கதவைத் தட்டியும் சத்தமே இல்லாமல் போக, மூடியிருந்த கதவையும், அவனையும் மாறி மாறிப் பார்த்தவளுக்கு பதற்றம் கூடியது.
கதவை ஓங்கித் தட்டி, “மாமா, கதவைத் திறங்க! வெளிப்பக்கம் பூட்டிக்கிச்சி” என்றாள்.
கதவைப் பூட்டியதே அவள் மாமன்தானே! சத்தம் கேட்டும் காதை மூடிக்கொண்டு அமைதியாகப் படுத்திருந்தான். வெற்றியைப் போல் அம்முவை எளிதாக ஏமாற்ற முடியாது. அதுவும் அவள் செல்லம் கொஞ்சிவிட்டாலோ இல்லை அவள் கண்ணீரைப் பார்த்துவிட்டாலோ அவனே மனம் இறங்கிவிடுவான்.
வெற்றி வேறு எச்சரித்துச் சென்றதில், கதறிக்கொண்டு ஓடி வருவாளென பயந்து முன்னெச்சரிக்கையாகக் கதவைப் பூட்டிவிட்டான்.
பதற்றம் மறைந்து கோபம் எட்டிப் பார்க்க, “மாமா, இப்போ கதவைத் திறக்கப் போறீங்களா இல்லையா? என்றாள் சீறும் குரலில்.
இவ்வளவு நடந்தும் கண்டுகொள்ளாமல் படுத்திருப்பவனின் மீதுள்ள கோபத்தையும் சேர்த்து வைத்து மாமனிடமும், கதவிடமும் காட்டிக்கொண்டிருந்தாள்.
என்றேனும் ஒருநாள் இந்தத் தனிமையை அவனுடன் சந்தித்துதான் ஆகவேண்டும் என்பது தெரியாத அளவிற்கு அவள் ஒன்றும் சின்னக் குழந்தையும் இல்லைதான். ஆனால் இந்த கட்டாயத் திணிப்பு கோபத்தை வரவழைத்தது.
‘என் புருஷன் கூட எப்போ வாழணும்னு எனக்குத் தெரியாதா? என் மனதின் இரணம் ஆற வேண்டாமா? வெறும் சதையா நான், படையல் போட? என் மேல் கொள்ளை கொள்ளையாக் காதல் வச்சிருக்கிறது உண்மைன்னா என்னோட வெறுப்பும், மறுப்பும் கொஞ்சமாவது மாற்றாமல் போய்விடுமா?’ ஒருநாள் கூத்தல்லவே இது. காலத்துக்கும் அவனின் கரைபடிந்த கைகளுக்குள் அவளால் கட்டுப்பட முடியாது. மனதின் குமுறல்களை கதவில் காட்டினாள்.
இதற்குமேல் அவளை சமாளிப்பது கடினம் என்று எழுந்து வந்தான் கார்த்தி.
“அம்மு! இந்த மாமா இங்க இருக்கணுமா? இல்லை ஊரோடவே செட்டில் ஆகணுமா?” என்றதும் கதவைத்தட்டும் சத்தம் அப்படியே நின்றுவிட அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் பெண்.
மழுக்கென்று கண்ணீர் எட்டிப் பார்த்தது. “மா..மா” என்றாள் கலங்கிய குரலில்.
“எனக்கு என் பிள்ளைங்க நல்லாருக்கணும் அம்மு! அவனுக்குச் சொன்னதுதான் உனக்கும். சண்டையோ சந்தோஷமோ இனி இந்த ரூமைத்தாண்டி அது வெளில வரக்கூடாது.
மாமா எப்பவுமே எதுக்குமே உன்னைக் கட்டாயப் படுத்த மாட்டேன். உனக்கு எப்பத் தோணுதோ அப்ப வாழ ஆரம்பி. ஆனா எதுவா இருந்தாலும் அந்த ரூமோட இருக்கணுமே தவிர இனியும் வெளில வந்துச்சி. இந்த மாமனை இனி நீ இங்க பார்க்க மாட்ட” என்றவன் கதவைத் திறந்துவிட்டு விட்டு அங்கிருந்து அகன்றான்.
அவன் பேசப் பேச உள்ளே சிலையாக நின்றிருந்தவள், அவன் பேசி முடித்ததும் தரையில் மடங்கி அமர்ந்து கதறினாள்.
அவள் அழுகைச் சத்தம் வெளியில் கேட்டாலும் அசையவில்லை கார்த்தி. மனதை இரும்பாக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான். இனி அழுதாலும் பிடிச்சாலும் அவன் பொண்டாட்டி அவன் பார்த்துக்கட்டும். ஆனால் அவனுக்கும் சட்டென்று விழிநீர் துளிர்த்தது.
