அத்தியாயம் – 22

திவ்யபாரதி பயணித்த வாகனம், தகுந்த பாதுகாப்புடன் அந்த மலைப்பாதையில் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது.  வேனில் ஏறியதுமே, திவ்யபாரதியோ தூங்க ஆரம்பித்துவிட்டாள். இவ்வளவு மன உளைச்சலிலும், நிர்ச்சலனமின்றி தூங்குபவளை மௌனமாகப் பார்த்திருந்தான், செழியன்.

இத்தனை வருடங்களாக மனதில் அடைத்து வைத்திருந்த சுமைகளை எல்லாம் இறக்கி வைத்தவள் நிம்மதியாக தூங்கிவிட, தன்னவள்  அடைந்த துன்பங்களை கேட்டவன், தூக்கத்தை இழந்து தவித்தான்.

ரெஜினா கூட… இத்தனை பேரிரைச்சலிலும் சலனமின்றி தூங்குபவளை, கவலையுடன் தான் பார்த்திருந்தாள்.  அவர்கள் சென்று கொன்டிருந்த வாகனம் திடீரென ஒரு பெரிய குலுக்கலுடன் நின்றது. அந்த சத்தத்திற்குக் கூட திவ்யபாரதி அசைந்தாளில்லை.

அதில் கவலையுற்ற ரெஜினா, செழியனை கலவரத்துடன் ஏறிட்டுப் பார்த்தாள். அவள் பார்வை உணர்ந்து செழியனும் விழிகளை மூடித்திறக்க, அதன் பின் செழியன் பார்த்துக் கொள்வான் என அமைதியாகி விட்டாள்.

வேன் இன்னும் கிளம்பாமல் நிற்கவும், சற்று பொறுத்துப் பார்த்த செழியன்,

“என்னாச்சி கோவிந்தன், ஏதும் ப்ராப்ளமா?” என்று முன் பக்கம் இருந்த டிரைவரிடம் கேட்க..

“ஒன்னும் இல்ல சார். திடீர்னு நாய்ங்க குறுக்க வந்துருச்சி, இப்போ எடுத்துரலாம்.”  என்றார் டிரைவர் கோவிந்தன்.

“ஒகே ஓகே மூவ் ஆன்” என்று கட்டளையிட்டவனிடம், “எங்க சார்!  ஹார்ன் குடுத்தும் வழி விடாம, மூர்க்கமா சண்டை போட்டுட்டு இருக்குங்க, போகணும்னா… அதுங்க மேல ஏத்திட்டுதான் போகணும்.” என்றார்.

செழியன் ரெஜினாவைப் பார்க்க, “நான் இறங்கி என்னன்னு பார்க்கறேன் சார்.” என்று கட்டை விரலை தூக்கிக் காட்டியபடி வேனிலிருந்து இறங்கி இருந்தாள்.

செழியனின் பார்வை புரிந்து, அவளுடனே கூட இருந்த மற்ற காவலர் இருவரும் ரெஜினாவின் பாதுகாப்புக்காக இறங்கிச் சென்றனர்.

முன்னால் சென்ற ராகவனின் ஜீப், இவர்கள் பின் தொடர்வார்கள் என்று சிறிது தூரம் கடந்து சென்றிருந்தது.  சிறிது தூரம் சென்றதுமே பின்னால் வேன் வரவில்லை என்று கவனித்து செழியனை தொடர்பு கொள்ள, இங்கே நடக்கும் விவரத்தை சொன்னவன், “அங்கேயே காத்திருங்கள் சிறிது நேரத்தில் வந்துவிடுவோம்.” என்று சொல்லி விட்டு  வைத்திருந்தான்.

பின்னால் தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஜீப் எங்கே என்று செழியன் நோட்டம் விட, நல்லவேளையாக சற்று தொலைவில் வந்து கொண்டிருந்தது.

ஆசுவாசப் பெருமூச்சு விட்ட செழியன், நாய்கள் சென்றுவிட்டதா என்று விண்டோ வழியாக எட்டிப்பார்க்க, அதுவோ இன்னும் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தது. சண்டை இப்போது முடிவுக்கு வரும் போல் தோன்றவில்லை. அவ்வளவு ஆக்ரோஷமாக ஒன்றை ஒன்று தாக்கிக் கொண்டிருந்தன. அதுவும் வேனின் முன்பு வழி மறித்தார்போல் நின்று குரைத்துக் கொண்டிருந்தன.

