அத்தியாயம்: 22

ஒரு வழியாகத் திருமணம் நல்லபடியாக முடிந்திருந்தது. அதில் முதல் ஆளாக நிம்மதியான பெருமூச்சை இழுத்து விட்டவள் அம்முதான்.

தாலி கட்டும் கடைசிநொடிவரை உள்ளுக்குள் அலை அலையாய் பயம் ஊடுருவிக் கொண்டுதான் இருந்தது.

தந்தையும், கணவனும் அருகிலிருக்க தனக்கு ஏதும் நடந்துவிடாது என்று முயன்று தன்னைத் தேற்றிக்கொண்டாலும் எத்தனுக்கு எத்தனாக, ஏர்போர்ட், மருத்துவமனை துணிக்கடை என்று ஒவ்வொன்றிலும் தன் தடத்தை அழுத்தமாய் பதித்திருந்தவனின் மேல் மெல்லிய பயம் இருந்துகொண்டேதான் இருந்தது.

தாலி கழுத்தில் ஏறியநொடி அப்படி ஒரு ஆசுவாசம். இனி அவள் வெற்றியின்‌ மனைவி. யார் எதைச் செய்தாலும், ஏன் உயிரே போனாலும் அவன் மனைவியாகத்தான் போவாள். அந்தப் பெயர் ஒன்றே போதுமென்றிருந்தது.

அவனைத்தாண்டி யாரையும் மணம் முடிக்கும் தெம்பும் அவள் மனதிற்கு இல்லை.

வெற்றியின் செயல்பாடுகள்தான் அவளுக்கு பிணக்கேத் தவிர அவள் மீதான காதலில் என்றுமே அவன் குறை வைத்ததே இல்லை. 

ஏன் நேற்றேதான் கேட்டாளே! சிறுவயது முதல் அவளைச்சுற்றி வந்ததை. அவனை உணர்ந்து கொண்டநாட்களில் ஏற்கனவே அவள் ஊகித்திருந்ததுதான். அதனால்தானே இதுவரை அவன் காதலை வாய் வார்த்தையாய்ச் சொல்லவில்லை என்றாலும் அவன் மனதை ஆள்பவள் தான் ஒருவளே என்ற கர்வத்துடன் சுற்றிக் கொண்டிருக்கிறாள்.

இதில் என் மாமனுக்காகத்தான் என் பின்னால் சுற்றினானாமா? காதலிப்பது என்னையா என் மாமனையா? உதட்டை வளைத்தபடி தன் அருகில் நின்றிருந்தனைப் பார்த்தாள். 

பட்டுவேஸ்டி பட்டுச் சட்டையில் கணக்கச்சிதமாய் இருந்தான். மனதில் ஊசலாடிய பயத்தில் இதுவரை அவனை இரசித்திராத மனது, அவனுடைய மனைவியாகிவிட்ட கர்வத்தில் விதம் விதமாய் படம் பிடித்துக்கொண்டது.

தீர்க்க முடியாத கோபம் அவன்மீது இருக்கிறதுதான். ஆனால் வாழ்வில் ஒருமுறை நடக்கும் நிகழ்வல்லவா! தன்னவனோடான இந்த தருணங்களை அள்ளிக்கொள்ள விரும்பினாள்.

அதில் அவள் பார்வை வெற்றியையே பின்தொடர, அவனோ இப்போதும் கார்த்தியுடன்தான் கைக்கோர்த்து சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தான்.

நிஜம்மாவே மாமாவ பார்த்துக்கணும்னுதான் என்னைக் காதலிச்சானா?  முகத்தைச் சுருக்கினாள்.

 ‘என் மாமா. என் வெற்றி’ அங்கலாய்த்தது மனம்.

இயல்பாகவே பொஸஸிவ் எனும் பொறாமைக் குணம் அதிகம் கொண்டவள். ஆனால் அது தன்னிருக் கண்களான தன் மாமனும், காதலனும் எனும்போது யார்மீது காட்ட?

