தனக்கு வேண்டுமெனில் எந்த குறுக்கு வழியையும் கையாள்வான். ஏன் நண்பனைக் காப்பாற்ற ஒரு பெண்ணையே அசிங்கப்படுத்தி அவன் சித்தரித்ததை மறந்துவிட்டாயா? மனசாட்சியின் கேள்வியில் இதயத்தில் சுருக்கென்ற வலி கண்டாள்.
எல்லாவற்றையும் பண்ணிவிட்டு ஒன்றுமே தெரியாததுபோல் கோர்ட் வாசலில் “ப்ரண்ட்ஸ்” என்று கை நீட்டி நின்ற வெற்றி நினைவில் வந்தான். மனம் கசந்தது.
இதே வெற்றிதானே ரம்யாவை மிரட்டி பொய்சாட்சி சொல்ல வைத்ததும். நண்பனுக்காக அவ்வளவு செய்தவன் தன் விசயத்தில் மிரட்டமாட்டானா என்ன?
ஆசைப்பட்ட இதயம் மறந்து தொலைக்க மாட்டேன் என்கிறதே! இந்த இதயத்தை ஊடுறுவும் வலியிலிருந்து விடுதலை கிடைக்காதா? ஏங்கினாள்.
கண்ணீர் கரை பட்டு பட்டு நெஞ்சம் கல்லாகிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் திடமான முடிவுக்கு வந்திருந்தாள்.
அவன் விசயத்தில் நான் முட்டாளாக்கப் பட்டவள்தானே! இனியும் முட்டாளாகவே இருந்துவிட்டுப் போகிறேன். வீடும் வந்திருந்தது, கண்ணீரைத் துடைத்துவிட்டு இறங்கினாள்.
“நிஜமாவே உனக்குச் சம்மதமா? நீ விளையாடலையே?” வெற்றி அழைத்துச் சொன்னபோது செழியனால் முற்றிலுமாக நம்பமுடியவில்லை. மகளிடம் கேள்வி கேட்டான்.
கார்த்தி ஊருக்குச் சென்றிருக்க தந்தையும் மகளும் மொட்டை மாடி ஊஞ்சலில் அமர்ந்திருந்தனர். உணவை மறுத்துவிட்டு வந்த மகளுக்கு கையோடு பாலையும் கொண்டு வந்திருந்தான்.
வெற்றி கேட்ட அதே கேள்வியை தந்தையும் கேட்கவும் கோபம் வந்தது. அதில், “நான் என்ன சின்ன பிள்ளையாப்பா?” என்றாள் பாலை அருந்தியபடி.
மகளின் பதில் அவனுக்கு திருப்தியாய் இல்லை. ஆம், இல்லை என்று சொல்லாமல் என்ன இது எதிர் கேள்வி?
மகளின் முகம்வேறு வாடிக்கிடந்தது. தேஜஸ்வினியின் வழக்கு அவளைத் தின்று கொண்டிருக்கிறதோ?
ஏனெனில் அந்த வழக்கின் முழுக்கட்டுப்பாட்டையும் வெற்றி எடுத்துக்கொண்டு இவளை செல்லாக் காசாக வைத்திருக்கிறான் என்று அறிந்திருந்தான்.
அவனும் வெற்றியை நேரடியாக அழைத்து தேஜஸ்வினி வழக்குப் பற்றி கேட்டுப் பார்த்து விட்டான். “என் மேல நம்பிக்கை இருந்தா இது பத்தி இதுக்கும் மேல கேட்காதீங்க!” என்று முடித்துவிட்டவனிடம் அதற்குமேல் அவனாலும் தோண்டித் துருவ முடியவில்லை.
மகள் அப்படி லேசில் விட்டுவிடும் இரகமுமல்ல. சிறுவயதிலிருந்தே பிடித்தப் பிடியில் நிற்பவளாயிற்றே!
அதில் சந்தேகம் கொண்டு, “அந்த மர்டர் கேஸூக்காக கல்யாணத்துக்கு சம்மதிச்சியா” என்றான் மகளை அறிந்தவனாக.
