திவ்யபாரதி தூங்கியதும், எத்தனையோ வேலைகள் இருந்தாலும், அது அத்தனையும் தூக்கிப்போட்டுவிட்டு, இன்று ஒரு நாளாவது தன்னவளுக்கு நிம்மதியான தூக்கத்தை தந்துவிட வேண்டும் என்று இம்மியளவும் அசையாமல் அமர்ந்திருந்தான், செழியன்.
இன்றைய விடியல் பொழுதை நினைத்து தூக்கமும் வராமல் உழன்றவன், அவ்வப்போது திவ்ய பாரதி தூக்கத்தை கலைக்காத வகையில், ஃபோன் மட்டும் பேசிக் கொண்டிருந்தான். திவ்யபாரதியை தகுந்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல வேண்டுமே.. என்ற எண்ணங்கள் அவனை தூங்கவிடவில்லை.
மறுநாள் விடிந்ததுமே திவ்யபாரதி கண்விழித்தது என்னவோ செழியனின் முகத்தில் தான்.
நிமிர்ந்து செழியனைப் பார்த்த திவ்யபாரதி, அவன் பொட்டுக்கூட உறங்கவில்லை என்பதை, அவன் சிவந்த விழிகளை வைத்து கண்டு கொண்டாள்.
திவ்யபாரதிக்கோ, செழியன் அருகில் இருக்கும் நினைவல்லவா இரவு நிம்மதியான உறக்கத்தை தந்திருந்தது. எத்தனையோ இரவுகள் பயத்தில் கழிந்திருக்கிறது. திடுக்கென்று முழித்து அலறிய நாட்கள் தான் எத்தனை? அவள் வளர்ந்த இல்லத்தில் கூட, இதற்காக திட்டும் வாங்கி இருக்கிறாள்.
ஆனால், நேற்றைய இரவு செழியன் அருகில் இருப்பதாலோ, இல்லை, அந்த காவலன் ஆட்கொண்ட ஆடைகளோ ஏதோ ஒன்று அவளுக்கு நிம்மதியை மீட்டு தந்திருந்தது. ஒரு அந்நிய ஆடவன் தன்னுடன் இருக்கிறான் என்ற நினைப்பு அவளுக்கு சுத்தமாக எழவில்லை. அதை நினைத்து திவ்யபாரதிக்கே ஆச்சரியம் தான். அவளுக்கே தெரியாமல் இதயத்தில் நங்கூரமிட்டு அமர்ந்திருந்தான், செழியன்.
அதன் விளைவாக செழியனின் அருகாமையில் பாதுகாப்பை மட்டுமே அவள் ஆழ்மனம் உணர்ந்திருக்கிறது. ஒன்றும் பேசாமல் டீயை கையில் வாங்கிக் கொண்ட திவ்யபாரதி, அனைத்தையும் யோசித்துக்கொண்டே டீயை பருகி முடித்திருந்தாள். அவனும் டீயை குடித்து முடித்தவன், தன்னுடைய கப்புடன் சேர்த்து, திவ்யபாரதியின் கப்பையும் சேர்த்து வாங்கிக் கொண்டான்.
தன் ஒற்றைச் சொல்லுக்கு, சேவை செய்ய அத்தனை காவலர்கள் இருக்க, திவ்யபாரதிக்கு.. தானே பார்த்துப் பார்த்து அத்தனையும் செய்தான்.
தன்னுடைய மரியாதை, கவுரவம் எல்லாம் தன்னவள் முன்பு தூசுதான் என்பதாக இருந்தது, அவன் நடவடிக்கை.
காலியான கப்பை எடுத்துக்கொண்டு வெளியேறிய செழியன், “இங்க எனக்கு தனி அறை இருக்கு பாப்பு! அங்கேயே ப்ரஷ்-அப் ஆகு, நான் வீடு வரைக்கும் போய்ட்டு வந்திடுறேன்.” என்று சொல்லி விடைபெற்றுச் சென்றான்.