இருவர் மீதும் ஒருங்கே கோபம் வர உள்ளுக்குள் சிணுங்கினாள். 

அதுவும் வெற்றி திருமணம் முடிந்ததிலிருந்து அவள் பக்கம் திரும்பக் கூட இல்லை. தாலி கட்டும்போது அவளை சீண்டியதோடு சரி. அதுவும் பயந்திருந்த தன்னை இயல்பாக்கத்தான் என்று புரிந்தே இருந்தாள்.

நேற்று தன்னுடைய ஒதுக்கம் கோபத்தைத் தந்திருக்கும். இருக்கட்டும் தாலியை மட்டும்தான் வற்புறுத்திக் கட்ட வைக்க முடியும்னு புரிய வைக்க வேணாம். உதட்டை வளைத்தாள்.

திருமணம் முடிந்த கையோடு மணமகன் வீட்டிற்குச் செல்ல அனைவரும் தயாராக, “கார்த்திப்பா வீட்டுக்குப் போகலாம்” என்ற வெற்றியை செழியனும், பாரதியும் அதிர்ந்துதான் பார்த்தனர்.

அவர்களை மேலே பேசவிடாமல், “ஏன் கார்த்திப்பா வீட்ல எனக்கும் இடம் தரமாட்டீங்களா அத்த?” என்றதும் திவ்யபாரதி பேந்த பேந்த முழிக்க, தன்னையுமறியாமல் நெகிழ்ந்து தலையாட்டினான் செழியன்.

செழியன் முற்றிலும் இதனை எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் வியந்த பார்வையே சொல்லியது.

நேற்றிலிருந்து கார்த்தி தவித்த தவிப்பை அவனும்தானே பார்த்துக்கொண்டிருக்கிறான். ஒரு தந்தையாய் கார்த்தியின் தவிப்பு புரிந்தது. என்ன சொல்லி கார்த்தியை தேற்றுவது என்று தெரியாமல்தான் நேற்றிலிருந்து கணவனும் மனைவியும் தவித்திருந்தனர்.

சிறுவயதில் ஒற்றையாய் நின்றவனிடம் பிள்ளையைத் தூக்கிக் கொடுத்து விட்டான். இப்போது அவனிடமிருந்து பிடுங்கி வேறு ஒருவனுக்கு தூக்கிக் கொடுப்பதுபோல் இருக்க, மகளை விட, நண்பனை எப்படி இதிலிருந்து மீட்டெடுப்பது என்றுதான் அதீதக் கலக்கத்துடன் சுற்றி வந்தான் செழியன்.

கையில் அடிபட்டபோது, தான் வருந்தி அழைத்தும் வராத மருமகன், இப்போது தானாக வருவது தன் மகளுக்காக என்பதில் தந்தையாய் பெருமிதம் கொண்டவன் அதற்குமேல் சற்றும் தாமதிக்கவில்லை.

அடுத்த ஒரு மணிநேரத்தில் கார்த்தியும், செழியனும் சேர்ந்து மாடி வீட்டையேத் தலைகீழாக மாற்றி இருந்தனர். ஏற்கனவே இரட்டைப் படுக்கை அறைகள் கொண்ட விஸ்தாரமான வீடுதான் என்றாலும் புழக்கத்திற்கென அங்கு எதுவுமே இருக்காது. 

கார்த்தியும் இங்கு தங்கும் நாட்களிலும் நிலவை இரசித்தபடி வெளியில்தான் தூங்குவது.

அதில் பழசை எல்லாம் அகற்றி, புதுக் கட்டில் மெத்தை, பீரோ என அனைத்தும் வந்திறங்கியது.

அம்மு எழிலரசிக்கு இது இரவே தெரியும் என்பதில் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் உள்ளுக்குள் நிம்மதியாக உணர்ந்தாள்.