அதைப்பார்த்த செழியன், டிரைவர் கோவிந்தனிடம்,  அது இரு வழிச் சாலைகளின் சந்திப்பாக இருப்பதனால், கடந்து செல்லும் மற்ற வாகனங்களுக்கு இடையூறு இல்லாமல் முடிந்தளவு ஓரம் கட்டி நிற்கச் சொன்னான்.

ஏனெனில் நாய்கள் வேனின் முன்புதான் நின்றிருப்பதால், மற்ற வாகனங்கள் செல்ல வேண்டும் என்றாலும், செல்ல ஏதுவாக வழிவிடச் சொன்னான்.

இதற்கிடையில் திவ்ய பாரதி வந்து கொண்டிருந்த வாகனம் திடீரென நின்று விட்டதில், எங்கே தாங்கள் போட்ட திட்டம் பாழாகிவிடுமோ என்ற பதட்டத்தில் இருந்த ராகவன், டிரைவரிடம் ரிவர்ஸ் எடுக்கச் சொல்லி, செழியன் இருக்குமிடம் வந்து சேர்ந்திருந்தார்.

அங்கே வேன் ஓரம் கட்டி நின்று கொண்டிருக்க, அந்த வேன் முன்பு நின்று நாய்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. வலது பக்கம் கொஞ்சம் இடமிருந்தாலும், அந்த நாய்களை மீறி வேனை ஒடித்து பாதைக்கு திருப்புவது கடினம், எப்போது நாய் குறுக்கே பாயும் என்று சொல்ல முடியாது.

மந்திரியிடம் யார் வாங்கிக் கட்டிக் கொள்வது என்ற பயத்தில் ஜீப்பிலிருந்து இறங்கிய ராகவன், கான்ஸ்டபிள் கையில் இருந்த லத்தியை வாங்கி, நாயை விரட்டுவதில் மும்முறமாக இறங்க, அவை அவர் மேலும் பாய்வது போல் போகவும், சுத்தி நின்றிருந்த அத்தனை பேரும் பயத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

திவ்யபாரதி தூங்கிக் கொண்டிருப்பதால், செழியன் வேனிலிருந்து இறங்காமல், அவளுக்குப் பாதுகாப்பாக  உள்ளேயே அமர்ந்து இருந்தான்.

அப்போது, பின்னால் பாதுகாப்புக்காக வந்து கொண்டிருந்த ஜீப்பை ஓவர் டேக் செய்து பின்னுக்குத் தள்ளிவிட்டு, அதிவேகமாக அந்த கனரக வாகனம், முன்னேறி வந்து கொண்டிருந்தது.

கிளைச்சாலையிலிருந்து வேகமாக வந்த மற்றொரு வாகனம் ஒன்று, இடையில் புகுந்து, சரியாக அந்தச் சாலையின் சந்திப்பில், அந்த கனரக வாகனத்தையும் முந்திக் கொண்டு முன்னால் வர,  அது வரும் முன்பே அதிலிருந்து பரவிய கொசு மருந்துப் புகை, அந்தச் சாலை முழுவதையும் இருட்டாக்கி இருந்தது.

திடீரென சாலை இருட்டானதில், கண்ணுக்கு ஒன்றும் புலப்படாமல், என்ன நடக்கிறது என்றும் புரிந்துகொள்ள முடியாமல் கண்களை கசக்கி கொண்டிருந்த அனைவரையும் அந்த வாகனம் கடக்கவும், பின்னால் ‘டொம்’ என்று கேட்ட சத்தம் அனைவரின் காதையும் பிளந்தது..

யாரும் யாருக்கும் கண்ணுக்கு புலப்படாத வகையில் ஒரே புகை மூட்டமாக இருக்க, திடீரென கேட்ட ‘டொம்..ம்’ என்ற சத்தத்தில், அனைவரும் பதறி முழிக்க, இருந்த புகை மூட்டத்தில், அருகில் இருப்பவர் கூட ஒருவர் கண்ணுக்கும் புலப்படவில்லை. கண் எரிச்சல் வேறு அவர்களை கண்களை திறக்கவும் விடவில்லை.

சிறிது நேரத்தில் புகை மூட்டம் குறையவும், அனைவரும் சத்தம் வந்த திசையில் திரும்பிப் பார்க்க, அவர்கள் கண்டது என்னவோ, திவ்யபாரதியும், செழியனும் இருந்த வேன், மலைப்பாதையில் இருந்து தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு, அந்த கிடு கிடு பள்ளத்தில் உருண்டு விழுவதையும்… தூரத்தில் சரக்கு லாரி ஒன்று நிற்காமல் அதிவேகமாகச் செல்வதையும் தான்.

