தேகப்படுற மாதிரியே கேள்வி கேட்டு இருக்காங்க.. இப்படி ஒரு அசிங்கம் நமக்கு தேவையா?, நம்ம ஆசைக்காக குடும்பத்தை இழந்துட்டு அசிங்கத்தை சம்பாதிச்சுடோமேன்னு உள்ளுக்குள்ளேயே உடைஞ்சு போயிருக்கா. மூணு நாள் சாப்பாடு தூக்கம் இல்லாம அழுது கண்ணெல்லாம் வீங்கிப் போய் இருந்தா, அப்ப கூட அவளுக்கு சமாதானம் சொல்ல யாரும் முன் வரல, நல்லா அழு என்னமோ கதை எழுதி என் அடையாளத்தை மாத்த போறேன்னு பெருமை பேசிட்டு திரிஞ்சேல, இது உனக்கு தேவை தான்னு அவக் காது படவே பேசிருக்காங்க. அடுத்த நாள் நான் வீட்டுக்கு திரும்பி வந்தேன்.. நான் பண்ணது தப்புதான் இனி எழுத மாட்டேன் என்னை விட்டு போயிடாதீங்கன்னு அழுதா. நீங்க இல்லைன்னா எனக்கு எதுவுமே இல்ல உங்கள விட வேற எதுவும் எனக்கு முக்கியம் இல்லன்னு கதறுனா.” என்றவர் கண்களில் அவரையும் மீறி கண்ணீர் சுரந்திருந்தது.
ஆர்வத்துடன் கதை கேட்டுக் கொண்டிருந்தவர்கள்.. கண்ணனின் கண்ணீரைக் கண்டதும்.. ஆறுதலாய் அவர் கரம் பற்றிட..” அவ அந்த நேரம் என்ன மாதிரி வலிய அனுபவிச்சு இருப்பான்னு இப்ப நினைச்சாலும் கஷ்டமா இருக்கு. யோசிக்கிற.. எனக்கே இப்படி இருக்குன்னா, அதை அனுபவிச்சவளுக்கு எப்படி இருந்திருக்கும் “ என்று உண்மையான வருத்தத்துடன் கூறினார் கண்ணன்.
“ அதுக்கெல்லாம் சேத்து தான் மேம்மை, இப்போ ரொம்ப ஹாப்பியா வச்சிருக்கீங்களே!” என்று அமுதேவ் ஆறுதல் கூறிட.. “ நான் இப்போ உங்ககிட்ட சொன்ன விஷயம் பாதிதான் இதுக்கு மேலயும் நிறைய விஷயம் அவ அனுபவிச்சு இருக்கா. அது எல்லாம் சொன்னா என் மேல இருக்கிற கொஞ்ச நஞ்ச மரியாதையும் போயிடும்… நான் என் மனைவிக்கு கொடுத்த கஷ்டங்களுக்கு என்னைக்குமே எனக்கு பாவ மன்னிப்பு கிடைக்காது “ என்றார் கண்ணன்.
“ செஞ்சது தப்புனு உணர ஆரம்பிச்சுட்டா அதைவிட பாவமன்னிப்பு வேறு எதுவுமே இல்ல சார். “ என்றான் தனுஜ்.