அவன் சென்றதும், சிறிது நேரத்தில் உள்ளே வந்த பெண் காவலர் ஒருவர், “அம்மா! சார் உங்களை அவரோட ரூமுக்கு அழைச்சிட்டு போகச் சொன்னாங்க, வாங்கம்மா போகலாம்.” என்று அழைக்கவும்,
“சரி” என்று எழுந்தவள், ஒன்றும் பேசாமல் அந்தப் பெண்ணுடன் சென்றாள்.
நேற்றே இயற்கை உபாதைக்காக போலீஸ் ஸ்டேஷன் கழிவறைக்குச் சென்றவளுக்கு, வாந்தி வராதது ஒன்று தான் குறை. அப்போது செழியன் ஸ்டேசனில் இல்லை, வெளியில் சென்றிருந்தான். இல்லையென்றால், கண்டிப்பாக அங்கு அனுமதித்திருக்க மாட்டான் என்று புரிந்து கொண்டாள்.
அந்தப் பெண் காவலர், செழியனின் அறையை திறந்து விட்டு விட்டு சென்று விட்டார். எங்கே… தான் அழைத்தால் வரத் தயங்குவாளோ என்று தான், அந்தப் பெண் காவலரிடம் அந்தப் பணியை ஒப்படைத்துச் சென்றிருந்தான், செழியன்.
இயற்கை கடன்களை முடித்து விட்டு, முகம் கழுவி வரலாம் என்று சென்றவள், சுற்றி முற்றிப் பார்க்க, செழியனைப் போல், அந்த அறையும் அவ்வளவு நீட்டாக இருந்தது.
ஹேங்கரில் செழியன் கழட்டிப் போட்ட யூனிஃபார்ம் ஒன்று தொங்கிக் கொண்டிருக்க…
அதன் அருகில் சென்றவள், தன்னியல்பாக கை நீட்டி வருடப் போனாள். பின் என்ன நினைத்தாளோ, சட்டென்று கையை இழுத்துக்கொண்டவள், தலையை உலுக்கிக் கொண்டு, அந்த ஒற்றை அறையில் இருந்த ரெஸ்ட் ரூமைத் தேடி, உள்ளே சென்றாள்.
முகம் கழுவ வாஷ் பேசினை தேடியவளின் கண்களில், அருகில் இருந்த செல்ஃபில் ஆகாய வண்ணக் கலரில் புத்தம் புதிய பெண்கள் அணியும் ஜீன் ஒன்றும், அதற்கேற்ற வெள்ளை நிறத்தில் குர்த்தி ஒன்றும் தேவையான உள்ளாடைகளோடு தயாராக இருக்க, ஆராய்ச்சியாக சுத்தி முத்திப் பார்த்தவளுக்கு, புது சோப்பிலிருந்து பேஸ்ட், பிரஷ், டவல் வரை அனைத்தும் புதிதாக இருப்பது கண்னில் பட்டது. எல்லாம் தனக்காகத்தான் வாங்கி வைத்திருக்கிறான் என்று புரிந்துகொண்டாள்.
தான் குளித்துக் கிளம்ப தேவையான அனைத்துப் பொருட்களும் தயாராக இருப்பதைப் பார்த்த திவ்ய பாரதிக்கு, அவனுக்கு இருக்கும் இத்தனை வேலைகளுக்கு நடுவிலும், தனக்காக பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் செய்தவனின் அன்பில் மூச்சு முட்டியது.
தன்னவள் தன்னோடு கூட இருந்தால் எப்படி இருந்திருப்பாளோ, அப்படியே உணர வைத்திருந்தான் செழியன்.
சிறையில் அடைபட்டிருந்தாலும், ஒவ்வொரு நொடியும் அவளை தேவதையாக உணர வைத்துக் கொண்டிருப்பவனின் மேல் காதல் கரை புரண்டோட, தவித்துத்தான் போனாள், திவ்யபாரதி.
அவள் கைதானதிலிருந்து, ஓயாமல் ஓடிக் கொண்டு இருக்கிறான் என்று அறிவாள். அவன் சிவந்து குவிந்த கண்களே கூறியது, ‘நான் ஓய்ந்து கொண்டிருக்கிறேன், எனக்கு சற்று ஓய்வு கொடுவென்று.’