உயர்ந்து வளர்ந்த மரங்களும், உயரமான மலைக் குன்றுகளும் நிறைந்த பள்ளத்தில் உருண்டு விழுந்த வேன், எதன் மீதோ மோதி தீப்பிடித்துக் கொண்டு, மேலும் மேலும் கீழே சென்று கொண்டிருந்தது.

 பார்த்திருந்த அனைவரும் ஆளுக்கொரு பக்கம் கத்த, அதற்குள் பின்னால் வந்துகொண்டிருந்த காவல் ஜீப்பும் அவ்விடம் வந்து சேர்ந்திருந்தது. முன்னால் லாரி ஒன்று மறைத்தபடி சென்று கொண்டிருந்ததில், அவர்களுக்கும் நடந்தது என்னவென்று புரியவில்லை.

அந்த குறுகிய மலைப்பாதையில், லாரியை தாண்டிக் கொண்டு முன்னால் வர முடியவில்லை என்பதைவிட, அந்த லாரி டிரைவர் அதற்கு ஒத்துழைத்திருக்கவில்லை. சாலையின் இருட்டும் புகைமூட்டமும் வேறு, அவர்களையும் செயல் இழக்கச் செய்திருந்தது.

கண் மூடி கண் திறக்கும் நேரத்தில் கண்ட காட்சியில், அனைவரும் ஆளுக்கொரு பக்கம் அலற, செய்வதறியாமல் திகைத்து நின்றிருந்தனர்.

நடந்த கலவரத்தில் சண்டையிட்ட நாய்கள் அனைத்தும் எங்கோ ஓடியிருக்க, அங்கு சாலையோரம் அடிபட்டு தூக்கி  வீசப்பட்டிருந்த ராகவனை, ஒருவரும் கவனித்திருக்கவில்லை.

அனைவரும் ஒதுங்கி நின்றிருந்த நேரத்தில், அவர் மட்டுமே ரோட்டின் நடுவில் நின்று நாயை விரட்டிக் கொண்டிருக்க, செழியனும், திவ்ய பாரதியும் இருந்த போலீஸ் வேனை இடித்துத் தள்ளிய அந்த கனரக வாகனம், ராகவனையும் அடித்து தூக்கி வீசிச் சென்றிருந்தது.

அனைவருக்கும் முன் சுதாரித்த ரெஜினா, அப்போது தான் பலமாக அடிபட்டு சாலையோரம் கிடந்த ராகவனைப் பார்த்தாள். ஓடிச்சென்று அவரின் நிலை அறிய, நல்ல வேளையாக மூச்சு இருந்தது.

உடனே ஆம்புலன்சுக்கு போன் செய்து வரச்சொன்ன ரெஜினா, உயர் அதிகாரிகளுக்கும் இந்தக் கொடூரச் சம்பவத்தைப் பற்றிய தகவலை தெரிவித்தாள்.

ஆம்புலன்ஸ் வந்ததும், ராகவனை அதில் ஏற்றி அருகிலிருந்த மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் உயிருக்கு ஏதும் ஆபத்து இல்லையென்றாலும், கால்களில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதிலும், தூக்கி வீசப்பட்டதிலும் பலத்த அடிபட்டிருந்தார்.

கீழே விழுந்தவர்கள் நிலை என்னவானது என்று தெரியாத நிலையில், தீயணைப்பு படை வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் வந்து பார்த்துவிட்டு இது மிகவும் ஆழமான பள்ளம் ஆகையால், மீட்க வாய்ப்பே இல்லை என்று விட்டனர்.

DGP ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு நேரிலேயே வந்துவிட்டார். அவருக்கும் முன்பே பத்திரிக்கை மற்றும் மீடியா காரர்கள் வந்து அந்தச் செய்தியை, அன்றைய  ஹாட் நியூஸ் ஆக்கிக் கொண்டிருந்தனர்.

எவ்வளவு முயற்சி செய்தும், வேன் இருக்கும் இடத்தைக் கூட கண்டறிய முடியவில்லை. ஒரு பக்கம் செழியனின் போன் சிக்னலை வைத்தும் முயற்சி செய்து கொண்டிருந்தனர். அதுவும் அதன் சிக்னலை நிறுத்தி இருந்தது.

செழியனின் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட, பதறி அடித்து ஓடி வந்தவர், அலறித் துடித்து, கனத்த மனதுடன் தன் நண்பன் ராஜேந்திரனின் தோளில் சாய்ந்து கொண்டார். அதையும் படம் பிடித்த மீடியா, திரும்ப திரும்ப போட்டுக் காண்பித்து, அந்தச் செய்தியை வைரல் ஆக்கிக்கொண்டிருந்தது.

