அத்தியாயம் – 6

தந்தையிடம் பேசிய பின் செழியனுக்கு மனம் இலகுவாகி விட, திவ்யபாரதியைப்பற்றி தந்தையிடம் பேசியதாலோ என்னவோ, அவள் ஞாபகம் அதிகமாக அவனை வாட்டியது.

போனை எடுத்து வாட்ஸப் பார்த்தான். அவள் அக்டிவில் இருப்பதாகக் காட்டியது. இது எப்போதாவது அவன் செய்வது தான். அவள் அக்டிவில் இருந்தால்.. என்னவோ அவன் கூடவே இருப்பது போல் ஒரு எண்ணம். எப்போதும் பார்த்துவிட்டு வைத்து விடுபவன். இன்று ஏனோ அவளிடம் பேசத் தோன்றியது.

“வேணான்டா.. செழியா, அவ அஞ்சி பைசாக்கு கூட உன்னை மதிக்கமாட்டா!” என்று மூளை எச்சரித்தது.  ஆனால், கை துறுதுறுக்க, எப்படியும் ரிப்ளை வராது என்று தெரிந்தாலும், “இவ்ளோ நேரம் ஃபோன்ல என்ன பண்ணிட்டு இருக்க” என்று அதிகாரமாகவே அவனையும் மீறி டைப் செய்து அனுப்பி இருந்தான்.

மணி பதினொன்றைக் கடந்தும் தூங்காமல் என்ன செய்கிறாள் என்று நினைத்தவன், அதையே, தன் போலீஸ் தோரணை மாறாமல் கேட்டு அனுப்பியிருந்தான்.

இரண்டு நிமிடங்கள் கடந்தும் ரிப்ளை எதுவும் வராதிருக்க, ஒரு பெருமூச்சுடன் ஃபோனை வைக்கப் போகவும், “டொய்ன்” என்ற சத்தம் வர, அவசரம் அவசரமாக திறந்து பார்க்க, அதிசயத்திலும் அதிசயமாக அவன் மெஸேஜுக்கு கோப ஸ்மைலியை பரிசாக அனுப்பி வைத்திருந்தாள், அவனின் காதலி.

என்னவோ.. அவள் காதலுக்கே ஓகே சொன்னது போல் பூரித்துப்போனவன், மேலும் என்ன அனுப்பலாம் என்று யோசிக்க, எதிர்பக்கம் டைப்பிங் என்று காட்டியது.

“சரி என்னதான் அனுப்பறான்னு வெயிட் பண்ணிப் பார்ப்போம்” என்று காத்திருந்தான்.

அடுத்த நொடியே, “DSP சார், இரண்டு ஸ்டேஷன்தான் உங்க கண்ட்ரோல்ல இருக்குன்னு கேள்விப்பட்டேன், இந்த திவ்ய பாரதி எப்போ உங்க கண்ட்ரோல்ல வந்தான்னு தெரிஞ்சிக்கலாமா?” என்று அவனுக்கு தன் மேலான அதிகாரத்தை காட்ட எந்த உரிமையும் இல்லை என்பதை சுட்டிக்காட்டி, படு நக்கலாக பதில் வந்திருக்க,

“உனக்கு தேவையாடா இது, அவதான் ஜான்ஸி ராணிக்கு தங்கச்சின்னு தெரியுமே” என்று தனக்கு தானே நொந்து கொண்டவன், “ஒரு பொண்ணுகிட்ட முதல் முதலா இப்படியாடா பேசித் தொலைப்ப, போலீஸ் புத்தி போகுதா பாரு!” என்று தனக்கு தானே வசைபாடி காரித்துப்பிக்கொண்டான்.

இருவரும் மற்றவர் நம்பரை தெரிந்து வைத்திருந்தாலும், இதுவரை பர்சனலாக போனில் பேசிக்கொண்டதே இல்லை. ஆனால், சொல்லாமலே ஒருவரின் மனதை மற்றொருவர் புரிந்து வைத்திருந்தனர்.

தன்னவள் பதில் புன்னகையை தர, கெத்து குறையாமல், “அந்த ஸ்டேஷன் கண்ட்ரோல்ல தான், உன் வீடு இருக்கு, அப்போ, உன் பாதுகாப்பும் என் கண்ட்ரோல்ல தான் வருதுங்க மேடம்.” என்று பதில் அனுப்பி வைத்தான்.

அந்தப் பக்கம் திவ்யபாரதி என்ன மனநிலையில் இருந்தாளோ..! கடவுளுக்கே வெளிச்சம், அதிசயத்திலும் அதிசயமாக இவனுக்கு பதில் அனுப்பிக் கொண்டிருந்தாள்.

