அத்தியாயம் – 5

இப்படியே ஒரு வாரம் கடந்திருக்க, மேலும் இருவர் கடத்தப்பட்டிருந்தனர். கடத்தப்பட்டவர்களில், ஒருவன் MP மகனும்,  அவனின் ஆருயிர் நண்பனும் தான், இருவருமே செல்வத்தில் செழிப்பவர்கள்.

தமிழகம் முழுவதுமே இந்தத் தொடர் கொலைகள் அதிர்வலையை ஏற்படுத்தியதால், இம்முறை அதிசயத்திலும் அதிசயமாய், கடத்தப்பட்டதுமே போலீசுக்குத் தகவல் வந்திருந்தது.

அதிர்ந்து போனது காவல்துறை. பத்திரிகை மீடியா என்று அனைத்திலும் இதே பேச்சாக இருக்க, மக்கள் மத்தியில் இவர்கள் உயிரோடு மீட்கப்படுவார்களா? மாட்டார்களா? என்ற பேச்சே பரபரப்பாகப் பேசப்பட்டது.

செழியன் தலைமையில் அவசரம் அவசரமாக மீட்டிங் மறுபடியும் கூட்டப்பட்டது.  கடத்தப்பட்ட இருவருமே  ஒருவாரம் முன்புதான், ஒரு ரேப் கேஸில் சம்பந்தப்பட்டு, பெண்முகம் சிதைக்கப்பட்டு எரிந்த நிலையில், அடையாளம் காண முடியாமல், சரியான ஆதாரம் இல்லை என்று விடுவிக்கப் பட்டிருந்தனர்.

அப்போது அனுமதி கேட்டு உள்ளே வந்த காவலர் ஒருவர், சில பேப்பர்களை தந்து விட்டுப் போக, அதில் நான்காவதாக கொல்லப்பட்ட அந்த வடமாநிலத்தவனின்  விவரங்கள் இருந்தது. அதில், அவன் பெயர் அமல்ராஜ் என்றும், அவன் சிறார் சீர் திருத்த பள்ளியில் இருந்து கொலைசெய்யப் படுவதற்கு சில நாட்கள் முன்புதான் ரிலீஸ் செய்யப் பட்டதாகவும் தெரிய வந்தது. மேலும், அவன் தண்டனை அன்பவித்ததும், பக்கத்து வீட்டு சிறுமியை ரேப் செய்த கேஸில் தான் என்று தெரிய வர, செழியனுக்கு எல்லாமே ஒரே புள்ளியில் முடிவது போல் தோன்றியது.

இறுதியாக அனைவரிடமும் கலந்தாலோசித்த செழியன், “கிடைத்த இந்த க்ளூவை பின்பற்றிச் செல்லலாம்.” என்று சொல்ல, எல்லோராலும், ஒரு சேர ‘சரி’ என்று முடிவெடுக்கப் பட்டது.

ஆனால், “அவர்களைப் பிடிக்க எந்த ஒரு ஆதாரமும் இல்லாத நிலையில், அவர்களை பிடிக்க வேண்டும் எனில், அவர்களுக்கு வலை விரிக்க வேண்டும். அதாவது கொலைகாரர்களை, தானாக தேடி வர வைக்க வேண்டும்.” என்றான் செழியன்.

அதன்படி, போலீஸ் ஒருவரே ரேபிஸ்டாக நடிப்பது என்று முடிவெடுக்கப்பட்ட நிலையில், ஒருவரும் உயிருக்கு பயந்து நடிக்க முன் வராததால், தானே.. அந்தச் செயலை செய்ய முன் வந்தான், செழியன்.

எல்லாரும் அவனை அதிர்ந்து பார்க்க, “இதுல நாம யோசிச்சுட்டு இருக்க நேரம் இல்ல. கடத்தப்பட்ட அந்த ரெண்டு பேரையும் நாம கண்டுபிடிச்சாகனும். மந்திரிட்ட இருந்து ஏகப்பட்ட பிரஷர், இரண்டாவதா.. நான் யாரோட உயிரையும் பணயம் வைக்க முடியாது.” என்ற செழியன், “குற்றவாளி ரொம்ப புத்திசாலி, அதான், நானே களம் இறங்க முடிவு பண்ணிட்டேன்.” என்று முடித்தான்.

அவன் முடிக்கவுமே இளம் அதிகாரி ஒருவன் எழுந்து, “சார் கடத்தப்பட்ட இரண்டு பேருமே நாதாரிங்கங்கறது, உங்களுக்கும் தெரியும். காலேஜ் படிக்கிற பொண்ணக் கடத்தி ரேப் பண்ணி கொலை செஞ்சிருக்கானுங்க. இவனுங்களக் காப்பாத்த நீங்க உங்க பேரக் கெடுத்துக்கணுமா சார். இவனுங்கலாம் சாக வேண்டியவனுங்க சார்.” என்றும் கொந்தளித்தான்.

