அத்தியாயம் – 9

பாரதியை, ரெஜினாவிடம் ஒப்படைத்து விட்டு, தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்த செழியனுக்கு, இந்த கேஸில் யோசிக்க வேண்டியது நிறைய இருந்தது.

அதனால் தான், இக்கட்டான நிலையிலும் பாரதியை ரெஜினாவிடம் ஒப்படைத்து விட்டு வந்து விட்டவன்.. பின்னால் கையை கட்டிக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக அந்த அறையை அளந்து கொன்டிருந்தான்.

எப்படி யோசித்தாலும் திவ்யபாரதி எப்படி குற்றவாளியானாள் என்று புலப்படவில்லை. அவள் விஷயம் என்று வரும்போது மட்டும், அவன் எப்போதுமே முட்டாள் அல்லவா…?

வேலை செய்ய மறுத்த தன் மூளையை கைகளால் பலமாக ஓங்கி தட்டிக்கொண்டான். அவள் அரெஸ்ட் ஆனதிலிருந்தே ஸ்தம்பித்துப் போயிருந்த மூளை, திவ்யபாரதியை சுற்றியே வலம் வந்தது.

‘இப்போது DSP செழியனாக யோசித்தால் மட்டுமே, இந்தக் கேள்விக்கு விடை காணமுடியும்’ என்று யோசித்தவன், பலவித முயற்சிகளுக்குப் பின் நிதானத்துக்கு வந்திருந்தான்.

ஆரம்பத்திலிருந்து பொறுமையாக யோசிக்க ஆரம்பித்தான். ‘இத்தனை கொலைகளை செய்தது திவ்ய பாரதியா…?’ என்ற கேள்வி முளைக்க, ‘அவள் விளையாடுகிறாளோ?’ என்ற எண்ணம், தோன்றிய அடுத்த நிமிடமே அது மறைந்தும் போனது.

‘ஏனெனில் அவன் அறிந்த திவ்யபாரதி, விளையாட்டுப் பெண் அல்ல. அதிலும் பத்திரிக்கை துறையில் வேலை செய்பவள். இதன் பின் விளைவுகளை நன்றாக அறிந்தவளும் அல்லவா..? நிச்சயம் அவள் விளையாடவில்லை’ என்று உறுதிப்படுத்திக் கொண்டான்.

விளையாட்டுப்பெண் என்றதும் தான், அன்றொரு நாள் ஏட்டு சின்ன சாமி திவ்யபாரதியின் சின்ன வயது ஞாபகங்களை சொல்லிக் கொண்டிருந்த போது, இடையில் ஃபோன் வரவும் அவன் அதைக் கேட்காமல் சென்றதும், நினைவில் வந்தது.

திவ்யபாரதிக்கு ஒரு அக்கா இருப்பதாகச் சொன்னதும் லேசாக நினைவில் வர, அடுத்த நொடி  இரவென்றும் பாராமல் ஏட்டு சின்ன சாமியை வரவழைத்திருந்தான்.  அவர் வருவதற்கு இடைப்பட்ட நேரத்தில், பலவித சம்பவங்களை ஒன்று கோர்த்து காட்சிப்படுத்தி இருந்தான். காட்சியின் முடிவு, அப்பட்டமாக அவனுக்கு அதிர்ச்சி அளித்தது என்னவோ உண்மை.

ஏட்டு சின்ன சாமி வந்துவிட, அவரிடம் திவ்யபாரதியின் குடும்பத்தை பற்றி விசாரித்தான். அந்த நடு இரவில் ஏன் என்று புரியாவிட்டாலும், மேலதிகாரி கேட்கும்போது சொல்லித்தானே ஆகவேண்டும். எனவே திவ்யபாரதியைப் பற்றி, தனக்குத் தெரிந்ததை செழியனிடம் கூற ஆரம்பித்தார்.

திவ்ய பாரதியின் குடும்பம் தங்கள் வீட்டின் பக்கத்தில் வசித்து வந்ததையும், அதன் பிறகு அவள் எப்படி தன் குடும்பத்தை இழந்தாள் என்பதையும், ஒவ்வொன்றாக விவரித்து முடித்தவரின் கண்களில் நீர் வடிந்தது.

அவர் சொல்ல சொல்ல.. கேட்டுக் கொண்டிருந்த அவனுக்கோ, நெஞ்சில் தீப்பற்றிக் கொண்டது. மனதில் சுமந்த பாரத்தோடு, தன்னவளை எப்படியாவது காக்க முடியுமா என்று அறிந்துகொள்ள வேண்டி, இழுத்துப் பிடித்த பொறுமையுடன் முழுக்கதையும் தெரிந்துகொண்டான்.

சின்ன சாமியிடம் அன்றைய  தேதியையும், வருடத்தையும் கேட்டுக் கொண்டவன், இரவோடு இரவாக அன்றைய வருடத்தின் ரெக்கார்டுகளை தேடிக் கொண்டு வரச் சொல்லி, படிக்க ஆரம்பித்தான். கேஸ் ஃபைலையும், அதோடு சம்பந்தப்பட்ட பேப்பர்களையும் பார்க்க பார்க்க, கல் நெஞ்சன் அவனுக்கே, இதயம் படபடக்க ஆரம்பித்தது.