அவள் இப்படிக் கதற தான் பார்த்துக்கொண்டு இருக்கும் நிலை வரும் என்று அவன் கனவிலும் எண்ணவில்லை. அவள் நல்லதுக்குதான் என்றாலும் தான் பேசியது அவளை எந்தளவுக்குப் பாதிக்கும் என்பதை நினைத்துத் துடித்துப் போனான்.
அவன் தோளில் ஒரு கரம் விழ, கலங்கிய கண்களுடன் நிமிர்ந்தவனை ஆரத்தழுவிக் கொண்டான் செழியன். படிக்கட்டின் விளிம்பில்தான் நின்றிருந்தாள் திவ்யபாரதியும். அவளின் கண்களும் நீரால் நிறைந்திருந்தது.
மாடியில் படபடவென்று தட்டும் சத்தத்தில் பதறி ஓடி வந்த கணவனும் மனைவியும் கார்த்தி பேசியதைக் கேட்டு ஸ்தம்பித்து நின்றிருந்தனர்.
“எல்லாம் சரியாகும் வாடா! தெரிஞ்சிதானே சேர்த்து வச்சோம்.” என்ற செழியன் நண்பனின் தோளில் கைப்போட்டு கீழே இழுத்துக்கொண்டு போனான்.
வெற்றியாலும் தாங்க முடியவில்லை. தன்னவளால் தாங்கமுடியாத வார்த்தைகளைப் பேசிய கார்த்தியின் மீதும் கோபம் வந்தது.
தரையோடு தரையாய் கதறுபவளை நெஞ்சோடு வாரிச்சுருட்டிக் கண்ணீரைத் துடைக்க வேண்டும்போல் இருக்க, முடியாமல் எழுந்தமர்ந்தான்.
என்னவென்று சொல்லி சமாதானப் படுத்துவது? நான் உன்னைத் தொடவே மாட்டேன் என்றா? அப்படிச்சொன்னால் அது பச்சைப் பொய்.
அவள் வேண்டும். நெருப்பை அணைக்கும் நீராய் அவள் வேண்டும் என்று ஆழ்மனம் துடிக்கும் துடிப்பை உணர்ந்திருக்கிறான். அவளுக்காக மட்டுமே தள்ளி வைத்துப் பார்த்திருக்கிறான்.
அப்படியே அவன் சமாதானம் செய்தாலும் ஏற்றுக்கொள்வாளா? குஷ்டரோகியைப் பார்ப்பதுபோல் அல்லவா விலகிச் செல்கிறாள்.
இன்னமும் தேம்பித் தேம்பி அழுபவளை அள்ளிக்கொள்ள மனம் உந்த உணர்வுகளைக் கட்டுப்படுத்தி கட்டிலின் விளிம்புகளை இறுகப் பற்றிக் கொண்டான்.
அவள் விசும்பலில் அதற்குமேலும் முடியாமல் போக, “இப்போ என்ன பண்ணிட்டேன்னு இந்த அழுகை அழற” என்றதும் பட்டென்று அழுகையை நிறுத்தி நிமிர்ந்தாள்.
அவனுக்கும் தெரியும் இது அவனுக்கான அழுகை இல்லை. அவள் மாமன் பேசிய வார்த்தைகளுக்கானது என்று. இருந்தும் கேட்டான். அவள் அழுகையை நிறுத்த அவனுக்கு வேறு வழி தெரியவில்லை.
“சொல்லு! இப்போ என்ன பண்ணிடுவேன்னு அழற? இல்லை நான் எதாவது பண்ணனும்னு ஆசைப்படுறியா?” என்றதும் எழுந்தே நின்றுவிட்டாள்.
நான் எதற்காக அழுதால், இவன் என்ன புரிந்து கொண்டிருக்கிறான். திகைத்து விழித்தாள்.
“ஒழுங்கா அமைதியா வந்து படுக்கணும். இல்ல தூக்கிட்டு வந்து படுக்க வைப்பேன்” என்றதும் அழுகை இருந்த தடம் தெரியாமல் மாறி இருக்க, விழிகளை துடைத்து விட்டு நேர்ப்பார்வையாய் அவனை முறைத்தாள்.
அதில் ‘முடிந்தால் தூக்கிப் பார்’ என்றவளின் விழிகள் சுவற்றில் குறுக்கு நெடுக்காக கார்த்தி மாட்டி வைத்திருந்த களறி விளையாடும் கத்தியில் படிந்து மீண்டது.
