அத்தியாயம்: 30

அம்மு எழிலரசியைக் காண வந்திருந்தார் அமைச்சர் முருகானந்தம். அவள் வழக்கு விசயமாக வெளியில் சென்றிருப்பதாகச் சொல்லவும் ஸ்டேஷனுக்குள்ளயே கோவத்துடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.

இரண்டு நாட்கள் முன்பு அவரது மாமனார் அழைத்து ஷ்யாம் இங்கிருந்தும் சென்று விட்டான் என்றபோது அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

திருவண்ணாமலையில் பெரும்புள்ளி அவரது மாமனார். சொந்தமாக ஒரு கலைக் கல்லூரியும், என்ஜினியரிங் கல்லூரியும் உண்டு.

கலைக்கல்லூரியை சின்னமகள், அதாவது முருகானந்தத்தின் மனைவி பெயரிலும், என்ஜினியரிங் கல்லூரியை பெரிய மகள் தேஜஸ்வினியின் தாயார் பெயரிலும் எழுதி வைத்துவிட்டவர்.

பெரிய மகளும், மருமகனும் ஒரு கார் விபத்தில் இறந்துவிட இந்த வயதிலும் என்ஜினியரிங் கல்லூரியை அவர்தான் நிர்வகித்துக் கொண்டிருக்கிறார்.

அவரது மகன் ஷ்யாம் சுந்தர், தேஜஸ்வினி வழக்கிலிருந்து வெளியே வந்தவன் திரும்ப தந்தையைச் சந்திக்க வரவே இல்லை. திருவண்ணாமலை வந்து விட்டதாக அழைத்துச் சொன்னதுகூட அவரது மாமனார்தான்.  

சரி, விபத்தில் அலைபேசி எரிந்துவிட்டதால் அழைத்திருக்கமாட்டான் என்று சமாதானப் படுத்திக்கொண்டவர், புது  APPLE I PHONE ஒன்றினை வாங்கி தனது ஆட்கள் மூலம் கொடுத்தனுப்ப, “தம்பி வேற வாங்கிடுச்சாம்” என்ற பதிலோடு அது பிரிக்கப் படாமலே திரும்பி வந்தது.

அக்காவின் இறப்பைத் தாங்கமுடியாமல் அங்கு சென்றிருக்கிறான் என நினைத்துத்தான் அவரும் தொல்லை செய்யாது விட்டு வைத்திருந்தார்.

ஆனால் அவனோ, தான் படிக்கும் மருத்துவக் கல்லூரிக்கு மாதக் கணக்கில் மருத்துவ விடுமுறை (மெடிக்கல் லீவ்) எடுத்துவிட்டு, அவனது தாத்தாவுடன் என்ஜினியரிங் கல்லூரியின் நிர்வாகங்களில் பங்கெடுப்பதாக அவருக்குச் செய்திகள் வந்த வண்ணமிருந்தன.

சமீபத்திய அவனது செயல்பாடுகள் ஒவ்வொன்றும் அவரை சிந்தையில் ஆழ்த்தி இருக்க, தேஜஸ்வினியை ஏன் கொன்றதாக தானே ஒத்துக்கொண்டான் என்பதே அவருக்குப் புரியாத புதிர்தான்.

கல்லூரியில் சிலரை கடந்த வாரங்களில் வேலையை விட்டுத் தூக்கி இருப்பதாகவும் செய்திகள் வர கடுங்கோபத்தில் இருந்தார் அவர்.

‘ஒழுங்காகப் படித்து முடிப்பதை விட்டுவிட்டு இதென்ன தேவையில்லாத வேலை? இந்த தலை இடியெல்லாம் வேண்டாம் என்றுதானே அவனை மருத்துவம் படிக்க வைத்தது’ திடிரென அவன் மாற்றத்திற்கான காரணம் புரியாமல் குழம்பினார். 

