அத்தியாயம்: 5

காயம்பட்டிருந்த வெற்றியைக் காண மருத்துவமனை வந்திருந்த செழியன், “ஹவ் ஆர் யூ யங் மேன்!” என்றதும், செழியன் குரலை வைத்தே அடையாளம் கண்டுகொண்ட வெற்றி மெல்ல கண்விழித்தான். 

செழியனே நேரில் வருவான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை என்பது அப்பட்டமாய் அவன் பளிச்சிட்ட முகத்தில் தெரிய, கையில் போடப்பட்ட கட்டுடன்,“குட் மார்னிங் சார்! ஐயம் ஃபைன்” என்று உற்சாகமாகவே வரவேற்று அருகிலிருந்த நாற்காலியில் அமரச் சொன்னான்.

பணிக்குச் செல்லும்முன் பார்த்துவிட்டுச் செல்ல வந்திருப்பான் போலும் கம்பீரம் குறையாத காவல் உடையில் இருந்தான். ஐம்பதைத் தாண்டிவிட்டான் என்று சொன்னால் நம்ப முடியாத தோற்றம். உடலை அவ்வளவு கட்டுக் கோப்பாக வைத்திருந்தான். காதோரம் நரைத்த நரைமுடியும் தனி கம்பீரத்தையே பரிசளித்திருந்தது.

துணைக்கு ஆள்கூட இல்லாமல் வெற்றி படுத்திருந்த தோற்றம் செழியனுக்கும் என்னவோ போல் இருந்தது. அவனுக்கு சொல்லிக்கொள்ள சொந்தமில்லை என்று தெரியும். இருந்தும் இப்படி ஒரு நிலையில் அவனைப் பார்த்தவனின் மனம் இளகியது.

மரியாதை நிமித்தமாக படுக்கையில் எழுந்து அமர முற்பட்ட வெற்றியை, “ஹேய் பார்த்து பார்த்து…” என்று செழியனே கைக்கொடுத்து உதவி அமர வைத்தான்.

“அன்‌ எக்ஸ்பெக்டட் இல்லையா? அப்ரூவரா மாறினவன் அப்புறம் அந்த கேங் லீடர் உடல் மட்டும் கிடைக்கல.. மேபி எஸ்கேப்ட்…” நலம் விசாரிப்பை அடுத்து என்ன பேசுவதென, பணிசார்ந்து பேச ஆரம்பித்தான் செழியன். 

சிறு தலையசைப்புடன், “ஒரேடியா அன் எக்ஸ்பெக்டட்னு சொல்லிட முடியாது” என்ற வெற்றியின் இதழ்களில் சிறு புன்னகை எழ அதை மறைத்துக் கொண்டான்.

“வாட்…!” என்று அதிர்ந்த செழியன், “குண்டு வைக்கப்போறது முதல்லயே தெரியுமா? என்றான் விழிகளில் அதிர்ச்சியைத் தேக்கி.

அதற்கு அவன் சிறு புன்னகையை மட்டுமே உதிர்க்க,”தெரிஞ்சுமா இப்படி அடிபட்டுக் கிடக்கறீங்க?” என்றான் நம்ப முடியாமல்.

“அது அன்எக்ஸ்பெக்டட்தான் சார்!”  இதழ்கள் இன்னமுமே புன்னகையை ஒளித்திருந்தது.

“குண்டு வெடிப்பில் வேற யாருக்கும் அடிபடலையே?”

“இல்ல…” என்றவன் மெலிதாய் புன்னகைத்து “இந்த குட்டி மேடம்தான் தானா வந்து தலையைக் குடுத்திடுச்சி.. இந்தம்மாவ பார்க்கப் போய் நானும் சிக்கிட்டேன்” என்றான் பக்கத்தில் சிறகில் போடப்பட்டிருந்த கட்டுடன் படுக்க வைக்கப்பட்டிருந்த கிளியை ஒரு பார்வைப் பார்த்து.

கடைசிநொடியில்தான் தன் ஜீப்பில் அமர்ந்திருந்த மைலாவைக் கண்டவன் அதைக் காப்பாற்றபோய்தான் சிக்கிக் கொண்டது. 

வெற்றிக்கு அருகிலேயே அதன் இறகு மடங்காமல் இருக்க ஏதேதோ செய்து வைத்தியம் பார்த்து வைத்திருந்தார்கள். தன் கையை பார்க்கும்முன் கிளியையும் பார்க்க வைத்திருந்தான். அந்த நிலையில் விலங்கு மருத்துவரை எங்கே தேடுவது?

