நீதிபதி முன், கொலை செய்த விதத்தை, எந்த வித தயக்கமோ, பயமோ இல்லாமல்… திவ்யபாரதி சொல்லி முடிக்கவும்,
கோபமாக கேள்வி கேட்க வந்த வக்கீலைத் தடுத்த ஜட்ஜ் விஜயலஷ்மி, “இதெல்லாம் செய்யத்தானே நாங்க இருக்கோம். சட்டத்தை நீங்களே இடுப்பில் தூக்கி வச்சுக்கிட்டா, நாங்கெல்லாம் எதுக்குமா?” என்றார் கோபம் பொங்க…
சத்தம் போட்டுச் சிரித்த திவ்யபாரதி,
“உங்க சட்டம் ஒழுங்கா விசாரிச்சி தண்டனை குடுத்திருந்தா, நான் உங்க முன்னாடி கொலைகாரியா உருவாகியே இருக்க மாட்டேனே..!” என்றவள், “அவ்ளோ ஏன்? இப்போ நான் கடத்தி வச்சிருக்க பரதேசிங்களுக்குக் கூட, ஆதாரம் இல்லைன்னு ஜாமின் குடுத்தது நீங்கதானே!” என்றாள் ஜட்ஜையே கேள்வியாக…
சற்று தலைகுனிந்த நீதிபதி, “கோர்ட்டுக்குத் தேவை ஆதாரம். அது இல்லாம ஒரு நீதிபதியால என்ன பண்ண முடியும்?” என்று சொல்லவும்,
“ஆனா.. எனக்கு ஆதாரம்லாம் தேவையே இல்லயே..! தப்பு செஞ்சிருக்கான்னா.. உஸ்…” என்று கையை மேலே தூக்கிக் காட்டியவள் “கதம்.. கதம்..” என்றாள்.
திவ்யபாரதியின் பதிலில் கோபமடைந்த நீதிபதி, “கொலை செய்யறது, உனக்கு என்ன அவ்ளோ சர்வ சாதாரணமா போச்சா? முதல்ல கடத்தினவங்கள எங்க வச்சிருக்க. சொல்லு, அதுல மந்திரி பையனும் இருக்கான். இங்கயே சொல்லீட்டினா, உனக்கு நல்லது. இல்ல.. போலீஸ் காவல்ல எடுத்தா, ட்ரீட்மெண்ட் எப்படி இருக்கும்னு நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டியதில்ல. நீ ஒரு பத்திரிக்கைக்காரி வேற.” என்று சற்று மிரட்டலாக முடித்தார்.
“பத்திரிக்கைக்காரின்னா எனக்கு வலிக்காதா?” என்று கேள்வி கேட்டவள்,
திடீரென “ஓ” வென்று கதறினாள். “எனக்கு உடம்பெல்லாம் ரணமா வலிக்குதே!” என்று சொல்லியபடி மீண்டும் மீண்டும் கதற, திடீரென வெறி வந்தது போல், “எனக்கு, இங்க.. இங்க.. இங்கல்லாம் ஊசியால குத்தினா போல வலிக்குதே!” என்று தன் உடம்பெல்லாம் தொட்டுக் காட்டியபடி, தன் உடல் முழுவதும் அருவெறுப்புடன் துடைத்துக் கொண்டாள்.
முன்னே அலட்சியமாக நின்ற திவ்யபாரதிக்கும், இப்போதைக்கும், சம்பந்தமே இல்லாதவள் போல் கதறி அழுதவள், அடுத்த நொடியே காளியாக மாறி…
“அதான் எனக்குத் தந்த வலிய, நான் அவனுங்களுக்கு தந்து, என்னை நானே சமாதானப்படுத்திக்கறேன்.” என்றாள் கோபத்தை கையில் எடுத்து.
அவள் செயல்கள் ஒவ்வொன்றும், ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பெண் போலத் தெரிய, நீதிபதியே அவள் செயல்களில் குழம்பித்தான் போனார்.
செழியனோ, தன்னவள் படும் துயரத்தை, கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருந்தான்.
உள்ளுக்குள் புறையோடி இருக்கும் வலி, கீறி விட்டால் தான் ஆறும் என்று வாளாவிருந்தான்.
திவ்யபாரதியின் இந்த மாறுதல், நீதிபதிக்கே பாவமாக இருக்க, “உனக்கு என்ன வலியம்மா அவங்க தந்தாங்க.” என்று நீதிபதி சற்று மனம் இறங்கிய குரலில் கேட்கவும்,
மழலையாக மாறிப்போன திவ்யபாரதி, “ஓ… உங்களுக்கு அது தெரியாதுல்ல, நான் சொல்லட்டா…” என்று மழலையாக மாறிக் கேட்டவளின் குரல் கூட, இப்போது குழந்தைத்தனம் கொண்டிருந்தது.