“ செஞ்சது தப்புன்னு புரிஞ்சது, அதை சரி செய்ய… அவளை எழுதுறதுக்கு அனுமதிச்சேன். நானே ஓகே சொன்னதுக்கு பிறகும், எங்க சொந்தக்காரங்க சும்மா விடல, இன்னும் எழுதுறியா?, அவ்வளவு அனுபவிச்ச பிறகும் உனக்கு புத்தி வரலையான்னு அவளை வார்த்தையாலே நோகடிக்க ஆரம்பிச்சுட்டாங்க, அவளுக்கு நான் சப்போட்டா இருக்கிறது தெரிஞ்சதும் பொண்டாட்டி காசுல உட்கார்ந்து சாப்பிட ஆசை வந்துடுச்சுன்னு என்னைப் பத்தி தப்பா பேசினாங்க. நாங்களே விலகிப் போனாலும் வலிய வந்து டார்ச்சர் குடுத்தாங்க. பொதுவா இந்த மாதிரி கதை, கவிதை, படம் வரையுறதுன்னு, தனித் திறமை இருக்கிறவங்களுக்கு உடம்பும் மனசும் நிம்மதியாவும் தெளிவாவும் இருக்கணும், அப்போ தான் அவங்களோட வித்தியாசமான கற்பனைத் திறன் அவங்கப் படைப்பையும் மெருக்கேத்தும். நடந்த பிரச்னைகளை நினைச்சு மனசுல நிறைய வலி, சொந்தபந்தம் சுத்தி இருக்கிறவங்களோட குத்தலான பேச்சு, இதுக்கு நடுவுல அவளால எழுதுறதுல கான்சன்ட்ரேட் பண்ண முடியல. கதை எழுதணும்னு உட்கார்ந்தாலே.. நடந்ததெல்லாம் ஞாபகத்துக்கு வந்து, யோசிச்சு வைச்ச கதையை கூட எழுத முடியாம தடுமாற ஆரம்பிச்சா, எல்லா பிரச்சினையும் நான் கதை எழுதுறதால தானே வருது, பேசாம நான் எழுதுறத விட்டுட்டு, வேற வேலைக்கு போறேன்னு புலம்ப ஆரம்பிச்சுட்டா. அவ எழுதுறது பிரச்சனை இல்ல, நான் அவளுக்கு சப்போட்டா இல்லாம போனது தான் பிரச்சனைன்னு எனக்கு புரிஞ்சது. சோ எந்த வழியிலயும், யார் அவளுக்கு கஷ்டம் கொடுத்தாலும் நான் அவளுக்கு சப்போட்டா இருக்கணும்னு முடிவெடுத்தேன். சொந்த பந்ததுல மட்டுமில்ல எழுதுறதுல என்ன பிரச்சினை வந்தாலும் அவளுக்கு உறுதுணையா இருக்க ஆரம்பிச்சேன். கதை கவிதை எல்லாரும் எழுத முடியாது, உனக்கு அந்த டேலண்ட் இருக்கு, யாருக்காகவும் உன் அடையாளத்தை விட்டுக் கொடுத்திடாதன்னு மோட்டிவ் பண்ண ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா அவளோட மன காயத்துல இருந்து வெளிய வந்து.. அவளோட கெரியர்ல கான்சன்ட்ரேட் பண்ண ஆரம்பிச்சா, அவ சக்சஸ்ஃபுல் ரைட்டரா இல்லையான்னு எனக்கு தெரியாது, பட் சி இஸ் ரியல் ஃபைட்டர் அண்ட் சர்வேயர் இன் ஹேர் லைஃப் “ என்றார் கண்ணன்.
“ யு ஆர் ரியலி கிரேட் சார்” என்று தனுஜ் மெச்சிக்கொள்ள… “ நான் மட்டும் இல்ல ஆண்கள் எல்லாருமே பெண்களோட உணர்வுகளை புரிஞ்சுகிட்டு கிரேட்டா மாறனும். நீங்களே யோசிச்சு பாருங்க, ஆண்கள் நம்ம கனவையும் விருப்பத்தையும் வெளிய சொல்றதுலயும், அதை நிறைவேத்திக்கிறதுலயும் எந்த பிரச்சனையும் இருக்குறது இல்ல. கொஞ்சம் போராடினா போதும், நம்ம விருப்பப்பட்ட பாதையில் பயணிக்க அனுமதிச்சுடுவாங்க. இதே பொண்ணுங்களா இருந்தா அவங்க விருப்பத்தை நிறைவேத்திக்கிறதுக்கு ஆயிரம் தடை இருக்கு, அதை எல்லாம் தாண்டி தான் அவங்க ஜெயிச்சு மேல வர வேண்டியதா இருக்கு. ஹவுஸ் வைஃப்பா இருக்கிறவங்கள பார்த்தா, வெளிய போய் வேலை பார்க்கிற அளவுக்கு கெப்பாசிட்டி இல்லன்னு மட்டம் தட்டுறது, வெளிய வேலைக்கு போக ஆரம்பிச்சா வீட்டுக்கு அடங்காம திரியுறான்னு மட்டமா பேச வேண்டியது, இந்த நிலைமை மாறனும். பொண்ணுங்க என்ன செஞ்சாலும் குத்தம் கண்டுபிடிக்கிற சமுதாயம் அதோட கண்ணோட்டத்தை மாத்திகணும்” என்றார் கண்ணன்.