“அப்பா…” என்றாள் கோபமாக. வெற்றி கேட்ட கேள்வியையே வரிசையாக தந்தையும் கேட்டால்?
அழுத்தமாகப் பெண்ணைப் பார்த்தான். “வழக்கு வேற வாழ்க்கை வேற அம்மு. இரண்டையும் குழப்பிக்காத!
எதுன்னாலும் அப்பா பார்த்துக்கிறேன்! நீ யோசி” என்றதும் அதிர்ந்து தந்தையைப் பார்த்தாள். தந்தை எந்த வழக்குப் பற்றி பேசுகிறார்?
உண்மையாகவே தான் நினைத்ததுபோல், தாய் வழக்குப் பற்றி தந்தையிடமும் பேசி இருப்பானோ?
இவ்வளவுதான், அவன் காதல்மேல் வைத்த நம்பிக்கையா?
ஒருவேளை நான் மன்னிக்கவே மாட்டேன் என்று நினைத்து இந்த காரியத்தைச் செய்யத் துணிந்தானோ? இல்லை என்னால் அவன் செயலை மன்னிக்கத்தான் முடியுமா? உள்ளுக்குள் எதுவோ உடைந்தது.
பேசாமல் தந்தையிடம் முழுவதையும் சொல்லி விடலாமா? எழுந்த எண்ணத்தை அந்தநொடியே புதைத்தாள்.
ஒருவேளை தந்தைக்கு இந்த விசயமே தெரிய வராமல், தான் சொல்லித்தான் தெரிவதாக இருந்தால், மகளை மிரட்டுபவனை சும்மாவா விடுவார்கள்? அதுவும் தன் மாமன்! கார்த்தியை நினைத்ததுமே வயிற்றில் பயப்பந்து உருண்டது. இப்போதுதானே அவன் அமைதியின் சொரூபம்.
ஆனால் மகளின் வாடிய முகத்தைக் கண்டுகொண்ட செழியனுக்கும் என்ன செய்வதெனப் புரியவில்லை. மகளைப் போலவே வெற்றியின் முகமும் சில நாட்களாகவே தெளியாமல் தான் இருக்கிறது. ஏதோ சிக்கலில் இருக்கிறான் என்று விட்டுவிட்டான். வெற்றி சமாளிப்பான் என்ற நம்பிக்கையும் இருந்தது.
அதில் மீண்டும், “எதுன்னாலும் நான் சமாளிச்சிப்பேன் அம்மு! நீ இன்னும் வேணும்னாலும் டைம் எடுத்துக்க. இல்ல வெற்றியைத் தவிர உனக்கு யாரைப் பிடிச்…” என்று செழியன் முடிக்கும் முன், “இல்லப்பா! எனக்குச் சம்மதம்தான்” என்றவள் விறுவிறுவென கீழிறங்கிச் சென்று விட்டாள்.
தந்தை சமாளித்தவரைப் போதாதா? அன்றில் பறவைகள் போல ஒன்றி வாழும் தாய்க்கும் தந்தைக்கும் தன்னால் சிறு இடைஞ்சல்கூட வருவதை அவள் விரும்பவில்லை.
‘அவனுக்கு நான்தானே வேண்டும். எடுத்துக்கொள்ளட்டும்’.
எப்படியும் அவனைத் தவிர அவள் வாழ்வில் வேறோருவன் வரப்போவதில்லை. ‘அவன் காதல் வேண்டுமானால் பொய்த்துப் போயிருக்கலாம். என்காதல் நிஜம்தானே’ ஒரு தெளிவுக்கு வந்திருந்தாள்.
வெற்றி என்றாலே தடுமாறும் அவள் இதயம் என்றுதான் நிலைப்படுமோ?
அதேநேரத்தில் அம்முவுக்கு நேர் மாறான மனநிலையில் இருந்தான் வெற்றி. அவனால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
அதில், “ஏய் மயிலாக்குட்டி!” என கூவிக்கொண்டே வீட்டைத்திறந்து உள்ளே வந்தவனின் தோள்மீது பறந்து வந்து அமர்ந்தது மயிலா.
“எல்லாம் உன்னாலதான்! என் செல்லம்! என் அம்மு” என அதன் மூக்கில் முத்தமிட, “ஏய்” என்றது.
