கோவிலில் வண்டியை நிறுத்திய செழியன், ஜீப்பிலிருந்து இறங்கி பாரதியைப் பார்க்க, எதுவும் பேசாமல் அவனோடு கூட கோவிலுக்குள் சென்றாள்.
அவளிடமும் மருத்துவர் தேவையானவற்றை சொல்லித் தான் வைத்திருந்தார். அதைப் பற்றிய சிந்தனையில் இருந்தவளுக்கு, செழியனிடம் பேச வார்த்தை வரவில்லை. புரிகிறது தான், தனக்காக, தான் காதலிக்கும் வேலையைக் கூட விட்டுவிட்டு, கூடவே இருந்து பார்த்துக் கொள்பவனை யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும்.
ஆனால் பயம், எங்கே தன்னால் செழியனுக்கு சந்தோஷத்தை தர முடியாதோ என்ற பயம்.
இங்கே வந்ததிலிருந்தே, ஏதோ ஒரு விதத்தில் அவர்களின் திருமணப் பேச்சு அடிபட்டுக் கொண்டுதான் இருக்க்கிறது. ஆனால், செழியன் வாயிலிருந்து இதுவரை நேரடியாக வந்ததில்லை. செழியனிடமும் மருத்துவர் பேசி இருப்பார் என்று ஊகித்துத்தான் இருந்தாள்.
இருந்தாலும், அவன் திடீரென கோவிலில் வண்டியை நிறுத்தவும், மனம் படபடக்க ஆரம்பித்தது. செழியன் எதும் கேட்டு விடக்கூடாது என்ற வேண்டுதலுடன் தான் உள்ளே நுழைந்திருந்தாள்.
அவன் கேட்டு தன்னால் மறுக்க முடியுமா என்று நினைத்தவளுக்கு, அந்த நிலை வராமலே போய் விட்டால் நல்லது என்று தோன்றியது.
அவளுடைய ஒவ்வொரு செயலையும் அவதானிக்கும் அவனுக்கு, திவ்யபாரதியின் முக மாறுதலே அவள் மனதை காட்டிக் கொடுத்து விட்டது.
லேசாக புன்னகைத்துக் கொண்டவன், எதுவும் பேசாமல் சாமி கும்பிட்டு விட்டு, கோவிலை சுற்றி ஓடும் நீரோடை அருகில் அமைந்த திண்டில் அமர்ந்து கொண்டான்.
திவ்யபாரதியும் சற்று இடைவெளி விட்டு அமர்ந்து கொள்ள, தனக்கும் அவளுக்குமான இடவெளியை பார்வையால் அளவிட்டவன்,
எதை நினைத்து பயந்தாளோ அதையே செழியன் கேட்டுவிட, மவுனமாகப் பார்த்திருந்தவள்,
அவன் கண்களில் தெரிந்த ஏக்கத்தில், தன் மௌனம் கலைத்து, “நா..நா..ன்.. எ..எ..ன்னால… முடியும்னு தோணலை DSP சார்” என்று வார்த்தைகளை கடித்துத் துப்பினாள்.
“எனக்கு இந்த தந்தி அடிக்கிற திவ்யபாரதி வேண்டாம்டி, எதுக்கும் துணிஞ்சி நிக்குற என் பாப்பு வேணும்.” என்றான்.
“டாக்டர் உன்கிட்டயும் சொல்லியிருப்பார் தானே!” என்றவன் திவ்யபாரதியை நெருங்கி, “உன் ஆடை மூடிய தேகம் தான் என் இலக்கா பாப்பு, அதுக்காகவா இவ்வளவு தயங்குற?” என்று குரலில் வருத்தம் கலந்து பேச,
அவன் வார்த்தை தந்த வலியில் கண்கள் கலங்க, மாறாக முறைத்து நின்றவள், “நான் அப்படி சொன்னேனா DSP” என்று வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு நின்றாள்.