படித்து முடித்தவன் “கண்ணம்மா..” என்று கதறிவிட்டான்.

இப்போதே தன்னவளை ஓடிச்சென்று அணைத்துக்கொள்ள வேண்டும் போல் வெறி தோன்ற,  இவ்வளவு நேரம் கட்டுபடுத்தி வைத்திருந்த கண்ணீர் அவனையும் மீறி வெளிப்பட்டது.

“எப்படிறீ.. எப்படிறீ.. தாங்கிக்கிட்ட.. கண்ணம்மா? கேட்கற என்னாலயே முடியலயே..” என்று புலம்பித் தீர்த்தவன்.

புயலாக ஓடிச் சென்றான் தன்னவளைத் தேடி.  சிறைக்கதவுகளை திறந்தவன், ஒரு மூலையில் அமர்ந்திருந்தவளை, புயலாக மாறி தன்னுள் வாரிச் சுருட்டிக் கொண்டான்.

அவனின் திடீர் தாக்குதலில் மறுகிய திவ்யபாரதியோ, அவனை விலக்க முற்பட, அதுக்கு இடமளிக்காதவன், “ப்ளீஸ் கொஞ்சம் பொறுத்துக்கோடி. எதுவும் பேசாத கண்ணம்மா.” என்று அவள் கழுத்தில் முகம் புதைத்தபடி, காதுமடலோடு கெஞ்சியவன்,

“என்னால தாங்கிக்க முடியலடி.. நீ எப்…ப..டி கண்ணம்மா..”  என்று  வார்த்தைகள் தடுமாற.. விலகியவளை…

“கொஞ்ச நேரம் எனக்காக பாப்பு.. ப்ளீஸ்” என்றவன் காற்றுப்புக இடைவெளியின்றி மீண்டும் இழுத்து அணைத்துக் கொண்டான்.

அவள் எப்போதோ பட்ட காயத்திற்கு, இப்போது மருந்திட முயற்சித்தானோ..?

அவனுள்  திமிறிக் கொண்டிருந்த திவ்யபாரதியின் திமிறல்கள், அவனின் வார்த்தைகளில் அடங்கித்தான் போனது.  சில நொடிகளில் தன்னை மீட்டுக்கொண்டவளில், பழைய மிடுக்கு திரும்பியிருந்தது.

செழியனிடமிருந்து தன்னை முழுதாக பிரித்தெடுத்துக் கொண்டவள், “என்ன டிஎஸ்பி சார், என்னைப்பத்தி முழுசா தெரிஞ்சிகிட்டிங்க போல இருக்கு. இப்பவும் இந்த கொலகாரிய பிடிக்குதா என்ன..?” என்றவளிடம்.

“இப்போதான்டி உன்னை அதிகம் பிடிக்குது, என் திமிரழகி” என்று அவள் நெற்றியில் இதழ்பதித்து விலகினான். தன் உண்மைக் காதல், எந்த நிலையிலும் மாறப் போவதில்லை என்பதற்கு அச்சாராமாய்.

கையிலிருந்த துப்பட்டாவால் நெற்றியை துடைத்தவள், “ரொம்ப ஓவரா போறீங்க டிஎஸ்பி, சின்ன குழந்தை மாதிரி எச்சில் பண்ணிகிட்டு” என்றாள் முகத்தை அஷ்டகோணலாக்கி.

“என்னையும் சின்ன குழந்தையா நினைச்சிக்கோ பாப்பு..” என்றவன், அப்போதுதான் கவனித்தான் அவள் இதழ்க் கடையோரம் இரத்தம் காய்ந்து காயம் ஏற்பட்டிருப்பதை, அவள் முகமும் கூட வீங்கியிருப்பதை கவனித்தவன், என்ன நடந்திருக்கும் என்று நொடியில் யூகித்து,  “ரெஜினா…” என்று பல்லைக் கடித்துக்கொண்டான்.

காயத்தை விரல் கொண்டு வருடப்போக, விலகிக்கொண்ட பாரதி,  “உங்க மேல ஓவர் லவ்வு போல, சீக்கிரம் ஓகே சொல்லிடுங்க, டிஎஸ்பி சார். வலிதாங்க முடியல.”  என்று மென் புன்னகையுடன் சொல்ல,

சத்தமாகச் சிரித்த செழியன் “அதுக்கு வேற ஆளப் பாருங்க ஜான்ஸி ராணி. எனக்கு மனைவின்னா, அது என் தியாவா மட்டும் தான் இருக்க முடியும்.” என்று கையைக் கட்டிக்கொண்டு உறுதியாகச் சொன்னவனை, வலி நிறைந்த கண்களால் ஏறிட்டாள்.