இத்தனை சிரமத்திலும், எப்போது இதையெல்லாம் வாங்கி வந்தான் என்று நினைத்து, மறுகி நின்றாள்.
உறங்கிக் கொண்டிருந்த திவ்யபாரதிக்குத் தெரியாதே! போலீஸ் வழக்கமாக மிரட்டி மாமூல்தான் கேட்பார்கள். ஆனால் செழியனோ, தன்னோடு கூடப் படித்த நண்பனை மிரட்டி, இரவோடு இரவாக துணிக்கடையை அல்லவா ஸ்டேஷனுக்கு வர வைத்திருந்தான்.
செழியனின் இத்தகையை காதலுக்கு, தான் என்ன கைமாறு செய்து விட முடியும் என்று நினைத்தவளுக்கு, கண்களில் வழிந்த கண்ணீரே பதிலாக நின்றது.
எதற்கும் கலங்காமல் தன்னை புடம் போட்டுக் கொள்பவள், முதன் முறையாக செழியனின் காதல் முன்பு கலங்கி நின்றாள். அங்கே இருக்க இருக்க, தான் பலவீனப்படுவதை உணர்ந்து, விரைவாக குளித்து முடித்து வெளியில் வந்தாள்.
இதுவரை கண்ணாடியில் ஒரு நொடி கூட தன்னை இரசித்துப் பார்த்திராதவள், செழியன் எடுத்து கொடுத்த உடையில் தன்னையே இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆங்காங்கே சிறு சிறு பூக்களுடன், பகட்டில்லாமல் இருந்த வெள்ளை குர்த்தியில், மரியாதையான தோற்றத்துடன் கம்பீரமாய் தெரிந்தாள், திவ்யபாரதி.
அலை அலையாய் அடர்ந்த கேசம், பணியின் காரணமாக எப்போதும் வெயிலில் சுற்றுவதால், சற்றே செம்மை நிறம் கொண்டிருந்தது. எட்டியே நில் என்று எச்சரிக்கும் பெரிய நீண்ட அழகிய கண்களில், கிட்ட வராதே முட்டி விடுவேன் என்ற எச்சரிக்கை. வலது புருவத்தின் கீழ், கடுகளவு மச்சம் கூடுதல் அழகை அள்ளித் தந்தது. கூர் நாசியும், சுவைக்கா செவ்விதழும்.. நான் புதைத்து வைத்த பொக்கிஷம் என்று பறைசாற்றியது.
எப்போதும் தன் அழகை வெளிப்படுத்திக் காட்ட விரும்பாதவள், தான் பார்க்கும் பணிக்கு இலகுவாக ஜீன், குர்த்தி அணிவதையே வழக்கமாக்கிக் கொண்டாள். செழியனும் அதை மனதில் கொண்டு தான், ஜீன் குர்த்தி எடுத்திருக்க வேண்டும் என்று புரிந்துகொண்டாள்.
தன்னை எந்த அளவுக்கு கவனித்திருக்கிறான் என்ற நினைப்பே.. திவ்யபாரதியை புயலெனத் தாக்க, முதல் முறையாக நாணம் கொண்டவளின் கன்னங்கள், ரோஜா நிறம் பூசிக்கொண்டது.
இந்தக் காட்சியை மட்டும் செழியன் பார்த்திருந்தால், தன்னை மீட்டுக்கொள்ளவே அரும்பாடு பட்டிருப்பான். நல்ல வேளையாக, கடவுள் அந்தச் சோதனையை அவனுக்குத் தரவில்லை.
ஒரு சில நொடியே ஆனாலும், கண்ணாடியில் தன்னை இரசித்துப் பார்த்த திவ்யபாரதி, தன் மனம் போகும் பாதை பிடிக்காதவளாய், அந்த அறையிலிருந்து வேகமாக வெளியே வரவும், எங்கிருந்தோ வந்த அந்தப் பெண் காவலர், மீண்டும் அறையை பூட்டி விட்டு, திவ்ய பாரதியை அழைத்துச் சென்றார்.
