அத்தியாயம் – 10

செழியன் கொலையைப் பற்றிக் கேட்டதும் முதலில் அதிர்ந்தாலும், திவ்யபாரதிக்குத் தெரியும், செழியனின் கண்களில் எதுவுமே தப்பாது என்று. அனைத்திற்கும் தாயாராகத்தான் சரணடைந்திருந்தாள்.

அதனால் செழியன் கேட்டதும், ஆம் என்று ஒத்துக் கொண்டவள், கையோடு செழியனையும் கொன்றிருக்க வேண்டும் என்று அவனிடமே சொல்லவும்,

சிரித்து விட்ட செழியன், “எப்படி என்னையும் ஊசியால ஒரு இடம் பாக்கி…

அவன் வார்த்தைகளை முடிக்கும் முன், “ஷட் அப் செழியன்.” என்றாள், அந்த வார்த்தைகளை கூட தாங்கிக் கொள்ள முடியாமல்.

அவளின் கோபம், அவனுக்கு உதட்டில் மறைத்த புன்னகையை கொடுத்தது. அது, அவன் மீதான அன்பின் வெளிப்பாடு அல்லவா. தன் காதலுக்கான முதல் எதிர்வினை, தன்னவளிடமிருந்து அதுவும் பெயர் சொல்லி உரிமையோடு கூடிய வெளிப்பாடு. மனதில் வானை முட்டும் சந்தோஷம் அவனுக்கு, தன் ஒற்றைப்புன்னகையில் அனைத்தையும் மறைத்துக் கொண்டான்.

அதை வெளிப்படையாகச் சொன்னால்தான், மறுபடியும் நத்தையாக கூண்டுக்குள் சுருண்டு கொள்வாளே..!

திவ்யபாரதியின் கைகளை தனது கைகளுக்குள் எடுத்துக் கொண்டவன், அவள் உள்ளங்கையை திருப்பி, “இந்தக் கை அன்னைக்கு என்னை அடிக்கும் போதே, சொர சொரப்பா இருந்தது கண்ணம்மா.” என்றவன், தன்னவளைக் கண்டு கொண்ட தருணத்தை, அவளிடம் பகிர்ந்து கொண்டான்.

குற்றவாளிகளை வெளுத்து வாங்கி, உண்மையை அவர்கள் வாயிலிருந்து வரவழைப்பவன், இன்று முதல் முறையாக, ஒரு குற்றவாளியின் கைப்பிடித்து தான் கண்டறிந்த உண்மைகளை சொல்லிக் கொண்டிருக்கிறான். காதல் அவனை வெளுத்து வாங்கியதோ..!

சில மணி நேரங்களுக்கு முன்பு…

ஏட்டு சின்னச் சாமி வருவதற்காகக் காத்திருந்தவன், திவ்யபாரதி கொலை செய்ததற்கான முகாந்திரங்களை நினைவுப்படுத்திப் பார்த்தான்.

திவ்யபாரதி அவனது அறைக்கு வந்த அன்று நடந்த கொலையும் ஞாபகத்தில் வர, சட்டென்று நினைவில் ஏதோ உறுத்த, தன் ஃபோனை எடுத்து, நண்பன் தனக்கு அனுப்பியிருந்த திவ்யபாரதியின் வீடியோவை எடுத்துப் பார்வையிட, அதில் அவள் அவன் பெயரை வருடும் போது, பிக்சரை ஜூம் செய்து பார்த்தான்.

அதில், திவ்யபாரதியின் விரல்களில் காயம் பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டது. முன்பு காதல் போதையில் சரியாக கவனிக்காமல் விட்டதெல்லாம், இப்போது ஒன்றன் பின் ஒன்றாக நினைவில் வர, அன்று அவள் அடித்த போது கூட, அவளது உள்ளங்கை சொரசொரப்பாக இருந்ததை, இப்போது உணர்ந்தான். கம்பி வேலியை வளைக்கும் போதோ அல்லது தொடர்ந்து ஊசியால் தாக்கும் போதோ, அதன் எதிர் முனை… இவளை காயப்படுத்தி இருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டான்.

போலீஸ் மூளை அனைத்தையும் ஸ்கேன் எடுத்து வைத்திருந்தாலும், காதல் முன் மட்டுப்பட்டுப் போய் இருந்தது.

இதிலிருந்து ஒன்றை மட்டும் உறுதிப்படுத்திக் கொண்டான். அன்று அந்தக் கொலையை செய்தது, திவ்யபாரதியாகத்தான் இருக்க வேண்டும்.

அன்றைய இரவு, அந்த காம்பவுண்ட் சுவற்றின் முள் வேலியில் ஏறிய போது காயம்பட்டிருக்க வேண்டும். அதை மறைக்கவே அன்று நகுலன் முதற்கொண்டு மற்ற பத்திரிக்கையாளர்களையும், மறுநாள் அதே முள் வேலி வழியே வலுக்கட்டாயமாக ஏறச் செய்திருக்கிறாள். தான் அந்தப் பகுதியை ஆராய்ந்த போது, அவளே முன் வந்து காயம்பட்ட தன் கரங்களைக் காட்டியதும், தொடர்ந்து மற்றவர்களின் காயங்களும் ஞாபகத்தில் வந்து சென்றது.