“நான் அப்பாவி தியா இல்ல DSP, அடிப்பாவி திவ்யபாரதி. இன்னும் கொஞ்ச நாள்ல ஆவியா போய்டுவேன், அப்புறம் என்ன பண்ணுவீங்க? ரெஜினாக்கு நான் குறுக்க வந்ததுதான் கோபமே தவிர, ரொம்ப நல்ல பொண்ணு, அவ கடமையத்தான அவ செஞ்சா..” என்றாள் தன்னைக் காயப்படுத்திய ரெஜினாவுக்காக வக்காலத்து வாங்கிக்கொண்டு.

“நீ பாவியா இருந்தாலும் சரி, இல்ல… ஆவியா போனாலும் சரி, காவியக் கட்டிக்கிட்டு காசிக்கு வேணும்னா போவேனே தவிர, இன்னொரு பொண்ணு பின்னாடி போகமாட்டேன்டி!” என்றவன் “நீ தான் அடிக்கடி சொல்வியே…  எனக்கு என் முதல் காதலி காக்கிச் சட்டை  தான்னு. அப்படி உனக்கு ஏதாவதுன்னா, என் முதல் காதலி கூட வாழ்ந்துட்டுப் போறேன்.” என்றான் வலி நிறைந்த விழிகளோடு.

பெருமூச்சொன்றை விட்டவன், “இப்போவாவது சொல்லு பாப்பு..,  நீ என்னை காதலிக்கவே இல்லையா கண்ணம்மா.” என்றான் ஏக்கம் நிறைந்த குரலில். இப்போதாவது தன் காதலை ஒத்துகொள்வாளா என்ற நப்பாசை அவன் கண்களில்.

இருவருமே நாளை என்ன நடக்கும் என்று அறிந்தே, அந்த தருணத்தை கடந்து கொண்டிருந்தனர்.

அவனுக்கு தன் காதலுக்கான சின்ன பிரதிபலிப்பு அவளிடமிருந்து கிடைத்தாலும் போதும், அதைக் கொண்டு வாழ்ந்து விடலாம் என்ற நிலை.

அவனவளுக்கோ… அவன் வாழ்வை, தான் இல்லை என்றாலும் செழிக்க வைக்க வேண்டும் என்ற நினைப்பு.

சொல்லாத காதல் உள்ளம் இரண்டும், அங்கே ஒருவருக்காக ஒருவர் மறுகிக் கொண்டிருந்தது.

செழியனின் கேள்விக்கு விரக்திச் சிரிப்பொன்றை பதிலாகத் தந்த திவ்யபாரதியோ, “மத்த பொண்ணுங்க போல இயல்பான வாழ்க்கை எனக்கும் அமைஞ்சிருந்தா, உங்கள காதலிச்சிருப்பனோ.. என்னவோ?” என்று விரக்தியாகச் சொன்னவள், அப்போதும் தனது காதல் மனதை அவனிடம் சொல்லாமல் மறைத்தாள்.

ரெஜினாவை ஏற்றுக்கொண்டு அவன் வாழ்வு சிறக்க வேண்டும் என்று நினைத்த திவ்ய பாரதி, தனக்கு காதல் என்ற ஒன்று வரவே வராது என்று  சாதித்தாள்.

இப்போதும் காதலைச் சொல்லாமல் மறைப்பவளை நினைத்துக் கடுப்பானவன்,  “ஓ… அப்போ நீ என்னை காதலிக்கவே இல்ல, அப்படித்தானே பாப்பு..!” என்று அழுத்தமாகப் பார்த்தவன், தன் மொபைலை எடுத்து தன் நண்பன் அனுப்பிய விடீயோவை ஓடவிட்டு, அவளிடம் காட்டினான்.

செழியனின் பெயரை விரல்களாள் வருடும், அந்த வீடியோவைப் பார்த்தவள், “அன்… அன்னைக்கு வேற ஏதோ ஞாபகத்துல இருந்திருப்பேன், DSP.” என்று தடுமாறியபடி தலையை குனிந்து கொள்ளவும்,

“அந்த எக்ஸ் MLA பையன் கொலைய எப்படி மறைக்கிறதுன்னா…?” என்றவன், கையை குறுக்காக கட்டிக்கொண்டு இன்னும் அழுத்தமாகப் பார்த்து வைத்தான்.

குனிந்திருந்த திவ்யபாரதி சட்டென்று செழியனை அதிர்ந்து பார்க்கவும், “அன்னைக்கு நைட், அந்த எக்ஸ் எம் எல் ஏ பையனைக் கொன்னுட்டு வந்த கையால தானே, என்னைய அடிச்ச..? அதாவது ஞாபகம் இருக்கா, இல்ல ஞாபகப் படுத்தட்டுமா..?” என்றவனை இப்போது அலட்சியமாகத் திரும்பிப் பார்த்த திவ்யபாரதி,

“எஸ்..DSP..! அன்னைக்கு உங்களையும் போட்டு இருக்கணும் ஜஸ்ட் மிஸ்.” என்றாள் ஒருவித நிமிர்வுடன்.