“ சரியா சொல்லுறீங்க சார், பொண்ணுங்க என்ன செஞ்சாலும் அது இந்த சமுதாயத்துல பேசுபொருளாதான் பார்க்கப் படுது. ஆண்களுக்கு இருக்கிற சுதந்திரம் பெண்களுக்கு இருக்கிறது இல்ல. தங்களோட சுதந்திரத்துக்கு பொண்ணுங்க போராட ஆரம்பிச்சா திமிர்ப் பிடிச்சவ , வீட்டுக்கு அடங்காதவன்னு பழி சுமத்தி ஒதுக்கி வைச்சிடுறாங்க” என்று கண்ணனின் வார்த்தையை ஆமோதித்தான் தனுஜ்.
தனக்குள் எதையோ சிந்தித்து தீவிர யோசனையுடன் அமுதேவ் அமைதியாய் அமர்ந்திருக்க… “ என்ன நண்பா அமைதியாகிட்ட, இப்போ உனக்கு ஒரு கிளாரிட்டி கிடைச்சு இருக்குமே, !” என்றான் தனுஜ்.
தனது சிந்தனை களைந்து கண்ணனைப் பார்த்தவன், “ அப்போ நானும் இதே மாதிரி சொல்லாம கொள்ளாம காணாம போயிட்டா… ஷாலுவும் அவளோட பிசினஸ் பிளான்னை ட்ராப் பண்ணிடுவாளா?” என்று அதீத ஆர்வத்துடன் வினவினான் அமுதேவ்.
“ காணாம போன அடுத்த செகண்டு உன்னோட மொபைலை ட்ராக் பண்ணி, நீ இருக்கிற இடத்துக்கே உன்னைத் தேடி வந்து பின்னத் தலையிலேயே நாலு போடு போட்டு, இழுத்துட்டு வந்து வீட்டுக்குள்ள பூட்டி வைப்பா” என்று விஷல்யா என்ன செய்வாள் என்று விவரித்தான் தனுஜ்.
“ உன் வைஃப்பை காயப்படுத்திடக் கூடாதுன்னு தான் என்கிட்ட அட்வைஸ் கேட்க வந்தேன்னு சொன்ன… என்னைப் பிரிஞ்சு கமலி அனுபவிச்ச வேதனை என்னன்னு சொன்னதுக்கு அப்புறமும் நான் செஞ்ச அதே முட்டாள் தனத்தை செய்யலாமான்னு யோசிக்கிறயே!, இதுக்கு பேர் என்ன?. நமக்கு பிடிச்சவங்க நம்மள விட்டுப் பிரிஞ்சு போற வலிய வார்த்தையில சொன்னா புரியாது… அந்த அளவுக்கு வேதனையா இருக்கும். அப்படிப்பட்ட கொடுமையான வலியை உன் ஷாலுவுக்கு குடுக்கப் போறியா?, “ என்றவர் ஒரு நொடி தயங்கி பின், “ இப்போ உனக்கு நீ மாறனுமா, இல்ல உன் வைஃப்பை மாத்தனுமா?, நானும் வந்ததிலிருந்து பாத்துட்டு இருக்கேன், ஏதோ குழப்பத்துல இருக்கிற மாதிரியே மாத்தி மாத்தி பேசுற உனக்கு என்னதான் பிரச்சனை?” என்றார் கண்ணன்.
