அந்த அரசாங்க மருத்துவமனையின் தரமான சிகிச்சை அறையில், பெட்டில் அமர்ந்து கூலாக ஆப்பிள் சாப்பிட்டு கொண்டிருந்தான், செழியன். அருகில் DGP ராஜேந்திரன் மற்றும் அவன் தந்தை மகேந்திரன்.
விபத்துச் செய்தி கேள்விப்பட்டு வரத்துடித்த அன்னையை, தான் நலமாக இருப்பதாகச் சொல்லி, தங்கைக்கு இப்போது தாயின் துணை அவசியம் என்று மறுத்து விட்டிருந்தான்.
“என்னடா முரட்டு சிங்கிள், மிங்கிள் ஆகப் போறியாமே..!” என்ற DGP ராஜேந்திரனின் கேள்விக்கு,
சிறிது வெட்கப்பட்ட செழியன், “கூடிய சீக்கிரமே” என்றான்.
“பார்றா குற்றவாளிய வெளுக்குற DSP க்கு வெட்கத்தை” என்று கிண்டல் செய்தவர்,
“டேய் மகேன்! (மகேந்திரன்) இவன் போற போக்கு சரி இல்ல. சீக்கிரம் கால் கட்டு போட்டு விட்டுரு.” என்று தன் நண்பனுக்கும், இலவச ஆலோசனை வழங்கினார்.
மகேந்திரனும் சிரித்து ஒப்புதலாகத் தலை அசைக்கவும், “ஆமா, ஆறு மாசம் மெடிக்கல் லீவு சரி, எதுக்குடா ஆறு மாசம் சஸ்பென்சன் வேற… நீயே கேட்டு வாங்குற?” என்ற ராஜேந்திரன் செழியனை ஆராய்ச்சியாகப் பார்த்துக் கேட்கவும்..
அவரை ஒரு மார்க்கமாகப் பார்த்து வைத்த செழியன் “அதுவா அங்கிள், என் கஸ்டடில இருக்கும்போது தானே, திவ்ய பாரதிக்கு இப்படி ஆச்சு. அதான் சஸ்பென்ஷன்.” என்று சொல்லிச் சிரித்தான்.
“திவ்ய பாரதிக்கு எப்படி ஆச்சு” என்று கேட்டு அவனுடன் சேர்ந்து சிரித்த DGP..! “சரி, மெடிக்கல் லீவு அண்ட் சஸ்பென்சன் கிரான்டெட்” என்றவர்,
“அதான் உனக்கு ஒன்னும் இல்லையே. இன்னும் ஏன்டா ஹாஸ்பிட்டல்ல இருந்துக்கிட்டு, கவர்ன்மெண்ட் பணத்தை வேற வீணாக்கிட்டு இருக்க” என்று தோளில் தட்டிச் சிரித்தார்.
“எனக்கு ஒன்னும் இல்லைன்னு, உங்களுக்கும், எனக்கும் தானே தெரியும். மக்களுக்குத் தெரியாதே…!” என்று சொல்லி சத்தமாகச் சிரித்தான் செழியன்.
“எப்பா… அப்பாவும் பிள்ளையும் என்னமா நடிக்கிறிங்கடா டேய்! நீ என்னவோ மரத்துல தொங்கறதும், உங்கப்பன் என்னவோ உனக்கு ஏதோ ஆகிட்டா மாதிரி என் தோள் சாயறதும். அப்பப்பப்பா.. என்னால மீடியா முன்னாடி சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியலடா!” என்று சொல்லி அன்று நடந்த நாடகத்தை நினைத்து, கூடச் சேர்ந்து, சத்தமாகச் சிரித்தார் ராஜேந்திரன்.
‘ஆம்’ அன்று நடந்தது அத்தனையும் செழியனால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட கண் துடைப்பு நாடகமே..!
விபத்து நடந்த அன்று..
கோர்ட்டில் அந்த மந்திரி, உன்னை சும்மா விட மாட்டேன் என சவால் விட்ட போதே, செழியன் தன் நண்பன் தேவாவின் உதவியுடன், அந்த மந்திரியின் போன் கால்களை டேப் செய்யச் சொல்லிவிட்டான்.
அதில் கிடைத்த தகவல் படி, லாரி டிரைவரும், அந்த மந்திரியின் பேச்சும் சந்தேகத்தைத் தர, அப்போதிருந்தே லாரி டிரைவரை பின் தொடர்ந்த காவலர்கள், அவன் மந்திரி வீட்டிலிருந்து பணக்கட்டுடன் திரும்பும் போதே குண்டுக் கட்டாக தூக்கி, செழியன் உத்தரவுபடி DGP ராஜேந்திரன் வீட்டில் அடைத்து வைத்திருந்தனர்.
அவனை விசாரிக்கும் விதத்தில் விசாரித்ததில், திவ்ய பாரதியை சிறைக்குக் கொண்டு செல்லும் வழியில், லாரி வைத்து அடித்துத் தூக்கச் சொன்னதை ஒத்துக்கொண்டான்.