‘மை பாப்பு இஸ் பேக்’ என்று மனதோடு சொல்லிக் கொண்டவன், “வேற எப்படி நினைக்கிறதாம், வாழ்ந்து பார்த்தா தானே தெரியும், சும்மா முடியாது, முடியாது சொன்னா, அப்படித்தானே அர்த்தம்.” என்றவன் அவள் விழிகளுக்குள் ஊடுருவி “எனக்கு நீ அழுதா உரிமையா அணைச்சிக்கனும், சந்தோஷப்பட்டா, என் தோள் சாஞ்சிக்கனும், உன் விரலுக்கு முன்னாடி என் விரல் உன் கண்ணீரை துடைக்கனும், உன் கனவுகளை நான் மட்டுமே ஆக்ரமிச்சிருக்கணும், உன் நினைவுகளில் என் ஞாபகங்கள் மட்டுமே நிலைச்சிருக்கனும், மொத்தத்தில் நீ என்னவளா இருக்கனும்” என்றவன்
“நீ இல்லாம வேற பொண்ணு கூட நான் வாழமாட்டேன்னு உனக்கு நல்லாவே தெரியும். இதையும் மீறி கல்யாணம் வேண்டாம்னு நீ சொன்னா, எனக்கும் வேண்டாம். காலம் முழுக்க காதலனா இல்லாம, காவலனா வந்துட்டுப் போறேன்.” என்று மெல்லிய குரலில், ஆனால் இதுதான் என் முடிவு என்பது போல் அழுந்தப் பேசியவன் எழுந்து செல்லப் போக, அவன் சட்டையைப்பிடித்து தடுத்திருந்தாள், திவ்யபாரதி.
நின்று திரும்பிப் பார்த்தவன், கண்களில் ஏக்கம் தாங்கி, “வாடி வாழ்ந்து பார்க்கலாம்.” என்று கைகளை நீட்ட, நடுக்கத்துடன் தன் கைகளை நீட்டியவளை எட்டிப் பிடித்தவன், பற்றிய கரங்களை விடாமல் ஜீப் வரை அழைத்துச் சென்று, உரிமையாக ஜீப் கதவை திறந்து விட, மகாராணியாய் ஏறிக் கொண்டாள் திவ்யபாரதி, அவன் உள்ளத்திலும் தான்.
அதே கருப்பண்ணசாமி கோவிலில், தன் தந்தை, தாய், DGP ராஜேந்திரன், கார்த்தி மற்றும் ஹென்றி ப்ரதர்ஸ் முன்னிலையில், திரையன் அரிமா பெண் வீட்டினராய் இருந்து பழங்குடியின மக்கள் வழக்கப்படியே திருமணத்தை நடத்தி வைத்திருந்தார். மொத்த ஊருக்கும் விருந்திட்டு மகிழ்ந்திருந்தார், திரையன் அரிமா.
திருமணம் முடிந்த இரவு, திரையன் அரிமா செழியனுக்காக கொடுத்திருந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள், திவ்யபாரதி.
இவ்வளவு நாட்கள் கார்த்தியும், செழியனுமே அங்கு தங்கியிருந்தார்கள். ஆம், கார்த்தியையும் தன்னுடன் வைத்துக் கொண்டான், செழியன். எங்கே தனியாக விட்டால் மறுபடியும் பழிவாங்கவென்று கிளம்பிவிடுவானோ என்று பயந்த செழியன், அவனை இங்கேயே வைத்துக்கொண்டான்.
கார்த்திக்கும், இந்த இயற்கை சூழல் தன்னுடைய அம்முவை கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்த, மறுக்காமல் தன் சகாக்களுடன் அந்த வீட்டின், கல்லால் படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட மாடியில் இருந்து கொண்டான்.
அதுமட்டும் இல்லாமல், இப்போது செழியனின் தந்தைக்கு இன்னொரு மகனாக மாறி இருந்தான், கார்த்தி.
செழியன் இங்கே இருக்க, அவ்வப்போது செழியனின் தந்தையையும், தாயையும் பார்த்து வருவது கார்த்தி தான். அவன் இருக்கும் தைரியத்தில் தான், செழியனும் தன் தாய் தந்தை பற்றிய கவலை இல்லாமல் திவ்யபாரதியை மீட்டெடுப்பதில் தன்னை முழுமையாகச் செலுத்திக் கொண்டான்.
இவ்வளவு நாட்கள் திரையன் அரிமாவின் பெண்ணாக அவர் வீட்டில் தங்கி இருந்தவளை, இன்று ஊரே திரண்டு செழியன் வீட்டில் விட்டுச் சென்றது. உறவுகளே இல்லாமல் வளர்ந்தவளுக்கு, ஒட்டு மொத்த ஊரும் ஒன்றாகத் திரண்டு உறவாக நின்றிருந்தது. இது அத்தனைக்கும் காரணமானவனை காதலுடன் நினைத்திருந்தவள், உடல் நடுங்க செழியன் இருந்த அறைக்குள் நுழைந்தாள்.
