அத்தியாயம் – 29

காலையில் அந்தச் செய்தியைப் பார்த்து பயந்து நடுங்கியது முதல், பாதிக்கப்பட்ட பெண்ணின் கையில் சாட்டையைக் கொடுத்து அடி வெளுக்க வைத்தது வரை நினைத்துப் பார்த்த திவ்யபாரதி, அன்று முழுவதும் மிகவும் சந்தோஷமாகச் சுற்றி வந்தாள்.

இரவு திவ்யபாரதியாகவே செழியனை நெருக்கிக் கொண்டு படுத்திருந்தவள், சட்டென அவன் நெற்றியில் முத்தம் ஒன்றை பதித்து “தேங்க்ஸ் DSP” என்றவள், அவன் நெஞ்சினை மஞ்சமாக்கிக் கொண்டாள்.

முத்தமிட்ட பிறகே, மகிழ்ச்சி மிகுதியில் தான் செய்த காரியம் புரிந்தது. இதுவரை எப்போதாவது செழியன் தான் அவள் நெற்றியில் முத்தமிட்டிருக்கிறான். அதற்கான எதிர் வினை கூட திவ்யபாரதியிடம், இயல்பாய் வந்ததில்லை.

இன்று மனம் நிறைவாக உணர்ந்திருந்தாள் போலும், அது தந்த உவகையில், என்றும் இல்லாத சந்தோஷத்தில் இருந்தவள், இதற்கெல்லாம் காரணமானவனை நினைத்த மாத்திரத்தில் எதையும் யோசிக்காமல் முத்தமிட்டிருந்தாள்.

அதில் தனக்குத் தானே அதிர்ச்சியடைந்தவள், முகத்தை மறைத்து அவன் நெஞ்சோடு சுருண்டும் கொண்டாள்.

செழியனை மணந்துகொண்ட நாளில் கூட, பதற்றத்துடன் இருந்தாளே ஒழிய, நிம்மதியை அவள் மனம் அடைந்து இருக்கவில்லை. இன்று ஏனோ சொல்ல முடியாத உற்சாகம். உடம்பில் புது இரத்தம் பாய்ந்தது போல் இருந்தது, திவ்யபாரதிக்கு.

செழியனோ எதிர்பாராமல் திவ்யபாரதியிடம் இருந்து கிடைத்த முதல் முத்தத்தில், ஆனந்த அதிர்ச்சியில் இருந்தான். தன் நெஞ்சில் சுருண்டு இருந்தவளை, தன் கைகளால் மேலும் வளைத்துக்கொண்டவன்..

“என் பாப்புக்கு இன்னைக்கு என்ன சந்தோசமாம், சர்ப்ரைஸ் கிஃப்ட் எல்லாம் கிடைக்குது.” என்று வம்பிழுத்தான்.

அவன் நெஞ்சில் கைகொண்டு லேசாகக் குத்தியவள், “அதுவா… ம்ம்..கூம்” என்று யோசனை செய்வது போல் பாவனை காட்டி, “நல்ல காதலன் கிடைத்த சந்தோஷம், அந்தக் காதலனே கணவனாக் கிடைத்த சந்தோஷம், நல்ல தந்தை கிடைத்த சந்தோஷம், நல்ல நண்பன் கிடைத்த சந்தோஷம், அப்புறம் இந்த ஊர், இந்த ஜனங்க..” என்று இழுத்துக்கொண்டே போக…

“ஏன், ஆடு, மாடு, கோழி எல்லாம் விட்டுட்ட” என்று சிரித்துக்கொண்டே கேட்டவனிடம்,

“அதுவும் தான்” என்றாள்.

ஊரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்காக, “DSP, இந்த ஊரைப்பத்தி உங்களுக்கு முதல்லயே தெரியுமா? இங்க எப்பவுமே இப்படிதான் தண்டிப்பாங்களா, இல்ல… திரையன் அப்பா எனக்காக செஞ்சாங்களா?” என்று கேள்வியை அடுக்கிக் கொண்டே இருந்தாள்.

“இந்த ஊரு, இந்த மக்கள் எல்லாம் சூப்பர் இல்லைங்க! தப்பு செஞ்சா, உடனுக்குடனே தண்டனை. எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்குங்க.” என்று நெஞ்சில் படுத்துக்கொண்டே, அவன் முகம் பார்த்துப் பேசியவளிடம்,

“ஆமாண்டி, ஒரு கட்டு திட்டத்தோட வாழறவங்க. உனக்காகன்னு அவங்க செஞ்சது பச்சை குத்தினது மட்டும்தான், மத்தபடி இவங்களோட தண்டணையே கடுமையாகத்தான் இருக்கும். இன்னைக்கு படிக்கன்னு பிள்ளைங்களை வெளியூர்க்கு அனுப்பினாலும், இந்த ஊர் நடைமுறைக்கு கட்டுப் பட்டுத்தான் வாழனும். என்ன ஒன்னு, இவங்களோட வழக்கப்படி ரெண்டு கல்யாணம் தப்பில்ல.” என்று சிரித்தான் செழியன்.