திருமணம் முடிந்து மறுவீடு செல்வதற்கு மாடியிலிருந்து இறங்கி தாய் வீடு வந்தவள் அவள் ஒருவளாகத்தான் இருப்பாள்.

மாலை நெருங்க நெருங்க மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டதுபோல் ஒரு எரிச்சல். சொல்லமுடியாத பயம், வெறுப்பு என்று கலவையான உணர்வில் சுற்றி வந்து கொண்டிருந்தாள் எழிலரசி.

அதில் வழக்கத்துக்கு மாறாக தாயின் முந்தானையையேச் சுற்றி சுற்றி வந்தாள்.

மண்டபத்தோடு உறவினர் அனைவரும் கிளம்பியிருந்தனர். இவர்கள் மட்டுமே வீடு திரும்பியிருக்க, செழியனும், கார்த்தியும் ஆட்களைக்கொண்டு பொருட்களை ஏற்றுவதும் ஒதுக்கி வைப்பதுமாக இருந்தனர்.

“என்னடி லீவுல வீட்ல இருந்தாலும் மாமன் வீடே கதின்னு கிடப்ப. இப்போ மாமன் வீடே புருஷன்வீடா ஆனதுக்கப்புறமும் இங்கயே சுத்தி வர்றீயே. என்ன விசயம்?

மாப்பிள்ளை இன்னும் வரலியா?” என்றதும் தோளைக் குலுக்கினாள் எழிலரசி. 

“எனக்கென்ன தெரியும்” அலட்சியமாய் பதில் வந்து விழ, 

“பல்லப் பேத்திருவேன்.” என்றாள் மகளை முறைத்து.

“இன்னும் நீ என்ன சின்னப் பிள்ளையா? உனக்காகன்னு பார்த்து பார்த்து இங்க வந்து தங்கிக்கவும் தயாரா இருக்கிற புருஷன்லாம் எல்லாருக்கும் கிடைச்சிட மாட்டாங்க டி! 

புத்தியாப் பொழச்சிக்க இல்ல செருப்படி வாங்குவ!” என்ற தாயை தானும் முறைத்தாள்.

“உங்க மாப்பிள்ளை ஒன்னும் எனக்காக வரல” என்றாள் முகத்தைச் சுருக்கி.

‘என் அம்முக்காகவும்தான்’ நேற்று வெற்றி சொன்னது ஞாபகத்தில் வந்து அவளை கேலி செய்தது. 

கீழே வந்த சிறிது நேரத்திற்கெல்லாம், “வெளில போய்ட்டு வந்திடுறேன்” என்று அனைவருக்கும் பொதுவாகச் சொல்லிச் சென்றிருந்தான் வெற்றி. இவள் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை. 

அந்தக் கடுப்பில் இருந்தவள் தாயிடம் தன் கோபத்தைக் காட்டினாள்.

எங்கப் போறேன்னு சொல்லிட்டுப் போனா குறைஞ்சிடுவானாமா? 

என்னதான் மனதளவில் தள்ளி நின்றாலும் தாலி ஏறியதும் அவனது பாராமுகம் தன்னையுமறியாமல் வலியைத் தந்தது.  

“நீ பேசறது சரி இல்ல அம்மு! உன் அசட்டுப் பிடிவாதத்தை மாப்பிள்ளைக் கிட்ட காட்டாத! சொல்லிட்டேன்.” எச்சரித்தத் தாயை முறைத்தாள். 

“எனக்கு மாமியார் இல்லங்கிற குறையே இல்ல” என்றவள் தாயிடமிருந்து தப்பிக்க

“மிருத்யூ எங்கம்மா? ஆளையேக் காணோம்.” என்று பேச்சை மாற்றினாள்

“பூஜைக்குன்னு காலைலயே எந்திரிச்சது தலை வலிக்குதுன்னு ஆறு மணிக்கே போய் படுத்துட்டாடி! 

ஒரொரு வீட்ல விஷேசம்னா, பிள்ளைங்க அது போட்டுக்கவா இது போட்டுக்கவான்னு ஆசை ஆசையா சுத்தி வரும்.