ரெஜினாவோ, தன்னிடம் ‘நான் தான் கொலை செய்தேன். என்று தைரியமாக ஒத்துக்கொண்ட அந்த சிங்கப்பெண்ணா இவள்’ என்று அதிர்ச்சியாகப் பார்த்திருந்தாள்.
திவ்ய பாரதியோ, நினைவில்…
தான் ஓடி விளையாடிய மழலைப் பருவத்துக்குச் சென்றிருந்தாள்….!
******
தனசேகர்-லஷ்மி தம்பதிக்கு, திவ்யா, பாரதி என்று உடல் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள். இருவரின் இடுப்பு பகுதியும் ஒன்றொடொன்று ஒட்டி இருக்கும். அதில் திவ்யா நன்கு ஆரோக்கியமாகவும், பாரதி உடல் ஒட்டிப்போய் சரியான வளர்ச்சி இல்லாமல் நோஞ்சானாகவும் இருந்தாள்.
தனசேகர் இருவரையும் பிரிப்பதற்கான ஆபரேசனை குழந்தையிலேயே செய்ய முற்பட,
இருவரையும் பரிசோதனைக்கு உட்படுத்திய மருத்துவர்கள், “பாரதிக்கு ஆபரேசனுக்கு தேவையான வளர்ச்சி இல்லாததால், அவர்களின் பத்தாவது வயதில் தான் இந்த ஆபரேசன் செய்ய முடியும் என்றும், இப்போதே செய்தால்… பாரதி பிழைக்க வாய்ப்புகள் ரொம்ப குறைவு” என்றும் தெரிவித்தனர்.
தன் மகள்களில் ஒருவரைக்கூட இழக்க விரும்பாத பெற்றோர், பத்து வயதில் பார்த்துக் கொள்ளலாம் என்று அப்படியே விட்டுவிட்டனர். அவர்களும் ஒன்றாகவே வளர்ந்து 7 வயதை எட்டி இருந்தனர். அதிலும் திவ்யா! நோஞ்சானாக இருக்கும் தன் தங்கை மேல் உயிரையே வைத்திருந்தாள். தனக்கு என்ன தின்னக் கொடுத்தாலும், அதில் பாதியை பாரதிக்கு கொடுத்து விடுவாள்.
தன் பெற்றோரின் வாயிலாக பாரதியைப்பற்றி தெரிந்து கொண்டவள், பாரதி ஆபரேசனில் பிழைக்க வேண்டும் என அவளை தேற்ற ஆரம்பித்தாள். ஆனால், பாரதியின் உடம்பு நாளுக்கு நாள் தேய்ந்ததே தவிர, தேறிய பாடில்லை.
பாரதி குச்சி குச்சி கை கால்களோடு, ஒட்டிப்போன உடம்பில் தலை மட்டுமே சற்று பெரியதாக இருப்பாள்.
இருவரும் பட்டாம் பூச்சியாகத்தான் வலம் வந்தனர். அந்த கொடிய நாகப்பாம்பு, அவர்கள் வாழ்வில் வரும் வரை.
அவன் நாகராஜ், அன்றைய அரசியல் ரவுடி, அவனுக்கு வயது வந்த பெண்களைவிட, பச்சிளம் குழந்தைகள் மீதுதான் ஈடுபாடு அதிகம். போராடத் தேவை இல்லை. எளிதில் தப்பித்தும் கொள்ளலாம் அல்லவா?
அந்த வெறிப்பிடித்த மிருகத்துக்கு, அன்று கண்ணில் பட்டவர்கள் தான் திவ்யாவும் பாரதியும். நோஞ்சானான பாரதி அவனுக்குப் பொருட்டே இல்லை.
ஆனால், திவ்யா அவன் கண்ணை உறுத்தினாள். பள்ளி விட்டு வந்த திவ்யாவை தூக்கும் போதுதான், பாரதியும் கூடவே இழுபடுவதைக் கண்டான்.
“ஓ.. ஒட்டிப்பிறந்ததுங்களா” என்றவன் அப்படியே இருகைகளாலும் இருவரையும் சேர்த்து தூக்கிக்கொண்டான். ஆள் அரவமற்ற சாலையில் அவர்கள் கத்தியது, யாருக்கும் கேட்காமலே போனது, அவர்களின் துரதிர்ஷ்டம்.
