அத்தியாயம் : 26

“மிரு குட்டி, அன்னைக்கு கேன்டீன்ல வச்சி படிச்சிட்டு இருந்தியே, அந்த புக்கோட பெயர் என்ன?” 

செழியன் பணியின் நிமித்தம் காலையிலயே கிளம்பியிருக்க,  கார்த்தியும் ஊரிலிருந்து வந்த அசதியில் உறங்கிக் கொண்டிருந்தான். மனைவியுடனும், கொழுந்தியாவுடனும் அமர்ந்து காலை உணவை அருந்திக் கொண்டிருந்த வெற்றி கேட்டதும் அவனது மனையாள் அம்முவுக்கு புரைக்கேறியது. 

ஒருவேளை அன்று, தான் விரலியை (பென் ட்ரைவ்) திருடியதை கண்டுபிடித்திருப்பானோ! அவ்ளோ கஷ்டபட்டதுக்கு ஒரு பலன் கூட இல்லையே! குட்டி சாத்தான் புக்குக்குள்ள தலையை விட்டுட்டு இருக்காமாதிரி இருந்து போட்டுக் குடுத்துட்டாளா? எதுக்கு சம்மந்தமில்லாத கேள்வி? தங்கையைப் பார்த்தாள்.

“நீதிக் கதைகள் மாமா. ஏன் மாமா?” என்றாள் அவள் புரியாத பாவத்துடன்.

“அடிப்பாவி! அப்ப நீ டாக்டருக்கு படிக்கல. கதை புக்குதான் படிக்கிறியா? என்ற தமக்கையை மிரு முறைத்துவிட்டு, “அந்தநேரம் அதான் கைல இருந்துச்சி சும்மா புரட்டிட்டு இருந்தேன் கா” என்றாள்.

“அது யார் குடுத்தது?” சாதாராணமாக சப்பாத்தியை பிய்த்து வாயில் வைத்தபடி வெற்றி கேட்கவும், சிறிது திணறிவிட்டு, தமக்கையிடம் பார்வைச் சென்று வர, “என் ப்ரண்ட்தான் மாமா” என்றவள் தட்டுடன் எழுந்து செல்ல, வெற்றியின் பார்வை யோசனையுடன் அவளைப் பின் தொடர்ந்தது.

அடுத்து நேராக வெற்றி சென்றது அந்த மூன்று பெண்களின் வீட்டுக்கும்தான். சம்பவம் நடந்து முடிந்து ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகி இருக்க, மற்ற இரு பெண்களின் அவனுக்கு பெரிதாக தகவல்கள் எதும் கிடைக்கவில்லை.

ஒரு பெண்ணின் வீட்டில் மட்டும்,  “எப்பவும் புக்கும் கையுமாதான் இருப்பா. ஒரு தப்பு தண்டாக்கும் போகமாட்டா. என் பொண்ணு தற்கொலை பண்ணியிருக்க மாட்டா சார்! அந்த பெண்ணின் தந்தை தாங்கமுடியாமல் கதறினார்.

 “அவ ரூமைக்கூட நான் மாத்தல. அவ ஞாபகமா அப்படியேதான் வச்சிருக்கேன்” என்று அவர் கண்ணீர் சிந்த, அந்த அறையைப் பார்வையிட்டான் வெற்றி. அந்த பெண் பயன்படுத்திய அலைபேசி முதற்கொண்டு பத்திரப்படுத்தி வைத்திருந்தார் அந்த மனிதர். அது சார்ஜ் இல்லாமல் உயிரற்றிருந்தது. “இதை நான் எடுத்துக்கவா?” என்றவன் கேட்டதும், “திருப்பி குடுத்துடுவீங்கல்ல சார்?” என்று அதன் சார்ஜரையும் எடுத்து வந்து தந்தார் அந்த மனிதர்.