அந்த இன மக்கள் முறைப்படி புடவையையே வேறு விதமாக அணிந்திருந்தவள், தயங்கி தயங்கி உள்ளே நுழைந்தவளின் கண்களின் விழி நீரோ நான் இப்பொழுது விழுந்துவிடுவேன் என்று எச்சரித்துக் கொண்டிருக்க,
தடுமாறியவளின் கரம் பிடித்து உள்ளே அழைத்து வந்த செழியன், அந்த அறையின் ஒருபக்கத்தை மேடைபோல் அமைத்து, சற்று தூக்கிக் கட்டியிருந்த படுக்கையில் அமர வைத்தான்.
அங்கே இருக்கும் வீடுகளில் எல்லாம் கட்டிலோ மெத்தையோ கிடையாது. அதற்குப்பதிலாக வீட்டின் ஒரு பகுதியை தரையிலிருந்து சற்று தூக்கிக் கட்டியிருப்பார்கள். அதில் அங்கே வளரும் விஷேச புற்கள் கொண்டு நெய்த பாயை விரித்திருப்பார்கள்.
செழியனுக்கு அது பழக்கம் இல்லாததால், அந்த திட்டின் மேல் மெத்தை விரித்து வைத்திருந்தான்.
அதில் திவ்யபாரதியை அமர வைத்தவன், தானும் அருகில் அமர்ந்து… இப்பவா, அப்பவா என்றிருந்த விழிநீரை துடைத்து விட்டான்.
விழியோடு விழி கலந்தவன் “இத்தனை வருஷத்துக்கும் சேர்த்து வச்சி நல்லா தூங்கு கண்ணம்மா. நான் காவலிருக்கேன்.” என்றவன் அவள் நெற்றியோடு நெற்றி முட்டி, படுக்க வைத்தான்.
கண்கள் கலங்க காதலோடு ஏறிட்ட திவ்யபாரதி “தேங்க்ஸ் DSP” என்றவள், ஓரமாகச் சுருண்டு படுத்துக் கொண்டாள். எத்தனைதான் தன்னை தயார்படுத்திக் கொண்டு வந்தாலும், திவ்யபாரதியால் அந்தச் சூழலை கடக்க முடியவில்லை.
புரிந்துகொண்டு விலகியவனின் காதலுக்காகவாவது தன்னை மீட்டாக வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டவள், அவன் அருகாமை தந்த உணர்வில் நிம்மதியாக உறங்கிப் போனாள்.
அவள் உறங்கும் வரை முழித்திருந்து விலகியிருந்தவன், அவள் தூங்கியதும், துயில் கலைக்காமல் அருகில் படுத்துக் கொண்டான். காத்திருந்த காதல் கை கூடியதிலும், தன்னவளின் அருகாமை தந்த கலவை உணர்விலும், தன் மூச்சுக்காற்றோடு கலந்த தன் பாப்புவின் பிரத்யேக மஞ்சள் பூசிய புது மணப்பெண்ணின் மணத்திலும், தன்னையும் அறியாமல் உறங்கி இருந்தான், செழியன்.
நடு இரவில்… திவ்யபாரதியின் உடல் குளிரில் நடுங்குவது போல் வெட்டி வெட்டி இழுக்க, அது ஏற்படுத்திய அசைவில் எழுந்து அமர்ந்த செழியன், திவ்யபாரதியின் கண்கள் மூடியிருக்க உடல் மட்டும் வெடவெடப்பதை பார்த்தவன், முதலில் புரியாமல் தவித்தாலும், அந்த மோசமான இரவின் தனிமையில், அவள் அனுபவித்த குளிரின் தாக்கம் என்று புரிந்து கொண்டவன், நொடியும் தாமதிக்காமல் இழுத்து தன் மார்பில் போட்டுக்கொண்டு, தட்டிக்கொடுக்க ஆரம்பித்தான்.
அதன் பிறகான அவள் நடுக்கம் குறைந்துவிட, தூக்கத்தை தொடர்ந்திருந்தாள் திவ்யபாரதி. வழக்கமாக சின்ன அசைவுக்கே முழித்து விடுபவள், இன்று திருமணம் என்று அவர்கள் வழக்கப்படி விடியல் மூன்று மணிக்கே எழுப்பி இருந்தார்கள்.