“ இதுல பயப்பட என்ன இருக்கு, நீ உன் வைஃப் பிஸினஸுக்கு சப்போர்ட் பண்ணி அவள சாதிக்க வை” என்று யோசனை கூறினார் கண்ணன்.
“ கன்ஸ்ட்ரக்ஷன் பிசினெஸ் ஒன்னும் ஷாலு நினைக்கிற மாதிரி சாதாரண விஷயம் இல்ல சார், அதுல நிறைய பிராப்ளம்ஸ் ஃபேஸ் பண்ண வேண்டியிருக்கும். அவ நினைக்கிற மாதிரி அவ்வளவு ஈசியா சாதிக்க முடியாது. இங்கே முகத்துக்கு நேரா சிரிச்சிட்டு முதுகுல குத்துற ஆட்கள் அதிகம், ரெட்டை வேஷம் போடுற இந்த மாதிரி ஆட்களுக்கு நடுவுல அவளால சர்வே பண்ண முடியாது“ என்றான் அமுதேவ்.
“ நீ சொல்றத கேக்கும்போது எப்படி இருக்குன்னு தெரியுமா?, அழகான பட்டாம்பூச்சி வானத்துல பறந்தா மத்தவங்களால அதுக்கு ஆபத்து வந்துடுமோன்னு பயந்து கைக்குள் அடக்கி வச்சு பாதுகாக்க நினைக்கிற மாதிரி இருக்கு. உனக்கு இந்த உலகத்துல வாழ என்னென்ன உரிமை இருக்கோ அந்த உரிமையும் சுதந்திரமும் உன் மனைவிக்கும் இருக்கு. எந்த பிசினஸ் ரிஸ்க் இல்லன்னு சொல்லு. பேங்க் ஜாப்ல ரிஸ்க் இல்லன்னு சொல்லுறியா?, ரைட்டிங் கெரியர்ல ரிஸ்க் இல்லன்னு நினைக்கிறாயா?, இந்தப் பதினைந்து வருஷத்துல கமலி அவளோட ரைட்டிங் கெரியர்ல எத்தனையோ ப்ராப்ளம் பேஸ் பண்ணி இருக்கா, ரிஸ்க் இருக்குன்னு ஒதுங்கி இருக்க ஆரம்பிச்சா எதையுமே சாதிக்க முடியாது. “ என்று கண்ணன் அறிவுரையை துவங்கிட…
“ ஓகே நான் ஒத்துக்குறேன் எல்லா வேலையும் ரிஸ்க் இருக்கத்தான் செய்யுது, அதுக்காக பிஸ்னஸ் கெரியருக்கு இடைஞ்சலா இருந்தா குழந்தையே பெத்துக்க மாட்டேன்னு சொல்றது சரியா?.” என்று ஆதங்கத்துடன் வினவினான் அமுதேவ்.
“ என்ன!, ஓ அப்போ இதுதான் உன்னோட பிரச்சனையா.. இதுக்கு பயந்துட்டு தான் ஓடிப் போக பிளான் போட்டயா?” என்றான் தனுஜ்.
“ யெஸ்… இப்போ சொல்லுங்க சார் என் பிரச்சனைக்கு சொல்யூஷன் என்ன?” என்றான் அமுதேவ்.
“ இந்த காலத்து பொண்ணுங்க இருக்காங்களே பெண்ணியம் பேசுறேன்னு, பெண்மைக்கே உண்டான பெருமையை மறந்திட்டு, குழந்தை பெத்துக்கிற புனிதமான விஷயத்துல கூட தேவை இல்லாத தர்க்கம் பண்ணிட்டு இருக்காங்க. ஆணுக்குப் பெண் சமம் தான், பெண்களுக்கு தனி அடையாளம் இருக்க வேண்டியதும் பிஸ்னஸ் கெரியரும் முக்கியம் தான், அதே நேரத்துல ஆணா இருந்தாலும் சரி பெண்ணா இருந்தாலும் சரி ரெண்டு பேருக்கும் ஃபேமிலி லைஃப்பும் முக்கியம் தான… அதை ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க. “ என்று இந்தக்கால பெண்களுக்கு இருக்கும் புரிதலை பற்றி புலம்பினான் தனுஜ்.