திவ்ய பாரதி ஸ்டேஷனுக்குள் நுழையும் போது, ஏற்கனவே செழியன் வந்து அமர்ந்திருந்தான். அன்று திவ்யபாரதியை ஒப்படைப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்த அவனின் உள்ளுணர்வு உந்த, நிமிர்ந்து பார்த்தவனின் கண்களில் விழுந்தாள், அவன் தேவதை.
எப்போதும் சிங்கமாய் ஜொலிப்பவள், அவன் எடுத்துக் கொடுத்த ஆடையில், இன்று சீறும் சிங்கமாய் நடந்து உள்ளே வந்து கொண்டிருந்தாள்.
அவள் மறைத்து வைத்த அழகை விட, அவள் வெளிக்காட்டிய கம்பீரத்தில் விழுந்தவன் தான், செழியன். இன்றும் நிமிர்ந்த நன்நடையில் பாரதி கண்ட பாரதியாக வருபவளை இமைக்காமல் பார்த்து வைத்தவன், தான் எடுத்துக் கொடுத்த ஆடைகள் கட்சிதமாகப் பொருந்தியிருப்பதையும் அளவெடுத்துக் கொண்டான். தன் லேசர் கண்களை இரகசியமாக பாராட்டிக் கொண்டவன், மேலும் அவளுக்கு சங்கடத்தைத் தர விருப்பம் இல்லாமல், குனிந்து கொண்டான்.
கடந்து சென்ற திவ்ய பாரதியும், செழியன் திரும்பி வந்ததை அவன் பைக் வெளியில் நிற்பதை வைத்துப் புரிந்து கொண்டாள். இவ்வளவு விரைவில் திரும்பி வந்திருந்தவன் மேல், ஆச்சரியம் மிகுந்து இருந்தது. செழியனின் ஒவ்வொரு செயலிலும், அவன் காதலின் ஆழத்தை உணர்ந்து கொண்டிருந்தாள்.
அவனைக் கடந்து செல்லும் முன் சற்றே நிமிர்ந்து பார்க்க, வழக்கம் இல்லாத வழக்கமாக, காக்கி யூனிஃபார்ம் மேலாக, முட்டி வரை நீண்டு இருந்த ஜெர்கின் அணிந்திருந்தவன் மேல், ஆச்சரியமாக அவள் பார்வை படிந்தது.
எப்போதுமே நீட்டாக இருக்கும் அவன் அணிந்திருக்கும் யூனிஃபார்ம். எப்போதாவது அவன் காக்கி கால்சராய்க்கு மேல் வொய்ட் டீ சர்ட் அல்லது ஹாஃப் ஹேண்ட் சர்ட் அணிந்திருப்பான். அந்த மாதிரி சமயங்களில் கூலர்ஸ் அணிந்து கொண்டு மீசையை வலக்கையால் முறுக்கிக்கொண்டு, அவன் நடக்கும் நடைக்கே திவ்ய பாரதி அடிமை.
அவள் மட்டுமா, கடந்து செல்லும் பெண்கள் அவனை ஒரு கணமெனும் நிமிர்ந்து பார்க்காமல் இருக்க முடியாது. அப்படிப்பட்டவன், இன்று அணிந்திருந்த நீண்ட ஜெர்க்கின், இதுவரை அவன் அணிந்து திவ்யபாரதி பார்த்ததில்லை.
இருவரின் பார்வையும் ஒருநொடி உரசிக்கொண்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் பரஸ்பரம் நலன் பரிமாறிக் கொள்ளப்பட்டது. ‘சவுகரியமாக உணர்ந்தாயா…?’ என்ற கேள்வி அவனிலும், ‘இவ்வளவு விரைவாக வந்தாயே.. உன்னை கவனித்துக் கொண்டாயா..?’ என்ற கேள்வி அவளிலும் தொக்கி நிற்க,
செழியனின் மூடித்திறந்த இமைகளில் தனக்கு தேவையான பதில் கிடைத்து விட, உதட்டில் முகிழ்த்த ஒற்றைப் புன்னகையில், தன்னை தேவதையாக உணர வைத்தவனுக்கு நன்றி சொல்லிக் கடந்திருந்தாள், செழியனின் ஜான்ஸி ராணி.
