இரவானதும் "மிஷன் இஸ்டார்ட்" என்று நிர்மல் சைகை செய்ய பதுங்கி பதுங்கி மெய்ப்பாதுகாவலர்களின் கண்களில் படாமல் அக்ஷையின் வீட்டை அடைய சமையலறை கதவு திறந்தே தான் இருந்தது.
"என்ன மதி நாம வருவது முன் கூட்டியே சொன்னியா? கதவு திறந்து இருக்கு" நிர்மல் ரகசியம் பேச
"முதல்ல உள்ள வந்து தொலைங்க" பிர்ஜூ உள்ளே இருந்து மெதுவாக கூற
"என் சகோதரன் இருக்காண்டா" என்று மதி உள்ளே நுழைய நிர்மலும் அவள் பின்னாடி உள்ளே நுழைந்தான்.
கதவை சாத்திய பிர்ஜு இருவரையும் இழுக்காத குறையாக அழைத்துக்கொண்டு சென்று தனதறையில் அமர்த்தி
"என்ன நடக்குது மதி? யார் அந்த ருத்ரமகாதேவி? அக்ஷய் சாருக்கு என்ன ஆச்சு என்னமோ மாதிரி பேசுறாரு" பிர்ஜு அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் கூற நிர்மலும், மதியும் குழம்பித்தான் போயினர்.
"நான் அக்ஷய பார்க்கணும் பிர்ஜு. என்ன வீட்டுல சிறை வச்சிருக்காங்க. ஒன்னும் புரியல" மதி விரக்தியாக சொல்ல
"அவர் எங்க இங்க இருக்காரு. மதியம் அந்த ருத்ரமாதேவியோடு கிளம்பி போனவருதான் இன்னும் வரல"
"என்ன சொல்லுற" பதட்டமானாள் மதி.
"ம்ம்.. நீ அக்ஷய் சார ஏமாத்துவானு நினச்சேன். சார் தான் உன்ன ஏமாத்திட்டாரு" பிர்ஜு பெருமூச்சு விட
"என் அக்ஷய் ஒன்னும் அப்படி பட்டவரில்லை" மதி கோபமாக முறைக்க,
"ஆமா அவர் அக்ஷையாக இருந்தா கண்டிப்பா அப்படி செய்திருக்க மாட்டாரு. அவர்தான் வெற்றிவேலாச்சே" என்றவாறு அந்த இடத்துக்கு பாஸ்கர் வர
"யாரு அந்த வெற்றிவேல்" மதியும் நிர்மலும் ஒன்று சேர்ந்து கேட்க,
"சகோதர பாசம்" என்று பிரஜூவை முறைத்த பாஸ்கர்
"மதி மேடம் இப்போ நான் சொல்லுறது கேட்டு உங்களாக நம்ப முடியாம இருக்கலாம். ஏன் நான் சொல்வது பொய்னு கூட நினைக்கலாம் ஆனா அதுதான் உண்மை" பாஸ்கர் புதிர் போட
"முதல்ல சொல்லித் தொலை" கடுப்பான நிர்மல் கத்த
"அக்ஷய் சார் போன ஜென்மத்துல வெற்றிவேலா பொறந்திருக்குறாரு. ருத்ரமாதேவிய காதலிச்சிருக்குறாரு. ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல. அவங்க ஒன்னு சேரல. சார் இறந்துட்டாரு. இந்த ஜென்மத்துல ருத்ரமகாதேவியை பார்த்ததும் சாருக்கு பழைய நியாபகங்கள் எல்லாம் வந்திருச்சு"
"நீ சொல்லுறது நம்பும்படியா இல்லையே!" நிர்மல் தாடையை தடவ
"அதுதான் சார் பழைய ராஜா காலத்துல பேசுற மொழியெல்லாமா பேசுறாரா?" என்றான் பிர்ஜு.
மதியின் கண்களுக்குள் அக்ஷய் ருத்ரமகாதேவியை "தேவி" என்று அழைத்த விதமும் அந்த குரலில் இருந்த இளகிய தன்மையும், குலைவும், காதலும் அது அக்ஷய் இல்லை என்றே அவளுக்கு தோன்ற உடைந்தே போனாள்.
"அப்போ என் அக்ஷய் எங்க?" குரல் கமர உதடு கடித்தவள் அழும் நிலைக்கு செல்ல நிர்மல் அவளை தோளோடு அணைத்துக்கொண்டான்.
"சாருக்கு மதி என்ற பெண்ணை நியாபகம் இருக்கு. அவரோட பாடிகார்டா வேலைக்கு சேர்ந்தது வரைக்கும். உங்கள விரும்பினது. கல்யாணம் பண்ண கேட்டது எதுவும் அவர் நியாபகத்தில் இல்லை" பாஸ்கர் சாதாரண குரலில் கூற
அவன் சட்டையை பிடித்த நிர்மல் "என்ன விளையாடுறியா? சும்மா இருந்த பொண்ணு பின்னாடி காதல்னு அலஞ்சி நிச்சயம் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வாக்கும் கொடுத்து, இப்போ ஒண்ணுமே இல்லனா?" நிர்மல் மேலும் என்ன பேசி இருப்பானோ
"விடு நிர்மல் அதான் அக்ஷய்க்கு நான் யார் என்றே தெரியாதுன்னு சோறாரே! ஆக்சிடண்ட்டுல அம்னிஷியானா, என்னிக்கோ ஒருநாள் நியாபகம் திரும்ப வரும்னு காத்திருக்கலாம். இது முன்ஜென்ம காதல் கதை. இதுல நான் என்னைக்குமே உள்ள நுழைய முடியாது. ஒதுங்கித்தான் இருக்கணும். அதுதான் சரியும் கூட, முறையும் கூட" கண்களில் பெருக்கெடுத்து வழியும் கண்ணீரை துடைத்தவாறு மதி கூற
"ஈஸியா சொல்லிட, உன் அம்மாக்கு என்ன பதில் சொல்ல போற? உன் மாமனாருக்கு என்ன பதில் சொல்ல போற?அவருகிட்டயே நியாயம் கேப்போம். அவர்தானே நிச்சயம் பண்ணி வச்சாரு" நிர்மல் எரிந்து விழ
"கல்யாணம் நடந்தாத்தானே! மாமனார், மச்சினர் உறவெல்லாம்" கசந்த முறுவலை சிந்தியவள் "அம்மா கிட்ட பேசி புரிய வைக்கலாம். வா போலாம். என்னால இங்க இருக்க முடியல. முள்ளு மேல இருக்குற மாதிரி இருக்கு. என்ன இங்க இருந்து கூட்டிட்டு போ ப்ளீஸ்" மதி இறைஞ்சலாக பார்க்கா அவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டான் நிர்மல். அக்ஷையின் வீட்டிலிருக்குதும் அவன் வாழ்க்கையிலிருந்தும்தான்.