“ஓ! இது மேடம்தானா? இந்தம்மா செலவையும் கவர்மெண்ட்தான் பே பண்ணனுமா?” என்றான் உதட்டில் பூத்த இளநகையுடன்.

“மேடம்தான். பெயர் மிஸ் மயிலாவாம்.” என்று சிரித்து, கவர்மெண்ட் ஆப்பரேஷன்லதான் இந்த குட்டி மேடம்க்கும் அடிபட்டிருக்கு. சோ செலவும் காவல்துறையோடதுதான். என்றான் அதே இளநகைமாறா பிடிவாதத்துடன்.

அவன் மிஸ் மைலா என்றதும் மெதுவே ஒரு கண்ணை உருட்டியது மைலா.  எங்கோ தொலை தூரத்திலிருந்து அழைப்பதுபோல் இருக்க விழி மலர்த்தி பார்வையைச் சுழற்றியதில் வெற்றி கண்ணில் பட, ‘அய்யோ இவனா கொலைகாரப் பாவி’ அதிர்ச்சியில் மீண்டும் கண்ணை மூடிக்கொண்டது.

“கைல கட்டு… ஒத்தை ஆள் இங்க பார்த்துக்க ஆள் இல்லாம என்ன பண்ணுவீங்க வெற்றி!” அக்கறையுடன் விசாரித்தான்.

வெற்றி மட்டும் அன்று ரவுடிகளை தன்னுடன் அழைத்துச் செல்லவில்லை என்றால், இந்த படுக்கையில் தன் மகள் அல்லவா இருந்திருப்பாள். நினைத்துப் பார்க்கவே தந்தையாகப் பதறினான். 

குண்டு வைப்பது ஏற்கனவே தெரிந்துதான் பிடிவாதமாக அன்று தன் வண்டியில் ஏற்றிக் கொண்டானோ? சிந்தனை ஓட,

“வெற்றி! நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே?” என்றான் லேசான தயக்கத்துடன்.

“உங்களைப் பார்த்து வளர்ந்தவன் சார் நான். செய்டா சொல்லுங்க உங்களுக்கு முழு உரிமை இருக்கு.” என்று புன்னகைத்தவனைப் பெருமிதமாகப் பார்த்திருந்தான் செழியன்.

“அதோட இந்த ங்க எல்லாம் வேண்டாம். சும்மா வா போன்னே சொல்லுங்க சார்.” என்றான். சிறுவயதில் தன் தோள்மேல் கைப்போட்டு உரிமைப் பாராட்டிய அந்த செழியனைத் தேடியது மனம். 

அது செழியனின் வழக்கம். சிறுபிள்ளைகளிடம் தோளில் கைப்போட்டுக்கொண்டு உற்ற நண்பன்போல் உரையாடுவான்.

“உடம்பு சரியாகற வரைக்கும் வந்து நம்ம வீட்ல தங்கிக்கலாமே வெற்றி. சும்மா ஃபார்மாலிடிக்கு சொல்லல. கார்த்தி மட்டும் மாடில தனியாதான் இருக்கான். உங்களுக்கு ஓகேன்னா சொல்லுங்க நான் ஏற்பாடு பண்றேன்.” என்று உரிமையுடன் அழைத்தான்.

கையில் கட்டுடன் எழுந்து அமரவே உதவித் தேவைப்பட்ட  நிலையில் வெற்றியின் மேல் செழியனுக்கு பரிதாபம் தோன்றி இருந்தது. 

இதை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை வெற்றி. 24 மணி நேரமும் தன்னவளின் அருகில். மண்டைக்குள் வண்டு குடைந்தது.

“என்ன வெற்றி யோசனை? என் பொண்ணு காப்பாற்றப்பட்டான்னு மட்டும் நான் இதை சொல்லலை நிஜம்மாவே உங்களையும் யோசிச்சிதான் சொல்றேன்” செழியனாகவே மீண்டும் தொடங்க, வெற்றியின் கண்களில் மின்னலாய் வெளிச்சக் கீற்று. 

சாமியே வந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் விட்டுவிடுவானா என்ன?

“எனக்காக யோசிச்சீங்கன்னா நீங்க ஏன் என் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கக் கூடாது?” என்றதும் பொருள் விளங்காப் பார்வையுடன் புருவம் உயர்த்தினான் செழியன். 

“ஒரு மாமாவா முன்ன நின்னு எனக்கு கல்யாணத்தை பண்ணி வைங்க டிஜிபிசார்!” கண்களில் குறும்பு மின்ன சொன்னவனின் விழிகள் செழியனோடு நேருக்கு நேர் முட்டி நின்றது.