இதில் கார்த்தியோ! அவனைக் கைது சென்ற இடத்தில், அவனையும் கைது செய்யாமல் விட்டு வந்த செழியனிடம்,
“நீ உன் காதலிய காப்பாத்தறியோ இல்லையோ, ஆனா நான் என் பிரண்ட்டை விட மாட்டேன். என்னைத் தாண்டி, நீ எப்படி சிறைக்கு கொண்டு போறன்னு நானும் பார்க்கிறேன்.” என்று சவால் வேறு விட்டிருந்தான்.
மந்திரிக்கு சிறை செல்லும் வழியில் திவ்ய பாரதியை கொல்ல வேண்டும். கார்த்திக்கு அதே நேரத்தில் திவ்ய பாரதியை காப்பாற்ற வேண்டும். செழியனுக்கோ எவ்வழியிலேனும் தன்னவளை மீட்டாக வேண்டும்.
கார்த்தி.. திவ்ய பாரதியை காப்பாற்ற வேண்டும் என்றாலும், அது அவளை சிறைக்குக் கொண்டு செல்லும் வழியில் தான் சாத்தியம் என்று முடிவு செய்த செழியன், DGP வீட்டிலிருந்து போனில் கார்த்தியுடன் பேசி, சில திட்டங்களை வகுத்துக் கொண்டான்.
பேசி முடித்து, நேராக அந்த லாரி டிரைவரிடம் வந்த செழியன், “ஓகே, அந்த மந்திரி சொன்னா மாதிரியே திவ்ய பாரதி இருக்கற வேனை நீ அடிச்சித் துக்கு.” என்றவனை, அவன் அதிர்ச்சியாகப் பார்க்க…
“ஆனால், ஒரு சின்ன திருத்தம், அவன் சொன்னா மாதிரி போய்க்கிட்டு இருக்க வேனை இல்லை. ஓரமா நின்னுகிட்டு இருக்க வேனை அடிச்சி துக்கணும். அதுவும் நான் சொல்லும் போது.” என்றான் அழுத்தம் திருத்தமாக.
செழியனின் வார்த்தைகளில் இன்னும் அதிர்ச்சி நீங்காமல் இருந்தவனைப் பார்த்து சிரித்த செழியன், “இந்த விஷயம் மட்டும் அந்த மந்திரி காதுக்குப் போச்சி..” என்று சற்றே இடைவெளி விட்டவன், மீசையை முறுக்கி விட்டு, “உன்னோட லாரியே, உன் மேல ஏறி போட்டோக்கு போஸ் கொடுக்கும் ஜாக்கிரதை.” என்று மிரட்டல் விடுத்தான்.
ஏற்கனவே செழியனின் கவனிப்பில் ஒரு சுற்று வீங்கிப் போய் இருந்த அந்த டிரைவர், “நீங்க சொல்ற மாதிரியே செஞ்சுடுறேன் சார்.” என்றவனிடம், என்ன செய்ய வேண்டும் எப்போது செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு விளக்கிச் சொன்னவன், “இதுல ஒன்னு மிஸ் ஆனாலும், நீ இந்த உலகத்தை விட்டு மிஸ் ஆகிடுவ! என்னைப் பத்தி தெரியும்ல..?” எனவும்,
கையெடுத்து கும்பிடு போட்டவன், விட்டால் போதுமென்று ஓடி விட்டான்.
விபத்து நடந்த அன்று காலை, வேண்டுமென்றே திவ்யபாரதிக்கு தந்த இட்லி சாம்பாரில் தூக்க மாத்திரை கலந்திருந்தான். அவள் செழியனையும் சாப்பிடச் சொல்லவும், உஷாராக சட்னி மட்டும் எடுத்துக் கொண்டான்.
திவ்ய பாரதி கண்டிப்பாக இந்தத் திட்டத்துக்கு ஒத்துழைக்க மாட்டாள் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இதைச் செய்திருந்தான் செழியன்.
வேனில் ஏறியதும் திவ்யபாரதி தூங்கிவிட, மந்திரி திட்டமிட்டிருந்த வழக்கமான பாதையை மாற்றி மலைப்பாதையில் வேனை திருப்பச் சொன்னான்.
எல்லாம் செழியனின் திட்டப்படி பக்காவாக நடக்க, ஹென்றி ப்ரதர்ஸை செழியன் குறிப்பிட்ட அந்த மலைப் பாதைகளின் சந்திப்பிலிருந்து சற்று தூரத்தில் சண்டையிட வைத்திருந்தான், கார்த்தி.
வேன் நின்றதும், தூரத்தில் லாரி டிரைவரிடம்.. தன் போனிலிருந்து சிக்னல் கொடுத்தான், செழியன். சிக்னல் கிடைத்ததும் பின்னால் வந்த ஜீப்பை, அதிக ஹாரன் கொடுத்து வழிவிடச் செய்து, ஓவர் டேக் செய்தபடி முன்னால் வந்தான், அந்த லாரி டிரைவர்.
