அத்தியாயம் – 3

ஸ்டேஷனிலிருந்து கிளம்பிய செழியனின் கார், நேரே சென்று நின்றது அந்த மினி பங்களாவின் முன்பு தான். அங்கு அவனுக்கு முன்னமே திவ்ய பாரதியும், இன்னும் சில பத்திரிக்கை மற்றும் மீடியாவைச் சேர்ந்தவர்களும் நின்றிருந்தனர்.

“இவங்களுக்கு மட்டும் எப்படித்தான் மூக்கு வேர்க்குமோ” என்று நினைத்தவன், அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு, நேரே சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்றுவிட்டான்.

அங்கு மிகக் கொடூரமாக, உடலில் ஒரு இடம் பாக்கி இல்லாமல், உடல் சல்லி சல்லியாக துளைக்கப்பட்ட நிலையில், இளைஞன் ஒருவன் இறந்துகிடந்தான். பார்க்கவே மிகக் கொடூரமாகக் காணப்பட்டது, அந்த உடல், அதை அருகில் சென்று குனிந்து பார்த்த செழியன், நிச்சயமாக சாகும் முன் ரண சித்திரவதையை அனுபவித்து இருக்கிறான் என்று புரிந்து கொண்டான்.

பெரிய கோணி ஊசியோ அல்லது பெரிய சைஸ் ஆணியோ, ஏதோ ஒன்றை வைத்து உடல் முழுவதும் குத்தப்பட்டு இறந்து கிடந்தான். அவன் கண்களைக் கூட விட்டு வைக்கவில்லை.

கண்டிப்பாக, ஒரு மனநிலை பாதிக்கப் பட்டவனால் மட்டுமே இந்தக் கொலையை அரங்கேற்றி இருக்க முடியும், அல்லது நிச்சயம் சைக்கோவாக இருக்கவேண்டும் என்று ஊகித்துக்கொண்டான். அங்கு நின்றிருந்த லோக்கல் இன்ஸ்பெக்டரை அழைத்தவன், மேலும் செய்ய வேண்டியவற்றை கூறிவிட்டு, “கூடிய விரைவில் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், என் டேபிளுக்கு வர வேண்டும்” என்று ஆணையிட்டான்.

மேலும் அந்த வீடு முழுவதும் ஒருமுறை சுற்றி வந்தவன், “இவனோட பேரண்ட்ஸ் எல்லாம் எங்க, அவங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணியாச்சா.” என்று அந்த லோக்கல் இன்ஸ்பெக்டரை விசாரிக்க,

அவரும் “சார், இது இவனோட கெஸ்ட் ஹௌஸ் சார், இவன்  எக்ஸ் MLA ராஜ ரத்தினத்தோட பையன், அவங்க சென்னையில இருக்காங்க, விஷயம் சொல்லியாச்சி, வந்துட்டு இருக்காங்க, சார்.” என்றவர் மேலும், “விசாரிச்சதுல நேத்து இவன் நண்பர்களோட இங்க பார்ட்டி பண்ணி இருக்கான் சார், அவங்க எல்லாம் நைட் 9 மணி வரைக்கும் இங்க இருந்துட்டு, அதுக்கும் மேல தான் கிளம்பிப் போய் இருக்காங்க. இவன் மட்டும் இங்க தனியாதான் இருந்து இருக்கான். அதிக போதையில இருந்ததா, அவன் நண்பர்கள் சொல்றாங்க.” என்றார்.

“எங்க அந்த ஃப்ரண்ட்ஸ்” என்று செழியன் வினவ, அவர் அங்கு சுவர் ஓரம் பயந்து போய் அமர்ந்திருந்த இருவரை, கை காட்டினார்.