இப்போது விட்டால் எப்போது கேட்பது? தான் பெரும் மரியாதை வைத்திருக்கும் ஒருவனிடம் அதும் டிஜிபி எனும் பொறுப்பான பதவியில் இருப்பவனிடம் ‘ மாமா உன் பொண்ணைக் குடு’ என்று பாட்டுப் பாடியா கேட்க முடியும். கிடைத்த சந்தர்ப்பத்தில் கிடா வெட்டி இருந்தான் வெற்றி தமிழ்ச்செல்வன்.

“அதுக்கென்ன! உன் அப்பா ஸ்தானத்துல இருந்தே பண்ணி வைக்கிறேன்” என்றதும் வெற்றியின் முகம் அஷ்டகோணலாக,

“பொண்ணு நான் பார்க்கட்டுமா இல்ல அதுவும் பார்த்தாச்சா? என்றான். 

வெற்றி யாரையோ விரும்புகிறான் போலும் திருமணத்தை எடுத்து நடத்த உறவென்று ஆளில்லாமல் தயங்குகிறான் என நினைத்த செழியனும் உற்சாகமாகவே கேள்வி கேட்க, அவன் விழிகளை தயக்கத்துடன் ஏறிட்டு,

“எனக்கு அப்பாவா கார்த்தி ஆசான் நிக்கட்டும், நீங்க மாமாவா தாரைவார்த்து தந்தா போதும்” என்றான் விழிகளில் குறும்பைத் தேக்கி.

அப்பாவா கார்த்தி நிக்கட்டும் என்றால்… செழியனின் முகம் யோசனையைத் தத்தெடுத்தது.

அம்முவுக்கு கார்த்தி தாய்மாமனுக்கு நிகரல்லவா!

செழியனோ புரிந்தும் புரியாத விழிகளுடன் புருவத்தை உயர்த்த, “நான் அம்முவை கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன். ஐ லவ் அம்மு ஃப்ரம் சைல்ட்ஹுட்” என்றான் நேரடியாக.

‘வானவில் தோழனா இருப்பானோ? பக்கிபய பொண்ணோட அப்பாட்ட காதலைச் சொல்லுது’ ஒரு கண்ணை மட்டும் திறந்து மூடியது மயிலா!

இது முற்றிலும் செழியனுக்கு அதிர்ச்சியே! 

நிச்சயம் வெற்றியைப் போல் ஒரு மாப்பிள்ளை தேடினாலும் கிடைக்கப் போவதில்லைதான். ஆனால்.. 

சில கணக்குகளை மனதிற்குள் போட்டவனின் புருவம் வியப்புடன் வில்லாக வளைந்து சிலநொடிகள்  யோசனையுடன் முடிச்சிட்டுநின்று பின் நேரானது.

“அப்பா கிட்ட லவ் ப்ரோபோஸல்… ஸ்மார்ட்” என்று மெலிதாய் சிரித்த செழியன், “ஆடு பகை குட்டி உறவுன்னு சொல்வாங்க… இங்க குட்டி பகை ஆடுதான் உறவு போலிருக்கே…” என்றான் தன் புருவத்தை ஏத்தி. அதில் ‘உன்னை நான் அறிவேன்’ என்ற செய்தி இருந்தது.

அதில் வெற்றி அதிர்ந்து விழிக்க, “என் பொண்ணுகிட்ட லவ்வ சொன்னா ஒத்துக்க மாட்டா இல்லையா?” என்றான் கேள்வியாக. 

‘உன் மாமனார் அநியாயத்துக்கு போலீஸா இருக்கார்டா நெட்டக்குச்சி’ கண்ணை மட்டும் திறக்காத நடிப்பு மயிலாவிடம்.

‘ஒட்டுக்கேட்பதே தனிசுகம்தான்’ என்ற மயிலா தன் காதைத்தீட்டியதில் அங்கிருந்த பச்சை முடி கொஞ்சமே அசைந்துப் பார்த்தது.

“என் பொண்ணோட அன்றையநாள் தடுமாற்றமும் முதல்நாள்ன்றதால இல்ல. அந்த இடத்துல இந்த வெற்றியை எதிர்பார்க்காததால. ரைட்?” அவன் புட்டு புட்டு வைத்ததில் வெற்றி முடிந்தால் அங்கிருந்து எழுந்து ஓடியிருப்பான்.