அவரின் மனதை நோகடிக்க விரும்பாதவன் அங்கேயே அலைபேசிக்கு உயிருட்டிவிட்டு சிறிதுநேரம் காத்திருக்க, அவன் கண்ணில் பட்டது அதே நீதிக்கதைகள் புத்தகம்.

புத்தகங்களுக்கு நடுவே அலமாரியில் சிறிது மறைவாக வைக்கப்பட்டிருந்தது. நிரம்ப நாள் ஆகிவிட்டதில் தூசி படிந்திருக்க எடுத்து தட்ட, அதிலிருந்து இலேசாகப் பவுடர் போல் பறக்க, யோசனையுடன் புரட்டினான். இலேசான நெடி அடிக்கவே முகர்ந்து பார்க்க சிறிது நேரத்தில் தலை சுற்றிக்கொண்டு வந்தது. ‘கொக்கைன்’ அவன் இதழ்கள் முனுமுனுத்தது.

சிறிது தண்ணீர் கொண்டுவரச் செய்தவன் தன்னை சமாளித்துக் கொண்டு உயிருட்டப்பட்ட அலைபேசியை ஆராய அது வெறுமையாகவே இருந்தது. விசாரணையின் போது யாரையோ காப்பாற்ற போலீசாரால் அனைத்து தகவல்களும் அழிக்கப் பட்டிருக்கவேண்டும் என்று யூகித்துக் கொண்டவன், அந்த புத்தகத்தை மட்டும் தன்னுடன் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

அந்த மூன்று பெண்களின் அலைபேசி அழைப்பின் தரவுகளை யாருக்கும் தெரியாமல் வருவித்திருந்தான். அதில் அவர்கள் மூவரும் கடைசியாக அழைத்தது தேஜஸ்வினிக்குதான் என்று தெரிந்ததும் ஏதோ தோன்ற, தேஜஸ்வினியின் வழக்கில் சம்மந்தப்பட்ட பொருட்களை எடுத்து வரச் செய்தான். 

அவளது அறையை ஆராய்ந்தபோது அவளது பழைய அலைபேசி ஒன்றை கண்டெடுத்திருந்தனர். அதில் உருப்படியான தகவல்கள் எதும் கிடைக்காததில் அவள் சம்பந்தப்பட்ட பொருட்களுடன் பாதுகாத்து வைத்திருந்தான் வெற்றி.

அதில் பெரிதாக ஒன்றும் இல்லை. புலனத்தைத் (வாட்ஸ் ஆப்) திறந்து அதை பொறுமையாக ஆராய்ந்து கொண்டே வர விழிகளில் அதிர்ச்சி.

கடைசியாக அந்தப் பெண்கள் இறந்தநாளில் ஷ்யாம்சுந்தரின் புகைப்படத்தோடு அவனது அலைபேசி எண்ணையும் புலனத்தில் அனுப்பி இருந்தாள் தேஜஸ்வினி.

கண்கள் இரண்டும் சட்டென்று கோவைப்பழமாய் சிவந்து விட்டன. அலைபேசியை எடுத்தவன், குறிப்பிட்ட எண்ணுக்கு அழைத்தான்.

ஒரே ரிங்கிலேயே எடுக்கப்பட, ஹலோ என்பதற்குள் கோபத்தில் படபடவென பொரிந்து தள்ளினான்.

“இதுக்கும் முன்னாடி மூணு பொண்ணுங்களோட சாவுக்கு காரணமா இருந்திருக்கான் அவன். அது மட்டும் உண்மையா இருந்துச்சி அவன் சாவுக்கு நான்தான் காரணமா இருப்பேன். நினைவிருக்கட்டும்!” சொல்லிவிட்டு அலைபேசியை துண்டித்தவனால் இரண்டு நிமிடங்களுக்கு நிலைகொள்ள முடியவில்லை. கண்களை மூடி நாற்காலியில் பின்பக்கமாய் சாய்ந்துகொண்டான்.