வந்து பொறந்திருக்கீங்களே அக்காவும் தங்கச்சியும். எந்த நகை எடுத்துக்குடுத்தாலும் இது வேண்டாம் அது வேண்டாம்னு… யப்பா உன்னைவிட அவதான்டி என்னைப் படுத்தி எடுத்துட்டா.” தாயாய் சின்ன மகளை நினைத்து அங்கலாய்த்தார்.

“ஏன்டி அவகிட்ட நீ எதும் சண்டை போட்டியா?” என்ற தாயை முறைத்து, “நான் ஏன்மா போடுறேன்” என்றாள்.

“ஒரு சின்ன விசயத்துக்கு ஒரு வருஷம் அவகிட்ட பேசாமயே இருந்தவதானடி நீ!” என்றதும் “எதும்மா சின்ன விசயம்?” என்றாள் என்னவோ இன்று நடந்ததைப் போல் கோபம் மேலிட.

“பாரு சொன்னதுமே உனக்கு எப்படி கோபம் வருதுன்னு. இந்த அவசரக் கோவம்தான் உன்னைச் சுத்தி இருக்க எங்களை எல்லாம் பாடா படுத்துது” என்ற திவ்யபாரதி குளித்து வந்திருந்த, அம்முவைப் பிடித்திழுத்து தன் முன்னால்  உட்கார வைத்து, காலையில் அலங்காரத்துக்கென குத்தியிருந்த கொண்டை ஊசிகளைப் பிரிக்க ஆரம்பித்தார். 

முடியைச் சிக்கெடுத்தபடியே, “அந்த வயசுல தெரியாம அட்டனன்ஸ் போட்டது குத்தமாடி?” என்ற தாயை “அம்மா…ப்ளீஸ்” என்றாள் தடுத்து.

“எந்த வயசுல? லவ்வரோட ஊர் சுத்தப்போன பொண்ணுக்கு இவ அட்டனன்ஸ் போட்டது குத்தமில்ல. அப்படித்தானே?” என்றதும் “அது ஏதோ தெரியாம…” என்றாள் திவ்யபாரதி.

“எதும்மா தெரியாம? ஒருநாளா இரண்டு நாளா பத்துநாள்கிட்ட அந்த வேலையை செஞ்சா உன் பொண்ணு. மதியம் மேல அட்டனன்ஸ் பொறுப்பு இவகிட்ட இருந்தா என்ன வேணும்னா செய்வாளா?  அதும் கண்டுபிடிச்சி எதாவது டீச்சர் கேட்டாலும் ரெஸ்ட்ரும் பொயிருக்கா, ஸ்டாஃப் ரூம் போயிருக்கான்னு சமாளிச்சிருக்கா.” அதை நினைத்ததும் இப்போதும் கோபம் வந்தது.

“அதான் சொன்னால்ல, ஒரு நாள் செஞ்சதால எங்க தானும் சேர்ந்து மாட்டிப்போம்னு பயந்து அந்தப்பொண்ணு சொன்னதுக்கு தலையாட்டினதா. அந்த வயசில அதுக்கும் மேல அவளுக்கு சிந்திக்கத் தெரியலடி” என்றதும் திரும்பி,

“உன் பொண்ணு அப்படி வெளிய கட் அடிச்சிட்டு போனா ஒத்துப்பியாம்மா?” என்றாள் கேள்வியாக, திவ்யபாரதி எதுவும் பேசவில்லை. 

சிறிதுநேரத்துக்கு அம்முவும் எதுவுமே பேசவில்லை.