அதே எண்ணைத்தான் திரும்பவும் வாங்கி வைத்திருந்தான். ஆனால் அலைபேசியில் அவனை நெருங்கக் கூட முடியாத நிலையில் அவரை நிறுத்தி இருந்தவன், இரண்டு நாட்களாக எங்கிருக்கிறான் என்ன செய்கிறான் என்ற தகவலே இல்லாமல் இருந்தான். ஒரே மகன் வேறு.

அதில்தான் மிருகம்போல் அங்குமிங்கும் உருமிக்கொண்டிருந்தார் முருகானந்தம்.

அவனது நண்பர்கள், அவன் போகக்கூடிய இடங்கள் என எல்லாத்தையும் விசாரித்து விட்டார். எங்கும் அவனைப் பற்றிய தகவல் இல்லை. கடைசியாக திருவண்ணாமலை  சந்திப்பில் (ஜங்ஷன்) ஒரு போலீஸ் ஜீப்பில் ஏறிச் சென்றதாகத்தான் அவருக்குத் தகவல் கிடைக்க நேராக அம்முவைத் தேடி வந்துவிட்டார்.

இரண்டு நாட்கள் முன்பு அவள்தானே கல்லூரியின் நூலகத்துக்கு விசாரிக்கச் சென்றது. அந்தத் தகவலும் அவருக்குக் கிடைத்திருந்தது.

ஷ்யாம் சுந்தரை கைது செய்ததும் அவள்தான். அமைச்சர் என்று தெரிந்தும் தொலைபேசியை எடுக்காத திமிர்பிடித்தவள். கொலை வெறியில் நடமிட்டுக் கொண்டிருந்தார். அதில் அம்மு உள்ளே நுழையவுமே பாய்ந்து விட்டார். 

“ஏய் போலீஸ்காரி! அப்பனும் மகளும் சேர்ந்து என் புள்ளைய எங்க வச்சிருக்கீங்க?” என்றார் எகிறிக்கொண்டு. டிஜிபி யின் மகள் என்ற தைரியம்தான் அவளின் அந்த திமிருக்குக் காரணம் என்று நினைத்துவிட்டார். அதில் செழியனையும் இழுத்துப் பேச, அவளுக்கு ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது. 

அவரைப்பற்றி அவ்வளவாக தெரியாதவள், தேஜஸ்வினியின் வழக்கை கையிலெடுத்தப் பிறகு அறிந்தே வைத்திருந்தவள்

அமைச்சர் என்ற பதவிக்காக விட்டுவைத்தாள்.

அதில், “பையனைக் காணோம்னு கம்ப்ளைண்ட் குடுத்துட்டுப் போங்க. கிடைச்சா தேடித்தரேன்.” என்றாள் அலட்சியமாக.

“ஏய் என்ன விளையாடுறியா? அவன் ஸ்டேஷன்லருந்து வந்த அப்புறம் என்கிட்ட திரும்பி வரவே இல்ல” என்றதும் உள்ளுக்குள் அதிர்ந்தாள்.

கல்லூரியில் விசாரித்ததில் அவன் ஊரில் தாத்தா வீட்டில் இருப்பது தெரிந்தாலும், அவன் தந்தையைக் காண வரவே இல்லை என்பது அவளுக்குப் புதுச் செய்தி. மனதில் குறித்துக் கொண்டாள்.

அது எதையும் முகத்தில் காட்டாமல், “அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?” என்றாள். தோப்பியைக் கழற்றி மேஜையில் வைத்தபடி.

மந்திரி என்றும் பாராமல், அவள் காட்டிய அலட்சியம் அவரது கோபத்தை மேலும் கிளறி விட்டது. 

“உன் புருஷன்தானே அவனைக் கூட்டிட்டுப் போனது. அவன் பெயர் என்ன? வெற்றி தமிழ்ச்செல்வன்!”

வெற்றியையும் அவன் இவன் என்று பேசவும் கடுப்பானவள், “இது ஸ்டேஷன். உங்க பார்லிமெண்ட் கிடையாது பார்த்து பேசுங்க” என்று எச்சரித்தாள். 