அவன் அருகில் சென்று தோளில் தட்டிக்கொடுத்த செழியன், “உங்க உணர்ச்சிகள் எனக்குப் புரியுது பிரகாஷ், எனக்கும் அதுல மாற்றுக்கருத்து இல்ல. ஆனா, அத.. சட்டம் செய்யனுமே தவிர, தனி நபர் இல்ல. இப்படியே ஒவ்வொருத்தனும் கத்திய கையில எடுத்தா, குற்றம் குறையும்னு நினைக்கிறீங்களா? கண்டிப்பா இல்ல. அப்புறம் அவனவன் பெர்சனல் பகைய தீர்த்துக்க, இத ஒரு காரணமா சொல்ல ஆரம்பிப்பான். குற்றம் அதிகம் ஆகுமே தவிர, குறையாது. இதுவே சட்டம் மூலமா தண்டனை கிடைச்சா, தப்பு செய்யுறவன் மனசில ஒரு பயம் வரும்.” என்று முடித்தான்.

அதைக்கேட்ட பிரகாஷ் “உண்மை தான் சார். ஆனா.. இவனுங்கல்லாம் அரசியல் பலத்த வச்சி, தப்பிச்சிடுரானுங்களே சார்.” என்று கோபப்பட..

அதற்கு சிரித்த செழியனோ, “முடிஞ்ச வர நேர் வழியில் கேஸை முடிக்கப் பார்ப்போம், இல்லையா, நமக்குன்னு ஒரு தனி வழி இருக்கு பிரகாஷ்.” என்று மீசையை வருடியபடி மர்மமாகச் சிரிக்க..

அதன் அர்த்தம் தெரிந்த பிரகாஷும் சிரித்துக் கொண்டான்.

செழியனைப் பொறுத்த வரை, அவன் கேஸை டீல் செய்யும் விதமே வேறுபட்டது. தன்னால் முடிந்த வரை யாருக்கும் அடங்காமல் தண்டனை பெற்று தரப் போராடுவான். அதையும் மீறி நீதிபதியையும் விலை பேசுபவர்கள் உண்டல்லவா…?

பசிக்குத் திருடியவர்கள் அவனுக்குப் பொருட்டே அல்ல. அவர்களுக்கு திருந்தும் வாய்ப்பளிப்பான். ஆனால் பணத்திமிரிலும் அதிகாரத்திமிரிலும் ஆடுபவர்கள், அவன் பக்கம் எட்டிப் பார்க்காமல் இருப்பதே.. அவர்களுக்கு நல்லது.

அவர்கள் சம்மந்தப்பட்ட கேஸிலிருந்து தப்பித்தாலும், வேறு ஏதேனும் கேஸைப் போட்டு உள்ளே தள்ளுவான். மீறியும் தப்பிப்பவர்கள், கால் நரம்போ, இல்லை.. கழுத்து நரம்பையோ, பழி அவன் மீது வராதவாறு துண்டித்துவிடுவான்.

அவர்களின் எஞ்சிய வாழ்வு, உயிர் இருந்தும் நடைபிணமாகத்தான் இருக்கும். அப்படிப் பட்டவர்களை, அவன்  நிம்மதியாக வெளியே வாழ விட்டு, சரித்திரமே இல்லை.

மீட்டிங் முடிந்து வெளியே வந்த செழியனின் மனது, ஏனோ பாரமாகிப் போக, தாய்மடி தேடியது உள்ளம். தன் தங்கைக்கு பிரசவத்திற்காக வெளிநாடு சென்றுள்ள தாயை நினைத்து ஏங்கியவன், மனது அடுத்ததாகப் பாய்ந்தது என்னவோ தனக்கானவளை நோக்கித்தான்.

ஆனால், அவள் தான் அருகில் சென்றாளே… நெருப்பாய் காய்கிறாளே! ‘மானங்கெட்ட மனது வேறு யாரையும் ஏற்றும் தொலைவதில்லை.’ என்று தன்னையே வெறுத்தவன், இறுதியாக, தன் தந்தைக்கு அழைத்தான்.

அவரிடம் மேலோட்டமாக கேஸின் விவரங்களைக் கூறியவன், தான் எடுத்திருக்கும் முடிவையும் கூற, என்னதான் ரிட்டையர்டு ஐஜியாக இருந்தாலும், மகனின் முடிவு அவருக்கு வருத்தத்தையே அளித்தது.