“செல்லத்துக்கு கோவத்தப் பாரேன்! அப்படியே என் மூஞ்செலி மாதிரி” என்றவனோ,
“என்னோட லைலா வர்றாளே ஸ்டைலா” என்று பாட, “சிக்னலே கிடைக்கல கிடைக்கல” என்றது மயிலா தன் கீச்சுக் குரலில்.
“நெஞ்சுல கூலா ஊத்துதுக் கோலா
அவள் கோபமே அடங்கல அடங்கல..
அட மனச வலையா விரிச்சேன் அந்த மூஞ்செலி மாட்டலியே!
மாதம் ஒரு தடவையும் பார்த்தேன் அவ காதல் கிடைக்கலையே!
அம்மு இங்கே வருவாளா
பதில கேட்டு சொல்லு!” என்று மயிலா தொடர்ந்து பாடியது.
‘டேய் எப்பா! அவ பதில் சொன்னா அவளைப்போய் வாந்தி எடுக்க வைக்கிற வேலையைப் பாரு! அதைவிட்டுட்டு என்னைய வாந்தி எடுக்க வச்சிடாத!’ அவன் சுற்றிய சுற்றில் தளர்ந்து அமர்ந்திருந்தது மயிலா.
“ஷ்ஷப்பா இப்பவே கண்ணக் கட்டுதே! இன்னும் இவன்கூட எப்படித்தான் குப்ப கொட்டப்போறேன்னு தெரியலையே!’ என அது நினைத்து முடிக்க, மயிலாவுக்குப் பிடித்த கோவைப் பழத்துடன் வந்தான் வெற்றி.
‘இது ஒன்னுதான்டாப்பா உருப்படியா செய்ற!’ என்ற மயிலா கோவைப்பழத்தை கவ்விக் கொண்டு தனியே செல்ல, அது சாப்பிடும் அழகை இரசித்திருந்தவன் தன்னவளுடனான திருமணக் கனவுகளுடன் உறங்கி இருந்தான்.
செழியனுக்கு அதோடு விட மனமில்லை மறுநாள் வெற்றியையும் அழைத்து நேரில் கேட்டான்.
“பிரச்சனை இல்லன்னு சொல்ல முடியாது. இன்னும் சால்வ் ஆகலன்னு வேணும்னா சொல்லலாம்?” என்றான் புன்னகையுடன். இதுதானே வெற்றியிடம் பிடித்தது.
பூசி மொழுகாமல் நடப்பைச் சொன்ன அந்த நேர்மை செழியனை கவர்ந்தது.
“உண்மை எதுவும் அவகிட்ட சொல்லி இருக்க மாட்டன்னு நம்புறேன்” என்றான் அழுத்தமாய்ப் பார்த்து.
“நான் உண்மையான போலீஸ்காரன்.” என்ற வெற்றி லேசாய் மீசையை முறுக்கிக் கொள்ள புன்னகைத்தான் செழியன்.
“தென்..?” என்றான் கேள்வியாய் புருவத்தை உயர்த்தி.
‘அதில் பின்ன எப்படி ஒத்துக்கிட்டா?’ என்ற கேள்வியும் அடங்கி இருக்க, “எனக்கும் தெரியல” தோளைக் குலுக்கினான்.
செழியனுக்குதான் ஆயாசமாய் வந்தது.
‘இதுங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சி…ஷ்ஷப்பா படுத்துதுங்க இரண்டும் இதுல லவ்வு வேற’ மனசுக்குள் நொந்து கொண்டவனுக்கு உண்மையில் இவர்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் எப்படிப் பிடித்தது என்று ஆச்சர்யமாக இருந்தது.
ஒரு பக்கம் திருமண ஏற்பாடுகள் அதித் தீவிரமாய் நடந்தேறின. அனைவருக்கும் வெற்றியைப் பிடித்திருக்க, அவள் ஒருத்திக்காகத்தானே, திருமணப் பேச்சைக் கிடப்பில் போட்டது.
அவள் சம்மதம் கிடைத்ததுதான் தாமதம் என பட படவென ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து முடித்திருந்தான் கார்த்தி.