அவன் அழைத்த எண்ணிலிருந்து திரும்பத் திரும்ப அழைப்புக்கள் வந்து கொண்டே இருந்தன. எதையும் எடுக்கவில்லை அவன். லேசாக நாற்காலியை காலால் உந்தித்தள்ளியபடி முன்னும் பின்னுமாய் ஆடிக்கொண்டிருந்தவனின் விழிகள் அழுந்த மூடிக் கிடந்தன.

ஆசைப்பட்டவளை வெகு போராட்டங்களின் பின் கைப்பிடித்தும் நிம்மதியான உறக்கமில்லை. இந்த வழக்கு அவளை எந்தவிதத்திலும் பாதித்துவிடக்கூடாது என்பதற்காகவே எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் விலக்கி வைத்திருக்கிறான்.

இந்த வழக்கு எப்படி செல்லுமோ? தன் காதல் வாழ்வு இனிக்குமா? பெருங்கலக்கம் அவனிடம்.

இந்த உண்மை தெரியவந்தால் என்றேனும் தன்னை மன்னிப்பாளா? சிறுவயதிலிருந்து தப்புக்கு துணை நிற்கிறான் என்பதுதானே அவளது கோபமும். இன்றும் அதையே செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.

சிறு பெருமூச்சுடன் கண்திறந்தவன் ஷ்யாம் சுந்தருக்கு அழைத்தான். அலைபேசி ஒலி எழுப்பியதேத் தவிர அந்தப்பக்கம் எடுக்கப்படவே இல்லை. வரும் ஆத்திரத்திற்கு அவன் கழுத்தைப் பிடித்து நெரித்தால் என்ன? என்று தோன்றியது.

வெறுப்புடன் அலைபேசியை மேஜையில் போட்டவன் மீண்டும் கண்மூடிக்கொண்டான்.

அன்று இரவு ஊரிலிருந்து திரும்பி இருந்த கார்த்தி, வெற்றி தலகாணியைத் தூக்கிக் கொண்டு வெளியில் வரவும், பல்லைக் கடித்தான்.

‘இதுங்கள வச்சிக்கிட்டு…’ சலிப்புடன் கோபமும் வந்தது. 

“விட்டுட்டுப்போனா வழிக்கு வரும்னு பார்த்தா இதுங்க திருந்தலியே!’ இப்படியே விட்டால் சரிவராது. மனதுக்குள் ஒரு முடிவெடுத்திருந்தான்.

இன்னும் எத்தனை நாளைக்கு? ‘ம்..கூம்’ என்று தனக்குத்தானே பேசிக்கொண்டவன், எண்ணியதை இன்று முடித்தே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவனது மருமகளின் வரவுக்காகக் காத்திருந்தான்.

சிறுது நேரம் கழித்தும் எழிலரசி வராமல் இருக்கவும், “ஏன்டா மகனை பொண்டாட்டியைக் கையோட கூட்டிட்டுல்ல வருவ. அவ வரலியாக்கும்” என்றான் நக்கலாக.

“அதை உம்ம மருமக கிட்டயே கேளுங்க தகப்பனாரே!” என்றவனின் குரலில் இருந்த மாறுபாட்டில் இருட்டில் வெற்றியின் முகத்தை ஆராய, என்றுமில்லாத வழக்கமாய் அது சோர்ந்துக் கிடந்தது. வழக்கமான உற்சாகம் இல்லை அவனிடம்.

அருகில் படுத்திருந்தவன் கார்த்தியின் பக்கம் திரும்பவும் இல்லை. வானத்தையே வெறித்தபடி படுத்திருந்தான். 

எதுவோ சரி இல்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரிய, “ஆயிரம் இருந்தாலும் புருஷன் பொண்டாட்டி சண்டை அறையோட இருக்கணுமே தவிர அம்பலம் ஏறக்கூடாது” என்றான், அவனைப்போலவே வெற்று வானத்தை வெறித்தபடி. 