“யார் கூட்டிட்டுப் போனாங்களோ அங்கப் போய் கேளுங்க!” என்றவள் “ஏன் நீங்க சொல்லித்தானே உங்க பையனைக் காப்பாற்றிக் கூட்டிட்டுப் போனார்? என்றாள் ஏளனமாக.

“நான் எங்க சொன்னேன்? போன் பண்ணும்போதே உங்க பையன் வீட்டுக்கு வந்திருவான்ற பதிலைத்தான் சொன்னான் அவன்” என்று எரிச்சலாக மொழிந்தவர், அவன் உங்கப்பன் கூட சேர்ந்து வேற ஏதோ ப்ளான் பண்றான்” என்றதும், கோபம் தலைக்கேற, “பையனைக் காணோம்னா கம்ப்ளைண்ட் குடுத்துட்டு கிளம்பிட்டே இருங்க. தேவையில்லாம பேசுனீங்கன்னா அமைச்சர்னும் பார்க்க மாட்டேன்” என்றாள் எச்சரித்து.

அவர் அம்முக்காக காத்திருக்கும் வேளையில்தான் அவரது நண்பரும் கல்வி அமைச்சருமான சுயம்புலிங்கம் அழைத்து, “இரண்டுபேரும் இலேசு பட்டவனுங்க இல்ல” என்று செழியனைப் பற்றியும் வெற்றியைப் பற்றியும் எச்சரித்திருந்தார்.

அதில், “என் பையனுக்கு மட்டும் எதாவது ஆச்சி… உன் புருஷன உன் கண்ணு முன்னாடியே போட்டுத் தள்ளிடுவேன்” என்றதும், “போட்டுடு” என்றாள் அவரின் முதுக்குக்குப் பின்னால் நின்றவனைப் பார்த்துக் கொண்டே.

அதிர்ந்து, “ஏய், என்ன மரியாதை தேயுது” என்றவர் அவளின் பார்வை வித்தியாசம் உணர்ந்து திரும்பிப் பார்க்க, பின்னால் கைகளைக் கட்டிக் கொண்டு நேர்ப்பார்வைப் பார்த்து நின்றிருந்தான் வெற்றி. அவனது தடைக்காலம் முடிந்து பணிக்குத் திரும்பி இருந்தான்.

இதுவரை அவனை நேரில் கண்டிராதவர், அவனின் அசாத்திய உயரத்திலும், அசராது நின்றிருந்த தோரணையிலும் சற்றே மிரண்டார்.

“அப்புறம் சார்! என்ன இந்தப் பக்கம்? என்று சாதாரணமாகக் கேட்டவனின் தோரணையிலயே அவருக்குக் கிலிப் பிடித்தது.

இருந்தும் வெளியில் காட்டிக்கொள்ளாமல், “நீதான்..நீதான்.‌ என் பை..ய” என்றவர் அவனது உஷ்ணப் பார்வையில் அப்படியே பாதியில் நிறுத்தினார்.

“என்ன சொன்னீங்க? சரியா கேட்கல. திரும்பச் சொல்லுங்க!” என்றவன் நிதானமாக அம்மு அமர்ந்திருந்த நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டான். அவன் நெருங்கி வந்ததுமே அவளும் தானாக எழுந்து வழி விட்டிருந்தாள்.

“நீ.. நீங்கதான் என் பையனை எங்கயோ ஒழிச்சு வச்சிருக்கீங்க” என்றார் தடுமாறி. மரியாதைத் தானாக வந்தமர அவன் இதழ்கள் புன்னகையில் வளைந்தது.

நின்று கொண்டிருந்தவரை அவன் அமரக்கூடச் சொல்லவில்லை. அதுவே அவருக்குக் கோபத்தைக் கிளறினாலும், அவரது மகன் உயிர் இப்போது ஆபத்தில் இருக்கிறது. அதனால் அவனிடம் பம்மியே வந்தது அவரது பதில்கள். தானே அவன்முன் அமர்ந்து கொண்டார்.

இதுவரை பொம்பளைதானே என்று அம்முவிடம் அந்த எகிறு எகிறியவருக்கு அவனிடம் அப்படி சரளமாகப் பேச வரவில்லை.

