செழியன் DGP அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்ததுமே, பத்திரிகைக்காரர்கள் சூழ்ந்து கொண்டனர். அனைத்து பக்கங்களில் இருந்தும் கேள்விகள் எழுந்தது. ஒவொருவரும் ஒவ்வொரு கேள்வியை கேட்க.. அவன் காதில் விழுந்தது என்னவோ, அந்தக் குரல் மட்டும் தான்.
“Sir, உங்களால மட்டும் அந்தக் கொலைகாரங்களப் பிடிக்க முடியுமா? போலீஸ் தண்டிக்காம விட்ட ரவுடிங்கள, அவங்க போட்டுத் தள்ளுறதால, இது தொடருமா? மக்கள் மத்தியில் அந்தக் கொலைகளுக்கு வரவேற்பு இருக்கே. அதப்பத்தி என்ன சொல்றீங்க?” மூச்சு விடாமல் கேட்கப்பட்ட கேள்வியில்..
அந்தக் கேள்விக்குச் சொந்தக்காரியை உணர்ந்து கொண்டவன், திரும்பிப் பார்த்து முறைத்தான்.
அவன் முறைப்பை தூசியாகத் தட்டியவள், அதே மிடுக்குடன் மைக்கை பிடித்தபடி நின்றிருந்தாள்.
திரும்பி அனைவரையும் ஒரு பார்வை பார்த்த செழியன், “உங்க எல்லோருடைய கேள்விக்கும் ஒரே பதில், கூடிய சீக்கிரம் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.
சோ ப்ளீஸ்… அதுக்குள்ள குற்றவாளிய சூப்பர்மேன் ரேஞ்சுக்கு தூக்கி வச்சி எழுதறத நிறுத்துங்க. நீங்களா கற்பனை பண்ணி எழுதி, மக்கள் மனசுல தவறான எண்ணங்களை விதைக்காதீங்க. நீங்க கையில பிடிச்சி இருக்கற பேனாவுக்கும், மைக்குக்கும் தனி பவர் இருக்கு. ஒரு கடமையும் இருக்கு. அத எப்பவுமே தவறா பயன்படுத்தாதீங்க, நன்றி…!” என்று சொல்லி முடிக்கவும்,
அனைவரும் கலைந்து செல்ல, குறிப்பிட்ட பத்திரிகையின் பெயர் சொல்லி அழைத்தான், செழியன்.
அந்தக் குரலுக்குச் சொந்தக்காரி முன்னால் வர, “நீங்க தான காவல் துறை பூ பறிக்குதான்னு கேட்டு கட்டுரை எழுதினது? வந்து என்னை ஆபீஸ்ல பார்த்துட்டுப் போங்க.” என்று சொல்லி, தன் வேக நடையில் கடந்து விட்டான்.
அனைவரின் முன்னும் ஒன்றும் பேச முடியாதவள், தன் கேமராமேனும், நண்பனுமான நகுலனைப் பார்க்க,
அவனோ ‘இது தெரிஞ்ச விஷயம் தானே’ என்பது போல் அவளை நமட்டுச்சிரிப்புடன் பார்த்து, “நான் ஆபீஸ் கிளம்புறேன் பாரு. நீ அதிக சேதாரம் இல்லாம வந்து சேரு.” என்று சொல்லிச் சென்றவனை,
“நகில்… நில்லுடா.. நகில்…” என்று அவள் கூப்பிட்டது, காற்றில் கரைந்து தான் போனது.
“நகுட பாண்டியா!” என்று நண்பனை திட்டியவள், காலை தரையில் ஓங்கி மிதித்து, “இதே வேலையாப்போச்சி” என்று செழியனை வறுத்து எடுத்தாள். பின்னர் ஒரு முடிவுடன் அங்கே DSP செழியனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தனி அறையை தேடிச் சென்றாள்.
அறையின் முன் நின்று, கதவை தட்டச் சென்றவள், அதில் பொறிக்கப்பட்டிருந்த ‘செழியன்’ என்ற பெயரை யாரும் அறியாமல் விரல் கொண்டு வருடிக் கொடுத்தாள். மெல்ல இதயத்தில் வலி ஒன்று ஊடுருவிச் செல்ல, தலையை உழுக்கிக் கொண்டவள், மெலிதாக கதவைத் தட்ட,
உள்ளிருந்து “எஸ் கம்மின்.” என்ற கம்பீரமான குரலை அடுத்து உள்ளே சென்றாள்.