‘இது என் அம்முக்குட்டி’ சிரிப்பில் துடித்த இதழ்களை மறைத்து, களறிக் கத்தியைத் தானும் பார்த்தவன், “களறில மட்டுமில்ல கட்டில்லயும் உன்னை ஜெயிக்க முடியும். வீணா என்னை உசுப்பேத்தாம வந்து படு” என்றான்.
அது உண்மையுங்கூட. களறியில் அவனை விஞ்ச ஆளில்லை. அவன் தோற்பது அவளிடம் மட்டுமே அதுவும் அவன் விட்டுக்கொடுப்பதால் என்பதை நன்கு அறிவாள்.
அவன் பேச்சே வேறு திசையில் இருக்க அவனிடம் வாயைக் கொடுக்க விரும்பவில்லை அவள். அதுவும் முதல் தனிமைவேறு அவளை அச்சுறுத்தியது என்னவோ உண்மைதான்.
இவ்வளவு பிரச்சனை நடந்திருக்க, கத்திக்கொண்டு வெளியில் ஓடவும் முடியாது. அவளது மாமன் கதவைத் திறந்து விட்ட ஒலியைக் கேட்டுதான் இருந்தாள். இருந்தும் அவன் பேச்சை மீறும் தைரியம் அவளிடத்தில் இல்லை.
அதில் படுக்கையைக் கீழே விரிக்க, “வெளியவே உன்கிட்ட வந்து படுத்த எனக்கு இங்க கீழ இறங்கி வர்றது ஒன்னும் பெரிய விசயமில்ல” என்றதும் கோபத்துடன் நிமிர்ந்தாள்.
“இப்போ என்னதான் வேணும் உங்களுக்கு?” அதற்குமேலும் பொறுக்க முடியாமல் வாயைத் திறந்தாள்.
“நீதான் வேணும்னு சொல்லதான் ஆசை. ஆனா அன்னைக்கு சொன்னதுதான் இன்னைக்கும் நீயா…” என்றதும் தலகாணி ஒன்று பறந்து வந்து அவன் முகத்தில் விழுந்தது.
“கீறல் விழுந்த ரேடியோ மாதிரி சொன்னதையே சொல்லிக்கிட்டு…” முனங்கிக்கொண்டே அவனுக்கு அடுத்த பக்கமாய் முதுகைத் திருப்பிக்கொண்டு படுக்க குறுநகை புரிந்தான் அவன்.
இதாதான் அவனது எழிலரசி. சமாதானப்படுத்தவெல்லாம் முடியாது. ஆனால் கோபப் படுத்தினால் சமாதனமாகி விடுவாள். மெல்ல நகைத்துக் கொண்டான். அதன்பின் அவனும் அவள் பக்கம் திரும்பவில்லை. அவளும் திரும்பவில்லை.
ஆனால் அம்முவிற்கு என்ன முயன்றும் தூக்கம் மட்டும் வரவில்லை. அவனது அருகாமைத் தந்த பதற்றம் தூங்க விடவில்லை. வெகுநேரம் வரை திரும்பாமலே படுத்திருந்தவள் புரண்டு படுத்தாள்.
மெல்ல விழி தூக்கிப் பார்க்க சீரான மூச்சுடன் தூங்கிக் கொண்டிருந்தான் அவன். ஒரு கையை தலைக்குக் கொடுத்து, மறுக்கையை நெஞ்சில் வைத்துக்கொண்டு மல்லாந்து படுத்திருந்தான்.
அவனது அடர்ந்த கேசம், காற்றுக்கு அலை அலையாய் அவனது பரந்த நெற்றியில் அசைந்தாடியதை தன்னையும் மீறி இரசித்திருந்தாள்.
அலையும் கேசத்தை ஒதுக்கி அவன் நெற்றியில் இதழ்பதித்து இவன் என்னவன் நீ ஒதுங்கிப்போ என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது. தன் எண்ணம் போகும் திசையறிந்து பதறி எழுந்து அமர்ந்தாள்.
இரண்டு நிமிடம் அவனை ஆழ்ந்து பார்ப்பதற்குள் என்ன நினைப்பு இது தலையை உதறிக்கொண்டாள். அவள் நினைத்ததை அவளே உடைத்துவிடுவாள் போலத் தோன்ற, நெஞ்சுக்கூடு படபடவென அடித்துக் கொண்டது.
அருகிலிருந்த தண்ணீரை பாட்டிலோடு தொண்டையில் கவிழ்த்துக் கொண்டவள், கழிவறையும் சென்று வந்து முகத்தை நன்றாக அடித்துக் கழுவிக்கொண்டு வந்தாள்.