“என் பையன் லாஸ்ட்டா போலீஸ் ஜீப்பிலதான் ஏறினதா…”

அவர் முடிக்கும்முன், “நாம ஒருத்தருக்கு மரியாதையைத் தந்தாதான் நாமளும் அதே மரியாதையை எதிர்பார்க்க முடியும். பாருங்க! நீங்க பண்ண டார்ச்சர்ல மேடம் எவ்ளோ கோபமா இருக்காங்கன்னு” என்று அருகில் நின்றிருந்த அம்முவை கைக்காட்ட அவருக்கு ஒன்றும் புரியவில்லை. 

‘இவன் என்ன கேட்ட கேள்விக்கு சம்மந்தமே இல்லாம பேசிட்டு இருக்கான்’ மனசுக்குள் பொருமினார்.

அவனோ,

“மேடம் வேற ரொம்ப ரொம்ப சாஃப்ட் கேரக்டர் .எவ்ளோ சாஃப்ட்டுன்னா கட்டின புருஷனையே போட்டுத் தள்ளுற அளவுக்கு சாஃப்ட். அதனாலதான் நீங்க அத்தனை ஏய் போட்டும் அமைதியா நிக்கிறாங்க. 

இதையே நீங்க வேணும்னா ஸ்டேஷனுக்கு வெளிய சொல்லிப் பாருங்களேன்! மேடம் எவ்ளோ சாஃப்ட்னு தெரியவரும்” என்றதும் அவருக்குப் புரிந்து போனது.

சற்றுமுன் அவன் மனைவியை மரியாதையின்றிப் பேசியதைக் கூறுகிறான். ‘மிரட்டுகிறானா?’ இருந்தும் அமைச்சர் என்ற கர்வம் தலைத்தூக்க இறுமாப்புடன் அமர்ந்திருந்தார்.

அதே மனநிலையில்தான், நின்றிருந்தாள் அம்முவும். ‘இவன் என்ன பண்ணிட்டு இருக்கான். இதெல்லாம் யாராச்சும் இவன்கிட்ட கேட்டாங்களா?’ முறைத்தபடி அவனைத்தான் பார்த்திருந்தாள். 

அவளே அமைச்சர் என்ற பதவிக்காக மட்டுமே பொறுத்துக் கொண்டு போனால் இவன் வேறு அதையேச் சொல்லிக் காட்டியதில் எரிச்சல் மண்ட நின்றிருந்தாள்.

“சார்…” என்ற முருகானந்தம் இடையிட, “இருங்க சார் சொல்லி முடிச்சிடுறேன். எனக்கு அப்பப்போ கணக்க அப்பப்பவே நேர் பண்ணிடனும்” என்றதும் மனசுக்குள் பல்லைக் கடித்தார். 

மன்னிப்புக் கேட்காமல் விடமாட்டான். ஏன் சிறு துரும்பைக்கூட அவனிடமிருந்து வாங்க முடியாதென்று புரிய, திரும்பி,

“சாரி மேடம்! மகனைக் காணுமேங்கிற தவிப்பில கொஞ்சம் ஹார்ஷா பேசிட்டேன்” என்று அம்முவிடம் மன்னிப்பு வேண்ட, ‘அடப்பாவி இதுக்கா இவ்ளோ பெரிய லெக்சர் அடிச்ச?’ எனப் பார்த்திருந்தாள் அவள்.

தன் கண்முன்னாடியே, அது யாராக இருப்பினும் தன்னவளை தவறாகப் பேச விட்டுவிடுவானா என்ன? ஏன் கொலையும் செய்வாள் பத்தினி என்பதாக அவள் இருந்தாலும், அவள் அவனவள்.

அம்முவையும், ‘ஏன் அமைதியாக இருந்தாய்?’ என்ற கண்டனப் பார்வைப் பார்த்தவன், “இப்போ சொல்லுங்க! என்ன பிரச்சனை?” என்றான் கூலாக.

“ஷ்யாம் சுந்தர்” என்றார் அவர் குரல் உயர்த்தாமல்.