“ எல்லாம் சரிதான்.. ஆனா குடும்ப வாழ்க்கைன்னு வந்தா யாருக்கு பொறுப்பு அதிகமா இருக்கும்னு கொஞ்சம் யோசிச்சு சொல்லு.. “ என்று கண்ணன் நிறுத்த… “ இதுல யோசிச்சு சொல்ல என்ன இருக்கு.. பொண்ணுகளுக்கு தான்” என்று சட்டென்று பதில் தந்தான் அமுதேவ்.
“ இதிலேயே உன் மனநிலை என்னனு நல்லாவே தெரியுது. அதாவது வீட்டு வேலை செய்றதும், குழந்தைகளை பார்த்துக்கிறதும் பொண்ணுகளோட பொறுப்புன்னு உன் மனசுல நல்லாவே பதியவைச்சிருக்க அந்த எண்ணத்தை முதல்ல மாத்திக்கோ. “ என்று அமுதேவ்விடம் கூறியவர் தனுஜ் புறம் திரும்பி… “பசங்களுக்கு தூங்கி எந்திரிச்சதும்.. பெரிசா எந்த வேலையும் இருக்காது, குளிச்சிட்டு சாப்பிட்டு வேலைக்கு கிளம்ப வேண்டியது தான். ஆனா பொண்ணுகளுக்கு அப்படி இல்ல வீட்ல எல்லா வேலையும் செஞ்சு முடிச்சிட்டு, புருஷன ஆபீசுக்கு அனுப்பி வைச்சுட்டு, பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, வீட்ல இருக்கிற கொஞ்ச நஞ்ச வேலையெல்லாம் முடிச்சுட்டு, அதுக்கு அப்புறம் தான் அவங்களுக்கான சொந்த வேலையில கவனம் செலுத்த முடியும். அது மட்டுமல்ல, குழந்தை பிறந்ததும் பொண்ணுங்ககிட்ட பழைய எனர்ஜி இருக்காது, உடம்பு கொஞ்சம் பலவீனத்தை உணர ஆரம்பிக்கும்.. அந்த நேரத்துல வீட்டு வேலை செய்றதே பெரிய விஷயமா இருக்கும்போது எக்ஸ்ட்ரா ஆபீஸ் வேலைய எங்கேயிருந்து பார்க்கிறது.. அதனாலதான் எக்ஸ்ட்ரா பொறுப்பு வேண்டாம்னு குழந்தையை அவாய்ட் பண்ண நினைக்கிறாங்க, “ என்று பெண்களுக்கு சாதகமாக பேசினார் கண்ணன்.
“ நீங்க சொல்றது எல்லாம் சரிதான் அதுக்காக குழந்தையே வேணாம்னு இருக்க முடியுமா?, அவளைப் பொறுத்த வரைக்கும் பிசினஸ் மட்டும் தான் முக்கியம் குடும்பம் தேவையில்லைன்னு நினைக்கிறா.. இப்படி யோசிக்கிறவளுக்கு நான் என்ன சொல்லி புரிய வைக்கிறது.. “ என்றான் அமுதேவ்.
“ நீ என்னதான் எடுத்து சொன்னாலும் அவங்களோட பிடிவாதம் அதிகமாகத்தான் செய்யுமே தவிர குறையாது. சில விஷயங்களை பேசி புரிய வைக்க முடியாது. குழந்தை பிறந்தாலும் நீ உன் வைஃப்க்கு ஃபுல் சப்போர்ட்டா இருப்பன்னு நிரூபிக்கிற மாதிரி நடந்துக்கோ.. வீட்டு வேலையை ஷேர் பண்ணிக்கோ, குழந்தை பிறந்ததுக்கு பிறகும் இதே மாதிரி அவங்களுக்கு சப்போட்டா இருப்பேன்ணு நம்பிக்கை குடு” என்றார் கண்ணன்.