“தப்பு செய்றவங்ககிட்ட இருந்து தள்ளி இருக்கத் தெரியணும், இல்லையா எதிர்த்துக் கேட்கத் தெரிஞ்சிருக்கணும், அதுவும் இல்லையா டீச்சர்கிட்ட தைரியமா செஞ்ச தப்ப ஒத்துக்கிட்டாவது மன்னிப்பு கேட்டிருக்கணும். இது எதையாவது செஞ்சாளா உன் பொண்ணு? அது என்னம்மா பயந்து மேல மேல அதேத் தப்புக்கு துணை நிக்கிறது? இதே அவ காதலிச்சி கட் அடிச்சிருந்தாக் கூட நான் கோவப் பட்டிருக்கமாட்டேன். என்றாள் முகம் சிவக்க. 

மகளின் சிவந்து விட்ட முகத்தைக் கண்டு நல்ல நாளுமாக இந்தப் பேச்சையே ஆரம்பித்திருக்கக் கூடாது என்று புரிந்தது. 

அக்காவின் திருமணத்தில் கூட கலையே இன்றி சுத்தி வந்த சின்ன மகளை நினைத்ததும் முன்புபோல் தமக்கைக்கும் தங்கைக்கும் எதும் பிரச்சனையோ என்ற ஆதங்கத்தில் கேட்டு விட்டார்.

அதில், “சரி விடுறி! அது எப்பவோ நடந்தது. அதுக்குதான் ஒரு வருஷமா பேசாம இருந்து தண்டிச்சிட்டியே!

அப்ப எப்படி இருந்தா தெரியுமா? யார்கிட்டயும் பேசாம. புக்கு புக்குன்னு அதே கதியா கிடந்தா. உன்னை ரொம்பவே மிஸ் பண்ணாடி” என்றதும், “அப்படி படிச்சதாலதான் இன்னைக்கு உன் சின்னப் பொண்ணு டாக்டர் மறந்திடாத. அதுக்கு நானும் ஒரு காரணம்” என்றாள் அம்முவும் சிரித்து.

“செய்றதையும் செஞ்சிட்டு எருமைக்கு பெருமை வேற” மகளை கேலி செய்தபடியே, அழகாகப் பின்னி முடித்து, புதிதாகக் கட்டிய மல்லியையும் தலை நிறைத்து வைத்துவிட்டார். 

தங்கையின் மீதானக் கோபத்தில் இருந்தவள் தன்னையறியாமலே இரவுக்கான அலங்காரத்தில் முழு நிலவாக பிரகாசிக்க, எழுந்து நின்றிருந்த மகளை திருப்தியாய் ஒருமுறைப் பார்த்த திவ்யபாரதி, ‘புடவை மட்டும்தான் பாக்கி’ என்று நினைத்தக் கொண்டாள்.

“இப்பவும் யார்கிட்டயும் பேசாம புக்கும் கையுமாதான் எனி டைம் இருக்கா. அதான் கேட்டேன்” என்று தாய் கேட்டதும் தலையாட்டி மறுத்தாள் எழிலரசி. 

“டாக்டர்னா சும்மாவா? எதும் படிக்க இருக்கும்மா விடு! அதும் இல்லாம மேரேஜ் ஆகிட்டா நானும் எங்க பிரிஞ்சிப் போய்டுவேனோன்னு நினைச்சி ஏங்கி இருப்பாம்மா. அதான் இங்கயே இருக்கப் போறேன்ல சரியாகிடுவா! என்றாள் தாயை சமாதானப் படுத்தும் விதமாக.

“எனக்குதான்டி அவ தொல்லை இல்லாம இருக்க முடியல” சிறிது நாட்களாக சின்ன மகள் தன் முந்தானையைப் பிடித்து வலம் வராததில் மனதிலிருந்த ஏக்கம் வெளிப்பட்டது. 

“அதெப்படிம்மா எனக்கு மட்டும் மாமியாரா இருக்க. அவளுக்கு மட்டும் அம்மாவா இருக்க. ஓரவஞ்சனைம்மா உனக்கு” என்றாள், தாயை இடுப்பில் கை வைத்து முறைத்து.