அனைத்தையும் அவளிடம் பகிர்ந்துகொண்டவன், “இப்போ சொல்லு, என் மேல காதல் இல்லாமத்தான், என் பெயரக் கூட வருடிவிட்டியா பாப்பு..!” என்றான் காதல் பொங்க….

அவன் காதல் அவளை தடுமாறச் செய்ய, “என்ன DSP சார், இப்படித்தான் ஒரு குற்றவாளிய விசாரிப்பிங்களா, ரெஜினா மாதிரி அடிக்கிற அடியில், தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா?” என்று பேச்சை மாற்றினாள்.

அவள் பேச்சை மாற்றுவது புரிந்தது.

“அப்படியே கேட்டாலும், அந்த நாதரிங்க இருக்க இடத்த சொல்லிடுவியா பாப்பு.” என்றான் அவளைப் பற்றி நன்கு தெரிந்தவனாக.

“சொன்னா மட்டும், என்ன பண்ணப்போறீங்க, தூக்கிலயா போடப் போறீங்க. மாலை மரியாதையோட வெளிய அனுப்பி வைப்பீங்க.” என்றாள் விரக்தியில்.

“உண்மைதான். ஆனா… நீ கஷ்டப்பட்டது போதும் பாப்பு.. நான் பாத்துக்கிறேன், என்னை நம்புமா.” என்றான் நப்பாசையாக.

“முடியாது DSP. இவனுங்கள விட்டுட்டா மட்டும், எனக்கு பீச்ல சிலையா வைக்கப்போறீங்க, நாலு கொலை பண்ணாலும் நாற்பது கொலை பண்ணாலும், ஓரே தூக்கு மேடைதான் DSP சார்.” என்றவள், இதற்குமேல் என்னால் முடியாது என்று ஒரு ஓரமாகச் சுருண்டு படுத்துக் கொண்டாள்.

இதற்குமேல் அவளிடமிருந்து பதில் வராது என்று அறிந்து, அவள் படுத்துக்கொண்டதும், சிறையறையில் இருந்து வெளியே வந்தவன், தன் நாற்காலியில் தொய்ந்து போய் அமர்ந்து கொண்டான்.

இன்னும் அவளிடம் கேட்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது தான், மற்ற கொலைகள் பற்றியும், இந்த இருவரை அடைத்து வைத்திருக்கும் இடம் பற்றியும். ஆனால்,  அவளைக் காயப்படுத்தி இதையெல்லாம் அவனால் அறிந்துகொள்ள முடியாது, காயப்படுத்திக் கேட்டாலும் உண்மையைச் சொல்பவளும் அல்ல.

இதிலிருந்து அவளைக் காக்கும் வழிகள் அவன் கண்களுக்குப் புலப்படவே இல்லை. இப்போதைக்கு அவனால் முடிந்தது, அவளை காலையில் முதல் வேலையாக கோர்ட்டில் ஒப்படைப்பது மட்டுமே. நைட்டே, அவள் அரெஸ்ட்டான விஷயம் தெரிந்தால், கண்டிப்பாக அந்த மந்திரி உயிரோடு விடமாட்டான்.

அவனை மீறி, அவன் ஸ்டேஷனுக்குள் கால் வைக்க முடியாது தான். ஆனால் மேலிடத்தின் உத்தரவின் பெயரில், அவளை எங்காவது மாற்றி, காரியத்தை சாதித்துக் கொள்வார்கள் என்று நினைத்தவன், அந்த ஸ்டேஷனை விட்டு இம்மியளவும் நகரத் தயாராய் இல்லை.

திவ்ய பாரதி அறையிலிருந்து வெளிவந்தவனுக்கு, ரெஜினாவின் மீது கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது. திவ்யபாரதியின் முன் ரெஜினாவைப்பற்றி குறை கூறாதவனுக்கு, காதலியே ஆனாலும், தன் காவல்துறையை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. ஆனாலும், ரெஜினாவை கண்டிக்காமல் விட்டால் அவன் செழியன் இல்லையே! மேலும் அவள் மனதில் தான் இன்னும் இருப்பதை, அவன் ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று நினைத்தவன், இன்டெர்காமில் ரெஜினாவை தனது அறைக்கு அழைத்தான்.

