அத்தியாயம் – 4

செழியன் தன் முன் வைக்கப்பட்டிருந்த ஃபைல்களை ஒவ்வொன்றாக அக்கு வேறு, ஆணி வேறாக ஆராய்ந்து கொண்டிருந்தான். நேற்று நடைபெற்ற எக்ஸ் MLA ராஜரத்தினத்தின் மகனோடு சேர்த்து, இதுவரை 5 கொலைகள். இதுவரை நடத்தப்பட்ட கொலைகளின் போஸ்ட்மார்ட்டம் அத்தனையும், அவன் டேபிளின் மேல் விரிந்து கிடந்தன. அந்த ரிப்போர்ட் படி, இரண்டு கொலைகள் ஊசி போன்ற ஆயுதத்தால் தாக்கப்பட்டும், மீதி மூன்று கொலைகள் கடித்துக் குதறி, சின்னா பின்னாமாக்கப்பட்டும் இருந்தன.

எதற்காக இந்த தொடர் கொலைகள் என்று ஆராய்ந்தவனுக்கு, இவற்றையெல்லாம் செய்தது ஓரே கும்பலா அல்லது தனி நபரா என்றும் புலப்படவில்லை.

தனக்குள் ஆராய்ந்து, ஒரு முடிவுடன் எழுந்தவன், சில அதிகாரிகளுடன் பேசி, தனக்கென்று ஒரு டீமை வரவழைத்துக் கொண்டான். அதன் படி அவர்கள் அனைவரையும் மீட்டிங் ஹால் வரச்சொல்ல, அனைவரும் வந்ததும், சம்பந்தப்பட்ட கொலைச் சம்பவங்களையும் ஆதாரங்களையும், காணொலி மூலம் விளக்கிக்கொண்டே, தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை ஒவ்வொன்றாக பட்டியலிட ஆரம்பித்தான்.

“வெல்கம் ஆல்!” என்ற செழியன், “இப்போ நடைபெற்ற கொலைகள் சம்பந்தமா எனக்கு தோணினதை எல்லாம் நான் வரிசையா சொல்றேன். அதுல ஏதாவது சந்தேகமோ, இல்ல.. உங்களுடய அபிப்பிராயங்களோ இருந்தா, நீங்க என்கிட்ட பகிர்ந்துக்கலாம்.” என்றவன், ஒவ்வொன்றாகப் பட்டியலிட ஆரம்பித்தான்.

“பாய்ன்ட் நம்பர் 1. கொலைகள் இரண்டு விதமா நடத்தப் பட்டிருக்கு..”

  1. “இதுவரை, எந்த ஆதாரங்களோ இல்ல தடையங்களோ நமக்கு இம்மி அளவு கூட கிடைக்கல. கொலையாளிகள், தேவைப்பட்ட இடங்கள்ல சிசிடிவி ஜாமர் யூஸ் பண்ணி இருக்காங்க.”

  2. “கொலை நடந்தவிதம் பார்க்க, சைக்கோ கொலைகாரன் மாதிரி இருந்தாலும், கண்டிப்பா இது அப்படி இல்ல. ஏன்னா ஒன்னு ஒன்னும் பக்காவா திட்டம் போட்டு, எந்த வித சின்ன க்ளு கூட இல்லாம செஞ்சிருக்காங்க. போலீஸ்காரன் கூட இவ்ளோ துல்லியமா செயல்பட முடியுமா தெரியல.”

  3. “ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவனால, இவ்ளோ தெளிவா சிந்திச்சி, செயல்படுறது கஷ்டம்.”

  4. “இவங்களால பாதிக்கப்பட்டவங்களா இருக்கலாம்னு பார்த்தாலும், இவங்கள்ள யாருக்கும், ஒருத்தருக்கு ஒருத்தர் சம்மந்தம் இருக்க மாதிரி தெரியல..” எனவும்,

ஒரு மூத்த அதிகாரி கையை உயர்த்தியவர், “சார், இதுல அந்த இரண்டாவதா கொல்லப்பட்ட சுந்தரபாண்டியனுக்கும், மூன்றாவதா கொல்லப்பட்ட நாகராஜனுக்கும் சம்பந்தம் இருக்கு சார்.” என்றார்.