சிரித்த விட்ட திவ்யபாரதி, “அவ உன்னைப் போல இல்லடி.  நீ பேசாம இருந்தப்பவும் இப்படித்தான் எதையொ இழந்தா போலச் சுத்தி வந்தா, இப்பவும் அப்படித்தான் இருக்கா. அதான் இரண்டுபேருக்கும் சண்டையான்னு தெரியாமக் கேட்டுட்டேன் தாயே! என்று கும்பிடு போட்டார். 

“அவ உனக்கு மட்டும் இல்லம்மா எனக்கும் பொண்ணுதான்” என்று அம்மு சொன்னதும், “அதான்டி பயமா இருக்கு” என்றாள் அவளது தாய் சிரித்து.

 “ரொம்பப் பிடிச்சவங்களைத்தான நீ படுத்தி எடுப்ப. எப்படித்தான் உன் மாமன் உன்னை சமாளிக்கிறார் தெரியல?” என்றதும்,

“என்னவோம்மா எனக்குப் பிடிச்சவங்க சின்ன தப்புப் பண்ணினா கூட என்னால தாங்கிக்க முடியறதில்ல” என்று முடித்த போது ஒரு கையில் கிளிகூண்டும் மறுகையில் பெட்டியுமாக வந்து நின்றான் வெற்றி.

“வாங்க தம்பி” என்று திவ்யபாரதி வரவேற்க, கிளியைக் கண்டதும் அனைத்தையும் மறந்து “ஐ கிளி!” என்று ஓடிச்சென்று அவன் கையிலிருந்த கூண்டை வாங்கிக் கொண்டாள் எழிலரசி.

வெற்றி மாடியில் அவனது பெட்டியை வைக்கப் போக, “வெற்றி… வெற்றி..” என்று கீழே மயிலாவின் வீறிட்டக் குரல் கேட்டது.

அம்மு ஆசையாய் திறந்து விட்டதும் மயிலா கூட்டிலிருந்துப் பறந்து வந்து,  “வெற்றி” என்றழைத்தபடி அம்முவின் கைகளில் வந்தமர்ந்தது. கிளி பேசியதையே அம்மு வியந்து பார்த்திருக்க, எங்கிருந்தோ ஓடி வந்த துருவன் மயிலாவை விரட்ட ஆரம்பித்தான். 

மயிலாவின் குரலில் அடித்துப் பிடித்து இறங்கி வந்த வெற்றியும் பதறிக்கொண்டு மயிலாவின் பின்னால் ஓட, இதுவரைக் கண்டிராத உயிரனத்தைக் கண்ட உற்சாகத்தில் அம்முவின் குரலுக்கும் அடங்கவில்லை துருவன். 

திவ்யபாரதி, செழியன் கார்த்தி என்று யார் குரலுக்கும் அடங்கவில்லை அவன்.

குடும்பமே பாதிப்பாதியாகப் பிரிந்து துருவனின் பின்னாலும் மயிலாவின் பின்னாலும் ஓடிக்கொண்டிருந்தது.

‘படுபாவி! ஒன் ப்ளஸ் ஒன் ஆஃபர் மாதிரி ஓசில மாமனார் வீட்ல சோறு திங்க என்னையும் வேற இழுத்துட்டு வந்துட்டானே! வெட்கம் கெட்ட பய’ என்று வெற்றியை திட்டித் தீர்க்க, ‘இப்படி ஒரு கருப்பன் இருக்கிறது தெரிஞ்சிருந்தா கூண்டை விட்டு வெளிய வந்திருக்கவே மாட்டனே!’ என்ற மயிலா அங்கும் இங்குமாக ஓட, வெற்றியும் “மயிலா நில்லு!” என்று நெருங்கி இருந்தான்.

அதற்குள் வெற்றியைப் பார்த்துவிட்ட மயிலா, இன்னுமே வெற்றி வெற்றி என்று திரும்ப திரும்ப குழைந்து அழைக்க, கடுப்பானாள் அம்மு.