அதில் படக்கென திரும்பி பெறாத் தந்தையின் முகம் காண, “அப்பா அப்பான்னு வாய் வார்த்தையா சொன்னா மட்டும் பத்தாது” என்ற கார்த்தியும் அழுத்தமாய் மகனின் முகத்தை ஆராய்ந்தான்.

“உங்களுக்கு வாய் வார்த்தையா கூப்பிடுறதா தோணுதா கார்த்திப்பா” அடிபட்ட குழந்தையாய் வெறுமையான குரலில் கேட்டவனைக் கண்டு கார்த்திக்கே ஒரு மாதிரி ஆகிற்று.

வழக்கம் போல் மெல்ல வெற்றியின் தலையை வருடி விட்டு எழுந்து கொண்டான் கார்த்தி. அந்த ஒற்றை வருடல் சொல்லியது அந்த வார்த்தையை கார்த்தி, அவன் மனதிலிருந்து சொல்ல வில்லை என்று. தானும் எழுந்தமர்ந்து கொண்டான்.

தங்களது வாழ்க்கையைப் பற்றிய கவலையில் கார்த்தியின் நெற்றிக் கோடுகள் சுருங்கி முகம் தெளிவில்லாமல் இருப்பதைக் கண்டான்.

“இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கிறதா உத்தேசம்?” தந்தையின் கேள்வியில் உதட்டைச் சுழித்து, “தெரியலை” என்றான்.

அவனுக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. சற்று முன் அறையில் நடந்தது நினைவிலாடியது.

அறையில் படுத்து தூங்கி இருந்தாள் எழிலரசி. எப்போதும் உள்ளே படுக்க மாட்டாளே? சந்தேகம் கொண்டவனாய், “ஏய் மூஞ்செலி என்ன உடம்பு சரி இல்லையா? என்றவன் அவளருகில் நெருங்க, கண்ணை மூடிக்கொண்டு கிடந்தவள் பதறிக் கொண்டு எழுந்தமர்ந்தாள்.

“என்ன வேணும்” என்றாள் அவன் நீட்டி இருந்த கையைப் பதற்றத்துடன் பார்த்து.

தூங்குவது போல் நடித்திருக்கிறாள். முகம் கருத்தது அவனுக்கு. காய்ச்சலோ என்று நெற்றியில் தொட்டுப் பார்க்கத்தான் கையை நீட்டி நெருங்கி இருந்தான்.

அந்தளவுக்கு என்ன செய்து விடப்போகிறேன்? தீண்டத் தகாதவன் போல் துள்ளத் துடிக்க அவள் எழுந்து கொண்டதில் துடித்துப் போனான். மனது இரணமாய் வலித்தது. 

காலையில் வழக்கும் வேறு அவனை உண்டு இல்லை என செய்திருக்க, ஏற்கனவே மனதால் காயப்பட்டு வந்தவனை, தன் செயலால் அவளும் காயப்படுத்தி இருந்தாள்.

நிமிர்ந்தும் பாராமல், “உடம்பு சரி இல்லன்னு நினைச்சிட்டேன். சாரி!” என்றவன் வெளியேற, “நேற்று பொய்யா மழை பெய்ஞ்சா போல தொடறதுக்கு இதுவும் ஒரு சாக்கு” என்றவளில் அப்படியே நின்றுவிட்டிருந்தான்.

சாக்கு வைத்துத் தொட என்னை என்ன ஓடும் பஸ்ஸில் பெண்களை உரசும் கழிசடை என்று நினைத்து விட்டாளா? இவளைத் தொடறதுக்கு காரணமா தேவை? என் காதல் போதாதா? மனம் கசந்து வழிய பெருமூச்சொன்றை வெளியேற்றி தன்னை நிதானப்படுத்திக்கொண்டு அவள்புறம் திரும்பினான்.

