அத்தியாயம் – 8

காதலோடு வளைகாப்பு நடத்த ஆசைப்பட்ட கைகளுக்கு, தன் கைகளாலே விலங்கிட்டதை இன்னமும் நம்ப முடியாமல் பார்த்தவனுக்கு, வார்த்தைகளும் தடை பட்டுப் போக, கட்டிலில் அப்படியே தொய்ந்து அமர்ந்துவிட்டான், செழியன்.

தன் எஜமானனின் இந்த அவதாரம், அந்த இரு காவலர்களுக்கும் புரியாமல் போக, சூழ்நிலையை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டவர்கள், திவ்ய பாரதியை அழைத்துக்கொண்டு காவல் நிலையம் செல்வதற்காக, ஜீப்பில்  ஏற்ற முயற்சிக்கும் நொடி, எங்கிருந்தோ பறந்து வந்தவன் போல் வந்த செழியன், டிப்பார்ட்மென்ட் அவனுக்கு அளித்திருக்கும் காரில் அவளை ஏற்றிக் கொண்டான்.

வண்டியை எடுக்க வந்த டிரைவரிடம் இருந்து சாவியை பெற்றுக் கொண்டவன், தானே வண்டியை ஓட்டவதற்காக டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டான். கைதியாக வந்தாலும், அவள் தன்னுடன் தான் வரவேண்டும் என்று உறுதியாக இருந்தான். டிரைவர் காரை ஓட்ட,  பின்னால் குற்றவாளியாக அமர்ந்து செல்லும் தன்னவளை, அவன் கனவில் கூட அனுமதிக்கத் தயாராய் இல்லை.

எப்படி திவ்யபாரதியை, ஒரு கைதியாக ஜீப்பில் ஏற்றிச் செல்வதை அனுமதிக்க முடியாதோ, அதே போல், சட்டத்தை மீறவும் முடியாது. அதனாலே கவர்மென்ட் அவனுக்கு அளித்திருக்கும் காரில் ஏற்றிக்கொண்டவன், வழக்கத்திற்கு மாறாக தன் அருகிலும் அமர்த்திக்கொண்டான்.

எங்கே அவள் முகத்தைப் பார்த்தால் உடைந்து விடுவோமோ என்று பயந்து போனவன், அவள் பக்கம் திரும்பியும் பாராமல் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தான். பின்னால் ஒரு காவலரையும், அருகில் இருக்கும் ஸ்டேஷனிலிருந்து ஒரு லேடி காவலரையும் வரவழைத்து பின்னால் அமரச் சொன்னவன், காரை ஸ்டேசனை நோக்கி விரட்ட ஆரம்பித்தான்.

கொலையாளி ஒரு பெண்ணாக இருக்கக்கூடும் என்று அவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லையே, அதனால் லேடி காவலரை முன்னரே ஏற்பாடு செய்திருக்கவில்லை.

வழக்கத்திற்கு மாறான செழியனின் நடவடிக்கையே, அங்கிருந்த மற்றவர்களின் வாயையும் சேர்த்து அடைத்திருந்தது. செழியனின் கார் காவல் நிலையத்தை நோக்கிப் பயணிக்க,

திவ்ய பாரதியோ எந்த ஒரு சலனமும் இன்றி, தன் இயல்புக்கு மாறான புன்னகையுடனே பயணித்தாள்.

செழியனைப் பற்றிய செய்தியை பார்த்ததுமே, சரணடையும்  முடிவுக்கு அவள்  தயாராகிவிட்டாள். எப்போது செழியன் இந்த கேஸை கையில் எடுத்தானோ, அன்றே இப்படி ஒரு நாள் வரும் என்று முடிவு செய்துவிட்டிருந்தாள்.

செழியனும், தானும் இப்படி எதிர் எதிரே நிற்கும் நாளொன்று வருமென்று தெரிந்துதான், அவனை விட்டு விலகி நின்றாள்.

செழியனால் கண்டிப்பாக இதை தாங்கிக் கொள்ள முடியாது என்று நினைத்து, உள்ளூர வருத்தமும் கொண்டாள். அவனிடம் காதலைச் சொல்லவில்லை என்றாலும், அவன் காதலின் ஆழத்தை முற்றிலும் அறிந்திருந்தாள்.