செழியனின் மெசெஜ் பார்த்தவளின் உதட்டின் ஓரத்தில் மெல்லிதாக ஒரு புன்னகை. அவளையும் அறியாமல் பூத்திருந்தது.

“என்னைப் பார்த்துக்க எனக்கு தெரியும் DSP. கராத்தேவில் ப்ளாக் பெல்ட் வாங்கி இருக்கேன். அதனால நீங்க உங்க வேலையைப் பார்த்தா மட்டும் போதும்.” என்று பதில் அனுப்பி வைத்தாள்.

“ப்ளாக் பெல்ட்டா…” என்று அதிர்ந்தவன் மனசாட்சியோ, ‘விளங்கிரும், சும்மாவே ஆடுவா, இதுல இவள கட்டிக்கிட்டு டெய்லி கட்டில்ல கதகளிதான் ஆடணும் போல. நீ கடைசி வரைக்கும் முரட்டு சிங்கிள் தாண்டா” என்று அவனின் எதிர்காலத்தை புடம் போட்டு விளக்கிக் கொண்டிருந்தது.

பயந்த ஸ்மைலி ஒன்றை போட்டவன், “அதான் அன்னைக்கு அடி இடி மாதிரி விழுந்ததா?” என்று பதில் அனுப்பினான்.

‘தகப்பா, நீ ஆசைப்பட்ட மாதிரி என் மகனையும் போலீஸ் ஆக்கி பாக்குற கனவு கனவாவே போய்டும் போலவே’ என்று ஃபோனைப் பார்த்து, புலம்பித் தள்ளினான் மனதுக்குள்தான்.

பின்னர் இதையெல்லாம் புலம்பத்தான் முடியும். அவளிடம் சொன்னால் இப்போதே புரூஸ்லி போல் பறந்து வந்தல்லவா அடிப்பாள். அதை நினைத்துப் பார்த்தவனுக்கு கதிகலங்க “பேசாம மூடிக்கிட்டு அவளுக்கு மெசெஜ் போடாமலே இருந்திருக்கலாம்.” என்று நொந்துகொண்டவன், அடுத்த பதில் வருமா வராதா என்று காத்திருந்தான்.

நீண்ட நெடிய அமைதிக்குப்பின் “sorry” என்ற ஒற்றை வார்த்தை பதிலாக வர,

“இவ எதுக்கு sorry கேட்குறா, இவ மன்னிப்புலாம் கேட்குற ஆள் இல்லையே!’ என்று யோசித்தவனுக்கு, அன்று அடித்ததுக்குத்தான் மன்னிப்பு கேட்குறா என்று புரிந்து, உள்ளம் குளிர்ந்து போனவன், “சாரிலாம் எதுக்கு, அன்னைக்கு நான் நடந்துக்கிட்டதுக்கு தேவையான தண்டனைதான்.” என்றவன் தானும் மன்னிப்பு கேட்டு பதில் அனுப்பி இருந்தான்.

அதில் கடுப்பானவள், “நான் மன்னிப்பு கேட்டது டிஎஸ்பிங்கற பொறுப்பான பதவியில இருக்கும் போது அடிச்சதுக்காக, என் பின்னாடி லவ்வுன்னு கண்டபடி பினாத்திகிட்டு சுத்திட்டு இருக்கற செழியன அடிச்சதுக்காக இல்ல.” என்று சூடாக பதில் வர..

“அதான பார்த்தேன், என் ஜான்ஸிராணியாவது மன்னிப்பு கேட்கறதாவது” என்று நினைத்து சிரித்துக்கொண்டான். மேலும் “அடியே,, என் திமிரழகி,  நானும் அந்தப் பதவியில இருக்கும் போது முத்தமிட முயற்சி பண்ணதுக்குத்தான் மன்னிப்பு கேட்டனே தவிர, என் மனைவிய முத்தமிட இல்ல.” என்று அனுப்பியவன், அடுத்ததாக.. “என்னைக்கிருந்தாலும் என் மனைவின்னா அது நீதான் தியா. அத மாத்த முயற்சி பண்ணாத..” என்றும் அனுப்பி வைத்தான்.

அதைப் படித்தவளுக்கு, இதழ்கள் புன்னகையில் விரிய அதற்கு நேர் மாறாக கண்களில் நீர் வழிய.. “சாரி டிஎஸ்பி” என்றவள், “நீங்க நினைக்கிறது என்னைக்குமே நடக்காது” என்று வாய் திறந்து சொன்னவள், அத்தோடு ஃபோனை தூக்கி எறிந்து விட்டு, தலையணையில் முகம் புதைத்துக்கொண்டாள்.

