அத்தியாயம் : 10
பழைய நினைவுகளிலிருந்து வெளி வந்த வெற்றி தன் காதல் முளைவிடும் முன்னே கருகியதை எண்ணி பெருமூச்சொன்றை விட்டுக் கொண்டான்.
அருகில் அதே பெருமூச்சின் சத்தத்தில் திரும்பிப் பார்க்க மயிலாதான் கூண்டுக்குள்ளிருந்து காதை சொறிந்தது.
“ஓய்! என்ன கொழுப்பா? நான் செய்றத அப்படியே செய்வியா நீ?” அதன் செய்கையில் சுவாரஷ்யம் மிக தன் படுக்கையின் அருகே இருந்த கூண்டை நோக்கிச் சென்றான்.
அவனைக் கண்டதும் அது மீண்டும் மூச்சை இழுத்து விட, “அடியே ராங்கி! விட்டேன்னா பாரு” என்றவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
மருத்துவமனையிலிருந்து திரும்பியதுமே மயிலாவின் உரிமையாளரை தேடச்சொல்லி கான்ஸ்டபிள் ஒருவரை அனுப்பி இருந்தான். ஆனால் அவர் ஒரு நாடோடி போலும். ஒவ்வொருநாளும் வேறு வேறு இடங்களுக்குச் சுற்றுபவர். அவரைப்பற்றிய ஒரு விவரமும் அங்கிருப்பவர்களுக்கும் தெரியவில்லை.
பறவைகள் சரணாலயத்திலும் விட்டுப் பார்த்தான். அவன் கண்முன்னே மற்றக் கிளிகள் சிறகுடைந்த இதனைக் கொத்த இவனுக்குப் பாவமாயிற்று. பற்றாததிற்கு இவன் இரண்டடி எடுத்து வைத்ததுமே விசிலடித்து வேறு கூப்பிட்ட மயிலாவில் உருகிப் போனவன் ஆனது ஆகட்டும் என தன்னுடனையே திரும்ப அழைத்து வந்துவிட்டான்.
கையோடு அதற்கு என்ன கொடுக்க வேண்டும், எப்படி பராமரிக்க வேண்டுமென அங்கேயே கேட்டுக்கொண்டு அதற்கான கூண்டு ஒன்றையும் வாங்கிவிட்டே வீடு வந்தவன், அதை வளர்ப்பதற்கான உரிமைக்கும் (License) விண்ணப்பித்திருந்தான்.
(நம் நாட்டுப் பறவையான பச்சைக்கிளிகள் அழியக் கூடிய உயிரினங்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பதால் அதனை வளர்ப்பது வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1948 படி தண்டனைக்குரிய குற்றமாகும்)
(ஆஃப்ரிக்கன் க்ரே பேரட்)