“நேற்று உன்னைத் தொட்டேனா?” என்ன தடுத்தும் அதில் மெல்லிய கோபம் எட்டிப் பார்த்தது.

ஒரே பாயில் படுத்திருந்தானேத் தவிர அவன் ஆடைகூட அவளது அருகில் நெருங்கி இருக்க வில்லை. அதை நினைத்ததும், ‘இல்லை’ என்று மறுத்துத் தலை குனிந்தாள்.

திருமணமாகி கிட்டத்தட்ட இருபது நாட்களுக்கும் மேலாகப் போகிறது. முதல்நாள் தவிர்த்து அந்தரங்கமாகப் பேசியதும் இல்லை. ஏன் அப்படி ஒரு பார்வைக்கூட அவனிடமிருந்து வந்ததில்லை. சேட்டைகள் செய்வான். மற்றும்படி உரிமை இருந்தும் அதை எடுத்துக்கொள்ள இன்றுவரை அவன் முயன்றதும் இல்லை. 

அவனின் மெல்லிய கோபமே அவளை படபடக்கச் செய்திருந்தது.

“அப்போ சொன்னதுதான் இப்பவும். நீயா நெருங்காம நானாத் தொடமாட்டேன்” என்ற குரலில் அவள் நிமிரவும் வெற்றுப் பார்வையுடன் கடந்தவன், மீண்டும் திரும்பி, “வெளிய படுக்க வரலையா” என்றான்.

“இல்ல” தப்பு செய்துவிட்டக் குழந்தையாய் அவன் முகம் பார்க்கத் தயங்கினாள்.

“இந்த முடிவுக்கும், நேற்று நான் சொன்ன பொய்க்கும் சம்மந்தமிருக்கா” என்றதும் மௌனமாய் நின்றிருந்தாள்.

“அப்போ அதான் காரணமில்லையா?” என்றவன் அவள் முகத்தைக் காண அவள் நிமிர்ந்தாள் இல்லை.

மணம் மேலும் புண்பட வெளிவந்தவனைத்தான் தகப்பனும் புண்படுத்தி இருந்தான்.

எத்தனை நாள் இந்த படுக்கை என்று கேட்டதற்கு விட்டேத்தியாய் தெரியல என்று தோளைக் குலுக்கியவனை யோசனையோடு பார்த்திருந்த கார்த்தி, “உள்ள போய் படு” என்றான் வேறு எதுவும் சொல்லாமல்.

பதிலேதும் சொல்லாமல் மௌனமாய் தரையை வெறித்தான் மகன்.

“எதும் சொல்லலைன்னா என்ன அர்த்தம்?” அதற்கும் பதிலில்லாமல் போக மீண்டும் கோபம் வந்து விட்டது கார்த்திக்கு.

“ஒரு பெத்தத் தகப்பனா செழியனை நினைச்சிப் பார்த்தியா? வெளில காட்டிக்கலையேத் தவிர தினமும் அவன் மாடிக்கு வந்து உங்களை இந்த நிலைலப் பார்த்துட்டு திரும்பிப் போகும்போதெல்லாம் அவன் மனசு படுற பாடு என்னன்னு எனக்குத்தான் தெரியும்.

ஒரு நண்பனா அவன் மனசு கஷ்டப் படுறதை என்னால பார்க்க…” என்ற கார்த்தியை கை நீட்டி தடுத்தான்.

“இப்போ என்ன நான் உள்ள போகணும் அதானே?” என்றான் கார்த்தியை முறைத்து.

“அதேதான் மகனே!” என்று தலையை ஆட்டவும், தலகாணி போர்வையை உதறித் தோளில் போட்டுக்கொண்டு சென்றவன், நின்று திரும்பினான்.