“ஆமா அவனுக்கென்ன? அன்னைக்கேதான் வெளிய விட்டாச்சே!” என்றவன் குளிர் கண்ணாடியை வாயால் ஊதித் துடைத்தான்.

அவள் காட்டிய அதே அலட்சியம். அவருக்குப் பற்றிக்கொண்டு வந்தது. ஆனால் அவரது மகனது உயிர். 

முதலில் அவருக்கு வெற்றியின் மீது சந்தேகமே வரவில்லை. அவன் அன்று அவருக்குச் சாதகமாக நடந்து கொண்டதில் அவனை இஷ்டப்படி வளைத்துக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தார்.

வெற்றிதான் அம்முவின் கணவன் என்பதும் அவர் அறிந்திராதது. ஆனால் சுயம்பு லிங்கம் அழைத்துச் சொன்னதும், செழியன், வெற்றி இருவரைப் பற்றியும் காவல்துறையில் தனக்கு நம்பிக்கையானவர்களிடம் விசாரிக்க, அம்மு வந்து சேர்வதற்கு முன்னரே அவர்களைப் பற்றிய தகவல்கள் அவருக்கு வந்திருந்தது.

இருவரும் தேவைப்பட்டால் சட்டத்தையே சட்டத்திற்கு புறம்பாக நிறைவேற்றுபவர்கள் என்று தெரிந்ததும் அரண்டு போனார். அதுவும் செழியனின் மருமகன் அவன்தான் என்ற தகவலும் தெரியவர, எல்லாம் ஒரே குடும்பம். சும்மா விடுவானா?

அதில், “நீங்கதான் அவனை எங்கேயோ மறைச்சி வச்சிருக்கீங்க” என்றார் தேய்ந்த ரெக்கார்டாக…

நிமிர்ந்து ஒரு பார்வைப் பார்த்தவன், “எதை வச்சி அப்படிச் சொல்றீங்க” என்றான்.

“இவங்களைக் கட்டிக்கிட்டது நீங்கதானே?” அம்முவின்மீதான மரியாதை மழலையாய் நர்த்தனமாடியது அவரது வாயில்.

“சோ!” என்றவனின் பார்வையில், 

“இதுதானே சார் உங்க குடும்ப வழக்கம். கேஸ் முடிக்க முடியாட்டி யாரும் அப்பாவியைப் புடிச்சி போட்டுத் தள்ளுறது.” என்றார் வெறுப்பாக.

“உங்கப் பையன் அப்பாவியா இருந்தா ஏன் சார் பயப்படுறீங்க. கண்டிப்பா வீட்டுக்கு வருவான்” என்றவன் அவரை கீழப் பார்வைப் பார்த்து, 

உங்க கல்குவாரில தேடிப்பார்த்தீங்களா?” என்றான். 

அவர் அதிர, அவன் இதழ்கள் புன்னகைத்தது. 

அதில் ஆயிரம் அர்த்தம் இருக்க அவருக்குப் பகீரென்று இதயம் அடித்துக் கொண்டது.

“உங்க மகன்தானே? உங்களைப்போல, எங்கயாச்சும் கல்குவாரில மூழ்கி முத்தெடுத்துட்டு இருப்பான். தேடுங்க!” என்றவன் வெளியில் கைக்காட்ட அதற்குமேல் மூச்சே இல்லாமல் வெளியேறியவரை நம்ப முடியா அதிர்ச்சியுடன் பார்த்திருந்தாள் எழிலரசி.

அடுத்த இரண்டு மணி நேரங்களில் முருகானந்தத்தின் ஆட்கள் கல்குவாரி குட்டையில் இறங்கி முழுவதும் அலசி ஆராய்ந்துவிட்டனர். முருகானந்தம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அவரது ஈ சி ஆர் பங்களாவில் அமர்ந்திருக்க, கல்வி அமைச்சர் சுயம்பு லிங்கமும் அவருடன் தான் மது அருந்திக் கொண்டிருந்தார். 