காதலின் முடிவு தெரிந்தவள், மூச்சை அடக்கப் பழகிக் கொண்டாள். முன்னுரை கூட அறியாதவன், மூச்சுத்திணறி  மூழ்கிக் கொண்டிருந்தான்.

திவ்யபாரதி நினைத்தது போலவே, பேச வார்த்தைகளற்றுப் போன செழியன், காரை ஓட்டிக்கொண்டே கண்ணாடியூடு திவ்யபாரதியை பார்க்க, காரில் ஏறியதிலிருந்தே அவனை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த திவ்யபாரதியோ, அவன் மனதை சற்றே மாற்றும் முயற்சியாக, அவன் பார்த்ததும் சட்டென்று கண்ணடித்துச் சிரித்தாள்.

நினைவுக்கும், நிஜத்துக்கும் இடையில் தத்தளித்துக் கொண்டிருந்த செழியன், தன்னவளிடமிருந்து இந்த ஒற்றைப் புன்னகைக்காக எத்தனை நாட்கள் தவமிருந்திருப்பான்.

இப்படி ஒரு நிலையில் தன்னவளிடமிருந்து இப்படி ஒரு ரெஸ்பான்ஸை எதிர்பார்த்திராதவன் “ராட்சஸி” என்று மனதுக்குள் நொந்து கொண்டவனின் கைகளில், கார் வேகம் எடுத்தது.

எத்தனையோ இளம் பெண்கள், இவன் கற்றை மீசைக்கு ஏங்கிக் கிடக்க, தன் மொத்த ஆசையையும் அவள் ஒற்றைப் பார்வையில் அல்லவா ஒளித்து வைத்திருந்தான்.

இதே காரில் அவன் மனைவியாக, அருகில் அமர்ந்து கம்பீரமாக வலம் வர வேண்டியவள், ஒரு கைதியாக அந்தக் காரில் அமர்ந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தத்தளித்தவன், இந்த நொடியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக, கடக்க எண்ணினான்.

கார் காவல் நிலையம் வந்தடைய, திவ்யபாரதியை சிறையில் அடைக்கச் சொல்லி அங்கிருந்த காவலர்களிடம் சொன்னவனுக்கு, அவளை சிறைக்குள் பார்க்கும் திராணியற்று, அங்கிருந்த டேபிளில் பொத்தென்று அமர்ந்துவிட்டான்.

அவளிடம்  மேற்கொண்டு தன்னால் விசாரிக்க முடியும் என்று தோன்றவில்லை. எப்படி ஒரு மருத்துவருக்கு தன் உயிரில் கலந்தவருக்கு, ரண சிகிச்சை அளிக்க நடுக்கம் ஏற்படுமோ, அதே நடுக்கத்தை இப்போது செழியன் அனுபவித்துக் கொண்டிருந்தான். மேலும், அவனுக்கு இப்போது நிறைய யோசிக்க வேண்டி இருந்தது.

எனவே, ஏஎஸ்பி ரெஜினாவை வரவழைத்தவன், மேலோட்டமாக விசயத்தைச் சொல்லி, பார்த்துக்கொள்ளச் சொல்லி விட்டு, அங்கே அவனுக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றுவிட்டான்.

அவளை இங்கே விட்டுவிட்டு வீட்டுக்கு செல்ல, அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. அவன் எடுத்த இந்த முடிவுக்காக, நிச்சயம் வருத்தப்படப் போவது தெரியாமல், தனிமையை நாடிச் சென்றான்.

ஏஎஸ்பி ரெஜினா, செழியனில் தீரா காதல் கொண்டவள். அதை அவனிடம் வெளிப்படுத்தியும் இருக்கிறாள். திவ்ய பாரதியின் மேல் காதல் கரைபுரண்டோட, வேறு எந்தப் பெண்ணையும் அவன் நினைக்கத் தயாராக இல்லை. அதனால் நல்லவிதமாகவே எடுத்துச் சொல்லி, ரெஜினாவின் காதலை மறுத்திருந்தான், செழியன்.

ரெஜினா ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரிதான். ஆனால் காதல் என்று வரும் போது…..

ஏஎஸ்பி ரெஜினா, திவ்ய பாரதி அடைக்கப்பட்ட அறையினுள் வந்தவள், அங்கு ஒரமாக திவ்யபாரதி அமர்ந்திருந்த நாற்காலியை, ஓரே எட்டாக எட்டி மிதித்தாள்.