ஆனால், கேஸின் தன்மைக்கு வேறு வழி இருப்பதாகவும் தோன்றவில்லை. மற்றவரின் உயிரை பணயம் வைப்பதை, கண்டிப்பாக தன் மகன் விரும்ப மாட்டான். அதே நேரத்தில் கொலைகாரர்களின் அடுத்த குறி யார் என்று தெரிந்தாலாவது வியூகம் அமைத்துப் பிடிக்கலாம். அப்படி எந்த ஒரு சூழ்நிலையும் இல்லாத பட்சத்தில், அந்த வியூகத்தில்.. அபிமன்யு போல் செழியனே இறங்கினால் தான் சரியாக இருக்கும்.

அபிமன்யுவிற்கு வியூகத்தை உடைத்து உள்ளே செல்லத் தெரியும். ஆனால், வெளியில் வரும் வித்தையை அவன் கற்றிருக்கவில்லை. ஆனால் செழியன் முதலையின் வாயில் சென்றாலும், வயிற்றைக் கிழித்து வெளியேறுவான் என்று அறிவார், அவன் தந்தை.

ஆனால், ‘இதில் அவன் பெயர் தவறாகப் பேசப்படும். என்னதான் குற்றவாளியை கைது செய்த பிறகு, இது ஒரு சீக்ரெட் மிஷன் என்று சொன்னாலும், பத்திரிக்கையும் மீடியாவும் இந்த உலகமும் அதை நம்புமா? மேலும் இதை கொலைகாரன் நம்பி வலையில் சிக்காவிட்டால், வீணாக அதில் இவன் பெயரல்லவா கெட்டுப்போகும்.’ என்று ஒரு தந்தையாக கவலை கொண்டார்.

அதையே மகனிடமும் கேட்க, “அதெல்லாம் நம்பும் பா, DGP அங்கிள் சம்மதம் தெரிவிச்சி கையெழுத்து போட்ட ஆர்டர் லெட்டர் இருக்கு. இன்னைக்கு மீட்டிங்ல எடுத்த வீடியோ ஃபூட்டேஜ் இருக்கு. தேவைப்பட்டா, அதெல்லாம் மீடியாவுக்குக் கொடுத்துடலாம், ஒன்னும் பிரச்சனை வராது.” என்றான்.

தந்தையாக முதலில் கவலை கொண்டவர், பின் மகன் கொடுத்த விளக்கத்தில் அடுத்து ஐஜியாக சில யோசனைகளையும் அளித்தார். அதன் படி இவன் கெடுத்ததாகச் சொல்லப்படும் அந்தப் பெண்ணின் பெயரும் இதில் கெடாதிருக்க வேண்டும் என்று கவலை கொண்டவர்,

அது யாரென்று கேட்க, “நம்ம கல்யாணி பாப்பாதான்பா” என்றான்.

அதில் அதிர்ந்தவர், “அவ சின்னப் பொண்ணுடா, அவளை நீ போலீஸ் ட்ரைனிங்க் பீரியட்ல, அவங்க அம்மா அப்பா இறந்ததும் தூக்கிட்டு வந்து ஆசிரமத்துல வச்சி வளர்த்துட்டு இருக்கடா. உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு..? அனாதைப் பொண்ணுங்கறதால கேட்க யாரும் இல்லன்னு நினைச்சியா?” என்று கோபத்தில் கத்தினார்.

அதில் கோபமுற்ற செழியனும், “அவ ஒன்னும் அனாதை இல்ல, அவளுக்கு எல்லாமுமா நான் இருக்கேன். இனிமேலும் இருப்பேன்.” என்றவன்,

“அப்பா உங்களுக்கே தெரியும். நான் பழகற ஓரே பொண்ணு அவதான். கொலைகாரன் ரொம்ப புத்திசாலியா இருக்கான்பா, சும்மால்லாம் ஒரு லேடி போலீஸ கெடுத்துட்டேன்னு சொன்னா, நம்புவான்னு தோணல. உஷாராகி தப்பிச்சிருவான்.” என்றவன்,

“அதுவும் இல்லாம எனக்கு ஒரு சந்தேகம் இருக்குப்பா.” என்று அவர் காதில் சில விஷயங்களைக் கூறியவன், “கல்யாணியோட இருப்பிடமோ, இல்ல ஃபோட்டோவோ, எதுவும் மீடியால வராம, நான் பார்த்துப்பேன் பா.” என்று உறுதி அளித்தான்.

அவன் உறுதி அளித்தும் மனது கேளாதவர், “இதுல ஏதாவது தப்பாச்சி, மகன்னு கூட பார்க்க மாட்டேன்.” என்று மிரட்டினார்.