“வாங்க, மிஸ் பாப்பு…” என்ற அவன் அழைப்பில் முறைத்தவள்,
“சர், பிளீஸ் கால் மீ திவ்ய பாரதி” என்று சொன்னதும்,
“ஓ.. அப்போ பாப்புங்கற பெயர்ல.. ‘போட்டு தள்ளும் கொலையாளிகள், பூ பறிக்கும் போலீஸ்கள்’ ன்னு கட்டுரை எழுதினது நீங்க இல்லையா மிஸ் திவ்யா…. பாரதி..!” என்று நக்கலாகக் கேட்டவன், அவள் பெயரையும் இழுத்து ராகம் போட்டான்.
“அது என்னோட புனைப்பெயர்.” என்று அவள் முடிக்கவும், “அது என் துணைப்பெயரும் கூட” என்று அவன் முனங்க,
“what…” என்று முறைத்தவளிடம்,
“நல்ல புனைப்பெயர்னு சொல்ல வந்தேன், மிஸ் பாரதி அலைஸ் பாப்பு..” என்று தன் அக்மார்க் புன்னகையுடன் சொல்ல..
“சர், முடிஞ்சிதா, நான் கிளம்பவா?” என்று கேட்டவளிடம்,
“தாராளமா பாப்பு.. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டு நீங்க போகலாம்.” என்றான்.
மறுபடியும் அவனின் பாப்பு என்ற அழைப்பில் கடுப்பானவள் “எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிட்டேனே சர்.” என்று எரிச்சலாக உறைக்க…
“ஆஹான்…” என்றவன் “நான் ஒரு வருஷமா உன்கிட்ட கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரல பாப்பு..” என்ற குரல் அவளுக்கு மிக அருகில் கேட்டது.
‘இவன் எப்போ எழுந்து வந்தான்’ என்று மனதில் நினைத்தவள், அவன் கேள்வியில் மேலும் எரிச்சலாகி, “இதுக்கும் எப்பவோ பதில் சொன்னதா ஞாபகம்.” என்று முகத்தை எங்கோ வைத்துக்கொண்டு சொன்னாள்.
“எங்க… என் முகத்தைப் பார்த்து அந்த பதிலச் சொல்லுடி பார்க்கலாம்.” என்று அவள் நாடியைப் பிடித்து கோபமாகத் திருப்ப..
அவன் கையை வேகமாகத் தட்டி விட்டவள், “DSP சர், உங்க பதவிக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோங்க.” என்று முறைத்தாள்.
கோபமாகத் திரும்பி நின்று, “டேமிட்” என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டவன், பின் உள்ளங்கையை மடக்கி கோபத்தை கட்டுப்படுத்தினான்.
திரும்பி நின்று, அவள் கண்களை நேருக்கு நேராகச் சந்தித்தவன், அதன் அசரடிக்கும் ஆளுமையில் கட்டுண்டு, “உன் கிட்ட மட்டும் தான்டி, நான் யாருங்கறதயே, மறந்து போறேன். என் லேசர் கண்ணு கூட, உன்னைக் காதலா மட்டும் தான் பார்க்குது, அத நினைச்சா, என் மேல எனக்கே வெறுப்பா இருக்குடி…” என்றவன் டேபிள் மீது சாய்ந்து நின்று, தன் கைகளை கட்டியபடி, “முடிவா என்ன தான்டி சொல்ற…” என்றான். தன்னையும் மீறிய மென்மை அவன் குரலில்.
மென்மைக்கே பழக்கப்படாத அந்தக்குரல் கரகரத்து ஒலிக்க, அதை உணர்ந்து கொண்டவளுக்கோ நெஞ்சில் பாரம் ஏறிப்போனது, இதற்குமேலும் இங்கிருந்தால் விபரீதமாகும் என்று முடிவு செய்தவள் திரும்பிச் செல்ல.. வாசல் நோக்கி நகர்ந்தாள்.
செல்லும்முன் கைப்பிடித்துத் தடுத்து நிறுத்தியவன், “பதில் சொல்லிட்டுப் போ தியா…” என்று அவள் கண்களை பார்க்க, அந்த தீட்சண்யம் நிறைந்த கண்களிலும், அவனின் தியா என்ற உரிமையான அழைப்பிலும், உள்ளுக்குள் உடைந்துதான் போனாள், திவ்ய பாரதி.
“சாரி DSP” என்று மனதினுள் மன்னிப்பு கேட்டவள், திடமான மனதுடன் அவனிடமிருந்த கைகளை உருவி முன்னால் கட்டிக்கொண்டு, சுவற்றில் வாகாக சாய்ந்து நின்றபடி, “நான் என் பேனாவக் காதலிக்கிறேன், நீங்க உங்க காக்கிச் சட்டைய காதலிக்கிறீங்க, நமக்கு நடுவுல காதலெல்லாம் செட் ஆகாது DSP சர்..” என்று நக்கலாகச் சொல்ல..