அந்த இருவரின் அருகில் சென்றவன் அவர்களை அளவிட, அவன் ஆளுமை நிறைந்த கண்கள் என்ன சொன்னதோ, “சார், எங்களுக்கு ஒன்னும் தெரியாது சார், நேத்து அவனுக்கு பர்த்டேன்னு கூப்பிட்டான். எல்லாம் சேர்ந்து தண்ணி அடிச்சோம், போதை அதிகம் ஆனதால, வண்டிய இங்கயே விட்டுட்டு, ஒரு கால் டாக்ஸி புக் பண்ணி அவங்க அவங்க வீட்டுக்கு போய்ட்டோம் சார்.” என்று பயந்துகொண்டே சொல்ல,

செழியனின் “மேல சொல்லு” என்ற பார்வையில், “காலையில தான், நான் இங்க இருந்த என் வண்டி எடுக்க வந்தப்போ, ஓரே கூட்டமா இருக்குன்னு உள்ள வந்து பார்த்தேன்.” என்றவன், “அவன் செத்துப்போன விஷயமே இப்போதான் தெரியும், நான்தான் கால் பண்ணி இவனையும் வர வச்சேன்.” என்று அருகிலிருந்த இன்னொரு நண்பனை கை காட்டினான்.

மேலும் அவர்களை சில கேள்விகள் கேட்டவன், “எப்போ கூப்பிட்டாலும் வரணும்.” என்று எச்சரித்து அனுப்பினான்.

அங்கிருந்து வெளியில் வந்த செழியன், வீட்டின் வெளியிலும் சுத்திப் பார்க்க, அங்கு ஒரு இடத்தில் கம்பி முள் வேலி வளைக்கப்பட்டு, யாரோ உள் நுழைந்ததுக்கான அறிகுறி காணப்பட்டது.

அங்கங்கே சில இடங்களில் இரத்தக் கறையும் காணப்பட, தூரத்தில் பத்திரிக்கை காரர்களை சமாளித்துக் கொண்டிருந்த காவலரை அழைத்து என்னவென்று பார்க்கச் சொல்ல,

அவரோ பார்த்துவிட்டு, “இவங்களோட பெரிய ரோதனையா போச்சு சார்” என்றவர் பத்திரிக்கை காரர்களை கை காட்டி… “இவங்கல்லாம் தான் சார், வீட்டுக்குள்ள விடலன்னு இந்த கம்பிய வளைச்சி உள்ள குதிச்சிருச்சிங்க.” என்றார்.

“சாரி DSP சார்” என்ற குரலில் திரும்பிப் பார்த்தவனிடம், ”நாங்கதான் உள்ள வரதுக்காக அந்த கம்பி வேலி வழியா நுழைஞ்சோம், அப்போ அங்கங்க கொஞ்சம் கீறிடுச்சு.” என்றாள் திவ்ய பாரதி.

அங்கிருந்த இன்னொரு பெண்ணும், ”என் கையிலயும் கீறி இரத்தம் வந்துருச்சி ஸார்” என்று  கொஞ்சும் குரலில் கூறியவள், தன் கைகளையும் அவன் முன் நீட்டியபடி வளைந்து நெளிந்து கொண்டிருந்தாள்.

அவன் அசரடிக்கும் ஆளுமைக்கு மயங்காதவர் எவர், அந்தப் பெண்ணிற்கும் செழியனின் பார்வை தன்மீது விழாதா  என்ற ஏக்கம். அவனுக்கோ கொக்குக்கு மீன் ஒன்றே மதி என்பது போல் அவன் (பா)ரதியே விதி என்று வாழ்பவன்.

“இதோ, இந்த நகுலனுக்கும் நல்ல அடி சார்” என்று மேலும் பேசிப் பேசியே செழியனை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட,  பார்த்துக்கொண்டிருந்த பாரதியோ, செழியனைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

செழியனோ, பாரதியோடு சேர்த்து அனைவரையும் முறைத்தவன், “உங்களுக்கெல்லாம் அறிவு இருக்கா, படிச்சிருக்கீங்க தானே, கொலைகாரனும் இந்த வழியா வந்துருந்தா… எப்படி தெரியும்? இப்போ இந்த ப்ளட் சாம்பிள்ஸ் வச்சி, உங்க எல்லாரையும் தான் உள்ள தள்ளணும்.” என்றவன் தன்னவளின் காயங்களை ஆராய, அவள் கைகளை பார்க்க விழைய,

அவளோ இன்னும் அழுத்தமாக கையில் பற்றியிருந்த மைக்கை இறுக்கி, கைகளை மூடிக்கொண்டாள்.