திவ்யபாரதி செல்லுக்கு வந்த ஒரு சில நிமிடங்களில் உள்ளே வந்திருந்தான், செழியன். கையிலிருந்த டிபன் பார்சலை டேபிள் மீது வைத்து பிரித்துக்கொண்டிருக்க,
“தேங்க்ஸ்” என்ற ஒற்றை வார்த்தையில் திவ்யபாரதியை நிமிர்ந்து பார்த்தான். அவள் எதற்காக நன்றி சொல்கிறாள் என்று புரிந்து,
“நவீன ஜான்ஸி ராணிக்கு, அடியேனால் முடிந்த சிறு சேவை” என்று புன்னகைத்து, நான்கு இட்லியை, பேப்பர் ப்ளேட் மேல் வைத்து நீட்டினான்.
செழியனையே இமைக்காமல் பார்த்திருந்த திவ்யபாரதி, “இதெல்லாம் நீங்க ஏன் செய்றீங்க DSP..?” என்றாள் சற்றே மெலிந்த குரலில்.
மனம் அவன் சேவையில் மகிழ்வதை ஏற்றுக்கொள்ள முடியாமல் முரண்டு பிடித்துக்கொண்டிருந்தது.
“நான் செய்யாம…” என்று கோபத்தில் உறுமியவன், அவள் முக மாறுதலைக் கண்டு, நீண்ட பெருமூச்சுடன் “உன் கூட இருக்கற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு பொக்கிஷம் பாப்பு.! நான் அதை மிஸ் பண்ண விரும்பல” என்றான் எங்கோ பார்த்துக்கொண்டு.
ஒன்றும் பேசாமல் தட்டை வாங்கிக்கொண்ட திவ்யபாரதி, இரண்டு இட்லிகளை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதி இரண்டு இட்லிகளை, மற்றொரு தட்டில் வைத்து செழியனிடம் நீட்டினாள்.
“நான் உன்னை மாதிரி இல்ல பாப்பு..” என்று தட்டை வாங்கிக் கொண்டவன், “எங்க கேட்க மாட்டியோன்னு நினைச்சேன்! செம்ம பசி..” என்று சொல்லியபடி, சாம்பார் முழுவதையும் பிரித்து திவ்யபாரதியின் தட்டில் கவிழ்த்த செழியன், தனக்கு சட்னி மட்டும் போட்டுக்கொண்டான்.
இப்படி உண்ணாமல் உறங்காமல் அலைபவனை என்ன செய்வது என்று கலங்கியவள், அவன் பசியறிந்துதான் அவனுக்கும் சேர்த்து எடுத்து வைத்திருந்தாள். தான் கூட இருக்கும் போதாவது சாப்பிடட்டும் என்று.
தட்டை கையில் வாங்கிய திவ்யபாரதி சாப்பிடாமல் இருக்க, தான் உண்ணாமல் உண்ணமாட்டாள் என்று புரிந்து, ஒரு வாய் இட்லியை பிட்டு சட்னியில் தொட்டு, திவ்யபாரதியின் வாயருகே கொண்டு சென்றான், செழியன்.
செழியனின் செயலில் திவ்யபாரதி திகைத்து விழிக்க, “எனக்கு இந்த சந்தர்ப்பம் மறுபடியும் கிடைக்காது பாப்பு….? ப்ளீஸ் எனக்காக…” என்று நீட்டியவன்,
“எனக்கு இந்த நினைவுகளாவது மிஞ்சட்டுமே!” என்றான் கலங்கிய கண்களை மறைத்துக்கொண்டு.
செழியனின் வார்த்தை, முதல் முறையாக திவ்யபாரதியின் மனதுக்குள், “இவனுடன் ஒரு நாளாவது வாழ்ந்து பார்க்க மாட்டோமா..?” என்ற ஏக்கத்தை விதைத்தது.
ஒன்றும் சொல்லாமல் கிளிப்பிள்ளை போல் வாயைத் திறக்க, விரல்கள் இதழ் தீண்டாமல் ஊட்டிவிட்டான். (இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்).