“கொலைகாரி உனக்கு, மாலை மரியாதை கேட்குதோ?” என்றவள், நேரே பாரதியின் கழுத்தைப்பிடித்து, வலது கையால் ஓங்கி கன்னத்தில் அறைந்தவள், “மந்திரி பையனையும் அவன் ஃப்ரண்டையும் எங்கடி வச்சிருக்க.” என்று கேட்டு மாறி மாறி அடிக்க, நிலைகுலைந்து போனாலும், திவ்யபாரதி வாயைத் திறக்கவில்லை.

அதில் மேலும் கடுப்பான ரெஜினா, “ஒரு கொலைகாரி உனக்கு டிஎஸ்பி கேட்குதோ?” என்று திவ்யபாரதியின் தலைமுடியை கொத்தாகப் பற்றி, சுவற்றொடு வைத்து நசுக்கினாள்.

“ரெஜினாவின் கேள்வியே, ரெஜினாவின் காதலை பறைசாற்ற, தடுமாறி எழுந்து நின்ற திவ்யபாரதி, சிறு புன்னகையுடன்,

“எனக்கு அவர் வேண்டாம், அவருக்குத்தான் நான் வேணுமாம்.” என்றாள், ரெஜினாவின் மனதை மேலும் அறிந்து கொள்வதற்காக. தன்னவனுக்குத் தான் இல்லையென்றாலும் துணை தேடித் தந்து விடும் தவிப்பு, திவ்யபாரதியின் கண்களில்.

திவ்யபாரதியின் பதிலில் கடுப்பின் உச்சத்துக்கே சென்ற ரெஜினா, “அவர வேண்டாம்னு சொல்ல கூட ஒரு தகுதி வேணும், உனக்கு என்னடி தகுதி இருக்கு..? கொலையச் செஞ்சிட்டு அதை மறைக்க பத்திரிக்கைகாரி வேஷம் போடுற நாய் நீ!” என்று லத்தியால் மேலும் ஒன்று வைத்தாள்.

அடியையும் வாங்கிக்கொண்டு, எழுந்து நின்ற திவ்யபாரதி, “நான் எப்போ கொலை செய்யலன்னு சொன்னேன், மறைக்கிறதுக்கு,” என்று நக்கல் சிரிப்பு சிரித்தவள்,  “உங்க போலீஸ் என்னை கண்டுபிடிக்கலன்னா, அதுக்கு நானா பொறுப்பு.” என்று கேலியும் செய்தாள்.

“ஒழுங்கா வாய் பேசாம, உண்மையச் சொல்லுடி, எங்க அந்தப் பசங்கள வச்சிருக்க, உண்மையச் சொல்லலன்னா உடம்புல ஒட்டு துணி இல்லாம, ஓட விட்டு அடிப்பேன்.” என்று மிரட்டிய ரெஜினாவை கொஞ்சமும் பொருட்படுத்தாது, வெடிச்சிரிப்பு சிரித்த திவ்யபாரதியோ,

“அது என்ன..? எல்லாம் ஆ..ன்னா ஊ..ன்னா, பொம்பளைங்கள இதச் சொல்லியே மிரட்டுறீங்க…?” என்று திமிராக நிமிர்ந்து நின்றவள், “என் தோலை மூடி இருக்கற இந்த நாளு துணிகள் மேலதான், என் மானம் இருக்குதா என்ன..? சின்ன வயசுலருந்து கட்டிக்காக்குற என் நடத்தை தீர்மானிப்பதில்லையா என் மானத்த..? எவனோ ஒருத்தன் அவங்களுக்கே தெரியாம குளிக்கறத வீடியோ எடுத்து நெட்டுல போட்டா, அங்க அந்தப் பொண்னோட மானமே போயிருதுல்ல…” என்றாள் பார்வையில் கடுமையை தாங்கி.