“ஓ… ஆனா இரண்டுபேருக்கும் சமீப காலமா சம்பந்தம் இருக்க மாதிரி தெரியலயே!” என்றான் செழியன்.

“இல்ல சார், நானே, இவனுங்க ரெண்டு பேரையும் சேர்த்து ஒருவாட்டி அரெஸ்ட் பண்ணி இருக்கேன். இரண்டுபேரும் ஒன்னாதான் எப்பவும் சுத்துவானுங்க. கட்சி மீட்டிங், ஏதாவது திருவிழா, ஃபங்க்சன்னா பந்தல் கட்டவும், மைக் கட்டவும்னு இருப்பானுங்க சார். அப்படியே அடிதடி கட்டப்பஞ்சாயத்துன்னு வளர்ந்து ஒருத்தன் அரசியல்ல பெரிய ஆளா ஆகிட்டான். ஒருத்தன்  தொழிலதிபரா வெளிய நல்லவன் மாதிரி சுத்திக் கிட்டு இருக்கான். இரண்டுபேரும் ஒரு பத்து வருஷம் முன்னாடி ஏற்பட்ட பிரச்சனையிலதான் பிரிஞ்சி நல்லவன் வேஷம் போட்டுச் சுத்தரானுங்க சார்.” என்றார்.

செழியனுக்கு இந்த விஷயம் புதிதல்ல. ஏற்கனவே அவர்களின் வாழ்க்கையை தோண்டி எடுத்துவிட்டான். ஆனால் அரசியல் பலமோ என்னவோ, அவர்கள் மேல் சொல்லிக் கொள்ளும்படி கேஸ் எதுவும் பதிவாகவில்லை.

ஏதாவது நூல்கோல் கிடைக்காதா என்றுதான் தெரியாதது போல் காட்டிக்கொண்டான். ஏனெனில் இருவரும் கொல்லப் பட்ட விதம் வேறு வேறு, நாகராஜ் ஊசியாலும், சுந்தரபாண்டியன் உடல் நார் நாறாக கிழிந்தும் தான், கையில் கிடைத்தது. இதில் அவன் காது மட்டும் கிடைக்காமல் போக, அதை தேடி அலைந்தது தனிக்கதை.  இது தற்செயலா, அல்லது இரண்டு பேர் இறப்பிற்கும் ஒருவர் தான் காரணமா என்று குழம்பிக் கொண்டிருந்தான்.

அதிலும் கடைசியாக கொல்லப்பட்ட எக்ஸ் MLA வின் மகன், வெளிநாட்டிலிருந்து வீடு திரும்பி 15 நாட்களே ஆகி இருந்தது.  அவனுக்கும் அந்தக் கொலை கும்பலுக்கும் என்ன காரணம் இருக்கப்போகின்றது என்று புரியவில்லை.

இதில் நாலாவதாகக் கொல்லப்பட்டவன் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவன். அவன் யாரென்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

முதல் மூன்று பேரில் ஒருவன் கஞ்சா விற்றும், பெண்களை வைத்தும் தொழில் செய்து கொண்டிருந்தவன் தான். மற்ற இருவருக்கும் உள்ள தொடர்பு, இன்னமும் அவிழ்க்கப்படாத முடிச்சாகவே இருந்தது.

இந்த ஐந்து கொலைகளுக்கும் இதுவரை இருந்த ஒற்றுமை, ஐவருமே இரவில் தான் கடத்தப்பட்டோ அல்லது அவர்கள் அறையிலேயோ கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

மேலும் சிலவற்றை அலசி ஆராய்ந்தவர்கள், ஒரு முடிவுக்கும் வர முடியாமல் கலைந்து சென்றனர்.

