திவ்ய பாரதி! கோர்ட்டில் சொல்லச் சொல்ல, இரத்தமென சிவந்த கண்களுடன், கையாலாகா தனத்துடன், கேட்டுக் கொண்டிருந்த செழியனுக்கு, இவை எல்லாம் நேற்றைய இரவே, ஏட்டு சின்ன சாமி சொல்லக் கேட்டிருந்தான் தான்.
அவள் சம்மந்தப்பட்ட கேஸ் ஃபைலையும், அப்போது வெளி வந்த பேப்பர்களையும் பார்த்தும், முழுதாக தெரிந்து கொண்டிருந்தாலும், தன்னவள் வாயால் கேட்க கேட்க.. தாங்கவில்லை அவனுக்கு.
பிறர் சொல்லி தெரிந்த போதே தாளாமல் ஓடிச்சென்று கட்டிக் கொண்டவனுக்கு,
இப்போது கலங்கி நிற்பவளை அணைத்து “நான் இருக்கிறேன் பாப்பு! உனக்கு எல்லாமுமாக..” என்று அள்ளிக் கொள்ளத் துடித்த மனதை, பின்னால் கைகளை முறுக்கி கட்டுபடுத்திக் கொண்டிருந்த செழியன், திவ்யபாரதி மயங்கிச் சரியவும்,
நிலைகொள்ள முடியாமல், முதல் ஆளாய் ஓடிச்சென்று கைகளில் அள்ளிக்கொண்டான்.
பர்மிஷன் வேண்டி நீதிபதியை பார்க்க, “கூட்டிப்போங்க செழியன், “இங்கேயே மருத்துவர் வருவாங்க, பக்கத்து அறையில ஓய்வெடுக்க வைங்க.” என்ற நீதிபதி,
“இந்த விசாரணை குற்றம் சாட்டப்பட்டவரின் உடல் நிலையைப் பொறுத்து, இன்று மதியமோ அல்லது நாளையோ தொடங்கப்படும்.” என்று ஒத்தி வைத்தார்.
******
நீதிபதியின் உத்தரவின் படி, திவ்ய பாரதியை பக்கத்து அறையில் படுக்க வைக்கவும், அவசர உதவி மருத்துவர், எங்கிருந்தோ விரைந்து வந்திருந்தார்.
வந்தவர், “இது அதிகப்படியான பயத்தினாலேயோ, மன உளைச்சல் காரணமாவோ, வந்த மயக்கம் தான். கொஞ்ச நேரத்துல சரியாகிடுவாங்க.” என்று ஊசி ஒன்றையும் செலுத்திச் சென்றார்.
அவர் சென்ற சிறிது நேரத்திற்கு எல்லாம், மயக்கம் தெளிந்து எழுந்திருந்தாள் திவ்யபாரதி. அதுவரை அருகிலிருந்து இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்த செழியன், அவள் எழுந்ததும், அருகிலிருந்த ஜூஸை டம்ளரில் ஊற்றித் தர, மறுக்காமல் வாங்கிக்கொண்டாள், இப்போது முற்றிலும் தெளிந்திருந்த பாரதி.
அவள் எப்போதும் விரும்பி அருந்தும் அத்திப்பழ ஜூஸ், அவளுக்காக வரவழைத்திருப்பான் போலும். அவளின் விருப்பம் முதற்கொண்டு தெரிந்து வைத்திருப்பவனை, பாரதியால், பாவமாகப் பார்க்க மட்டுமே முடிந்தது.
கையில் டம்ளரை வைத்து எங்கோ வெறித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்தவன், “குடி பாப்பு..! இன்னும் கொலை செய்ய தெம்பு வேண்டாமா?” என்றவனின் பதிலில் சிரித்துவிட்டவள்,
“நிஜமாவே நீங்க போலீஸ்தானா DSP“ என்றாள்.
அதில் முறைத்தவன், “பூவுடன் சேர்ந்த நாரும் மணக்குமாம், உன் கூட இருந்து இருந்து கனவுல கூட, ஒரு டூயட் பாட முடியலடி. அதுலயும் கொலை கொலையாத்தான் வந்து தொலையுது!” என்று சலித்தான்.
“வேற பேச்சே இல்லையா” என்பது போல் கோபம் தாங்கிப் பார்த்தவளை, கையிலிருந்த ஜூஸை சுட்டிக்காட்டி அருந்தச் சொல்லி கண் காட்டினான், காரியத்தில் கண்ணாக.