அதைத்தொடர்ந்த சடங்குகளும் இடைவிடாமல் நடக்க, மிகவும் சோர்வடைந்திருந்தாள், திவ்யபாரதி. அத்தோடு கூட இன்றைய இரவைப் பற்றிய பயம் வேறு, அவளை சில நாட்களாக சரியான தூக்கம் இல்லாமல் செய்திருந்தது.
தூக்கத்திலும் ஏதோ பாதுகாப்பை உணர்ந்தவளின் உணர்வுகள், தன்னோடு ஒட்டிப்பிறந்த சகோதரியின் அருகாமையை உணர, அவன் மார்பில் நிம்மதியாக உறங்கிப் போனாள்.
இருவரின் புரிதலுடன் கூடிய வாழ்வில், அதன் பின்னான இரவுகளிலும் இதுவே தொடர்கதையாக, இப்போது அவன் அணைப்பில், தன் சகோதரியை மறந்து தன்னவனை மட்டுமே உணர்ந்தவள், அது தந்த பாதுகாப்பில்.. எந்த வித பழைய மோசமான நினைவுகளும் அண்டாமல், தூங்க ஆரம்பித்து இருந்தாள்.
ஒரு படி முன்னேறி, அவளாகவே அவன் மார்பை பஞ்சணையாக்கி ஏறி படுத்துக்கொள்ளும் அளவுக்கு, தேறியும் இருந்தாள்.
ஆனால் அதைத்தாண்டி, அவனும் யோசிக்கவில்லை, அவளும் யோசிக்கவில்லை. இருவருக்குமே பயம், தன்னவனை ஏமாற்றம் கொள்ள வைத்துவிடுவோமோ என்ற தயக்கம் அவளுக்கும், தன்னவளை காயப்படுத்தி, எங்கே மீண்டும் மனநிலை பாதித்துவிடுமோ என்ற தயக்கம் செழியனுக்கும் இருக்க. இருவரும் அந்த எல்லை தாண்டி வர விரும்பவில்லை. எப்போதாவது அரிதாக பரிமாறிக் கொள்ளப்படும் நெற்றி முத்தம் மட்டுமே, இதுவரை சாஸ்வதமாகியிருந்தது.
அப்படிப்பட்டவன், இன்று இவ்வளவு கவுன்சிலிங்க் பிறகும், திவ்யபாரதி நடந்து கொண்டதில் கோபத்தை வெளிக்காட்டும் விதமாக, தன்னையும் மீறி அவள் இதழ் சுவை அறிந்திருந்தான். தன்னவளுக்கு எதும் ஆகியிருந்தால் அவனின் நிலை என்னவாகும் என்ற நினைப்பே, அவனுக்கு அந்தக் கோபத்தை கொடுத்திருந்தது. எங்கே தன்னவள் தன்னை விட்டுப் போய் விடுவாளோ என்ற பதற்றமே, அவளை எடுத்துக்கொள்ள துணிந்திருந்தது.
இன்று வரை நடந்த அனைத்தையும் அசைபோட்டுப் படுத்திருந்தவன், திவ்யபாரதி நன்றாக தூங்கிவிட்டதை அறிந்து, மெதுவாக விலக்கி படுக்க வைத்தவன், எழுந்து வெளியில் வந்தான்.
அங்கு நடுக்கூடத்தில் மாட்டியிருந்த போட்டோவின் முன் வந்து நின்றவன், சில நிமிடங்கள் அதையே வெறித்துப் பார்த்திருந்தான்.
பின் அந்த போட்டோவின் கீழ் இருந்த அலமாரியைத் திறந்து, அதிலிருந்த சில பொருட்களை கண்கள் சிவக்கப் பார்த்திருந்தவன் இதழ்களோ… “சீக்கிரமா உன்னைத் தேடி வருவேன், உன்னைப் போடாமல் என் மனசு சாந்தி அடையாது.” என்று சொல்லிக்கொண்டது.
எல்லாம் நல்லபடியாக முடிந்திருக்க, செழியன் இன்னும் யாரைப் போடத் துடிக்கிறான் என்பது, அடுத்த அத்தியாயத்தில்…