இருவரையும் தூக்கிக்கொண்டு காட்டுப்பகுதியை நோக்கிச் சென்றவன், இருவரையும் மண்ணில் கிடத்தினான். இருவருக்கும் நடப்பது புரியவில்லை என்றாலும்,
“அங்கிள் விடுங்க அங்கிள், வீட்டுக்குப் போகனும்.” என்று அழுதபடி இருந்தனர்.
அந்த காமக் கொடூரனுக்கு, பச்சிளம் குழந்தைகளின் அலறல் பாதிக்கவில்லை. பதிலாக திவ்யாவின் பச்சிளம் அங்கங்கள், அவன் கண்களுக்கு விருந்தாகப் பட்டது போலும். திவ்யாவின் பள்ளிச் சீருடையை அவிழ்த்து வீசவும், கதறிய திவ்யா கைகளால் தடுக்க, ஓங்கி அவன் விட்ட அறையில் மயங்கிச் சரிந்திருந்தாள்.
தன் உடன் பிறந்தவளுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று புரியவில்லை என்றாலும், அவளின் கதறலில் துடித்துப்போன பாரதி, தன் குச்சி கைகளால் அந்த நச்சுப்பாம்பை தாக்க, பாரதியின் குச்சி விரல்கள், அவனுக்கு வெண்சாமரம் வீசியதுபோல் இருந்தது போலும்.
தூசியாக தட்டி விட்டவன், “அடியே நோஞ்சான், நீயெல்லாம் எனக்கு கணக்கே இல்ல.” என்றவன் திவ்யாவிடம் கொடூரமாக, தன் தேவையை நிறைவேற்றிக் கொண்டிருந்தான்.
பலி கொன்றவள் மயங்கிவிட, எதிர்ப்பே இல்லாமல் அந்த நாகம் அவள் மேல் படர்ந்தது. ஆனால், உணர வேண்டியவள் உணர்வு அற்ற நிலையில் இருக்க, அருகில் படுத்திருந்த பாரதிதான், அத்தனை வலியையும் உணர்ந்திருந்தாள். இரட்டை குழந்தைகளுக்கே உண்டான, ஒருத்தருக்கு வலித்தால், இன்னொரு குழந்தையும் அந்த உணர்வுகளை உணரும் அல்லவா? அப்படி திவ்யாவின் வலிகளும், வேதனைகளும் பாரதியை ஈவு இரக்கம் இல்லாமல் தாக்கிக் கொண்டிருந்தது.
இதில், அழுதுகொண்டே, கண் கொட்ட கொட்ட நடந்த அத்தனையும் பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டும் இருந்த பாரதி, திவ்யாவின் ரணங்களை உடலில் தாங்கியவள், மனதளவிலும் பாரதியாக பெரும் காயம்பட்டாள். இத்தனை ரணத்திலும், தன் குச்சி கைகளால் அந்த மிருகத்தை அடிப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை.
நக்சுப் பாம்பொன்று, இரு பிஞ்சுகளின் மீது, தன் நஞ்சை வஞ்சத்துடன் கக்கிக்கொண்டிருந்தது.
“பால் மணம் மாறா பச்சைக் குழந்தையிடம்,
பாலுணர்ச்சி கண்டாயாடா.. பாதகனே!
மொட்டு விடாத மலரவளில்,
மோகத்தீ கொண்டாயோடா.. மூர்க்கனே!
உன் தாகம் தணிக்க
அவள் தடாகம் அல்லடா,
சிறு தளிரல்லவா.. தீயவனே!
நீ வேட்டையாட
சிறு மான்குட்டியா வேண்டும்.. மிருகமே!
பறக்க வேண்டிய என்னை..
சிறகொடித்து சீரழித்த உன்னை..
கனவிலும் மறப்பேன் என்று நினைத்தாயோடா?
அழும் குழந்தை என்னை,
ஆர்ப்பரிக்கும் கடலாய் மாற்றியவனே.!
என்னைக் குத்தி குத்தி கிழித்த உன்னை
இரத்தம் சிந்த சிந்த கருவருப்பேன் மறவாதே!
நான் பாரதிடா…!
அந்த மிருகம் அனைத்தையும் முடித்துவிட்டு எழுந்தபோது, திவ்யா! தன் இருகண்களின் பார்வையும், பாரதியை வெறித்திருக்க, ஒற்றைக் கண்ணிலிருந்து நீர் கோடாய் வடிந்திருக்க, தன் இன்னுயிரை விட்டு விட்டு, இந்தப் பாழும் உலகத்திலிருந்து விடைபெற்றிருந்தாள்.
தன் மேல் உயிரையே வைத்திருந்த தமக்கையின் மரணத்தைக் கூட உணரவில்லை, அந்தப் பிஞ்சு.