அந்தப்பக்கம் செழியன் சிரிக்க, அடுத்த நிமிடமே சமாதானமாகியவர் “கவனம் டா செழியா” என்று அக்கறையான தந்தையாக மாறி நின்றார்.

தந்தையை நினைத்து மனதுக்குள் சிரித்துக்கொண்டவன், அடுத்த வேண்டுதலாக, “டாடி.. ப்ளீஸ்.. இது எதுவும் அம்மாவுக்கு தெரிய வேண்டாம்.” எனவும்,

கடகடவென சிரித்தவர், “இத நான் சொன்னா மகனே..!  ஃப்ளைட் புடுச்சி அடுத்த நிமிஷம் உன் முன்னாடி வந்து நிப்பா.” என்றார் அந்தத் தந்தை.

மேலும் மகன் சாதாரணமாகவெல்லாம் ஃபோன் பண்ணமாட்டான் என்று உணர்ந்திருந்தவர், அவன் மனதளவில் சோர்வுற்றிருக்கிறான் என்று புரிந்தும் கொண்டார்.

எனவே அவன் மனநிலையை மாற்றும் பொருட்டு, “எல்லாம் சரிடா மகனே..! ஏற்கனவே முரட்டு சிங்கிளா சுத்திட்டு இருக்க, இதுல இப்படிலாம் உன் பேர் நாறிக்சுன்னா உன்னை எவளாவது கட்டுவாங்கற..!” என்று கலாய்க்க,

அதில் உள்ளுக்குள் தன்னவளை நினைத்து சிரித்துக்கொண்டான்.

“அதெல்லாம் கட்டிப்பாப்பா..,”  என்றவன், “அவ பாரதி கண்ட புதுமைப்பெண் அப்பா. இதெல்லாம் நம்புற சாதாரணப் பெண்ணில்லை என் திமிரழகி!” என்று நமட்டுச் சிரிப்பு சிரிக்க,

“அடப்பாவி” என்று அதிர்ந்தவர், “எங்களை இங்க துரத்தி விட்டுட்டு அந்தப்பக்கம் பொண்ணு பாத்துட்டியாடா?” என்றவர், “சரி.. சரி.. பொண்ணு பேர் என்னடா..? அம்மாகிட்ட சொல்லி வைக்கிறேன், நீ சிங்கிளா சுத்தறதுல, இன்னும் கவலையில இருக்கா” என்றார்.

சிரித்த செழியனோ, “ஐஜி சார், பொண்ணு பேர ஏற்கனவே சொல்லிட்டேன், முடிஞ்சா கண்டு பிடிச்சிக்கோங்க.” என்று வைத்து விட்டான்.

போன் கட்டானதும் தனக்குள் சிரித்துக்கொண்ட, ரிட்டயர்டு ஐஜி மகேந்திரன், “பாரதிக் கண்ட புதுமைப்பெண், பாரதி!” என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.

*******************

கன்னூரில்…

அன்று பத்தாம் நாள் திருவிழா. ஊரே  ஜே.. ஜே.. என்று கும்மாளமாகக் காணப்பட்டது. அன்று காலையில் அம்மனுக்கு காலையில் காப்பு கட்டி திருக்கல்யாணமும், அன்று இரவு தம்பதி சமேதகராக தேர் ஊர்வலமும் நடக்கும். உள்ளூர் திருவிழாவாகையால் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டிருக்க, அன்று காலை மாதவன் சார்பில் பூஜை இருப்பதால், குடும்பமே கோவிலுக்குக் கிளம்பியது.

அம்மு, கூட்ட நெரிசலால் தன் தகப்பனின் தோளில் அமர்ந்து தேவியின் திருக்கல்யாணத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். சிறுபிள்ளைகள் கொண்டும் தேவியின் திருமணம், பரத நாட்டிய நாடகமாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்வு அம்முவின் மனதில் ஆழமாகப் பதிந்து போனது. தேவியின் அவதாரமாக நடித்த பெண்ணிடத்தில், தன்னை கற்பனை செய்து கொண்டவள், அந்த தேவியை கரம் பிடிக்கும் அந்த ஆதி சிவனாக தன்  செல்ல மாமன் கார்த்தியை கற்பனை செய்து கொண்டாள்.

‘தன் தாய் தந்தை சிறு வயது முதலே சொல்லி வளர்ப்பதாலோ? இல்லை, வயிற்றில் இருக்கும்போதே அவன் அன்பு மொழி கேட்டு வளர்ந்ததாலோ? இல்லை, பிள்ளை பருவத்தில் அவன் கைப்பிடித்து நடந்ததாலோ?’ எதுவோ ஒன்று, அவளுக்கு தன் மாமனே ஆதி சிவனாகிப் போனான்.