கண்டிப்பாக இதற்கு பதில் வராது என்று தெரிந்தவன் உள்ளுக்குள் பெருமூச்சொன்றை வெளியிட்டான். திவ்ய பாரதியிடம் இன்று மீட்டிங்கில் எடுத்த முடிவை முதலில் சொல்ல நினைத்தவன், பின்னர் அவள் தன்னை நம்புகிறாளா என்று பார்க்க எண்ணி, அதை தவிர்த்து விட்டான்.

திவ்ய பாரதியிடம் பேசிவிட்டு வைத்த செழியன், தன் நண்பன் தேவ்வுக்கு அழைத்தான். திவ்ய பாரதி அவனை சந்தித்த சிசிடிவி பதிவை அவன் நண்பன் அழித்தானா என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தவன், தொடர்ந்த வேலைப்பளுவில் அதை மறந்திருந்தான்.

எனவே இப்போது நண்பனுக்கு அழைக்கவும், “நண்பா… என்று சொல்லிக்கொண்டே எதிர்முனையில் பலத்த சிரிப்பு சத்தம் கேட்க, அவன் சிரிப்பிலேயே அந்த சிரிப்பின் காரணம் அறிந்தவன், “அடேய், வந்தேன், உன்ன கொன்னுருவேன்டா” என்று மிரட்ட

அவனோ, மேலும் சிரித்துக்கொண்டே, “ஆனாலும் மச்சி, தங்கச்சிக்கு தைரியம் ஜாஸ்த்திடா, டியூட்டில இருக்கும் போது உன்னைப்பார்த்தா எங்களுக்கே நடுங்கும். ஆனா.. வுட்டாபாரு ஒரு அறை… அட, அட அடடா, கண் கொள்ளா காட்சி மச்சி.” என்று மேலும் வாரினான்.

“இப்படியே பேசிட்டு இருந்தன்னு வையி, போனை உன் பொண்டாட்டிக்குப் போட்டு, நீ அந்த லேடி சப் இன்ஸ சைட் அடிக்கிறத சொல்லிடுவேண்டா.” என்று செழியனும் பதிலுக்கு  மிரட்டினான்.

அதில் அதிர்ந்த தேவாவோ, “அடேய் கிராதகா, நான் எங்கடா அந்தப் பொண்ண சைட் அடிச்சேன், அன்னைக்கு லிஃப்ட் கேட்டுதேன்னு சும்மா லிஃப்ட்தானடா கொடுத்தேன்.” என்றான்.

“நீ லிஃப்ட் கொடுத்தியோ, இல்ல.. லிப் டு லிப் கொடுத்தியோ, அதெல்லாம் எனக்கு தெரியாது, ஃபுட்டேஜ் டெலிட் பண்ணிட்டியா இல்லையா..?” என்று கேட்கவும்,

“அடப்பாவி, நான் என்ன உன்னை மாதிரி ஆஃபீஸ்னு கூட பாக்காம இழுத்து வச்சி முத்தமா குடுத்தேன்” என்றவன்  “அதெல்லாம் பக்காவா பண்ணியாச்சி” என்றான்.

“நண்பேன்டா” என்று செழியன் சொல்லவும்,

“மச்சி, இதெல்லாம் பாக்கும்போது, நிஜமாவே நான் போலீஸா இல்ல மாமாவான்னு எனக்கே சந்தேகம் வருதுடா” என்றான் அழும் குரலில்.

“அட ஏன்டா”  என்று செழியன் கூறவும்,

“உனக்கு வாட்ஸப்ல ஒரு வீடியோ அனுப்பி இருக்கேன். அதப் பாரு  உனக்கே புரியும்” என்று சொல்லி வைத்துவிட்டான்.

வாட்ஸப்பை திறந்து பார்த்தவனுக்கு இன்ப அதிர்ச்சியாக, வீடியோவில் திவ்ய பாரதி அவன் அறையின் உள்ளே நுழைவதற்காக கதவை தட்ட கை ஓங்குவதும், பின் கண்களில் காதல் பொங்க, செழியன் என்று பொறிக்கப்பட்ட வார்த்தைகளை விரல் கொண்டு மென்மையாக வருடுவதும், தெளிவாகப் பதியப்பட்டு இருந்தது.