கட்டி அணைத்து ஆறுதல் சொன்னால் ஏற்றுக்கொள்பவள் அல்ல. அதனால் தான் வேண்டுமென்றே வம்பிழுத்து, அவளை சகஜமாக்கிக் கொண்டிருந்தான்.
சலித்துக்கொண்ட திவ்ய பாரதியும், கையிலிருந்த ஜூஸை அருந்தப் போகவும், டம்ளர் தரையில் உருண்டு ஜூஸ் அணைத்தும் அந்த அறை முழுவதும் சிதறியது. அதிர்ந்த திவ்ய பாரதி நிமிர்ந்து பார்க்க, எதிரில் உக்கிர மூர்த்தியாக நின்றிருந்தான், கடத்தப்பட்ட இருவரில் ஒருவனின் தந்தையான அந்த மந்திரி.
திவ்யபாரதி கைதான விஷயம் கேள்விப்பட்டு வந்தவன், ஜூஸை தட்டிவிட்டதும் இல்லாமல், “என் பையன் எங்கடி” என்று கேட்டு, திவ்யபாரதியை அறையப் போகவும்,
குறுக்கே வந்து கைகளைப் பிடித்து தடுத்து நிறுத்திய செழியன், “அவங்க இப்போ கோர்ட் விசாரணையில இருக்காங்க, இங்க வந்து நீங்க இப்படி நடந்துக்கறது தப்பு.” என்றபடி கைகளை விட்டான்.
இது கோர்ட்டாகவும், அவன் மந்திரியாகவும் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், இந்நேரம் அவன் கை அவனுக்கு சொந்தமாக இருந்திருக்காது. இப்படி ஏதாவது நடக்கும் என்று தான் திவ்யபாரதியை நேரடியாக கோர்ட்டில் ஒப்படைத்து இருந்தான், செழியன்.
தன் பதவி, ஓரளவுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று அவனுக்கும் தெரியும், அதையும் தாண்டி, அந்த மந்திரியின் அதிகாரம் பாதாளம் வரை கூடப் பாயலாம்.
திவ்யபாரதி விஷயத்தில் சின்ன அலட்சியம் கூட, அவள் உயிருக்கு ஆபத்தாய் முடியலாம் என்று, மிகவும் எச்சரிக்கையாக இருந்தான்.
செழியன் கையைப் பிடித்ததிலேயே கோபம் கொண்ட அந்த மந்திரி, “என் மேலேயே கைய வைக்கிறீயா” என்று பாயப் போனார்.
செழியனின் உக்கிரப் பார்வையில் நிதானித்தவர், இது கோர்ட் என்பதையும், அவன் ஒரு உயர் தர அதிகாரி என்பதையும் பின்பு தான் உணர்ந்தார்.
மாறி அவர் சட்டையை கொத்தாகப் பற்றி இருந்தாள் திவ்யபாரதி.
“புள்ளைய ஒழுங்கா வளர்க்கத் துப்பில்ல, கண்டபடி மேயவிட்டு இப்போ குத்துதே, குடையுதேன்னு, என்கிட்ட வந்து கேட்டுக்கிட்டு இருக்க, ச்சீ…ப..” என்று தள்ளிவிட, சுவற்றில் இடித்துக்கொண்டு நின்றது, அந்த கொடூரனை பெத்தடுத்த கொடூரம்.
செழியனோ, “அடேய்! நான் அவளை காப்பாத்துனேன்னு நினைச்சியா, உன்னைத்தான்டா அவகிட்ட இருந்து காப்பாத்த போராடினேன், கேட்டியா…? உன் புள்ளையயே விட மாட்டா, அவனை இப்படி வளர்த்து வச்ச உன்னை.. ம்கூம்.” என்று தலையாட்டிக் கொண்டான்.
அவள் தள்ளி விட்டதில் சிறிது தள்ளாடியவன், “ஏய்! என்னை யாருன்னு நினைச்ச, உன்னை சும்மா விடமாட்டேன்டி” என்று மேலும் எகிற.
“போடா, உன் புள்ளைக்கு முன்னால போய் சேர்ந்துராத, போ!” என்றாள் திவ்யபாரதி.
அதற்குள் சத்தம் கேட்டு பலர் கூடிவிட, அந்த வழியாக வந்த நீதிபதி விஜயலஷ்மியும், மந்திரி வந்ததும் என்ன நடந்திருக்கும் என்று புரிந்து கொண்டவர்,
“சார், இங்க இப்படிலாம் வந்து கேட்கக் கூடாது, அதான் நாங்க விசாரிச்சிட்டு இருக்கோம்ல” என்றார்.