அதில் கடுப்பான செழியன், “எங்க யார் யார்க்கெல்லாம் அடிபட்டு இருக்கு காமிங்க. அப்போதான் நாளைக்கு விசாரணைன்னு வரும்போது ப்ளட் சாம்பிள்ஸ் மேட்ச் பண்ண முடியும்.” என்றவன், இப்போது நக்கலாக திவ்ய பாரதியை பார்க்க,

அவளோ முறைத்துக்கொண்டே அவன் முன், தன் கைகளை நீட்டினாள். நகுலனும், திவ்ய பாரதியை முறைத்துக்கொண்டே, அடிபட்ட தன் கால்களை காட்டினான். முடியாது என்றவனை, வலுக்கட்டாயமாகத் தள்ளி அல்லவா விட்டிருந்தாள்.

மேலோட்டமாக அனைவரது காயங்களையும் நோட்டமிட்டவன், தன்னவளின் உள்ளங்கையில் இருந்த காயங்களைப் பார்த்து, பதறித்தான் போனான்.

“அறிவுக் கெட்டவ” என்று மனதுக்குள் திட்டியவன், அந்தக் காயங்களில் இப்போதே முத்தமிடத் துடித்த தன் மனதை ஒருவாறாக அடக்கிக்கொண்டு, ஒரு ஆழ்ந்த பார்வை பார்க்க, ‘அந்தப் பார்வையில் இருந்தது என்ன..? காலையில் அவன் அத்து மீறலுக்கான மன்னிப்பா, அல்லது காதல் யாசிப்பா..?’ என்பதை புரிந்து கொள்ள முடியாமல் போன பாவையவளோ, ‘அது எதுவாக இருப்பினும் தனக்கு தேவை இல்லாதது.’ என்று நினைத்தவளின் மனதில், வலியே மிஞ்சி இருந்தது.

“அவன் பாதை வேறு, இவள் பயணிக்க வேண்டிய தூரம் வேறு, இரண்டும் ஒரே பாதையில் பயணிக்க சாத்தியம் இல்லாதது” என்று முடிவு செய்து கொண்ட திவ்ய பாரதி, அவன் நினைவுகளோடு சேர்த்து, அவன் பார்வையையும் ஒதுக்கித் தள்ளினாள். தான் காதலிக்கும் பணியான முழு பத்திரிக்கைக் காரியாக மாறி, மைக்கை பிடித்துக்கொண்டு கேள்வி  கேட்கத் தயாராக…

அவளை அளவெடுத்து வைத்திருந்தவன், இதற்குமேல் அவள் கடைக்கண் பார்வை கூட பஞ்சமாகிவிடும் என்று புரிந்து கொண்டான். அனைத்து கேள்விகளையும் ஒதுக்கித் தள்ளியவன்,

“உங்களுக்கு பேட்டி குடுத்துட்டு இருந்தா, என் கடமைய யார் செய்யறது” என்று கேள்வி கேட்டு, தன் முதல் காதலியான காவல் பணி அழைக்க, விரைந்து அடுத்த வேலையை பார்க்கச் சென்று விட்டான்.

அவள் பின்னால் சென்று காதல் சொல்ல, அவன் ஒன்றும் ரோட் சைடு ரோமியோ இல்லையே! பாரதியை எவ்வளவு காதலிக்கிறானோ, அதே அளவு அவன் அணிந்திருக்கும்  காக்கிச் சட்டையையும் காதலிப்பவன் அவன்.

*********************************************************

கன்னூர்….