“ஆ” என்று அதிர்ச்சியாக வாயைப் பிளந்த திவ்யபாரதி, “சும்மா பொய் சொல்லாதீங்க, செழியன்” எனவும்,

“நிஜமாடி, அன்னிக்கு நம்ம வீட்டுக்கு வந்தானே வல்லன், அவனுக்குக் கூட ரெண்டு பொண்டாட்டி தான்.” என்று சொல்லி, மேலும் சிரித்தான்.

“ம்.. கூம், நான் நம்ப மாட்டேன்! திரையன் அப்பா அப்பிடில்லாம் விடமாட்டாங்க!”

“உன் அப்பாக்கும் இதெல்லாம் தெரியும். இப்போதான் அவர் தலையெடுத்த அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மாத்திட்டு வர்றார்.” என்றவன், மேலும் அந்த ஊரைப் பற்றிய கதைகள் சொல்ல, திவ்ய பாரதியோ எப்போதோ தூங்கியிருந்தாள்.

முன்பு எப்படியோ, அந்த முதல் இதழ் முத்தத்தின் பிறகான கொஞ்சமே கொஞ்சம் என்றாலும், திவ்ய பாரதியின் நெருக்கமும், அவள் காதில் சொன்ன ஐ லவ் யூ வும் இம்சை செய்ய, முன்பு போல திவ்யபாரதியின் அருகாமையில் செழியனால் இயல்பாக இருக்க முடியவில்லை.

எப்போதும் தன் நெஞ்சில் சுமப்பவளை தோளோடு அணைத்துக்கொண்டு படுப்பவன் தான். ஆனால் அந்த அணைப்பில் ‘உனக்கு நான் இருக்கிறேன்’ என்ற பாதுகாப்பு உணர்வு மட்டுமே இருக்கும்.

எப்போதாவது திரும்பிப் படுக்க எண்ணினால் கை வளைவில், அவள் தலையை இடம் மாற்றிக் கொள்வான் அவ்வளவே. தோளோடு அணைத்த கைகள் என்றுமே இடம் மாறி தடம் பதித்ததில்லை.

ஆனால், இன்று நிலைமாறியதோடு இல்லாமல், வளைவுகளில் தட்டு தடுமாறி இடையில் இடம்பிடிக்கத் துடித்த கரங்களுக்கு தடை நீக்க உத்தரவை அகற்றாமல் இருக்க, பெரும்பாடு பட்டிருந்தான். அதற்காகவே ஏதேதோ கதை பேசி, திவ்யபாரதியை விரைவாகத் தூங்க வைத்திருந்தான்.

அதுவும் சற்றுமுன் அவளாகவே தந்த முதல் முத்தத்தில் மீண்டும் பிறந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். உணர்ந்து அவள் செய்யவில்லை என்று அறிவான். அதனாலயே தன்னைப் பெரிதும் கட்டுப்படுத்திக் கொண்டான்.

மொத்தமாக எடுத்துக் கொள்ள தடை இல்லைதான், இருந்தும் இன்னும் ஏதோ தயக்கம் செழியனிடம், அவன் மனது என்ன எதிர்பார்க்கிறது என்ற தெளிவில்லை அவனிடம்.

ஒருவேளை திவ்யபாரதியிடம் தனக்கான தேடலை எதிர்பார்க்கிறான் போலும்.

காதலிக்கிறாள் என்று தெரியும். ஆனால் ஏனோ, அவள் சூழ்நிலையைப் பயன்படுத்தி மனம் முடித்தது போல் ஆகிவிடக் கூடாது என்று பயந்திருந்தான். எப்படி செழியனால் அவள் அருகாமை இன்றி தனக்கான வாழ்வை வாழ முடியாதோ.. அதே போல் தன்னவளும் தன்னை நொடிபொழுதும் தேட வேண்டும் என்று எதிர்பார்த்தான்.

திவ்ய பாரதி தூங்கியதை அவள் சீரான மூச்சுக் காற்றிலிருந்து அறிந்தவன், இதற்கு மேல் முடியாது என்று நெற்றியில் இதழ் பதித்து, மெதுவே மெத்தையில் இறக்கிப் படுக்க வைத்துவிட்டு, எழுந்து வெளியில் வந்துவிட்டான்.

நிலவின் ஒளியில் எழுதி முடிக்கப்படாத ஓவியமாய் துயில் கொண்டிருப்பவளை, வெகுநேரங்கள் இரசித்திருந்தான். அந்த இரவில் வண்டியை எடுத்துக் கொண்டு போஸ்ட் ஆஃபிஸ் அருகில் சென்றவன், சிக்னல் கிடைக்கும் இடத்திலிருந்து திவ்யபாரதிக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை தொடர்பு கொண்டு பேசினான்.