ஜட்ஜின் முன் பம்மிய அந்த மந்திரியோ, “மேடம்! என் பையனுக்கு ஏதும் ஆகிடுமோன்னு…” என்று இழுக்கவும்,
கைகாட்டி நிறுத்திய நீதிபதி, “எங்களுக்கும் இந்த கேஸோட முக்கியத்துவம் தெரியும், அதனாலதான் கேஸ நாளைக்கு ஒத்தி வைக்காம, இன்னைக்கே மறுபடியும் விசாரணைய வச்சிருக்கேன்.” என்றார்.
மறுபடியும் மதியத்துக்கு மேல் விசாரணை தொடங்க, முன்பிருந்த கடினம் நீதிபதியிடம் இப்போது இல்லை. திவ்யபாரதியின் மேல் பரிதாபமே மிஞ்சி இருந்தது. ஏன் அரசு தரப்பு வக்கீல் கூட, ஒன்றும் அறியாத குழந்தை பருவத்தில் அவள் அடைந்த கொடுமைகளை நினைத்துப் பார்த்தவர், கலங்கித்தான் போனார். இருந்தும் கடமையை செய்ய எண்ணி,
“உங்க நிலைமை யாருக்கும் வரக்கூடாது தான், அதற்காக சட்டத்தை நீங்க கையில் எடுக்கலாமா..ம்மா” என்று விசாரணையை தொடங்கினார்.
திவ்யபாரதியோ, “என் நிலைமை யாருக்கும் வரக்கூடாதுன்னு தான் சட்டத்தை கையில் எடுத்தேன். உங்க கோர்ட்டும், போலீஸும் அன்னைக்கே அந்த நாய தண்டிச்சிருந்தா, ஒருவேளை நல்ல விதமா வளர்ந்திருப்பேனோ, என்னவோ?” என்று பெருமூச்செறிந்தவள்,
“ஆனா அன்னைக்கு, ஆபரேசன் முடிஞ்சி நான் எழுந்து நடமாடவே ஒரு மாசம் ஆன நிலையில, அந்த கேஸே, இல்லாமப் பண்ணிட்டாங்க உங்க போலீஸ், ஏன் என்னோட அப்பா அம்மா இறந்தது கூட, பொண்ணு இறந்த துக்கத்துலதான்னு முடிச்சிட்டாங்க.” என்றாள் ஆவேசத்துடன்.
“ஒரு சின்னப்பொண்ணு கற்பழிக்கப் பட்டிருக்கான்னு தெரிஞ்சும், மேற்கொண்டு விசாரிக்காம அப்படியே அந்த கேச மூடிவிட்டது உங்க சட்டம்!” என்று குமுறியவள்..
“யாரோ சில நல்லவங்க என்னை ஆசிரமத்துல சேர்த்து விட்டாங்க. அங்கயே படிச்சி வளர்ந்தேன். மத்த பிள்ளைங்க எக்ஸ்ட்ரா அக்டிவிட்டியா தையல், பூ வேலைன்னு கத்துக்கறப்போ, நான் கராத்தே கத்துக்கிட்டேன். கொஞ்சம் கொஞ்சமா என்னை நானே திடப்படுத்திக்கிட்டேன்.” என்றவள்,
“அன்னைக்கு நான் பாத்துப் பாத்து பயந்த அந்த நாகராஜோட உருவம், கனவுல கூட என்னை தூங்கவிடல. ஆம்பிளை பசங்களோட சாதாரண தொடுகைய கூட என்னால தாங்க முடியல, அன்னைக்கு அந்த மிருகம் நாசம் செஞ்சது என்னோட திவியதான்னாலும், இரட்டை குழந்தைங்களுக்கே உள்ள உணர்வுப்பூர்வமான தொடர்பும், அருகிலிருந்து அனுபவித்த வலியும் என்னை சாதாரணப் பொண்ணா உணர விடல. அன்னைக்கு முடிவு செஞ்சேன், அந்த நாய போட்டுத் தள்ளுறதுன்னு.” என்று சற்று நிறுத்தியவள்,
பின் விரக்தியான சிரிப்புடன், “ஆனா அவன் ஒருத்தன் மட்டும் இல்லயே இங்க, அப்புறம் அதுவே தொடர்கதை ஆயிடுச்சி” என்று முடித்தாள். காலையில் மயங்கிச் சரிந்த திவ்யபாரதி இல்லை இவள், முற்றிலும் மீண்டிருந்தாள். பார்வையில் பழைய மிடுக்கு, கண்களில் அதே அலட்சியம், நிமிர்த்திய நெஞ்சம், பணிய மறுத்த பண்பு, அடங்க மறுத்த ஆங்காரம்.. அவள் ‘பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக’ நின்றாள், குற்றவாளி கூண்டில்.