இந்தக் காட்சி, அந்த வழியாகச் சென்ற ரெஜினா கண்ணில் பட “இவங்க சேர்ந்து வாழ்ந்தா, கவிதையா இருக்கும்.” என்று நினைத்தவள், விதியை எண்ணிப் பெருமூச்செறிந்தாள்.
இப்போது ரெஜினாவின் மனதில் எந்த கல்மிஷமும் இல்லை. அவர்களின் ஆழமான காதலை வியப்புடன் தான் பார்த்திருந்தாள்.
ஒருவருக்காக ஒருவர் மெனக்கெடுவதில் அவர்களின் புரிதலை உணர்ந்திருந்தாள். இன்னும் கேட்டால், செழியனின் வாழ்க்கைக்காக தன்னிடம் பேசிய திவ்ய பாரதியின் மேல், பெரும் மதிப்பும் கொண்டிருந்தாள். அவர்கள் காதல் எந்த வகையிலாவது சேருமென்றால், அதற்காக எதையும் செய்யக் கூடத் தயாராக இருந்தாள் எனலாம்.
மணி காலை பத்தை நெருங்க, வாசலில் வந்து நின்றது அந்த காவல் துறை வாகனம். திவ்யாவை பத்திரமாக மத்திய சிறையில் ஒப்படைக்க, அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்தன.
ரெஜினா திவ்யபாரதியை அழைத்து வர.. தயாராகக் காத்திருந்த செழியன், திவ்யபாரதியின் விழிகளைப் பார்த்துக்கொண்டே, தன் கைகளில் இருந்த விலங்கை திவ்யபாரதிக்கு பூட்டி, சாவியை பத்திரமாக தன் நீண்ட ஜெர்கினுக்குள் போட்டுக்கொண்டான்.
திவ்யபாரதி தயாராக இருந்த வேனில் ஏற்றப்பட, இன்ஸ்பெக்டர் ராகவனையும், செழியன் கூட வரும்படி அழைக்க, முகம் வெளிறியவர், தான் முன்னால் செல்லும் ஜீப்பில் வருவதாகச் சொல்லி தப்பித்துக்கொண்டார். இன்னும் சில காவலர்களையும் ஜீப்பில் வரச் சொல்லிவிட்டு, செழியனும் அதே வேனில் ஏறி, திவ்யபாரதி அருகில் அமர்ந்துகொண்டான்.
ரெஜினாவும் கூட வருவதாக செழியனிடம் கேட்க, சிறிது தயங்கிய செழியன் பின்னர், “சரி” என்று சொல்லவும்,
ரெஜினாவும் வேனில் ஏறிக்கொண்டவள், பாரதிக்கு எதிர் திசையில் அமர்ந்து கொண்டாள். இன்னும் இரண்டு காவலர்கள் அதே வேனில் ஏறிக்கொள்ள, திவ்யபாரதியை சுமந்து சென்ற வாகனம் நடுவில் பயணிக்க, முன்னொன்றும், பின்னொன்றுமாக ஜீப்பில் காவலர்கள் பின் தொடர, திவ்யபாரதியின் பயணம் ஆரம்பமாயிற்று.
இதே நேரத்தில், திவ்யபாரதியை ஏற்றிச்செல்ல வாகனம் வந்ததுமே, இன்ஸ்பெக்டர் ராகவனிடமிருந்து தகவல் கிடைக்கப்பெற்ற அந்த மத்திய மந்திரி, போனில் ஒரு நம்பருக்கு அழைத்தவர், ராகவன் தனக்கு அனுப்பிய ரூட்டில் தயாராக இருக்கும்படி பேசிக்கொண்டிருந்தார்.
குறிப்பிட்ட தூரம் வந்ததும், வேனை நிறுத்தச் சொல்லிய செழியன், வேன் வழக்கமாக செல்லும் பாதையை மாற்றி, மலைப்பாதையில் திருப்பச் சொன்னான்.
ராகவன் மூலம், அந்த செய்தியும் உடனுக்குடன் கிடைக்கப்பெற்ற அந்த கனரக வாகனமும், மலைப்பாதையை நோக்கித் திரும்பியது.