********************

கன்னூரில்…

அம்மு ஹோம் ஒர்க் செய்த பக்கங்களை கிழித்துச் சென்று விட, தன் மாமனுடன் சாப்பிடச் சென்ற கார்த்தி திரும்பி வந்ததும், தான் வைத்து விட்டுச் சென்ற நோட்புக் அனைத்தும் இடம் மாறி இருப்பது புரிந்தது.

“வாண்டு, என்னமோ பண்ணி வக்சிருக்கு” என்று நினைத்துக் கொண்டவன், அனைத்தையும் எடுத்துப் பார்க்க, அவன் சற்று முன் எழுதிய பேப்பர்கள் கிழித்திருப்பது தெரிய வந்தது.

அம்முவின் வேலை என்று புரிந்துகொண்டவன், மறுபடியும் எழுத அமர்ந்தான். “இப்பதானடா எழுதுன, மறுபடியும் என்ன..?” என்ற மாமனின் கேள்விக்கு “இல்ல மாமா, இன்னும் கொஞ்சம் இருக்கு, நீங்க படுங்க.“ என்று விட்டுக்கொடுக்காமல் பேசியவன், சிறிது நேரத்தில் எழுதியும் முடித்திருந்தான்.

முடித்ததும் அம்முவின் அறைக்குச் சென்றவன், நன்றாக தூங்கிக் கொண்டிருந்தவளை, தூக்கம் கலையாமல் எழுப்பி தன் மேல் சாய்த்துக்கொண்டான். அவள் கைகளில் பென்சிலை திணித்து, இவனே கைப்பிடித்து அவளின் வீட்டுப்பாடங்களை எழுத வைத்தவன், முடித்ததும் மறுபடியும் தட்டிக்கொடுத்து தூங்க வைத்துவிட்டு வந்துவிட்டான். இது எப்போதும் நடப்பது தான், வாரத்தில் நான்கு நாட்கள் ஏதேனும் காரணம் சொல்லி மட்டம் அடித்து விடுவாள், அவனின் அம்மு. பள்ளியில் அடி வாங்காமல் இருக்க, கார்த்தி இப்படிச் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டான், தன் அம்முவுக்காக.

மறுநாள் அம்மு எழுந்ததும், அருகிலிருந்த ஹொம்வொர்க் நோட்டை, அது எப்படியும் முடிக்கப்பட்டிருக்கும் என்று அறிந்தவளாகையால், திறந்து கூடப் பார்க்காமல் பையில் வைத்தவள், முதல் வேளையாகத் தான் நேற்று கிழித்த பேப்பர்களையும், கையில் கம் பாட்டிலையும் எடுத்துக்கொண்டு கார்த்தியின் அறைக்குச் சென்று மெல்ல எட்டிப்பார்க்க, அவன் குளித்துக்கொண்டு இருப்பதை உறுதி செய்தவள், உள்ளே சென்று மீண்டும் ஒட்டுவதற்காக, அவன் பையில் அந்த நோட்டைத் தேடினாள்.

குளித்து முடித்து பள்ளிச் சீருடையில் வெளியே வந்த கார்த்தியோ, “என்ன அம்மு, என் பேக்ல என்ன தேடுற..?” எனவும், பேப்பரை பின்னால் கொண்டு மறைத்தவள், “இல்ல மாமா, பேனா தேடுறேன்.” என்றாள்.

“நேத்து தான அம்மு சொன்னேன், பொய் சொல்லாதன்னு, உனக்கு பென்சில் தான யூஸ் செய்வாங்க.” என்றவன், அவள் கையில் பின்னால் பேப்பரையும், கம் பாட்டிலையும் கண்டு கொண்டான்.

சிரித்து அவள் தலையை தடவி விட்டவன் “வாலு.., மாமா, நைட்டே, நீ கிழிச்சத எழுதிட்டேன் அம்மு, போ, போய் குளி, ஸ்கூல்க்கு டைம் ஆகுது. ஓடு ஓடு.” என்று துரத்தவும்,.