“சரிம்மா, இப்போ அந்த மந்திரி பையனும், இன்னொரு பையனும் எங்கன்னு சொன்னீங்கன்னா, அவங்களை முறையா விசாரிச்சி, கண்டிப்பா தண்டனை வாங்கிக் குடுப்போம்.” என்றார், அந்த கடமை தவறாத வக்கீல்.
அதைக் கேட்டு “ஹா…ஹா…” என்று வாய்விட்டுச் சிரித்தவள், “தண்டனையா..? அப்படியே தண்டனை வாங்கிக் குடுத்தாலும், என்ன அதிகபட்சமா ஏழு வருஷம் ஜெயிலும், அபராதமும் குடுப்பீங்களா..? இல்ல, அதிசயத்திலும் அதிசயமா… தூக்கு…” என்றாள் கேள்வியாக.
பார்வையை வக்கீலிடமிருந்து, நீதிபதியை நோக்கித் திருப்பிய திவ்யபாரதி, “அந்த ஏழு வருஷம் தண்டனை முடிஞ்சி வெளிய வர்றவன், திருந்திதான் வரான்னு உங்களால உறுதியா சொல்ல முடியுமா..? வெளிய வர எல்லாரும் திருந்தி வர்றதில்ல.., வெளிய வந்து மறுபடியும் அதே பாவத்த சத்தம் இல்லாம செய்யுறான், அப்படியே இல்லன்னாலும், ஒரு அப்பாவி பொண்ணை கல்யாணம் பண்ணி, யோக்கியன் வேஷம் போடுறான். அவன் இந்தக் குற்றத்துக்காக ஜெயிலுக்கு போய்ட்டு வந்தவன்னு வெளிய தெரியாம, அவன் உண்மையான ஐடென்டிய மறைச்சி, வெளிய ராஜா மாதிரி வலம் வர்றான்.” என்று ஆவேஷமாகச் சொன்ன திவ்யபாரதி…
இப்போது நீதிபதியை அழுத்தமாகப் பார்த்து “ஒருத்தன் ரேப்பிஸ்ட்னு உறுதியாச்சுன்னா, அவன் நெத்தியில ‘காமுகன்னு’ பச்சை குத்துங்க. அப்படி பண்ணாதான் அவன் தெருவுல இறங்கி நடமாட அசிங்கப்பட்டு கூனிக் குறுகனும். அவனால பாதிக்கப்பட்ட பொண்ணு, இந்த சமூகத்தை எதிர் கொள்ள முடியாம, ஒவ்வொரு நொடியும் எப்படி கூனிக் குறுகறாளோ, அப்படி அவனும் இந்த சமூகத்த எதிர்கொள்ள முடியாம தவிக்கனும். அவன் வாழ்ற ஒவ்வொரு நொடியும் நரகமாகனும். முடியுமா.. உங்களால? உங்க சட்டத்துல அதுக்கு இடம் இருக்கா?” என்று ஆத்திரப் பட்ட திவ்யபாரதி,
“சரி பச்சை குத்த வேண்டாம், அட்லீஸ்ட், அவன் ஆதார் கார்டுலயோ, இல்ல… ரேஷன் கார்டுலயோ, இவன் இந்த குற்றத்துக்காக ஜெயிலுக்கு போய்ட்டு வந்தவன்னு, தெரியறா மாதிரி அடையாளப்படுத்த முடியுமா உங்க சட்டத்தால..? அப்புறம் எப்படி மேடம், கற்பழிப்பு குற்றம் குறையும்..? எப்போ தான் செஞ்ச தப்பு வெளிய பகிரங்கமாக்கப்படுதோ, அப்போ குற்றங்கள் குறைய ஆரம்பிக்கும். இதுக்கு வழி இருக்குன்னா சொல்லுங்க, அவங்க ரெண்டு பேரும் உயிரோட வருவாங்க.” என்றவள்,
“இது எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லன்னு எனக்கும் தெரியும், அதனால, அவங்களும் திரும்பி வர வாய்ப்பே இல்ல.. மேடம்.” என்றாள் கண்களில் கனல் தாங்கி.