“ நீங்க சொல்ற மாதிரி நான் நடந்துக்கிட்ட பிறகும் அவ முடிவை மாத்திக்கலனா..” என்று ஐயத்துடன் வினவினான் அமுதேவ்.
“ ஏன் நெகட்டிவா யோசிக்கிற, நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும்.. “ என்று ஆருடம் கூறியவர் அப்போதும் அமுதேவ் முகம் தெளிவில்லாமல் குழப்பத்தையே பிரதிபலிக்க.. “நான் பார்த்த வரைக்கும் உன் வைஃப் ரொம்பவே மெச்சூர் பெர்சனா தான் தெரிஞ்சாங்க… சோ நீ அவங்களுக்காக விட்டுக் கொடுக்க ஆரம்பிச்சா அவங்களும் உனக்காக அவங்க பிடிவாதத்தை விட்டு இறங்கி வரலாம். நான் இவ்வளவு சொன்னதுக்கு பிறகும் உனக்கு திருப்தி இல்லைனா, இதுக்கு ஒரே சொல்யூஷன் இப்போ உனக்கு எப்படி ஒரு அட்வைஸ் கிடைச்சதோ.. அதே மாதிரி சரியான ஆள் கிட்ட இருந்து உன் மனைவிக்கும் அட்வைஸ் கிடைச்சதுன்னா.. அவங்க எண்ணம் மாறுறதுக்கு அதிகப்படியான வாய்ப்பு இருக்கு. “ என்றார் கண்ணன்.
“ அப்போ நான் அவளை மேம் கிட்ட கூட்டிட்டு வரவா… மேம் அவளுக்கு புரியுற மாதிரி எடுத்து சொல்லட்டும்” என்று ஆர்வத்துடன் வினவினான் அமுதேவ்.
“ நீ கூட்டிட்டு வந்தா.. நம்ம எல்லாரும் பேசி வைச்சு அவங்களை கன்பியூஸ் பண்ண ட்ரை பண்ற மாதிரி இருக்காதா?. நான் முன்னாடியே சொன்ன மாதிரி தான் மாற்றம் அவங்களுக்குள்ள இருந்து வரணும். அட்வைஸ் தேவைப்படும் போது தான் குடுக்கணும், நாமதான் பெரிய அறிவாளினு நினைச்சுட்டு வலிய போய் அட்வைஸ் பண்ணினா அது பசிக்காத நேரத்தில் பந்தி பரிமாறுன மாதிரி பாதி குப்பைக்கு தான் போகும். சோ உனக்கு எப்படி அட்வைஸ் தேவைன்னு தோணவும், என்னைத் தேடி வந்தியோ!, அதே மாதிரி உன் மனைவியும்… அவங்களுக்கு சரியான ஆளுன்னு தோணுறவங்க கிட்ட, தேவைப்படும் போது அட்வைஸ் கேட்டுகட்டும்.. நீ கம்பெல் பண்ணாத.. “ என்று அறிவுரை வழங்குவது குறித்து அறிவுரை வழங்கினார் கண்ணன்.
“ சப்போஸ் ஷாலுவுக்கு அட்வைஸ் தேவைப்படும் போது, அவள மாதிரியே யோசிக்கிற ஆள் கிட்ட போய் அட்வைஸ் கேட்டா, நாம என்ன சொன்னாலும் ஆமாம் சாமி போடுற ஆட்கள் கிட்ட பேசினா நாம செய்றது மட்டும் தான் சரியா இருக்கும்னு எண்ணம் வந்திடாதா!, அப்போ என்ன பண்றது?” என்று தன் அன்னையை மனதில் வைத்து அமுதேவ் குழப்பத்துடன் வினவிட… “ விதியேன்னு நடக்கிறதா வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்” என்று நம்பிக்கையற்று பேசினான் தனுஜ்.