தொட்டிலில் ஆடிய அந்தப் பூஞ்சிட்டின் தந்தை மாதவன், அந்தக் கன்னூர் கிராமத்தில் மதிக்கத்தக்க மனிதர், மின்வாரியத்தில் வேலை பார்ப்பவர். தன் ஓரே தங்கையை வெளியில் இருக்கும் யாருக்கும் மணம் முடிக்க விருப்பம் இல்லாமல், தன் நண்பனுக்கே மணம் முடித்திருக்க, இருவருரையுமே ஒரு விபத்தில் பலி கொடுத்திருந்தார். அதில் மிஞ்சியது தங்கையின் மகன் கார்த்தி மட்டுமே. தங்கை மகனை பார்த்துக் கொள்வதற்காகவே மலரை திருமணம் செய்து கொண்டார். மலரும், கார்த்தியை நன்றாகவே பார்த்துக் கொண்டார்.

மாதவனுக்கும் மலருக்கும் பிறந்தவள் தான், அந்தக் குட்டி தேவதை. தன் அத்தையின் வயிற்றிலிருக்கும் போதே பேசிப் பேசியே பாசத்தைக் காட்டி மயக்கி வைத்திருந்தான், அந்தக் குட்டிப் போக்கிரி கார்த்தி… கார்த்தி இளவரசன். அவன் அன்னை ஆசையாக வைத்த பெயர் இளவரசன், அவன் தந்தை வைத்த பெயர் கார்த்தி.

பள்ளியில் இளவரசனாகவும், வீட்டில் அழைக்க கார்த்தி என்றும் வைத்துக்கொண்டனர். அந்த இளவரசனுக்கு ஏற்ற இளவரசியாகவே அவனிடம் வந்து சேர்ந்திருந்தாள், அவனின் அம்மு.

அவன் அம்மு.. அம்மு.. என்றழைப்பதால் அவள் பெயரும் அதுவாகவே போனது. அதை மாற்ற யாரும் விரும்பவில்லை என்பதை விட, கார்த்தி அதை அனுமதிக்கவில்லை என்பதே உண்மை. அவனின் விருப்பத்திற்கே, அவன் மாமனும் மாமியும் விட்டுவிட்டனர்.

தற்போது அம்மு இரண்டாம் வகுப்பிலும், கார்த்தி ஐந்தாம் வகுப்பிலும் அடியெடுத்து வைத்திருந்தனர். இருவரும் வளர வளர அவர்களின் சேட்டைகளும் வளர்ந்துகொண்டே போனது. என்னதான் இருவரும் அவர்களுக்குள் அடித்துக்கொண்டாலும், ஒருவரை ஒருவர் என்றுமே காட்டிக்கொடுத்ததில்லை, அப்படியொரு ஒட்டுதல் இருவருக்குள்ளும்.

அம்முவைப் பெற்றவர்களுக்கும் அவர்களை அண்ணன் தங்கையாக வளர்க்க விருப்பம் இருக்கவில்லை போலும், என்றிருந்தாலும் தன் தங்கை மகனின் உறவை விட்டுக்கொடுக்க விரும்பாமல், அம்முவிடம் ‘மாமா’ என்று சொல்லியே சிறுவயது முதல் அழைக்கப் பழக்கி இருந்தனர்.

அம்மு என்ன சேட்டை செய்தாலும், கார்த்தி கண்டு கொள்ள மாட்டான், அதே நேரத்தில் அவளின் அராஜகங்கள் வரம்பு மீறிச் செல்லும் போது, கையைப் பிடித்து கடித்து வைத்து விடுவான். அது என்னவோ, மொசக்குட்டிபோல் இருக்கும் அம்முவை கடித்து வைப்பதில், அவனுக்கு அப்படியொரு ஆனந்தம்.

அன்றும் அப்படித்தான், இரவு இருவரும் வீட்டுப்பாடங்கள் செய்து கொண்டிருக்க, கார்த்தி எவ்வளவு வற்புறுத்தியும் வீட்டுப்பாடம் செய்ய மறுத்தவளை, கையை பிடித்து கடித்து வைத்து விட்டான், கார்த்தி.