இதற்குள் ‘ஹென்றி &கோ’ வை விட்டுவிட்டு அங்கிருந்து திரும்பிய கார்த்தியும், தேவாவும் கிளைச்சாலையில் கொசு மருந்து வண்டியுடன், முகம் முழுவதும் துணி கொண்டு மூடிக் கொண்டு, பிரத்யேக கண்ணாடி அணிந்து, தயாராகக் காத்திருந்தனர்.
லாரி தூரத்தில் தெரியவும், வண்டியை வேகமாக தேவா இயக்க, கிளைச் சாலையில் இருந்து முக்கிய சாலையில் லாரிக்கும் முன்பாக வந்தவன், கொசு மருந்து என்ற பெயரில் செழியன் தந்த கண்ணீர்ப் புகையை வீசிக்கொண்டு, லாரியை தாண்டிக் கொண்டு சென்றான்.
திவ்யபாரதி இருந்த வாகனத்தின் அருகில் வரவும், தேவா வண்டியை மெதுவாக இயக்க, நொடியில் வண்டியின் பின் பக்கத்தை திறந்து கொண்டு, குதித்து இறங்கி இருந்தான், கார்த்தி. அதே வேகத்தில் தானும் முகத்தை மூடியிருந்த செழியன், தன்னவளை கையில் தாங்கி தேவாவின் வேனுக்குள் மாற்றி இருந்தான். ஞாபகமாக ஜெர்கினுக்குள் இருந்த கைவிலங்கின் சாவியையும், வேனுக்குள் தூக்கி எறிந்தான்.
சண்டையிடுவது போல் நடித்துக் கொண்டிருந்த ஹென்றியும், அவன் நண்பர்களும், திவ்யபாரதி இருந்த வேனுக்குள் பாய்ந்து ஏறிக்கொண்டனர். அவர்களுக்கு கார்த்தியின் சன்னமான சொடக்கு சத்தம் போதுமாக இருந்தது, கட்டளைகளைப் புரிந்து கொள்ள. எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்கும் போர் வீரர்களாய், ஒவ்வொருவரையும் தயார் படுத்தி வைத்திருந்தான், கார்த்தி.
இத்தனையும் நொடியில் நடந்து முடிந்திருக்க, அதிக புகையை கக்கிக்கொண்டே, தேவா திவ்யபாரதியுடன் கடந்து சென்று விட்டான்.
அதே வேகத்தில் முட்டிவரை நீண்ட தன் ஜெர்கினுக்குள் இடுப்பில் சுற்றி இருந்த கயிற்றின் ஒரு முனையை கார்த்தியிடம் தூக்கிப்போட்ட செழியன், அதை அவன் லாவகமாகப் பிடித்து, தன் இடுப்போடு சேர்த்து கைகளிளும் சுத்திக் கொண்ட மறுநொடி, யோசிக்காமல் பள்ளத்தில் பாய்ந்திருந்தான்.
அவன் குதித்த வேகத்தில் கார்த்தி முன்னோக்கி இழுபட, தன் ஒற்றைக் காலை தடுப்பு சுவரில் மிதித்து தன்னை சமன் படுத்திக் கொண்டான், அந்த கிரேக்க வீரன்.
இரவோடு இரவாக செழியன் பார்த்து திட்டமிட்டிருந்த இடம் தான். இருந்தாலும், குதித்த வேகத்தில் அடி கொஞ்சம் பலமாகவே பட்டிருந்தது. நினைத்த படி மரக்கிளையை தாவிப் பிடித்துக் கொண்ட செழியன், கயிற்றை இழுத்து கார்த்திக்கு சிக்னல் தர, செழியன் பாதுகாப்பாக லேண்ட் ஆகியதை, நிம்மதிப் பெருமூச்சுடன் உணர்ந்துகொண்ட கார்த்தி, தான் பிடித்திருந்த கயிற்றின் முனையை தூக்கி பள்ளத்தில் விட்டவன், அடுத்த நொடி மரங்களுக்கிடையே மாயமாகினான்.
இது கரணம் தப்பினால் மரணம் தான். ஆனால், போலீஸ் ட்ரைனிங்கில் அவர்கள் எடுத்த பயிற்சியும், தெளிவான திட்டமிடலும் இதை சாத்தியமாக்கி இருந்தது.
அதுவும் களம் இறங்கியது இரண்டும் சிங்கங்கள் அல்லவா? அதனால் நொடியில் வெற்றிகரமாக இதை சாதித்திருந்தார்கள்.
லாரி டிரைவரும் செழியன் உத்தரவுப் படி, புகை தாக்காமல் இருக்க, அதே பிரத்யேக கண்ணாடியும், முக மூடியும் அணிந்திருந்தவன், செழியன் குதித்த அதே நொடி வேனை இடித்து பள்ளத்தில் தள்ளி இருந்தான். அதோடு கூட, செழியன் இட்ட இன்னொரு கட்டளை, ராகவனை அடித்துத் தூக்க வேண்டும். ஆனால், உயிர் போகக் கூடாது. ராகவன் கூட வேறு யாரும் நின்றிருந்தால் எதுவும் செய்ய வேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தான்.