ஏற்கனவே, உள்ளுக்குள் உருகி நின்றவன், அவள் சாய்ந்து நின்ற தோரணையில் மயங்கித்தான் போனான். அவள் பதில் எதிர்பார்த்ததுதான் என்பது போல் கள்ளச் சிரிப்பு சிரித்தவன்,
“உனக்கு போரடிக்கலையா பாப்பு, எனக்கு இந்த பதிலக் கேட்டு கேட்டு போரடிக்குது.” என்றவன் மேலும் நெருங்கி “இந்த மயிலே.. மயிலேன்னா இறகு போடாதாம், உனக்கெல்லாம் குற்றவாளிய ட்ரீட் பண்றா போல தர்டு ரேட் ட்ரீட்மென்ட் குடுத்தாதான், உன் மனசுல இருக்க உண்மை வெளிவரும் போல..” என்று சட்டென்று இழுத்தணைத்து கன்னத்தில் முத்தமிட முயல..
முதல் முறையாக அவனின் இப்படியான நடவடிக்கையில் அதிர்ச்சியில் உறைந்தவளோ, உள்ளத்தில் சுரீர் என்று வலி பரவ, நிலைகொள்ளாமல் தவித்தவள், அடுத்த நொடி ‘பளார்’ என்று ஓங்கி அறைந்திருந்தாள்.
அவள் அறையும்போதே உள் நுழைந்திருந்த, ஏட்டு சின்னச் சாமியோ, அதிர்ந்து செழியனை பார்த்தவர், மனதுக்குள் “இவரக் கண்டா டிப்பார்ட்மென்டே நடுங்குது. இந்தப்பொண்ணுக்கு தைரியத்தப் பார்த்தியா” என்று நினைத்துக்கொண்டார்.
அவள் அறைந்ததில் உறைந்திருந்த செழியன், தன்னை மீறி எல்லை தாண்டியிருந்ததை, அப்போதுதான் உணர்ந்தான்.
பாரதியின் மனதில், அவன் இருப்பது உறுதியாகத் தெரிந்திருந்த போதிலும், அவள் காதலை ஒத்துக்கொள்ளாத பட்சத்தில், அவன் செயல் தவறாகவே பட்டது. அதுவும் தண்டிக்க வேண்டிய கடமையில் இருப்பவனே, அந்தக் குற்றத்தை இழைத்திருப்பதில் மனம் நொந்து போனவன், “இவகிட்ட மட்டும், என் படிப்பு, பதவி, மூளை, விவேகம், நிதானம் அத்தனையும் செத்துப்போகுது, இந்த பாழாப்போன காதல் எனக்கு வராமலே இருந்திருக்கலாம்.” என்று நொந்து கொண்டான். இருப்பினும், ஒரு DSP என்றும் பாராமல் அவள் அறைந்ததை நினைத்தவன், “என் திமிரழகி” என்று ரசிக்கவும் தவறவில்லை.
ஏட்டு சின்ன சாமி நுழையும் போதே பார்த்து விட்டவன், “இங்க பார்த்ததை வெளிய சொல்லிற மாட்டீங்களே!” என்று சிரித்துகொண்டே கேட்க…
“இல்ல சார்.. இல்ல சார்.” என்று பதறிச் சொன்னவரோ, “சார் கேமரா..” என்று தயங்கிக்கொண்டே, CCTV யை சுட்டிக் காட்ட,
“அதெல்லாம் அவ உள்ள வந்ததுமே நம்ம தேவ் கட் பண்ணி இருப்பான்” என்று கண்ட்ரோல் ரூமில் இருக்கும் தன் நண்பனை நினைத்துச் சொல்ல,
‘அட கூட்டுக் களவாணிகளா…’ என்று மனதில் நினைத்துக் கொண்டவரோ, “டிப்பார்ட்மென்டே உங்களப் பார்த்தா அலறுது, உங்களுக்கு இது தேவையா சர்..” என்று கேட்க
செழியனோ மாறாப் புன்னகையுடன் “என்ன பண்றது, எனக்கு அவளைத்தானே பிடிச்சிருக்கு, என்னைய அலற வைக்கவும் ஒரு ஆள் வேணும்ல..” என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.
“அது சரி சர்..” என்றவர், “பாவம் சர் அந்தப்பொண்ணு, தனியாவே வளர்ந்ததுல இப்படி பண்ணிட்டாளே தவிர, ரொம்ப நல்ல பொண்ணு சர், சின்ன வயசுல எல்லாம் இப்படி இல்ல சர்.. இவளும் இவ அக்காவும் பட்டாம் பூச்சியா பறந்து திரியுங்க.” என்றார்.