வலி தாங்காமல் “அம்மா” என்று அம்மு கத்திவிட,

அவள் அலறிய அலறலில் சமையல் அறையிலிருந்து வந்த மலர், “என்னடி..? ஏன்..டி அப்படி கத்தின?” என்று கேட்க,

அழுது கொண்டே திருதிருவென விழித்த வாண்டோ, சேரில் சிவனே என்று அமர்ந்திருந்த தன் தந்தையை கை காட்டியவள், “அப்பா தான் அடிச்சிட்டாங்க” என்றாளே பார்க்கலாம்.

வாரப்பத்திரிக்கையை புரட்டிக்கொண்டிருந்த மாதவனோ, “அடியே.., என்னை அப்படி பாக்காத.. நான் இல்லடி, இந்த வாண்டு, அவ மாமன காட்டிக்குடுக்க விரும்பாம, வீணா என் மேல பழியப் போடுது” என்றவர் தனக்கும், அவளுக்குமான தூரத்தை சுட்டிக்காட்டி, “பாருடி, நான் எங்க உக்காந்து இருக்கேன், அவ எங்க இருக்கா..? பொய் கூட ஒழுங்கா சொல்லத் தெரியுதா உன் பொண்ணுக்கு.” என்றார் பாவமாக.

அம்முவோ, “இல்ல அப்பாதான்.” என்று இன்னும் சத்தம் கூட்டி அழுது காட்டினாள், தான் சொன்னதுதான் உண்மை என்பதுபோல்.

அவளின் நடிப்பை பார்த்துச் சிரித்த கார்த்தி, “அத்த, நான் தான் அம்முவ கடிச்சிட்டேன்.” என்றவன், அவள் செய்த சேட்டையை சொல்ல விரும்பாமல், அதே நேரத்தில் பொய்யும் சொல்ல விரும்பாமல், மன்னிப்பு மட்டும் கேட்டான்.

உண்மையில் அம்மு, சாயந்திரத்திலிருந்து விளையாடி விட்டு, இப்போ ஹொம்வொர்க் பண்ணச் சொல்லவும், தூக்கம் வருவதாகச் சொல்லி, படிக்காமல் அவனுக்கு டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்தாள். இதைச் சொன்னால் அம்முவுக்கு தோசைக் கரண்டியாலயே இரண்டு வைப்பார் மலர். அது தெரிந்தே மறைத்து விட்டான்.

கார்த்தியோ, அத்தோடு நிறுத்தாமல் “அம்மு.. பொய் சொல்லக்கூடாது சொல்லிருக்கன்ல மாமா.” என்று அதட்டவும்,

இதுதான் சாக்கென்று இன்னும் சத்தம் கூட்டி அழுதவள், கையிலிருந்த புக்கை எடுத்து கார்த்திக்கின் மீது வீசிவிட்டுப் போய் படுத்துவிட்டாள். முன்னமே அவள் சாப்பிட்டு விட்டதாலும், இதுவும் அவளின் வாடிக்கையான செயல் என்பதாலும், யாருமே கண்டுகொள்ளவில்லை.

“வாலு, ஹொம்வொர்க் செய்யாம இருக்க, இது ஒரு சாக்கு” என்று திட்டிவிட்டு மலர் சென்று விட,

தன் வீட்டுப்பாடங்களை முடித்த கார்த்தி. தன் மாமனுடன் சாப்பிட எழுந்து சென்று விட்டான். அவர்கள் சென்றதும், நைசாக எழுந்து வந்த அம்மு, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, அவன் நோட்டை தேடி கையில் எடுத்தவள், அவன் செய்து வைத்த வீட்டுப் பாடங்களை கிழித்து எடுத்துக்கொண்டு, மீண்டும்  ஒன்றும் தெரியாதது போல்  சென்று மறுபடியும் படுத்துத் தூங்கிவிட்டாள்.

சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரியான தன் மாமன் மகளை நினைத்துக்கொண்டே, தூரமாகிவிட்ட தூக்கத்தை துரத்திப் பிடித்துக் கொண்டிருந்தது அந்த ஜீவன்…!