“உள்ள போறேன்! உன்ர மருமவ எதும் அழுது கிழுது வெளில ஓடிவந்து சீனைப் போட்டா. உமக்கு இருக்கு.” என்றவன் ஒரு பார்வைப் பார்த்து உள்ளே செல்ல, ‘எப்படியோ பேசி ஒரு டிக்கெட்ட கவுத்தாச்சி’ என்று மனதோடு நிம்மதியானான் அந்த சேட்டைக்கார குழந்தைகளின் தந்தை.

திரும்பி உள்ளே வந்தவனைக் கண்டாலும் ஏதோ எடுக்க வந்திருக்கிறான் என கண்டு கொள்ளவில்லை அவள்.

ஒருமுறை அறையைச் சுற்றிலும் பார்வையால் வட்டமிட்டான். கீழே படுக்க முடியும்தான். தாராளமாகவே இடமிருந்தது. ஆனால் கார்த்தி சொன்னதுதான் மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

இனியும் பெரியவர்களை வருந்த வைப்பதில் அவனுக்கு விருப்பமில்லை. ஒருமுறை அவன் தரையில் படுத்து பழக்கிவிட்டால் அதையேதான் பிடித்துக்கொள்வாள். 

இருவருக்குமே வேறோரு வாழ்வதென்பது கிடையாது. ஒருவரை விட்டு ஒருவர் வாழப்போவதுமில்லை. அது உறுதியாகத் தெரிந்தபின் என் அருகாமையை அவளும் பழகிக் கொள்ளட்டும். முடிவெடுத்தவன் அவளை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு மறுபக்கமாய் கட்டிலில் படுத்துக்கொள்ள தடாலென எழுந்திருந்தாள் அவள்.

எதிர்பார்த்ததுதான். கண்டுகொள்ளவில்லை அவன். எதையோ செய்! முடியவில்லையா வெளியில் இருப்பவரை நீயே சமாளி! என்று விட்டுவிட்டான்.

அவள்தான் திகைத்து சுவரோடு சுவராக நின்றிருந்தாள். சற்றுமுன், நீ வராமல் தொடமாட்டேன் என்று வீராவசனம் பேசியவன் சட்டென்று அருகில் வந்து விழுந்தால் என்னவென்று நினைப்பது.

அவசரப்பட்டு மீண்டும் காயப்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணமும் ஓடியது. அதில், “என்..னாச்சி” என்றாள் தடுமாறி.

பதில் சொல்லவில்லை அவன்.

“உண்மையாவே மழையா?” மீண்டும் அவள் கேட்க, முறைத்துவிட்டு மறுபக்கம் திரும்பிக்கொண்டான்.

என்னாச்சி இவனுக்கு? வெளில போகும்போதுகூட நல்லாத்தானே போனான். யோசனை ஓடினாலும் இங்கேதான் படுக்கப்போகிறானா? என்ற கேள்வி பூதாகாரமாய் எழ, எப்படிக் கேட்பது என தயங்கினாள்.

ஏற்கனவே கேட்டது வேறு பிழையாக முடிந்ததில் வருத்தத்தோடுதான் படுத்திருந்தாள். இதையும் வேறு கேட்டுவைத்தால் என்ன சொல்வானோ? இதில் துரை வேறு வாயேத் திறக்கிறார் இல்ல. மனசுக்குள் பலவித யோசனை ஓட அசைந்தானில்லை அவன்.

அதில் அவனை முறைத்துவிட்டு, படுக்கையைத் தூக்கிக்கொண்டு அவள் வெளியேற ஓரக்கண்ணால் பார்த்திருந்தான்.

கதவைத் திறக்க அது திறக்கவில்லை. அதிர்ந்து அவனை ஒரு பார்வைப் பார்த்தவள், மீண்டும் அழுத்தம் கொடுத்து இழுத்தாள். வெளிப்பக்கம் பூட்டப் பட்டிருந்தது கதவு. திகைத்து, “மாமா…! என்று குரல் கொடுத்தாள்.

 

(திங்கள் சந்திக்கலாம் டியர்ஸ்…)