அழைத்து விசாரித்த மாமனிடமும் அவன் சந்தேகம் கொள்ளாத வகையில் சம்மதம் என்றே சொல்லி முடித்திருந்தாள் எழிலரசி.
அதன்பின்னர் எதற்கும் செழியனை எதிர்பார்க்கவில்லை கார்த்தி. மண்டபம், அழைப்பு போன்று முக்கிய விசயங்களில் மட்டும் செழியனை ஆலோசித்துக் கொண்டான்.
பத்திரிக்கை வைத்து அழைக்கும் வேலை மட்டுமே செழியனுக்கு பாக்கி இருந்தது. அதுவும் அவன் தொழில் சார் நட்புக்களுக்கு மட்டும்.
செழியனின் பெற்றோரும் காலம் சென்றிருந்தனர். உறவுமுறை என்று செழியன் யாரிடமும் பெரிதாக உறவு கொண்டாடியதில்லை. நெடுநாள் மலைகிராமங்களையே சுற்றி வந்ததில் ஒருசில நெருங்கியச் சொந்தங்களைத் தவிர்த்து மற்ற தொடர்புகள் விட்டுப் போயிருந்தன.
திருமண வேலை எதிலுமே கலந்துக் கொள்ளாமல் வேலையைச் சாக்கிட்டு தப்பித்துக் கொண்டாள் எழிலரசி.
இன்னொருபக்கம் மிருத்யூஸ்ரீ மருத்துவமனையிலிருந்து திரும்பி விட்டாலும் அவள் உடல் இன்னும் நன்றாக குணமாகாததால் அவளால் எதிலும் உற்சாகமாக பங்கெடுக்க முடியாமல் ஒதுங்கி நின்று கொண்டாள்.
அதிலும் எந்நேரமும் சுருண்டடித்துப் படுத்துக் கொண்டிருந்தவள் கடந்த இரண்டு நாட்களாகத்தான் கல்லூரிக்கே சென்று வருகிறாள். அதுவும் தகப்பனே நேரடியாகச் சென்று விட்டு வர கார்த்தி அழைத்து வந்து விடுவான்.
அன்று தேஜஸ்வினி பயின்ற கல்லூரிக்குச் சென்றிருந்தாள் அம்மு.
ஷ்யாம் சுந்தர், தேஜஸ்வினி இருவரது நெருங்கிய நட்புக்களையும் ஏற்கனவே விசாரித்து விட்டதில் மாணவர்களை தொந்திரவு தர வேண்டாம் கடைசியாக பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு வைத்திருந்தாள். ஆனால் எல்லா பக்கமும் வெற்றி முட்டுக்கட்டைப் போட்டதில் வேறு வழியின்றி கல்லூரியிலிருந்து மீண்டும் ஆரம்பிக்கலாம் என வந்திருந்தாள்.
அனுமதி பெற்று தேஜஸ்வினியின் வகுப்பு மாணவர்களை விசாரித்த வரையில் மிகவும் நல்லப்பெண், ஜூனியர் மாணவர்களுக்கு கேட்காமலே உதவுபவள், அமைதியானவள் என்று நல்லவிதமாகவேச் சொன்னார்கள். அதைத் தவிர்த்து சந்தேகப்படும்படியான தகவல்கள் எதும் கிடைக்காததில், அடுத்த அதே கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவனான ஷ்யாம் சுந்தரின் வகுப்புக்குச் சென்றாள்.
ஷ்யாம் சுந்தர் வேறு அன்றிலிருந்து கல்லூரி வரவே இல்லை மருத்துவ விடுப்பில் இருக்கிறான் என்று தெரிய வர, அவனது நண்பர்கள் இரண்டு பேரைத்தான் விசாரித்திருப்பாள் அவளது அலைபேசி சிணுங்கிற்று.
(டியர்ஸ் எந்நாளும் விட கொஞ்சம் குட்டி யூடிதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க ப்ளீஸ்… சொன்ன வாக்க காப்பாற்றனுமேன்னு எடிட் பண்ண வரை போட்டுட்டேன்.)