இங்கு இரவென்பதால், அங்கு பகலாக இருக்கும் என்றுதான் இதுவரை காத்திருந்தான்.

செழியனின் அழைப்பை ஏற்ற மருத்துவரிடம், இன்று காலையில் திவ்யபாரதி நடந்துகொண்டதை விளக்கிச் சொல்லியவன், அன்று ஊரில் நடந்ததையும், சற்றுமுன் திவ்யபாரதி சந்தோஷமாக இருந்தது வரை சொல்லி முடித்திருந்தான். மீண்டுமாய் அவரின் உதவி திவ்யபாரதிக்குத் தேவைப்படுமா என்றும் கேட்டிருந்தான்.

சிறிது யோசித்த மருத்துவர், செழியனிடம் கேட்ட அந்தரங்க கேள்விகளுக்கு, செழியனிடமிருந்து எதிர்மறையான பதில்களே கிடைக்க,

கடிந்துகொண்ட மருத்துவரோ, “நான் உங்களுக்கு ஏற்கனவே சொன்னதுதான் செழியன், நீங்க அவங்களை ஸ்பெஷலா ட்ரீட் பண்ற வரைக்கும், அவங்களும் தன்னை அந்த பாதிப்பிலிருந்து வெளிவராத ஸ்பெஷல் சைல்ட்டாத்தான் நினைச்சிப்பாங்க.

நீங்களே விலக்கி வச்சி, அந்த உணர்வில் இருந்து வெளிவர விடாம வச்சிருக்கீங்க செழியன். இன்னைக்கு மார்னிங் அவங்க நடந்துகிட்டதுக்குக் காரணம், நெருங்கிப் பழகிய பொண்ணுங்கறதால அந்த பழைய தாக்கம் கொஞ்சம் இருந்து இருக்கலாம். மத்தபடி ஷி இஸ் அப்சலூட்லி நார்மல்(மிகவும் நன்றாக இருக்கிறார்).

அவங்க சாதாரணமா இருக்கணும்னா, இதைப்பத்தின செய்திகள் கேள்விப்படும் போது, பழைய கசப்புகள் மறந்து, அவங்க உணர்வுகள் மொத்தமும் உங்க மேல குவிஞ்சி இருக்கணும், செழியன். இதுக்கும் மேல எல்லாம், உங்க கையில் தான் இருக்கு.

எப்பவாவது என்னுடைய உதவி தேவைப்படும்னு நினைச்சிங்கன்னா, நான் கண்டிப்பா வரேன்.” என்று சொல்லி போனை வைத்திருந்தார்.

மனதில் இனம் புரியா நிம்மதி பரவ, சந்தோஷத்தில் மெதுவாக விசிலடித்துக் கொண்டே வண்டி ஓட்டியவன், வீடு வந்து சேர்ந்தான்.

மீண்டுமாய் வந்து திவ்யபாரதியின் அருகில் படுத்தவன், தூக்கம் வராமல் தவிக்க, புரண்டு அவன் மீது தலைவைத்த திவ்யபாரதியோ, “என் வார்த்தையில நம்பிக்கை இல்லையில்ல DSP, நான் ப்ராமிஸ் பண்ணியும் டாக்டர்க்கு ஃபோன் பண்ணிட்டு தானே வர்ரீங்க.” என்றவள் அவன் முகம் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்.

“ஹே..! நீ எப்போ எந்திரிச்ச..”

“நீங்க என்னை கீழ தள்ளி விட்டப்பவே.” என்றாள் முறைத்துக் கொண்டு.

அதில் சிரித்தவன் “இல்லடி. தூக்கம் வரல.. சும்மா வெளிய போய்ட்டு வந்தேன்.” என்றவனிடம்

“நடிக்காதீங்க DSP, உங்க வண்டிச் சத்தம் கேட்டது, அதோட நான் பத்திரிக்கை காரின்னு அப்பப்போ மறந்துபோறிங்க.” என்றவள் மூஞ்சை தூக்கி வைத்துக்கொண்டாள்.

திவ்யபாரதியின் தன் மேலான முதல் உரிமையான கோபம் அதையும் அழகாய் இரசித்திருந்தான், அந்த ஆண்மகன்.

அவள் மூக்கைப் பிடித்து ஆட்டி, “சரி, சாரி! இனிமே பண்ணமாட்டேன் போதுமா” என்று மன்னிப்பு வேண்டி நின்றவனிடம்,

“அந்த சப்பை மூக்கு டாக்டர், என்ன சொன்னார்?” என்றாள்.

“சப்பை மூக்கா” என்று வாய்விட்டுச் சிரித்தவன், “கொழுப்பு கூடிப் போச்சிடி உனக்கு” என்றவன்,

“டாக்டர் என்ன சொன்னார்னு, நேரம் வரும்போது சொல்றேன்.” என்று உல்லாசமாகச் சிரித்து வைத்தான்.