நாற்காலியில் செழியன் அமர்ந்திருந்த தோரணையும் தாடையை வருடியபடி மெல்லிய புன்னகையுடன் பேசிய பாங்கும் ஒரு தந்தையாக அவளையும் மேலதிகாரியாக உன்னையும் நன்றாகவே அறிவேன் என்று அறிவுறுத்தியதில், எப்போதும் போல் செழியனின் புத்திக்கூர்மையிலும் கம்பீரத்திலும் தடுக்கி விழுந்தான் இளங்காவலன்.

செழியனின் புருவம் சிலநொடிகள் முடிச்சிட்டதன் காரணம் புரிந்தது. அன்றைய குரங்கு சேஷ்டைகளை கவனித்திருக்கிறார். எவ்ளோதூரம் கவனிச்சார் தெரியலையே? காதலை தைரியமாக அவரிடம் சொல்லும்போது இல்லாத பதற்றம் அவனிடம்.

வெற்றியின் தலை “ஆம்” என்றும் “இல்லை” என்றும் தானாக தடுமாற, மென்முறுவலோடு பார்த்திருந்தான் செழியன்.

“ஒரு அப்பாவா வெற்றியை மாப்பிள்ளையா எடுக்க எனக்கு எந்தத் தடையும் இல்ல. ஆனா என் பொண்ணோட விருப்பத்துக்கு மாறா துரும்பைக் கூட கிள்ள மாட்டேன்!” என்றான் கறாரான தந்தையாக.

‘அப்படிப்போடு போடு அருவாள’ என்ற மயிலா இன்னும் வெற்றியின் அருகில் நெருங்கிக்கொண்டது. 

அடுத்தவன் கஷ்டத்தை பார்க்கிறதே ஆனந்தம் என்றால் கண்ணை மூடிக் கேட்கிறது பரம சுகம் போலும்.

‘அவ சம்மதிச்சிட்டாலும்’ மனசுக்குள் நொந்தான் வெற்றி.

அவன் எண்ணம் புரிந்ததுபோல், “அண்ட் இதுல இன்னொன்னும் இருக்கு” என்று நிறுத்தினான் செழியன்.

“அம்முவ பெத்தது வேணும்னா நானா இருக்கலாம். ஆனா அவ சம்மந்தப்பட்ட முடிவு எதுவும் கார்த்தியை மீறி நடக்காது” என்றான் திட்ட வட்டமாக. 

‘இதுக்கும் மேல உன் சாமார்த்தியம். அப்பாவா இவ்ளோதான் உனக்கு ஹிண்ட் தர முடியும். முடிஞ்சா பொழச்சிக்கோ’ என்ற செய்தி அதில் இருக்க, வெற்றியின் முகம் பளிச்சிட்டது. கார்த்தியிடம் பேசிப்பார் என்கிறாரா? இதை எப்படி மறந்தேன்.  

மெல்லப் புன்னகைத்த செழியன், “ஆல் த பெஸ்ட்” என்று வெற்றியின் தோளைத் தட்டிக் கொடுத்து வெளியேற, “சார் ஒரு நிமிஷம்” என்றான்.

செழியன் திரும்பிப் பார்க்க, “குண்டு அவங்க வச்சதில்ல” என்றான். இதற்கும் மேல் அவனிடம் மறைப்பது தவறாகப் பட்டது.

“குண்டு அவங்க வைக்கலைன்னா..?” புருவம் முடிச்சிட திரும்பினான்.

வெற்றி அமைதியாக புன்னகைக்க,

“யூ மீன்…?”

“எஸ்” என்றான் வெற்றி.

“அப்போ வச்சது வெற்றி ரைட்? ஃபார் வாட்?” கேள்வியுடன் நிறுத்தினான்.

“உங்க பொண்ண அட்ராக்ட் பண்ணன்னு சொன்னா நம்பவா போறீங்க…” என்றான் கண்களில் குறும்புடன்.

‘அடப்பாவி’ படக்கென கண்திறந்தது மைலா. 

கம்பிமேல நடந்தமா சீட்டை எடுத்தோமா எவனுக்காச்சும் கட்டம் சரி இல்லன்னு சொல்லி காசை பார்த்தமான்னு நான் பாட்டுக்கு சிவனேன்னுதானடா சுத்திட்டு இருந்தேன். ‘உன் காதல்ல ஆணி அடிக்க’ சாபமிட்டது.

மைலாவைப் போலவே, ‘அடப்பாவி’ என்று வாயில் கைவைத்து வேறு ஒருத்தியும் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.