மேலும் ஆத்திரம் மேலிட “அவ பார்த்து பார்த்து பழகி வந்த பண்பாட்டுல இல்லையா, அவ மானம்..? எவனோ ஒருத்தன் செஞ்ச தப்புக்கு, காலம் முழுமைக்கும் மானம் போச்சின்னு தீக்குளிக்கனுமா என்ன..? என் பண்பாடு கத்துத் தராத மானம், இந்த நாலு துணியிலதான் இருக்கறதா நினைக்கிறதாலதான், இன்னைக்கு நிறைய பொண்ணுங்க தற்கொலை பண்ணிட்டு இறந்து போறாங்க. நானா ஒழுக்கம் கெடாதவரைக்கும், என்னை மீறி நடக்கிற எதுக்கும், நான் கலங்க மாட்டேன்னு.. எப்போ நம்ம பொண்ணுங்க நினைக்கிறாங்களோ, அன்னைக்குதான் இந்த நாட்டில பெண்கள் தற்கொலை குறையும், என்னை மாதிரி கொலைகாரங்களுக்கும் வேலை குறையும் மேடம்.” என்றவள்,

“கொஞ்சம் தண்ணி தரீங்களா, நீளமா பேசிட்டனா, தொண்ட வத்திபோச்சி” என்றாள் கொஞ்சமும் பயம் இல்லாமல்.

“விட்டா பேசிட்டே போவியா நீ, பத்திரிக்க காரில்ல. அதான் இந்தத் திமிர்.” என்ற ரெஜினாவோ, “நீ உண்மைய சொல்றவரைக்கும், ஒரு சொட்டு தண்ணீ… கூட தரமாட்டேன்.” என்றாள்.

“சரி, தண்ணீ தரலன்னா பரவால்ல. டிஎஸ்பி மேல ரொம்ப காதலோ..?” என்ற திவ்யபாரதி, “டிஎஸ்பிய நல்லா பாத்துப்பீங்களா.. சொல்லுங்க, விட்டுத் தந்துர்றேன்.” என்றாள் கண்ணடித்து.

“நீ என்னடி விட்டுத்தர்றது, செஞ்ச கொலைக்கு தூக்குக்கு போகப் போற அக்கியூஸ்ட் நீ!” என்றவள் மேலும் தன் கோபத்தையெல்லாம் திரட்டி, கையிலிருந்த லத்தியிடம் காட்டினாள்.

எவ்வளவு அடித்து காயப்படுத்தியும், இம்மி அளவு கூட வாயைத் திறக்காத திவ்ய பாரதியைக் கண்டு, ரெஜினாவே அதிர்ந்துதான் போனாள். நிச்சயம் சாதாரணப் பெண்ணால் இவ்வளவு அடியை தாங்கிக்கொள்ள முடியாது.” என்று நினைத்தவள், கையில் பிடித்திருந்த லத்தியை ஓங்கி சுவற்றில் அடித்தாள்.

அப்போதும், உதட்டில்  வழியும் இரத்தத்துடன், “ஏன் மேடம் தேவை இல்லாம உங்க எனர்ஜிய வேஸ்ட் பண்றீங்க, டிஎஸ்பியோட குழந்தைய சுமக்க பலம் வேண்டாமா?” என்றாள் கண்களில் வலியை தேக்கி.

அதில் “ச்சீ.. நீயெல்லாம் என்ன பொண்ணுடி” எனவும்,

“பொண்ணுன்னா என்ன மேடம்” என்று  பாரதி மறுபடியும் லெக்சரை ஆரம்பிக்கப் போக…

“ஏய்.. ஏய்.. மூடு” என்று வாயை மூடும்படி செய்கையால் காண்பித்த ரெஜினா, “ஷ்..ஷ்ப்பா, முடியல…” என்று களைத்துப் போய் வெளியேறிவிட்டாள்.

…………………

செழியன் திவ்யபாரதி அரெஸ்ட் ஆன விஷயத்தை இன்னும் மேலதிகாரி யாரிடமும் முறையாக தெரிவித்து இருக்கவில்லை. இதில் மந்திரியின் மகன் சம்பந்தப் பட்டிருப்பதால், நிச்சயம் திவ்யபாரதியை அதிகம் டார்ச்சர் செய்வார்கள் என்று தெரிந்துதான் மறைத்திருந்தான்.

நாளை நேரே கோர்ட்டில் ஒப்படைக்க திட்டமிட்டிருந்தான். தன்னுடன் வந்த இரு காவலர்களும், இவனின் விசுவாசிகள் என்பதால், இவனைத்தாண்டி விஷயம் வெளியில் செல்லவில்லை.