‘என்னவோ என் புருஷனுக்கு பெயர் வச்சாமாதிரி வெற்றியாம்ல’ துருவனின் பின்னால் ஓடிக்கொண்டிருந்த அம்மு கடுப்பாகி மூச்சிரைக்க நின்றுவிட, வேஸ்டியை தூக்கிப் பிடித்தபடி ஓடிக்கொண்டிருந்த கணவனைக் கண்டு சிரிப்பும் வந்திருந்தது. 

துருவனும் அதே நேரத்தில் மயிலாவை நெருங்கி இருக்க, அவன் வாயில் பிடிக்கப்போகும் நொடி, “துருவா அங்கப் பாரு ஷீலா” என்ற எழிலரசி, பக்கத்து வீட்டைப் பார்த்து “ஷீலா” என்றாள் சத்தமாக.

பக்கத்து வீட்டின் உள்ளிருந்து ஷீலா கத்தும் குரல் கேட்க, கால்கள் தேய அப்படியே நின்றிவிட்டான் துருவன்.

‘அட பிக்காலி கருவாப் பயலே, நீ இருக்க தண்டிக்கும் தடிக்கும், இந்த புசு புசு பொமரேனியன் குரலுக்கு அடங்கிப் போறியே டா’ என்றது மயிலா, தப்பிப் பிழைத்து அந்த வீட்டின் சுற்றுச் சுவரில் அமர்ந்து பக்கத்து வீட்டுக்குள் எட்டிப் பார்த்தபடி.

மெல்ல பெருமூச்சுவிட்ட வெற்றி, அருகில் சென்று, “வா! என்றழைக்க அடமாய் வர மறுத்தது. “ஒன்னும் பண்ண மாட்டான் வா! நான் இருக்கேன்ல” என்றான் செல்லமாய் அழைத்து.

‘நீ இருப்ப! நான் இருப்பனா? அன்னைக்கே சொன்னேன் இவ வேண்டாம்னு கேட்டியா நீ?’ என்ற மயிலா துருவனைப் பார்த்து அவனைப் போலவே “லொள் லொள்” என்று குரைக்க, அனைவரும் சிரித்து விட்டனர்.

இரவு உணவை முடித்து, அவளது அறையில் இழுத்து வைத்து மகளுக்குப் புடவைக் கட்டிக்கொண்டிருந்தாள் திவ்யபாரதி. “பேசாம இருடி” என்ற திவ்யபாரதி, “இரு சுத்திப் போட எடுத்துட்டு வர்றேன்” என்று சமையலறைச் செல்ல, “என்ன ஜெண்டில்மேன்! ஜெண்டில்மேன் அக்ரீமெண்ட் நினைவிருக்கில்ல?” என்ற தந்தையின் குரல் ஜன்னல்புரம் கேட்டது.

“அன்னைக்கே சொன்னேன்ல. நானும் போலீஸ்காரன்தான்.வார்த்தை மாற மாட்டேன்.” கூடவே கர்வமாய் கணவனது குரலும்.

“வெல்! தென் வாட் அபௌட் விக்டர்?” என்றான் செழியன்.

“ஏன் உங்க பொண்ணை மாதிரியே நீங்களும் எதிர்பார்த்தீங்களோ?” என்றான் வெற்றி புன்னகையுடன்.

“இனியும் அவன் பப்ளிக்ல நடமாடினா, நானே நேரடியா களத்தில் இறங்க வேண்டி இருக்கும்” என்ற தந்தையின் எச்சரிக்கும் குரலைத் தொடர்ந்து  “அதுக்கு அவசியம் வராது” என்ற வெற்றியின் குரலும் கேட்டது.

தந்தைக்கும் கணவனுக்கும் இடையில் என்ன அக்ரீமெண்ட்? சிந்தைக் கலங்க அமர்ந்திருதாள் எழிலரசி.

 

(சாரி டியர்ஸ் இன்னும் நேரம் கூடி வரலையாம். நாளைக்கு பார்ப்போம். பை..பை..)