அடிக்கடி இளம்பெண்கள் கல்குவாரியில் விழுந்து தற்கொலை என்ற செய்தியெல்லாம் கண்ணில் மின்னி மறைய, ஏசி குளிரிலும் வியர்வையில் தொப்பையாக நனைந்திருந்தார் முருகானந்தம். 

“அய்யா பாடி எதும் கிடைக்கலைங்கய்யா” என்று அவரின் ஆள் வந்து சொன்னதும்தான் மூச்சை இழுத்து விட்டார். 

“யோவ்! உன் பேச்சைக் கேட்டுத்தான் இதுல இறங்கி இருக்கேன். தேவை இல்லாத விசயத்தில உன் பையன் தலையிட்டுக்கிட்டு இருக்கான் சொல்லி வை!

காணாப்பொணமா ஆக்கிடுவேன். அது ஒன்னும் எனக்குப் புதுசில்ல!” 

மிரட்டிக் கொண்டிருந்த சுயம்புலிங்கம் உண்மையில் அதற்கான முயற்சிகளை ஏற்கனவேச் செய்திருந்தார்.

“அப்போ, நீதான் என் பையனை மறைச்சி வச்சிருக்கியா?” எகிறிக்கொண்டு வந்தார் முருகானந்தம்.

“இதுவரைக்கும் செய்யல. ஆனா செய்ய வச்சிடுவான் போல இருக்கு உன் பையன். கைல கிடைச்சான்னு வை…” என்றவர், கண்ணாடி டம்ளரில் இருந்த மதுவை அப்படியே வாய்க்குள் சரித்துக் கொண்டார். கோபத்திலும் மூக்குமுட்ட அருந்திய மதுவிலும் கண்கள் இரண்டும் கோவைப்பழமாய் சிவந்துக் கிடந்தது.

“ஒரு ஆணியும் புடுங்க முடியாது” அவர் முடிக்கும்முன் சத்தமிட்டார் முருகானந்தம்.

இருவரும் மாறி மாறி அடித்துக்கொள்ள அவர்கள் பேச்சின் நாயகன் ஷ்யாம் சுந்தர் காணமல் போய் முழுதாக இரண்டு நாட்கள் கடந்திருந்தது.

“மேலிடத்திலருந்து இந்த வழக்க முடிக்கச் சொல்லி ஒரே பிரஷர் யா! உன் முகத்துக்காக அவனை விட்டு வச்சிருக்கேன்” என்ற சுயம்புலிங்கம் ஏற்கனவே அவரது ஆட்கள் மூலம் முருகானந்தத்திற்குத் தெரியாமல் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்.

“அந்த பொண்ணு ஏ எஸ் பி அவ பேரென்ன? அவள விசாரிச்சியா? அவங்கப்பன் லேசு பட்ட ஆளில்லை சொன்னனே!

சட்டத்தால முடியாததை சத்தமே இல்லாம முடிச்சி வச்சிருவான்.” என்றதும் முருகானந்தத்திற்கு வயிற்றுக்குள் பகீரென்றது.

அவர் காதில், “உன் பையனா? எங்கயாச்சும் கல்குவாரில மூழ்கி முத்தெடுத்துட்டு இருப்பான் அங்கப் போய்த்தேடு!” என்ற வெற்றியின் குரல் மீண்டும் மீண்டும் ரீங்காரமிட்டது.

அவருக்கு அரசியல் புதிதென்றாலும் அதில் பழுத்து கொட்டை போட்டவர் சுயம்பு லிங்கம். அவர் சொல்லி செழியனைப் பற்றி நிறையவே கேள்விப் பட்டிருக்கிறார். ஆனால் இந்த வெற்றி…? 

சிந்தனையுடன் நடைபயின்றார். “அந்த எஸ் பி. வெற்றி தமிழ்ச் செல்வன். அவன் ஆள் எப்படி? மடங்குவானா? என்றார் நடையை நிறுத்தி. 