ரெஜினா அப்போது ஸ்டேஷனில் இருந்ததால், அவளுக்கு விஷயம் தெரிந்திருந்தது. மேலும் தன்னால் முடியாத பட்சத்தில்,  அந்த பொறுக்கிகளைப்பற்றி விசாரிக்க வேண்டி இருந்ததால், அவளிடம் மேலோட்டமாக விசயத்தை தெரியப்படுத்தி இருந்தான், செழியன்.

ஆனால், இதில் அவன் எதிர்பார்க்காத விஷயம், ரெஜினா இந்த அளவுக்கு முரட்டுத்தனத்தை காண்பிப்பாள் என்பதுதான். அவள் காதல் சொன்ன விசயத்தை,  அன்றே அவன் மறந்திருக்க, ஆனால்… அவள் இன்னும் அவனை நினைத்துக்கொண்டு இருப்பாள் என்று, அவன் என்ன கனவா கண்டான்.

அதுவும் அவளுக்கு பாரதிதான் தன் காதலி என்று தெரியுமாதலால், காயப்படுத்த மாட்டாள் என்றே நினைத்திருந்தான், தன்னவளின் கோலத்தை பார்க்கும் வரை….!

**********

கார்த்தி…

நடைபயிற்சி முடிந்து, தன் சகாக்களுடன் தன் வீட்டுக்குள் நுழைந்தான் கார்த்தி..!

ஒரு அறையிலிருந்து ஹீனமான முனகல் சத்தம் கேட்க, கார்த்தியின் கண்கள் இரத்தச் சிவப்பை பூசிக்கொண்டது. அந்த அறையைத் திறந்து, கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த ஒருவனை வெளியில் இழுத்து வந்து ஹாலில் போட்டான்.

ஏற்கனவே அரை உயிரும் கால் உயிருமாக இருந்தவனை, தன் சகாக்களுக்கு கண்ணைக் காட்ட, முதல் ஆளாக ஹென்றி தனது தாக்குதலை ஆரம்பித்தான். அதைத் தொடர்ந்து மற்றவர்களும் இணைந்துகொள்ள, அவனை உண்டு இல்லை என்று ஆக்கிக்கொண்டிருந்தார்கள் அந்த நால்வரும்.

இவற்றையெல்லாம் ரசித்துக்கொண்டே, தனக்கான காலை உணவான கஞ்சியை தயாரித்து முடித்த கார்த்தி, ஹால் சோபாவில் அமர்ந்து கொண்டு, மியூசிக் சிஸ்டத்தை ஆன் பண்ணியவன், கத்துவதற்குக் கூட திராணியற்று கண்களால் விட்டு விடும்படி கெஞ்சியவனை இரசித்துக்கொண்டே, கஞ்சியை பருகி முடித்திருந்தான்.

முடித்ததும் “மாறா… இன்னைக்கு இது போதும், மீதிய அப்புறம் பாத்துக்கலாம்.” என்றான்.

அப்போதும் ஹென்றி விடாமல் அவன் வேலையைக் காட்ட, “டேய், நீ மட்டும் சொன்னா கேட்க மாட்டியா? விடுறா.” எனவும் தான், முறைத்துக்கொண்டே விலகி வந்தான்.

முனகவும் முடியாமல் விழுந்துகிடந்தவனை தூக்கியவன், மீண்டும் அதே அறையில் கொண்டு அடைக்க, அவனோ சட்டென்று காலைப்பிடித்துக் கொண்டவன்,  “ப்ளீஸ் என்…ன கொன்..னுரு.” என்று திக்கி திணறி பேச,

அலட்சியமாகச் சிரித்தவன் “ஓரே நாள்ல செத்துட்டா எப்படி?” என்றவன், திரும்பியும் பார்க்காமல் சென்றான்.

கதவருகில் நின்று திரும்பிப் பார்த்தவன் “ஹான், சொல்ல மறந்துட்டேன், உன் ஆருயிர் நண்பன் நேத்து நைட் குடுத்த ட்ரீட்மெண்ட்ல மண்டையப் போட்டுட்டான். துக்கம் கொண்டாடுறதா இருந்தா, இப்பவே கொண்டாடிக்க. ஏன்னா, இன்னைக்கு நைட், நீ தாண்ட மாட்ட.” என்று சொல்லியவன் மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்து விட்டுச் சென்றான்.