அத்தியாயம் – 24

ஒரே திட்டத்தில் பல வெற்றிகளை குவித்து இருந்தான், செழியன்.

ஆம், மந்திரி திவ்யபாரதியை கொல்லப் போட்ட திட்டத்தையும், கார்த்தி அவளைக் காப்பாற்ற போட்ட திட்டத்தையும் இணைத்து, தனக்கு சாதகமாக சில மாறுதல்களைச் செய்த செழியன், தான் நினைத்த காரியத்தில் வெற்றி பெற்றிருந்தான்.

கார்த்தி, திவ்ய பாரதியை சிறைக்குச் செல்லும் வழியில் கடத்த திட்டமிட்டிருந்தான். அப்படி செய்தால் திவ்ய பாரதி காப்பாற்றப்படுவாள் தான், ஆனால், அந்த மந்திரி அவளைக் கொல்ல எப்போதும் தேடிக்கொண்டே தான் இருப்பான். அது மட்டுமா… அரசாங்கமும், போலீஸும் கூட கொலை கேசுக்காக திவ்யபாரதியை தேடிக்கொண்டு தான் இருக்கும்.

எங்கிருந்தாலும் ஒரு நிம்மதியான வாழ்வை திவ்ய பாரதியால் வாழ முடியாது.  அதுவும் திவ்யபாரதி, இந்த உறுத்தலோடு, நிச்சயம் சந்தோசமாக வாழ மாட்டாள்.

ஆகவே, அனைத்தையும் யோசித்த செழியன், இவர்கள் இருவரின் திட்டங்களையும் இணைத்து, தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டான்.

அதாவது கவர்ன்மெண்ட் ரெக்கார்டு படி திவ்யபாரதியை இல்லாமல் செய்திருந்தான். திவ்யபாரதி இறந்துவிட்டதாகக் காட்டிவிட்டால், போலீசும் தேட வாய்ப்பில்லை. ஒருவேளை அந்த மந்திரி சிறையிலிருந்து வெளியில் வந்தாலும், கவலை இல்லை. அதனால் தான், தேடினாலும் உடல் கூட கிடைக்காத பள்ளத்தாக்கை தேர்ந்தெடுத்து, மலைப்பாதையில் வண்டியை திருப்பி இருந்தான். அதன் நம்பகத் தன்மைக்காக, தன் உயிரையும் பணயமாக வைத்தான், அந்த உண்மைக் காதலன்.

அதுமட்டுமா? பல வழக்குகளில் தண்ணி காட்டிக் கொண்டிருந்த அந்த மந்திரியை, இதன் மூலம் கொலை வழக்கில் கைது செய்து, லாரி டிரைவரை அப்ரூவராக மாற வைத்து, அந்த மந்திரி வெளியில் வர முடியாத படி செய்திருந்தான்.

டிபார்ட்மெண்டில் இருந்து கொண்டு, மந்திரிக்கு கை கூலியாகச் செயல்பட்டு, தன்னவளை கொல்ல முயற்சி செய்த ராகவனையும் பழி வாங்கி விட்டான். அவர் மனைவிக்கும் சொன்னது போலவே, டிப்பார்ட்மெண்டில் வேலைக்கு ஏற்பாடு செய்து விட்டான்.

திவ்யபாரதிக்கு நிரந்தர விடுதலையும் அளித்து இருந்தான்.

இத்தனையும் DGP ராஜேந்திரனின் அனுமதியுடன் தான் செய்திருந்தான், செழியன்.  அன்று கார்த்தியை சந்தித்து விட்டு DGP யிடம் வந்தவன், அவர் முன்பே அடைத்து வைக்கப்பட்ட லாரி டிரைவரை உண்மையை ஒத்துக்கொள்ள வைத்து, மேலும் இது விஷயமாக ஆலோசனை செய்து, சம்மதம் பெற்றிருந்தான்.

எல்லாவற்றையும் ஏற்று சம்மதித்த ராஜேந்திரன், செழியன் பள்ளத்தில் குதிக்க மட்டும், செழியனின் நலம் கருதி ஆட்சேபனை செய்தார்.

ஆனால், செழியன் மறுத்து விட்டான். இதைச் செய்தால் மட்டுமே உண்மைத் தன்மை இருக்கும். அத்தோடு பல கேஸ்களில் இருந்து தப்பித்து வரும் மந்திரியையும், வசமாக சிக்க வைக்க முடியும் என்று சொல்லி, சம்மதிக்க வைத்திருந்தான்.