நிச்சயம் தூக்கம் வராது என்று தோன்றியது. அடுத்த பக்கமாய் சென்று கன்னத்தில் கை வைத்து அமர்ந்து விட்டாள். பக்கத்தில் ஆழ்ந்த மூச்சுடன் தூங்குபவன் மீது பொறாமையே வந்திருந்தது.
இவனுக்கு மட்டும் ஒன்னுமே இல்லையா? சிறு கோபம் துளிர்க்க, அவன் பக்கமாய் திரும்பினாள்.
திரும்பாதே என்று எச்சரித்தது மனது. என் புருஷன் நான் பார்ப்பேன்! மனதுடன் சண்டை பிடித்தாள்.
இந்த நிர்மலமான முகத்தைத்தானே இரசிக்கப் பிடிக்கிறது. அவன் விழித்திருக்கும்போது அதில் ஒளிந்து கிடக்கும், துரோகமும், ஏமாற்றமும் அவனை இரசிக்க விடுவதில்லையே. கழிவிரக்கத்தில் லேசாய் நீர்த் துளிர்த்தது.
அவனின் அடர்ந்த மீசையையும், தடித்த உதடுகளையும் பிடித்துக் கிள்ளி இழுத்து, ‘ஏன்டா என்னை ஏமாற்றினாய்? ஏன்டா நீ நல்லவனாய் இல்லை?’ என்று கேட்கவேண்டும் போல் இருக்க அவன் முகத்தயே பார்த்தபடி அமர்ந்து விட்டாள்.
“என்னை இரசிச்சது போதும் தூங்குடி!” என்ற குரலில் திகைத்து விழித்தாள் அவள்.. அவனது விழிகள் இன்னமும் மூடித்தான் கிடந்தது. அவன் படுத்திருந்த தோற்றத்திலும் எந்த மாற்றமும் இல்லை.
பிரம்மையோ? என்றவள் கன்னத்தில் கை வைத்து அமர்ந்து விட படக்கென விழி திறந்தான் அவன்.
அவள் எழுந்து கழிவறை செல்லும்போதே விழித்திருந்தான். தூங்குவாள் தூங்குவாள் என்று காத்திருந்தவன், இருட்டிலும் பளபளத்த அவளது கண்ணீரைக் கண்டதும் வழக்கம்போல் அவளை சீண்டிவிட்டான்.
அவன் விழி திறந்ததும் அவளுக்கு ஒருமாதிரியாகிப்போனது. கிராதகன் எப்போ முழிச்சான்னு தெரியலையே? தான் இரசித்ததை கண்டு பிடித்திருப்பானோ? என்று தோன்ற இருட்டிலும் நாக்கைக் கடித்தாள்.
என்ன நினைப்பானோ? என்ற கூச்சத்தில் கண்கள் சுருங்க நாக்கைக் கடித்தவளின் தோற்றம் அவனைக் கவர, “என்னை இரசிச்சு முடிச்சாச்சா? இப்போ நான் தூங்கவா?” என்றான் சிரிப்புனூடே.
“நான் ஒன்னும் யாரையும் இரசிக்கல” என்றாள் படக்கென்று திரும்பி.
“ஆஹான்! அப்புறம் இந்த நள்ளிரவில் கன்னத்தில் கை வைக்கும் அளவுக்கு என்ன பலத்த சிந்தனையாம்?”
அவனது கேலிக்குரலே தன்னைக் கண்டுகொண்டான் என்பதை உணர்த்த மானசீகமாய் தலையிலடித்துக் கொண்டாள்.
அவன் நினைத்தது போல் தான் அவனை இரசிக்கவில்லை என்று நிருபித்து விட துடித்தவள், “இப்போ என்ன? என் சிந்தனைக்கு காரணம் தெரியணும் அவ்ளோதான?” என்று திரும்பியவள், “பூ எல்லாம் தூவி அவ்ளோ அழகா காதலைச் சொன்னவன், கல்யாணத்தன்னைக்கு ஏன் வரலன்னு யோசிச்சுட்டிருக்கேன் போதுமா?” என்றதும், “அடிங்…” என்றவன் எழுந்துகொள்ள, படக்கென திரும்பி படுத்துக் கொண்டாள்.
அவனுக்கு புன்னகை விரிந்தது. ‘இராட்சசி’ முனுமுனுத்துவிட்டு அவன் திரும்பிக்கொள்ள, அது அவளுக்கும் கேட்டது. உதட்டில் மெல்லிய முறுவல் படர உறங்கி விட்டிருந்தாள்.
மறுநாள் அவளது எண்ணத்தின் நாயகனே அவள் முன்பு வந்து நிற்பான் என கனவிலும் நினைக்கவில்லை அவள்.