“உங்களுக்கு அவளத் தெரியுமா, சின்ன சாமி?” என்ற செழியனின் கேள்வியில்,
“எங்க வீட்டு எதிர்லதான் குடியிருந்தாங்க சார், அவங்க…” என்றதும்,
செழியனுக்கு ஃபோன் வர.. அழைப்பை எடுத்துப் பேசியவன், அதில் கூறப்பட்ட செய்தியில் அனைத்தையும் மறந்து, டிரைவரை காரை எடுக்கச் சொன்னவன், அடுத்த நொடி பறந்திருந்தான்.
*************************
எழில் கொஞ்சும் அழகிய கிராமம். மலைகள் நிறைந்த பகுதி ஆகையால், பஞ்சம் இல்லா மழையும், மலைக்கோவிலை சுற்றி சுழித்துக்கொண்டு ஓடும் ஆறும், அந்த அழகிய கன்னூர் கிராமத்தை இன்னும் கைவிடவில்லை போலும்.
பள்ளி முடிந்ததற்கான பெல் அடிக்க, அடுத்த நொடி சிட்டாக பறந்து வந்திருந்தான், அந்தப் பொடியன், யூனிஃபார்ம் கூட மாற்றாமல், தன் தாய்மாமனை இழுத்துக்கொண்டு அந்த ஊரின் சிறிய மருத்துவமனைக்கு வந்தவன், மருத்துவ மனை வந்ததும், தன் தாய்மாமனின் கையை விட்டுவிட்டு ஒரே ஓட்டமாக ஓடி, அந்த அறையின் முன் வந்துதான் மூச்சு வாங்கினான்.
அவன் வரவை உள்ளிருந்த பூஞ்சிட்டு உணர்ந்ததோ என்னவோ.. “ங்கன… ங்கன…” என வீரிட்டு அழுதது, அடுத்த நொடி உள்ளே பாய்ந்தவன், தொட்டிலில் இருந்த பூஞ்சிட்டிடம் “அம்மு… அழாதே அம்மு, நான் வந்துட்டேன்.” என்றதும்,
கப் என்று வாய் மூடிய குழந்தையோ, கை கால்களை உதறிக்கொண்டு திரு திருவென முழிக்க, அங்கிருந்த மருத்துவரே அசந்துதான் போய் விட்டார்.
அதைப்பார்த்த குழந்தையின் தாய் மலரோ, ‘என் மருமகன் தான் டாக்டர், இவ என் வயித்துல இருக்கும் போதே தினமும் பேசி பேசி அவன் குரல் பழக்கமாகிப்போச்சு. வயத்துலயே இவன் குரலைக் கேட்டதும், அந்த ஆட்டம் போடுவா.” என்று சொல்லிச்சிரிக்க,
மருத்துவரும் செக் செய்து முடித்தவர், “க்ளவர் பாய்” என்று சிறுவனின் தோளில் தட்டிக்கொடுத்துச் செல்ல,
அவனோ, தொட்டில் எட்டாததால் உள்ளே எட்டி எட்டி பார்க்க, அப்போது தான் அவன் தாய்மாமனும், குழந்தையின் தந்தையுமான மாதவன் உள்ளே நுழைந்தான்.
எக்கி எக்கி பார்ப்பதைப் பார்த்த மாதவன், “என்னடா மருமகனே! உனக்கு பாப்பா தெரியலையா இரு..” என்றவர் அவனை கட்டிலில் அமர வைத்து, தொட்டிலில் நெளித்து கொண்டிருந்த குழந்தையை தூக்கி, “இந்தாடா மருமகனே, உன் பொண்டாட்டி!” என்று அவன் மடியில் வைத்து தானும் பிடித்துக்கொள்ள,
மனைவி மலரோ “என்னங்க குழந்தைகிட்ட போய் இப்படி சொல்லிக்கிட்டு” என்று கடிய,
“ஏன்டி, என் மருமகனுக்கு என்ன குறைச்சல்..? வயத்துலருந்தே வெல்லமா வச்சி தாங்குறான், ஏன்டா மருமகனே! நீ என் பொண்ண கட்டிக்க மாட்ட..?” என்று பொடியனிடம் கேட்க,
புரியவில்லை என்றாலும் நாலா பக்கமும் தலையாட்டியவன், பதில் சொல்லத் தெரியவில்லை என்றாலும் “என்னோட அம்மு, மாமா” என்று அவள் பாதங்களை வருடிக் கொடுக்க,
அவன் கைகளைப் பிடித்து வாயில் வைக்க முயன்றபடி, கை கால்களை உதறிக்கொண்டிருந்தது, அந்தப் பூஞ்சிட்டு.