அமுதன் மணமேடையில் அமர்ந்து மந்திரம் ஓதிக் கொண்டிருந்தான். அவன் கண்களோ முன்னாடி இருக்கையில் கால் மேல் கால் போட்டு கையை கட்டிக்கொண்டு அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மலர்விழியின் மேலையே இருந்தது.
மலர்விழி அமுதனை மறுக்க பிரதான காரணம் தன் குடும்பத்தால் சரவணனின் குடும்பன் அடைந்த துன்பம்தான். அதனால் மாத்திரம் தான் அமுதனை விட்டு விலகுவதில் குறியாக இருந்தாள்.
அமுதனின் பிடிவாதமும், ஈகோவும் அவளை புரிந்து கொள்ளாது கண்டபடி பேசி அவளை காயப்படுத்த தான் அமேரிக்கா செல்வதாக கோபத்தில் சொல்லி விட்டாள்.
தன்னிடம் வந்து பேசுவான், சமாதானப் படுத்துவான் என்று மலர்விழி காத்திருக்க அப்படி எந்த எண்ணமும் இல்லாமல் இருந்தான் அமுதன்.
ஒருவேளை அவன் மனதில் தான் இல்லையோ! ப்ரதீபனும் அமுதனும் பேச்சு வாக்கில் பல தடவை சொல்லி இருந்தாலும் அமுதன் மனம் திறந்து கூற வேண்டும் என்று மலர்விழி எதிர்பார்ப்பதில் என்ன தவறு?
மலர்விழி முதலில் மனம் திறக்க வேண்டும் என்று அமுதனும், அமுதன் முதலில் சொல்ல வேண்டும் என்று மலர்விழியும் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்க வீட்டாரின் சம்மதம் கூட மலர்விழியை அசைக்கவில்லை.
அமுதனின் கல்யாண ஏற்பாடுகள் கூட தன்னை கோபப்படுத்தும் நோக்கத்தோடு செய்து கொண்டிருக்கின்றான் என்றும் அவன் எந்த எல்லை வரை செல்வான் என்று பார்க்க அமைதி காத்தவளுக்கு பேரதிர்ச்சியாக அவனின் திருமண அழைப்பிதழ் இருந்தது.
மணமகனின் பெயர் கணியமுதன் என்றும் மணமகள் ஸ்ரீநிதி என்றும் தெளிவாக பொறிக்கப் பட்டிருப்பதைக் கண்டு மனதளவில் உடைந்தே போனாள் மலர்விழி.
தனக்கும் அவனுக்குமான கல்யாண ஏற்பாட்டைத்தான் செய்கிறான் கண்டிப்பாக கல்யாண பத்திரிகையில் கூட இன்னொரு பெண்ணின் பெயரின் அருகில் தன் பெயரை சேர்த்து எழுத மாட்டான் என்ற அவளின் நம்பிக்கையில் எண்ணையை ஊற்றி கொளுத்தி விட்டு கல்யாணத்துக்கு சமூகமளிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் வேறு.
அதன் பின்னே மலர்விழி அமேரிக்கா செல்வதாக தீவிரமான முடிவையெடுத்து "நீ யாரை கல்யாணம் செய்து கொண்டாலும் எனக்கு கவலையில்லை" எனும் விதமாக முன்வரிசையில் அமர்ந்திருந்தாள்.
"பாக்குறத பாரு முண்டக்கண்ணி அப்படியே முழிய நோண்டிப்புடனும். என்னயாடி வேணாம்னு சொல்லுற தாலி கட்டுற கடைசி நிமிஷம் வரைக்கும் தாண்டி உனக்கு டைம் நீயா வந்து என்ன கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சொல்லல... சொல்லுவ டி..." மந்திரம் ஓதும் சத்தத்தில் தான் பேசுவது கேட்காது என்று அமுதன் பேச
"உக்காந்திருக்கும் திணுசாப்பார்த்தா சொல்லமாட்டா போல இருக்கு அமுதா.. கல்யாணத்த நிறுத்திடலாமா" பிரதீபன் அவன் காதில் முணுமுணுக்க
"இதுக்குதான் என் பக்கத்துலயே உக்காந்து இருக்கியா? எந்திருச்சு ஓடிடு... போ.. போய் வேல இருந்தா பாரு"