“ நான் ஏற்கனவே சொன்ன மாதிரிதான் நல்லதையே நினை.. நல்லதே நடக்கும்.. அண்ட் ஒன் மோர் திங்க், எந்த பொண்ணும் அவ்வளவு சீக்கிரமா தன்னுடைய குழந்தையை விட்டுக் கொடுக்க மாட்டா… கரு உருவாகிற வரைக்கும் என்ன வேணாலும் பேசலாம். ஆனா குழந்தை தனக்குள்ள உருவாகி இருக்கிற விஷயம் தெரிஞ்சதும் எந்த பொண்ணுக்கும் அதை கலைக்க மனசு வராது… “ என்று கண்ணன் துவங்க… “ அதெப்படி சொல்ல முடியும்… இப்ப நாம எவ்வளவு நியூஸ் பேப்பர் பார்க்கிறோம்.. “ என்று விஷல்யாவிடம் அடுக்கிய அதே காரணத்தை அமுதேவ் கூறத் துவங்க… இடை மறித்த கண்ணன், “ஐ மீன் நான் நல்ல குடும்பத்துல.. நல்ல பழக்க வழக்கத்தோட வளர்ந்த பொண்ணுகளை பத்தி பேசுறேன்… தன் சுயநலத்துக்காக தன் சொந்தக் குடும்பத்தையே அழிச்சுகிற ஆட்களைப் பத்தி பேசல “ என்றார்.
“ கேட்கும்போதும் நல்லாதான் இருக்கு … ஆனா என் ஷாலு நீங்க சொன்ன மாதிரி நடந்துக்கணுமே!” என்று வருத்தத்துடன் கூறினான் அமுதேவ்.
அவன் குரலிலே அவனது குழப்பத்தையும் தவிப்பையும் தெளிவாய் காட்டிட… “ கொஞ்சம் பொறு… “ என்று அங்கிருந்து எழுந்து மற்றொரு அறைக்கு சென்றவர், கையில் புத்தகத்துடன் திரும்பி வந்தவர் அதனை அமுதேவிடம்… நீட்டி.. “ எங்க இரண்டாவது பையன் கருவுல இருக்கும் போது… கமலி எழுதின புக்… இதை உன் மனைவிக்கு கிப்ட்டா குடு… இதை படிச்சா குழந்தையை பத்தினா அவங்களோட கண்ணோட்டம் மாறும்.. “ என்றார் கண்ணன்.
சரி என்று சம்மதித்து அவர் கொடுத்த புத்தகத்தை கையில் வாங்கிப் பார்த்தவன்… தாய்மையை போற்றுவோம்.. எனும் தலைப்பை மெதுவாய் வருடி… “ உங்க அட்வைஸ் கேட்டதுக்கு அப்புறம் என் மனைவியோட விருப்பத்துக்கு துணையா இருக்கணும்னு ஆசைப்படுறேன், ஆனா அதுவே என் ஆசைக்கு தடையா இருக்குமோன்னு கவலையாவும் பயமாவும் இருக்கு” என்றான் அமுதேவ்.
“ கவலைப்படாம போ.. நான் சொன்ன மாதிரி உன் மனைவிக்கு வீட்டு வேலை செய்றதுல ஹெல்ப் பண்ணு.. ஆபீஸ்ல இருந்து லேட்டா வந்தா அவங்களுக்கு பிடிச்ச விதத்துல நீயே ஃகாபி போட்டு குடு.. அவளுக்கு சப்போட்டா இருக்கேன்னு வார்த்தையால மட்டும் இல்லாம வாழ்ந்தும் காட்டு..” என்று இறுதியாக அறிவுரை கூறினார் கண்ணன்.
வெகு நேரம் அளவளாவி விட்டு அங்கிருந்து கிளம்பும் முன்.. கண்ணன் அருகில் வந்த தனுஜ்.. “ சாரி சார் உங்களை பத்தி எதுவும் தெரியாததால முன்ன பின்ன நடந்துகிட்டேன் என்னை மன்னிச்சிக்கோங்க” என்று புரிதலில் உண்டான தவறினால் புரிந்த தவறுக்கு மன்னிப்பு வேண்டினான் தனுஜ்.