சென்னைக்கு பதவி உயர்வு பெற்று வரும்போதே மூன்றுபேரை என்கவுண்டரில் போட்டுவிட்டுத்தான் பணியிலேயே சேர்ந்தான் என்று இன்றுதான் அறிந்திருந்தார். அதில் சந்தேகமாகக் கேட்க, கடகடவெனச் சிரித்தார் சுயம்பு லிங்கம். 

“அவன் மூணுமாசம் முன்னாடி என்கவுண்டர் பண்ணினான் தெரியுமில்ல?” என்றதும், தலையாட்டி, “இன்னைக்குதான் விசாரிச்சேன்” என்றார்.

“அவன் போட்டதுல இரண்டுபேர் நார்த்லருந்து நான் வரவழைச்ச கூலிப்படையை சேர்ந்தவங்க. இன்னொருத்தன் யாருன்னே தெரியல. சேர்த்து வச்சி முடிச்சி விட்ருக்கான்” என்றதும் நடையை நிறுத்தி, “என்னய்யா சொல்ற?” என்று அருகில் வந்தார்.

“சொல்றதுக்கு என்ன இருக்கு. என் அக்கா மகனை கொன்னது அந்த செழியனோட பொண்டாட்டிதான். உனக்குதான் என் மாமா எக்ஸ் எம் எல் ஏ வ தெரியுமில்ல? அவர் பையன் ஒரு ஸ்கூல் புள்ள மேல கைய வச்சிட்டான்னு கொன்னுட்டா. அந்த சோகத்திலயே என் அக்காவும் ஜெயில்லயே என் மாமாவும் போய் சேர்ந்திட்டாங்க.” என்றவர் பெருமூச்சொன்றை விட்டார். 

அந்த வழக்க தோண்டி எடுத்தாலும் அவதான்னு ஃப்ரூப் பண்ண முடியாது. அப்படியே பண்ணாலும் அதுக்கு எத்தனை வருஷம் பிடிக்குமோ? சாதாரண டி எஸ் பியா இருக்கும்போதே பொண்டாட்டிய அவ்ளோ அழகா காப்பாற்றினவன் இப்போ டிஜிபி விட்டுடுவானா? அதான் வடக்குல இருந்து கூலிப்படையை வர வச்சேன் அவளை கொல்றதுக்கு.

கொரமண்டல் இரயில் விபத்து தெரியும்ல, அதிலதான் வந்தானுங்க. இந்த வெற்றி பயலும் வேறோரு மர்டர் கேஸ்ல அவனுங்க பின்னாடியே ஃபாலோ பண்ணிட்டு வந்திருக்கான். இரயில் விபத்துலருந்து எப்படியோ தப்பிச்சிட்டானுங்க, ஆனா அவனுங்க கொலை பண்ணத்தான் வந்திருக்கானுங்கன்னு இந்த வெற்றிபய எப்படியோ தெரிஞ்சிட்டு காடுமேடுன்னு தேடிப்போய் போட்டுத் தள்ளிட்டான். இப்போ அவனுக்கு மருமகனாவும் ஆகிட்டான். 

புருஷன், மக, மருமகன்னு அத்தனை பேரைத் தாண்டி அவளைத் தொடறது முடியாத விசயம்னுதான்‌ மூடிக்கிட்டு இருக்கேன்” என்றதுமே அதிர்ந்த முருகானந்தம் சுயம்புலிங்கத்தின் அருகில் இருந்த ஒற்றை இருக்கையில் தளர்ந்து அமர்ந்தார்.

அவர் கேள்விபடும் விசயம் ஒவ்வொன்றும் அவர் மகன் உயிரோடு கிடைப்பானா என்ற சந்தேகத்தைத் தர, கண்ணை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டார்.

அதேநேரம், அதே ஷ்யாம் சுந்தரின் முன் நின்றிருந்தான் வெற்றி. எப்போது அம்மு TJ கல்லூரியின் வளாகத்தில் காலை வைத்தாளோ, அப்போதே தற்காப்புக்காக, லோக்கல் ஸ்டேஷனில் சொல்லி ஷ்யாம் சுந்தரைத் தூக்கி விட்டான்.