“சாரி மாமா, நேத்து நீ கடிச்சியா, அதான் கோபத்துல கிழிச்சிட்டேன்.” என்று அவன் கன்னம் கிள்ளி முத்தம் வைத்தவள் மன்னிப்பு வேண்டவும்,

“மாமாகிட்டதானே பண்ண, அதனால பரவால்ல. ஆனா ஸ்கூல்ல வேற யார்கிட்டயும் இப்படி பண்ணக்கூடாது அம்மு, அது தப்பு.” என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

இருவரும் கிளம்பி வரவும், சாப்பிட அமர, காலை டிபனுக்கு பூரி செய்திருந்தார், மலர்.

பூரி என்றால் அம்முவுக்கு உயிர், கணக்கில்லாமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்பாள். ஏற்கனவே அம்மு, அந்த வயதுக்கும் மீறிய உடல் வாகுடன் இருப்பாள். நல்ல வெள்ளை நிறத்தில் கொழுக் மொழுக்கென்று இருப்பவளை, யாருக்கும் பார்த்தவுடன் பிடித்துவிடும். மலர்தான் பொம்பளப் பிள்ளை குண்டாக இருக்கக் கூடாது என்று திட்டிக்கொண்டே இருப்பார்.

அன்றும் 5 பூரிகளை உள்ளே தள்ளியவள், மேலும் பூரி கேட்க, மலரோ பூரிக் கட்டைய தூக்கிக்கொண்டு அடிக்க ஓங்கியவர், “ஓடிருடி குண்டு பூசணிக்கா, கொன்னுருவேன்.” என மிரட்ட,

பயந்து போய் தட்டில் கை கழுவிவிட்டு எழுந்தவளை கைப்பிடித்து நிறுத்திய கார்த்தி, “அத்த, எனக்கு ரெண்டு பூரி” என்று கேட்க,

“இப்போ தானேடா போதும் சொன்ன…” என்றவர், அவன் எதற்கு கேட்கிறான் என்பதை தெரிந்து தான் வைத்திருந்தார்.

அதனால் தான் அம்முவுக்கு தர மறுத்ததும் கூட, எப்படியும் பூரி என்றால் கார்த்தி அவளுக்கு ஊட்டிவிடுவான் என்று தெரியும். ஏன் லன்ச்சுக்கு அவனுக்கு வைத்திருக்கும் பூரியும் கூட பாதிக்கும் மேல் அவளுக்குத்தான் போகும் என்று தெரியும். அதனால் தான், அவன் டிஃபன் பாக்ஸில் தேவைக்கு அதிகமே வைப்பார்.

இரண்டு பூரி வரவும், அதை மெதுவாக அம்முவுக்கு ஊட்டி விட்டவன், முடியவும் அவள் கைப்பிடித்து இறங்க வைத்து வாய் கழுவி விட்டு, துடைத்தும் விட்டான்.

சமையலறை வந்தவன் “அத்த, அம்முவ குண்டு பூசணிக்கா சொல்லாதீங்க, எனக்கு கோபம் வரும்.” என்று மிரட்டிவிட்டுச் சென்றவனை,

மலர் “அவ முத எனக்கு பொண்ணுடா” என்றார் சிரித்து.

“அதுக்காக, என்ன வேணா சொல்லுவீங்களா?” என்று முறைத்து நின்றவனை, பெருமை பொங்கப் பார்த்திருந்தார் மலர். அம்முவின் ஸ்கூல் பாஃகையும் சேர்த்து தூக்கிக்கொண்டு, கைப்பிடித்து பள்ளிக்கு அழைத்துச் சென்றவனை பார்க்க பார்க்க,  மலரும்  மாதவனும் பூரித்துதான் போயினர்.