இல்லை என்றால், அந்தப் பண முதலை எதையாவது சொல்லி தப்பித்து விடும் என்றவன், வேண்டுமென்றேதான் அனைவரும் தேடும் போது கிளைகளுக்குள் மறைந்து கொண்டு, செல்போன் சிக்னலையும் ஆப் செய்து வைத்தான்.

ராஜேந்திரனின் அறிவுறுத்தலின் படி, விஷயம் நியூஸ் சேனல்களில், திரும்ப திரும்ப போட்டு காண்பித்து, விஷயம் வைரல் ஆகவும், செழியன் மீது அன்பு கொண்ட பொது மக்கள் மந்திரியை கைது செய்யச் சொல்லி, அமளி துமளியில் ஈடுபட்டனர்.

அதையும் செழியனின் நண்பர்கள்தான் சமூக வலைதளம் மூலம் தூண்டிவிட்டு, ட்ரெண்ட் ஆக்கி இருந்தனர். அத்தனையும் அந்த ஓரே ராத்திரியில் தன்னவளின் அருகில் இருந்து கொண்டே, போன் மூலம் சாதித்திருந்தான், செழியன்.

இதுவே, முதலில் திவ்யபாரதி மட்டும் இறந்துவிட்டதாக செய்தி பரவி இருந்தால், கொலை குற்றம் செய்தவளுக்காக இவ்வளவு சப்போர்ட் கிடைத்து இருக்காது.

அதனால் வேண்டுமென்றே மாலை வரை தேடுதல் டீமுக்கு தண்ணி காட்டினான். DGP செய்த ஏற்பாட்டின் படி விஷயம் இந்நேரம் வைரல் ஆகி இருக்கும் என்று உணர்ந்த பிறகே, செல்போனை ஆன் செய்திருந்தான்.

அதற்குள் DGP கூட உண்மையில் கொஞ்சம் பதற்றமாகத்தான் இருந்தார். என்னதான் செழியன் திறமை மீது நம்பிக்கை இருந்தாலும், அதையும் மீறி அவனுக்கு ஏதாவது நடந்திருந்தால் என்று நேரம் செல்லச் செல்ல, பதறித்தான் போனார்.

அந்த காவலர் வந்து செழியன் செல்போன் சிக்னல் கிடைத்தது என்ற தகவல் வந்ததும் தான் ,அவருக்கு உயிரே வந்தது. ஆனால் செழியனின் தந்தைக்கு, அவன் மீது அபார நம்பிக்கை. மலையேற்றம் பயிற்சி பெற்றவன் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்குமா..?

தன் மகன் எது செய்தாலும், அதில் அர்த்தம் இருக்கும் என்று உணர்ந்திருந்தவர், சிறிதும் கலங்கவில்லை.

அவர்கள் திட்டப்படியே விஷயம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தவும், மத்திய அரசே தன் கட்சி பெயரைக் காப்பாற்ற, அந்த மந்திரியை கட்சியிலிருந்து நீக்கியதோடு இல்லாமல், கைது செய்யவும் அனுமதி அளித்தது.

இப்படி பல மாங்காய்களை அடித்து, தன் ஒரே திட்டம் மூலம் சாதித்து இருந்தான்.

அனைத்தையும் DGP ராஜேந்திரன் செழியனிடம் பேசிமுடித்து விடைபெற்றுச் செல்லவும், வழியனுப்ப கூடவே மகேந்திரனும் உடன் சென்றார்.

அவர்கள் வெளியேறவும், செழியனின் போன் ஒலிக்க ஆரம்பித்தது. அதில் ஒளிர்ந்த எண்ணைப் பார்த்தவன், ஆவலுடன் எடுத்து உதட்டில் முகிழ்த்த புன்னகையுடன் காதில் வைத்தான்.

அவன் ஹலோ கூட சொல்லவில்லை. அதற்குள் மறுமுனை வசைமாரி பொழிய, போனை சற்றே தள்ளிப் பிடித்தவன்,

பின் காதில் வைத்து “டேய் நிறுத்துடா, இப்போ எதுக்கு பொரியற…”

“என்னது பொரியறனா..? மரியாதையா இங்க வந்து சேரு, இவளை வச்சியெல்லாம் என்னால சமாளிக்க முடியல…” என்று குற்றப் பத்திரிக்கை வாசித்தவனிடம்,

“அங்க எல்லாம் ஓகே தான?” என்று செழியன் கேட்கவும்,

“எல்லாம் ஓகே தான் மச்சி, ஆனா… உன் பாப்பு தான் எனக்கு ஆப்பு வச்சிட்டு இருக்கா. அதென்னடா பள்ளத்தில குதிச்சது நீ!  என்னவோ நான் புடிச்சி தள்ளுனா மாதிரி என்னையப் படுத்தி எடுக்கறா.” என்றவன்,

“மேடமுக்கு உன் மேல் காதல் எல்லாம் இல்லையாம். ஆனா… நீ எப்படி இருக்கன்னு மட்டும் என்னைய தொல்லை பண்ணி கேட்டு தெரிஞ்சுக்குவாங்களாம்.” என்று சொல்லிக் கொண்டிருந்தவனின் அலறல் சத்தம் இந்தப்பக்கம் செழியனுக்குக் கேட்க.