வந்தவள், அவனுக்கு ஸல்யூட் அடித்து நிற்க, “என்ன பண்ணி வக்சிருக்கீங்க, ரெஜினா, கோர்ட்ல ஒப்படைக்கபோற அக்….”   பழக்க தோஷத்தில் அக்கியூஸ்ட் என்று சொல்ல வந்தவன், அதை வார்த்தையால் கூட சொல்ல மனமின்றி, “திவ்யபாரதிய இப்படி காயப்படுத்தி வக்சிருக்கீங்க, நாளைக்கு கோர்ட்ல கேட்டா, பதில் சொல்லப்போறது நீங்க இல்ல. நான்தான் பதில் சொல்லனும்.” என்று கடுப்படிக்க,

“அப்புறம் என்ன சார்? கடத்தி இருக்க ரெண்டுபேரையும் கொலை பண்ற வரைக்கும் வேடிக்கை பார்க்கச் சொல்றீங்களா?” என்றவள், “நாங்க பார்த்து பெருமைப்படுற DSP செழியன் இப்படி இல்ல, அக்கியூஸ்ட விசாரிக்கிற விதத்துல, இந்நேரம் கடத்தப்பட்டவங்க அவர் முன்னாடி நின்னுருப்பாங்க.” என்றாள், வேண்டும் என்றே அக்கியூஸ்டில் அழுத்தம் கொடுத்து.

பெருமூச்சொன்றை இழுத்து விட்டவன் “நானும் மனுசன் தான், எனக்கும் மனசு இருக்கு, காக்கி சட்டைய உடம்புக்குத்தான் போட்டு இருக்கனே, தவிர மனசுக்கு இல்ல.” என்று வலி நிறைந்த குரலில் சொன்னவன்.

“உங்களுக்குத் தெரிஞ்சத விட, எனக்கு அவள நல்லா தெரியும். அவ உயிரே போறதா இருந்தாலும், உண்மைய சொல்ல மாட்டா! ஏன் இவ்ளோ அடிச்சிங்களே, அவகிட்ட இருந்து உண்மைய வாங்க முடிஞ்சிதா உங்களால..? அவ எப்படியும் உண்மையைச் சொல்ல மாட்டாங்கறதாலதான் DGPக்கு கூட சொல்லாம, நேரா கோர்ட்ல ஒப்படைக்கப் போறேன்.” என்றான்.

“ஒரு கொலைகாரிக்குப் போய், இவ்ளோ சப்போர்ட் பண்றீங்களே சார்! இத… உங்ககிட்ட எதிர்பார்க்கல..”

“இருக்கலாம், அவ கொன்னது ஒன்னும் நேருவையோ, காந்தியையோ இல்லையே…?” என்றான் கடுமையான குரலில்.

“அப்போ, கோர்ட்ல பொய் சொல்லப்போறீங்களா? உங்களக் கொல்ல வந்தது அவ இல்லைன்னு. அவளைக் கைது பண்ணது, நேர்மைக்குப் பேர் போன, DSP செழியன் இல்லையா?”  என்றாள் காட்டமாக.

“இல்ல, கோர்ட்ல என்ன நடந்ததோ, அதத்தான் சொல்வேன்.” என்றான் உள்ளே போய்விட்ட குரலில்.

“அப்போ அவளுக்கு தூக்கு உறுதி.” என்றவள் “ஒரு தூக்கு தண்டனை கைதிய இன்னும் மனசுல சுமக்க மாட்டீங்கன்னு நம்புறேன்.” என்றவளின் நம்பிக்கையை பொய்யாக்கும் விதமாக,

“அவ இல்லை என்றாலும், என் இதயத்தை ஆள இன்னொருத்தி வரமுடியாது. இந்நேரம் அவ மேல கைய வச்சது வேற யாரா இருந்தாலும், என் முன்னாடி இப்படி நின்னு பேசிட்டு இருக்க முடியாது.” என்றவன், “உன்னோட நேர்மைக்கு மதிப்பு குடுத்து எதும் பேசாம விடுறேன், ப்ளீஸ் கெட் ஔட்.” என்றான் வாசலை கை காட்டி.

இந்த டிப்பார்ட்மென்டில் சேர்ந்ததில் இருந்தே செழியனை காதலித்து வந்த ரெஜினாவுக்கு, அவன் மனது தெளிவாக விளங்கிவிட, கலங்கிய கண்களை மறைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

மறுநாள் முதல் வேலையாக திவ்யபாரதியை கோர்ட்டில் ஒப்படைத்தான், செழியன்.

நேரடியாக ஜட்ஜ் முன் விசாரணை நடைபெறுவதால், அவள் காயப்பட வாய்ப்பில்லை. அதிலும் உண்மையை சொல்லாவிட்டால், ஒரு வாரமோ பத்து நாட்களோ நீதி மன்றக் காவலில் எடுத்து விசாரணை நடைபெறும். அதுவும் தன் கஸ்டடியில் தான் வருவாள் என்பதால், பார்த்துக்கொள்ளலாம் என்று அவசரம் அவசரமாக தன் செல்வாக்கை மறைமுகமாகப் பயன்படுத்தி, உடனடி விசாரணைக்கு ஏற்பாடும் செய்து விட்டான்.

அன்று நீதிபதி விஜயலக்ஷ்மி தலைமையில் இரண்டாவது கேஸாக, திவ்ய பாரதியின் கேஸ் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நாளை கோர்ட்டில் சந்திக்கலாம்…!