இதற்கு மேல் பேசி எதுவும் ஆக போவதில்லை என்று முடிவெடுத்த நீதிபதி விஜயலஷ்மி, “குற்றவாளியே தான் செய்த கொலைகளை ஒத்துக் கொண்டுள்ளதால், தனி நபர் சட்டத்தை கையில் எடுப்பதை ஒரு போதும் இந்த கோர்ட் ஊக்குவிப்பதில்லை. அதன் அடிப்படையில் குற்றவாளிக்கு, தூக்கு தண்டனை உறுதி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் இன்னும் கடத்தப்பட்டவர்களின் விவரங்கள் அறியாத பட்சத்தில், குற்றவாளியை ஒரு வாரம் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும், அதன் பிறகு இந்த கேஸ் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தண்டனை தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், இந்த கோர்ட் உத்தரவிடுகிறது.” என்று முடித்தார்.
அதைக் கேட்டு, நீதிமன்றமே அதிரும் வண்ணம் சிரித்தாள் திவ்யபாரதி…!
அவள் சிரிப்பையே அதிர்ந்தபடி பார்த்திருந்தான், செழியன்.
***
அன்று காலை..
திவ்யபாரதி தன் கதையைச் சொல்லி மயங்கி விழுந்த அதே நேரம்..
அதே நீதிமன்றத்தில் பின் இருக்கையில் ஒரு உருவம் கண்கள் சிவக்க, முகம் ரௌத்திரத்தில் கொதிக்க அமர்ந்திருந்தது.
திவ்ய பாரதி மயங்கிய அடுத்த கணம், வெறிகொண்ட வேங்கையாய் எழுந்த அந்த உருவம், தன் புல்லட்டை எடுத்துக்கொண்டு உயர் வேகத்தில் பறந்தது. நேரே அதன் வீட்டை அடைந்த அந்த உருவம், வந்து நின்ற நிலையிலயே, அதன் கோபத்தை புரிந்து கொண்ட அந்த உருவத்தின் ஒரே உறவுகளும், அதற்கு குறையாத கோபத்தை பிரதிபலிக்க… நேரே பக்கவாட்டில் இருந்த அறைக்குள் பிரவேசித்த அந்த உருவம், தர தரவென நடு ஹாலில் இழுத்து வந்து போட்டது ஒரு மனிதனை.. ‘ச்சீ..ச்சீ’ மனிதனா அவன்.
மனித உருவத்தில் இருக்கும் மிருகம். செல்லம் கொடுத்து சீரழிக்கப்பட்ட மிருகம், இன்று பல பெண்களை சீரழித்துக் கொண்டிருந்தது. அந்த மிருகத்தைத்தான் அந்த உருவம் வெறியுடன் இழுத்து வந்து போட்டது. ஏற்கனவே குற்றுயிரும் கொலையுயிருமாக இருந்தவனை, துண்டு துண்டாக குதறிப் போட, வெறியுடன் காத்திருந்தனர் அங்கிருந்த நால்வரும். அந்த உருவத்தின் ஒற்றை ஆணைக்காக அவனையே பார்த்திருந்தனர்.
அந்த உருவம் தன் கைகளை சொடுக்க, அதற்காகவே காத்திருந்தவர்கள், அடுத்த நொடி நாலுபக்கமும் இருந்து தாக்க ஆரம்பித்தனர். சரியாக அரைமணி நேரங்கள், அந்த மிருகத்தின் மொத்த கதையையும், அக்கு வேறு, ஆணி வேறாக மிச்சம் இல்லாமல் முடித்திருந்தனர்.
இருந்த மிச்சம் மீதியையும், நேற்றைய இரவு இதே முறையில் கொல்லப்பட்ட இன்னொருவனின் உடல் பாகங்களையும், ஜீப்பில் அள்ளி போட்டுக் கொண்டதும், அந்த நால்வரையும் திரும்பிப் பார்க்க, இதற்காகவே காத்திருந்தது போல் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டனர்.
குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தியதும், அவன் விழியசைவில் அந்த மிருகங்களின் கை வேறு கால் வேறு என்று ஒவ்வொன்றையும், ஒவ்வொரு குப்பைத்தொட்டியின் அருகில் இழுத்துப் போட்டுவிட்டு வந்தனர்.
அதிலிருந்த காதை மட்டும் தனியாக தூக்கிச்சென்ற தன் நண்பனை பார்த்து, வாய்விட்டுச் சிரித்த அந்த உருவம்..
“உனக்கு இதே வேலையா போச்சில்ல, அப்படி என்னதான்டா இருக்கு அந்தக் காதுல…” என்று கேட்டு “ஹா..ஹா.” என்று இடி இடியென சிரித்தது. அவன் கார்த்தி! கார்த்தி இளவரசன்.