திவ்யா இறந்துவிட்டதை அறிந்த மிருகம், அப்படியே அந்த காட்டுக்குள்ளேயே போட்டு விட்டுச் சென்றுவிட்டது.
தன் தமக்கையின் உயிரற்ற உடலோடு, இரவெல்லாம் இருந்த பாரதிக்கு, அந்த இரவும் குளிரும் வாட்டி வதைக்க, கத்தி கத்தி அழுது சோர்ந்து போனவள், இறந்த தன் தமக்கையையே, தன் பயத்திற்குத் துணையாக அணைத்துக் கொண்டாள். ஆடையற்ற தமக்கையின் வெற்று உடலுக்கு, தானே ஆடையாகவும் மாறிப் போனாள்.
அறியக்கூடாத வயதில், அனைத்தையும் அறிந்துகொண்ட பாரதிக்கு, அந்த இரவும், காட்டின் பலவித மரண ஓசைகளும், சதையை துளையிட்ட அந்த ஊசிக்குளிரும், வாழ்க்கையின் கொடுமையான பாடத்தை வலிக்க வலிக்க கற்பித்தன.
அந்த இரவின் தனிமையில் பீனிக்ஸ் பறவையொன்று, தன்னை கொன்று கூறு போட்ட நெருப்பிலிருந்து, தன்னைத் தானே மீட்டுக்கொண்டு, தன்னையும் அறியாமல் வெறிகொண்டு பறக்க ஆரம்பித்திருந்தது.
மறுநாள் விடியலில் வெறிநாயொன்று, இறந்த திவ்யாவின் உடலை கடித்து ஊருக்குள் இழுத்துச்செல்ல, கூடவே மயங்கிய நிலையில் இருந்த பாரதியும் இழுபட்டுச் சென்றாள்.
இரவெல்லாம் தேடிய பெற்றோருக்கு, ரோட்டில் நாய் இழுத்து வரப்பட்ட திவ்யாவையும் பாரதியையும், யாரோ அந்த நாயிடமிருந்து காப்பாற்றிய தகவல் வர, ஓடிச் சென்றவர்களுக்கு, திவ்யாவின் மரணம் அதிர்ச்சி அளிக்க, பாரதியின் நிலையோ, வெறித்த பார்வையும், நிலைத்த விழிகளுமாய்த்தான் இருந்தது.
எதையும் சொல்லக்கூடிய நிலையில் அவள் இல்லை. நடந்த நிகழ்வுகளில் கொடூரமாக பாதிக்கப்பட்டிருந்தாள், பாரதி.
திவ்யா இறந்து விட்டபடியால், திவ்யாவையும், பாரதியையும் பிரித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த பெற்றோர்கள், மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆபரேசனுக்கு ஏற்பாடு செய்த மருத்துவர்கள், பாரதி பிழைக்க 30% வாய்ப்பையே தர, உடைந்து போன தனசேகரும் லஷ்மியும், தேவையான பணத்தை கட்டிவிட்டு, அன்றிரவே ஒரே கயிற்றில் தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டனர்.
ஒருமகள் இறந்துவிட்ட நிலையில், தன் இன்னொரு மகள் பிழைத்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை, அவர்களுக்குச் சுத்தமாக இல்லை. பாரதியின் உடல் வாகு, அந்த நம்பிக்கையை அவர்களுக்கு கொடுக்கவும் இல்லை.
இது அத்தனையும், ஏதோ ஒரு மோன நிலையில் கோர்ட்டில் சொல்லி முடித்த திவ்யபாரதியின் உடல், திடீரென நடுங்க ஆரம்பித்தது. தன் இரு கைகளையும் உடம்பை மறைத்தார் போல் வைத்து குறுக்கிக்கொண்டாள்.
குளிரில் நடுங்குவது போல் அவள் பற்கள் தந்தி அடிக்க ஆரம்பித்தன.
திடீரென சத்தம் போட்டுக் கத்தியவள் “ஓ…அம்மா, எனக்கு வலிக்குதே! வலிக்குதே.. உடம்பெல்லாம் ஊசியா குத்துதே..!” என்று கண்களை மூடிக்கொண்டே மாறி மாறிக் கதறினாள்.
திடீரென, “திவி எழுந்துரு திவி! நாயெல்லாம் கத்துது.. திவி.., என்ன என்னவோ சத்தம்லாம் கேக்குது, எழுந்திரு திவி! ஒரே இருட்டா இருக்கு திவி! எழுந்திரு திவி! வா வீட்டுக்கு போகலாம், எனக்கு பயமா இருக்கு.” என்று குழந்தையாக மிளற்றியவள், அப்படியே மயங்கிச் சரிந்தாள்.