“ இட்ஸ் ஓகே.. இது உன் தப்பு இல்ல நம்ம நாட்டுல பாதி பேரு இப்படி தான் இருக்காங்க, தான் அனுபவிக்கிறது மட்டும்தான் கஷ்டம்னு நினைச்சுட்டு அடுத்தவங்களை ஈசியா காயப்படுத்திடுறாங்க. இவ்வளவு நேரம் உன் பிரண்டுக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருந்தேன் இப்போ உனக்கு ஒரு சின்ன அட்வைஸ். யாரை பத்தியும் முழுசா தெரியாம நீயா ஒரு முடிவுக்கு வராத, எதுவும் பேசுறதுக்கு முன்னாடி நாம அவங்க இடத்துல இருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சுட்டு பேசு. அப்படி யோசிக்க ஆரம்பிச்சேனா.. அடுத்தவங்கள காயப் படுத்தமாட்ட..” என்றார் கண்ணன்.
“ நிச்சயமா சார்.. இனி யாரைப் பத்தியும் முழுசா தெரிஞ்சுக்காம, எனக்குள்ள ஒரு தீர்மானத்துக்கு வர மாட்டேன். அதே மாதிரி அவசரப்பட்டு வார்த்தையால அடுத்தவங்கள காயப்படுத்தவும் மாட்டேன். “ என்று உறுதியளித்தான் தனுஜ்.
அறிவுரை வேண்டி வீடு தேடி வந்தவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு மனைவி இருக்கும் அறைக்கு வந்துசேர்ந்தார் கண்ணன்.
அயர்வில் உறங்கும் மனைவியின் நெற்றி வருடி.. ஆதரவாய் முத்தமிட்டார் கண்ணன்.
அரை உறக்கம் கலைந்து எழுந்து அமர்ந்த கமலி கணவன் நிற்கும் நிலை கண்டு… “ அடடா என்ன பண்றீங்க தள்ளி நில்லுங்க.. வீட்டுக்கு கெஸ்ட் வேற வந்திருக்காங்க, பார்த்தா என்ன நினைப்பாங்க?, “ என்று படபடத்தார்.
“ அதெல்லாம் ஒண்ணும் நினைக்க மாட்டாங்க… ஏன்னா பாக்குறதுக்கு தான் அவங்க இங்க இல்லையே.. அப்பவே கிளம்பிட்டாங்க.. “ என்றவர் மேலும் மனைவியை நெருங்கிட.. “ இப்போ தான் கல்யாணம் ஆன மாதிரி .. இது என்ன விளையாட்டு மாமா.. “ என்று சங்கடத்துடன் கமலி விலகிக் கொள்ள.. ” சாரிடா கண்ணம்மா உன்னை ரொம்பவே கஷ்டப் படுத்திட்டேன். இன்னைக்கு அந்த பையனுக்கு கதை சொல்லும் போது மறுபடியும் நம்ம வாழ்க்கைய வாழ்ந்துட்டு வந்த மாதிரி இருக்கு.. “ என்றவர் கண்களில் அவரையும் மீறி கண்ணீர் வழிந்தது.
“ என்னைக்கோ நடந்ததுக்கு இன்னும் எத்தனை தடவை தான் மன்னிப்பு கேட்பீங்க.. தப்பு உங்க மேல மட்டும் இல்லையே, நானும் தான் தப்பு செஞ்சிருக்கேன், என் கனவை நிறைவேத்திக்கிற ஆசையில உங்களை சரியா கவனிக்காம விட்டுட்டேன் “ என்று நடந்ததில் தன் தவறு இருப்பதையும் உணர்த்தினார் கமலி.
“ சரி விடு பழைய கதை இனி வேணாம். உன்னோட புதுக்கதை என்ன ஆச்சு?, எழுதி முடிச்சிட்டியா பப்ளிஷ் பண்ண கொடுத்திடலாமா.. அதுக்கு முன்னாடி நான் ஒரு தடவ படிக்கணும் “ என்று மனைவி எழுதி முடித்த கதைக்கு முதல் வாசகனாய் இருந்து நிறை குறைகளை சுட்டிக் காட்ட துவங்கினார் கண்ணன்.