திவ்யபாரதியும் கூட இருப்பதை புரிந்து கொண்டவன், அதிர்ச்சி கலந்த ஆனந்தத்தில் “டேய்! எங்க இருந்து பேசுற, வீட்லயா..?” என்று கேட்டதும், பொங்கி எழுந்து விட்டான் கார்த்தி.

“என்னது வீட்லருந்தா..? மனசாட்சி இருக்காடா உனக்கு..? ஒரு செல்போன் சிக்னல் கூட கிடைக்காத ஊர்ல, எங்கள குடி வச்சிட்டு, வீட்லருந்து பேசுறாங்களாம்.” என்றவன், “போஸ்ட் ஆஃபிஸ் கிட்ட தாண்டா வந்து பேசுறேன். இங்கதான சிக்னல் கிடைக்குது. ஹென்றி ப்ரதர்ஸ வாக்கிங் கூப்பிட்டு வந்தேன்டா” என்று முடித்தான்.

இந்தப்பக்கம் செழியனோ விடாமல் சிரித்துக் கொண்டிருந்தவன், “டேய்.. டேய்!  வச்சிராத போனை, பாரதியும் கூட வந்திருக்காளா..? போனை பாரதிகிட்ட குடுடா.. ப்ளீஸ்” என்று கெஞ்சலில் ஈடுபட்டான்.

“நானா குடுக்க மாட்றேன், உன் பாப்புதான் உன்கிட்ட பேச மாட்டேங்குறா.” என்றவன் “இந்தா பிடி! நீயே கேட்டுக்கோ, ஆள விடுங்க சாமி.” என்றவன் செழியனிடம்,

“டேய்! நீ இந்த ராட்சசிய கல்யாணம் பண்றதுக்குப் பதிலா அந்தப் பள்ளத்திலயே குதிச்சிருக்கலாம்” என்ற கார்த்தியின் குரல் கேட்க,

அதைத் தொடர்ந்து அவன் அலறல் சத்தம் நிற்காமல் கேட்டுக்கொண்டே இருந்தது.

தொடர்ந்து அவன் “மாறா” என்று அழைத்தபடி செல்லும் குரலும் கேட்டது.

…………………….

கார்த்தி திடீரென கல்யாணம் என்றதில், அதிர்ச்சி அடைந்திருந்த திவ்யபாரதி மௌனமாக இருக்க, மறுமுனை இன்னும் அணைக்கப் படாமல் இருக்கவும், திவ்யபாரதி லைனில் இருப்பதை புரிந்து கொண்ட செழியன், மிக ஆழ்ந்த குரலில் “பாப்பு..!” என்றழைத்தான்.

செழியனினுக்கு லேசான இருமும் சத்தமே பதிலாகக் கிடைக்க,

புன்னகைத்துக் கொண்டவன், “என் கிட்ட பேச மாட்டியாடி” என்று மெல்லிய குரலில் கேட்க..

பழைய திவ்யபாரதியாய் இருந்தால் என்ன சொல்லி இருப்பாளோ, ஆனால் மனதின் பாரமெல்லாம்  இறங்கிய இந்த திவ்யபாரதிக்கோ, அவன் தனக்காக உயிரை பணயம் வைத்ததில் அடங்கா கோபமும், அதே நேரத்தில்… ஏனோ புதிதாக முளைத்த வெட்கமும் வந்து தடைபோட்டது.

அவன் பதிலுக்காக இன்னமும் காத்திருப்பது தெரிந்த திவ்யபாரதியோ, “ஹென்றி, எங்கடா இருக்க, சீக்கிரம் இங்க வந்து சேரு.” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்.

ஹென்றி ப்ரதர்ஸைக் கண்டால் இன்னும் கூட நடுங்குபவள், ஹென்றியை அழைப்பதாவது என்றுணர்ந்த செழியனுக்கு, உதட்டில் நிரந்தர புன்னகை ஒன்று குடியேற, அது தனக்கான அழைப்பு என்று புரிந்துகொண்டான்.