செழியன் செய்த வீரதீர பராக்கிரம செய்திகள் மாற்றி மாற்றி ஒளிபரப்பப் பட, செழியனுக்காக நாடே கண்ணீர் வடித்தது.

அனைத்து பத்திரிக்கை டிவி மட்டும் மீடியாக்களிலும், இது தொடர்பான செய்திகளே மாறி மாறி ஒளிபரப்பப்பட்டது.

“தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதி, மத்திய சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லும் வழியில், விபத்து ஏற்பட்டு மரணம். பாதுகாப்புக்கு உடன் சென்ற காவல் துறை உயர் அதிகாரி செழியனும் மரணம். கோர்ட்டில் வைத்தே திவ்ய பாரதியை கொலை செய்து விடுவதாக மிரட்டிய மந்திரியின் மேல், சந்தேகம் வலுத்துள்ளது.”

நாட்டின் அனைத்து டிவி, பத்திரிக்கை மற்றும் சோசியல் மீடியாவிலும், இதுதான் செய்தியாக இருந்தது.

செழியனின் செல்போன் சிக்னலை வைத்து ஆராய்ந்ததிலும், ஏதும் முன்னேற்றம் இல்லாமல் போகவும், மாலை 4 மணி வரை முயன்று பார்த்தவர்கள், அனைத்து வழிகளும் அடைப்பட்ட நிலையில், இருவரும் இறந்து விட்டதாக அதிகாரப் பூர்வமாக செய்தியாளரிடம் அறிவித்துக் கொண்டிருந்தார், DGP ராஜேந்திரன்.

ஓடி வந்த காவலர் ஒருவர், “சார், செழியன் சார் போன்லருந்து சிக்னல் கிடைச்சிருக்கு.” என்று DGP ராஜேந்திரனிடம் மூச்சிறைக்க வந்து தெரிவித்தார்.

அந்த செய்தி கேட்டு அனைவரும் பரபரப்பாக, மீண்டும் ஒரு தேடுதல் வேட்டை ஆரம்பம் ஆனது.

செல்போன் சிக்னல் மிக அருகில் காட்ட, ட்ரோன் கேமரா மூலம் தேடியதில்..

அந்த பள்ளத்தாக்கின் அருகாமையில் நீண்டு வளர்ந்து இருந்த மரக் கிளை ஒன்றில்  செழியன், அணிந்திருந்த நீண்ட ஜெர்கின் மாட்டி இருக்க, மயங்கிய நிலையில் செழியன் கண்டுபிடிக்கப் பட்டான். கிளைகள் அடர்த்தியாக இருந்ததால், காலையில் சரியாக புலப்படவில்லை. அதிர்ஷ்டம் செழியன் பக்கம் இருந்ததால், காற்றில் விலகி இருந்த கிளைகளுக்கு இடையே கண்டுபிடிக்கப் பட்டான்.

மேலும் சுத்தி சுத்தி தேட, திவ்யபாரதி இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. மேலும் கால தாமதம் செய்யாமல், ஹெலிகாப்டர் துணையுடன் செழியன் மீட்டெடுக்கப் பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டான்.

கடைசி நொடியில் லாரி இடிக்க வருவதை கவனித்த செழியன், வேனில் இருந்து குதித்திருந்தான். இருந்தும் அதற்கு முன்பே லாரி இடித்து விட்டதால், வேனிலிருந்து தூக்கி வீசப்பட்டு மரக்கிளையில் மாட்டி, உயிர் பிழைத்திருந்தான்.

திவ்யபாரதி தூங்கிக் கொண்டிருந்ததாலும், அவள் கைகளில் விலங்கு பூட்டப் பட்டிருந்ததாலும், தப்பிக்க முடியாமல், வேனுடன் சேர்ந்து எரிந்து சாம்பலாகி இருந்தாள்.

செழியன் மட்டும் காப்பாற்றப் பட்ட  செய்தியே தொடர்ந்து அணைத்து சேனல்களிலும் திரும்ப திரும்ப ஒளிபரப்பப் பட,

அதைத் தொடர்ந்து வந்த செய்திகளில், ‘மயக்கம் தெளிந்து எழுந்த செழியனின் வாக்குமூலத்தின் படி, லாரி நம்பரை வைத்து அந்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டிருக்க, அடுத்த சில மணி நேரங்களில், லாரி டிரைவரின் ஒப்புதல் வாக்குமூலத்தை வைத்து, திவ்ய பாரதியை லாரி ஏற்றி கொலை செய்த குற்றத்திற்காக, அந்த மத்திய மந்திரி கைது செய்யப் பட்டிருந்தார்.