அதைக் கண்டதும் “ஹுர்ரே..” என்று கத்திக்கொண்டே காற்றில் குத்தியவன்,

மறக்காமல் நண்பனுக்கு “தாங்க்ஸ்டா மாமா” என்று வேண்டுமென்றே அனுப்பி வைத்தான். அந்தப்பக்கமிருந்து எட்டி உதைப்பது போல் பிச்சர் வர, புன்னகைத்தவன் மீண்டும் மீண்டும் அந்த வீடியோவை ஓட விட்டுப் பார்த்தான்.

அதில் வரும் திவ்யபாரதிக்கு, அன்று மிஸ் ஆன முத்தத்தையும் மிச்சமில்லாமல் தந்துவிட்டே கண் அயர்ந்தான்.

இனி அவன் இதுபோல் கண் அயர, எத்தனை நாட்கள் ஆகுமோ…?

************************************

கன்னூரில்…

அன்று இரவு தேர் திருவிழா இருப்பதால், சாயங்காலமே பொங்கல் வைக்க வேண்டி கோவிலுக்குக் கிளம்ப,  அம்மு, மை புளூ கலர் பட்டுப்பாவாடையும்,  பார்டரின் ரோஜா நிறத்தில் பட்டு சட்டையும் அணிந்து, கழுத்திலும் காதிலும் தங்க நகைகள் மின்ன தேவதை போல் ஜொலித்தாள்.

சிறுவர் அணியும் பைஜமா குர்தியில் வந்த கார்த்தியோ, அம்முவை பார்த்துவிட்டு, “அம்மு! இன்னைக்கு, நீ அந்த அம்பாளாட்டம் இருக்க.” என்று சொல்ல, அம்முவுக்கு மறந்திருந்த தேவியின் திருக்கல்யாணம் ஞாபகம் வந்து விட்டது.

அனைவரும் கிளம்பி கோவில் சென்றுவிட, ஊர் மொத்தமும் கோவில் தேரடியில் திரண்டிருந்தது.

கோவில் சென்றதுமே, மாதவன் ஊர்ப் பெரியவர்களுடன் மற்ற வேலைகளைப் பார்க்க, மலரும், அம்முவை கார்த்தியிடம் பார்த்துக் கொள்ளச் சொன்னவர், பொங்கல் வைக்கும் வேலைகளில் இறங்கி விட்டார்.

அம்முவை அழைத்துக்கொண்டு வெளியே வந்த கார்த்தி, மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து விளையாட அழைக்க, அங்கு பெரியவர்கள் சத்தம் போடவே,

அம்முவோ “மாமா நாம மலைக்கோயிலுக்குப் போகலாம்.” என்று சொல்லி, மேலும் சிறுவர்களை அழைத்துக் கொண்டு, அங்கிருந்து சற்று ஒதுங்கி இருக்கும் மலைக்கோவிலுக்குச் சென்று விட்டனர்.

என்ன விளையாட்டு விளையாடலாம் என்று பேசிக் கொள்ளுகையில்,

அம்முவோ.. “நாம இன்னைக்கு அம்மனுக்கு மாதிரி திருக்கல்யாணம் செஞ்சி விளையாடலாம்” என்று சொல்ல,

ஒருமனதாக அதுவே என்று முடிவு செய்யப்பட்டு, அம்மு தேவியாகவும், கார்த்தி அவளை மணம் முடிக்க வந்த ஈசனாகவும் நடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அனைத்தும் அம்முவின் ஆசையே, வெள்ளை மொசக்குட்டி போல் இருக்கும் அம்மு என்ன சொன்னாலும், அதைக் கேட்க அந்த சிறுவர் கூட்டம் தயாராகவே இருந்தது.

அதன்படி கோவிலில் காலை பூஜை முடிந்து கழட்டி வைக்கப்பட்ட, இரண்டு மாலைகளை கொண்டு வந்தவர்கள்,  அதில் ஒன்றை அம்முவின் கையிலும், இன்னொன்றை கார்த்தியின் கையிலும் தர, அந்த கோவிலின் சன்னதியில், அந்த இரு கள்ளம் கபடம் இல்லா சிறுவர்களுக்கும் முறையில்லா முறைப்படி திருமணம் நடைபெற்றது.

அம்முவும் கார்த்தியும், மாலை மாற்றிக்கொள்ள, தேவர்களாய் சிறுவர்கள் அட்சதை தூவ, தோழர், தோழியர் புடைசூழ, அஞ்சிலேயே தன் நெஞ்சில் பதிந்து போனவளின் பிஞ்சுக் கரம் பற்றி, கோவிலை  சுற்றி வலம் வந்து, தன் கந்தர்வ மணத்தை முடித்துக்கொண்டான் அன்றைய கார்த்தி..!