பள்ளி அருகிலேயே இருப்பதால், இருவரும் நடந்து செல்வது தான் வழக்கம். அதேபோல் அம்முவின் கைப்பிடித்து அழைத்துச் செல்பவன், அவள் கிளாஸ் ரூமில் விட்டுவிட்டே தன் அறைக்குச் செல்வான்.

கன்னூரில் அன்று கோவில் திருவிழா ஆரம்பித்து இருந்தது. பத்து நாட்கள் நடக்கும் அந்த ஊர் திருவிழாவில், வெளியூரிலிருந்தும் நிறைய பேர் கலந்து கொள்வார்கள். உறவினர்களின் வீட்டுக்கு விருந்துக்கு வருபவர்கள், பந்தக்கால் நடுபவர்கள், மேளக்காரர்கள் என்று ஊரே ஆட்களால் நிறைந்து காணப்படும்.

அம்முவின் வீட்டிலும், அவளின் தாய்மாமன் சங்கர் வந்து இருந்தான்.

என்னவோ அவனைக் கண்டாளே, கார்த்திக்கு பிடிப்பதில்லை. சங்கர் அம்முவை இவனிடம் இருந்து பிரிப்பதாகத் தோன்றும் கார்த்திக்கு.  இவனை விட்டுவிட்டு அம்முவை அவன் கடைத்தெருவுக்கென்று அழைத்துச் செல்வதாலோ, இல்லை.. அம்மு அவனிடம் விளையாடுவதோ, ஏதோ ஒன்று அவன் வந்தாலே அவனின் அம்முவை மிஸ் செய்வதாக நினைத்தான்.

சங்கரும் அக்கா மகளான அம்முவிடம் விளையாடுவது போல், கார்த்தியிடம் விளையாட மாட்டான். அதனாலேயே கார்த்திக்குப் பிடிப்பதில்லை. சங்கரும் அவ்வளவாக வர மாட்டான், திருவிழா நேரத்தில் தன் அக்காவிடம் காசு கேட்டால் மறுக்காமல் தருவாள், குடித்து கும்மாளமிடலாம் என்று தான் வந்திருந்தான்.  ஓசியில் யாரும் சரக்கு வாங்கிக் கொடுத்தால், அவர்களுக்கு நாயாக வாலை ஆட்டுபவன் அவன்.

அவன் குணம் தெரிந்தே மாதவன், அதிகம் அவனைச் சேர்ப்பதில்லை, இருந்தும் மலருக்காக சில சமயங்களில் சகித்துக் கொள்வான். இப்போதும் ஒரு பெரிய ஆப்ளிகேசனுடன் தான் வந்திருந்தான், தான் திருந்திவிட்டதாகவும், சென்னையில் தொழில் செய்யப் போவதாகவும், அதற்காக மலரிடம் 1 லட்சம் கேட்டு வந்திருந்தான்.

மாதவனும் தொழில் செய்தால் திருந்திவிடுவான் என்று, அவனுக்கு ஐம்பதாயிரம் மட்டும் தர ஒத்துக்கொண்டிருந்தார். பத்து நாட்கள் இருந்து விட்டு, திருவிழா முடிந்ததும் வாங்கிச் செல்வதாகக் கூற, மாதவனும் கோவில் வேலைகளில் அவனை துணைக்கு வைத்துக் கொண்டார்.

மொத்தத்தில் கார்த்தியின் சிறுவயது உலகமே, அவனின் அம்முதான். அம்மு.. அம்மு.. அம்மு மட்டுமே..!

அவனின் தூங்கா நினைவுகளில் துயிலிலும் அவள் முகமே…!

அந்தக் காளையவனின் கண்கள் இரண்டும் மூடியிருக்க, கருவிழிகள் அசைந்திருக்க,

அவன் இதழ்களோ, “அம்மு போகாதடி, அவன் கூடப் போகாதடி! மாமாகிட்ட வந்துரு..” என்று, தன்னையும் அறியாமல் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.